Monday, March 23, 2015

தென்றல் வந்து தீண்டும்போது...

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வசந்தகாலத்தை
கொண்டாட குடும்பத்ததோடு சென்று வந்தோம் .

ஏய்! கொஞ்சம் நிறுத்து!  நீ என்ன சொல்ல வர ? அப்படின்னு எங்கோ ஒரு குரல் கேட்குதே. அது ஒன்னும் இல்லப்பா, Spring Breakக்கு சான்பிரான்சிஸ்கோ போய்ட்டு வந்தோம் அப்படினு சொல்ல வந்தேன்.. :)

முன்னாடியே, இப்படி விளங்குற மாதிரி தமிழ்ல சொல்லவேண்டியதுதானே ?. சரி இப்போ விசயத்துக்கு வருவோம்.

நினைச்ச மாதிரியே சான்பிரான்சிஸ்கோவில் தென்றல் வீசுகிறது.
நான் சொல்ல வந்தது  வசந்தகாலத்தில் வீசும் தென்றல் காற்று
மட்டுமல்ல. சான்பிரான்சிஸ்கோவில் இருந்து வெளிவரும்
தமிழ் புத்தகம் "தென்றல்" மாதஇதழ்.

வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின்
படைப்புகளைத் தாங்கி  வெளியாகிறது தென்றல் இதழ்.

இவ்விதழ் தமிழக, தேசிய மற்றும் அமெரிக்க மாதாந்திர முக்கிய செய்தி நிகழ்வுகளின் தொகுப்பு, கவிதைகள், பழமொழி,  குறுக்கெழுத்துப் புதிர், நேர் காணல், கைப்பக்குவம்,  சிறுகதைகள், குறுந்தொடர்கள், மற்றும் உள்ளூர் மாதாந்திர நிகழ்சிகளின் நிரல் தொகுப்பு போன்ற பகுதிகளை  கொண்டிருக்கிறது.

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ  மனசுல .. தெரியாதுங்க, ஆனா இந்த தென்றல் கையில் தவழ்ந்தால் மகிழ்ச்சி தாங்க. என்னதான் கம்ப்யூடர் வந்தாலும், புத்தகத்தை கையில் படித்து படிக்கும் அந்த சுகமே தனிதான்.

இந்த புத்தகம் விலையின்றி கிடைக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இலவசமாக தரப்படும் இந்த புத்தககத்தில் உள்ள படைப்புக்குகளில் கண்டிப்பாக தரத்திற்கு குறைவில்லை.  எந்த ஒரு பகுதியையும் சும்மா சொத்தை என ஒதுக்க இயலவில்லை.

உதாரணமாக சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்துவை
பற்றி மார்ச்  இதழில் அறிந்து கொள்ளமுடிந்தது. லாஸ் ஏஞ்சலஸ் ராமின் 'கருப்ஸ் பாண்டியன்' சிறுகதையையும் ரசித்தேன்

நாம் ஈசியாக சொல்லி விடுகிறோம் மாதஇதழ் என்று, ஆனால்
மாதம்தோறும் தரமான ஒரு பிரதியை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல.  தென்றலுக்கு பின் ஒரு பெரிய குழுவே செயல்படுகிறது போல. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!. மற்ற அமேரிக்க தமிழ் மன்றங்களுக்கும் இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டி.

இந்தப் புத்தகம் கலிஃபோர்னியா வில் உள்ள இந்திய பலசரக்கு கடைகள்,
சிற்றுண்டியகங்கள், மற்றும் வீடியோ கடைகளில் இலவசமாக கிடைக்கிறது
என நினைக்கிறேன்.  ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் கண்டிப்பாக கிடைக்கிறது.

அதனால் இதை படிக்கும் நீங்கள், கலிஃபோர்னியா  அன்பராய் இருந்தால்
தென்றலை  ஒரு விளம்பர தொகுப்பு என உதாசினப்படுத்தாமல்
ஒரு பிரதியை வாங்கி புரட்டிப் பாருங்கள்.

கலிஃபோர்னியா பற்றிய வேற ஒரு பதிவு சூடா தயாராயிக்கொண்ட்டேயிருக்குது. :)  அதுவரை காத்‌திருங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம்!.

Monday, March 2, 2015

நடிகை சுகன்யாவின் மொய் விருந்து


நீங்கள் தற்போது தமிழ்நாட்டில் இருந்தால் கடந்த இரண்டு மாதஙகளில் கண்டிப்பாக ஒரு கல்யாண வீட்டயோ  ரீசப்சனையோ  எட்டி பார்த்திருப்பீர்கள்.  தை மற்றும் மாசி மாதங்‌கள் தமிழ்நாட்டின் அதிமுக்கிய கல்யாண மாதங்கள்.

சென்னை இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூட இடம் கிடைத்துவிடும், ஆனால் இந்த சீஸனில் நல்ல கல்யாண சத்‌திரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

மாசி மாதம் பற்றி ஒரு கொசுறு செய்தி:  மாசி மாததிற்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்ல முகூர்த்தம் இருக்கிறது போல. "மாசி மாசம்"  எனும் வரிகள் இடம் பெறும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. உதாரணத்துக்கு "மாசி மாசம் ஆளான பொண்ணு" ,  “மாசி மாசம் தான் கெட்டி மேள தாளம்  தான்"  போன்ற  ரஜினியின் வெற்றி பாடல்களைச் சொல்லலாம்.

கல்யாண வீடுகளில் விருந்து எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மொய் எழுதுவதும்தான்.    இப்பொழுதெல்லாம் நகர்புறங்களில் பரிசுப் பொருள்களை அன்பளிப்பாக தருவதுதான் பேஷனாக உள்ளது.  ஆனாலும், சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மொய் எழுதும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

சின்ன கவுண்டர் படத்தில் பணத்துக்கு நெருக்கடி ஏற்படுகையில் சுகன்யா ஊர் ஜனங்களை அழைத்து மொய் விருந்து வைப்பார்.  அவர்கள் சாப்பிட்டு இலைக்கு அடியில் பணத்தை வைத்து செல்ல, விஜயகாந்த் மட்டும் தாலியை வைத்து தனது காதலை சொலலுவதை  ரசிக பெருமக்களாகிய  நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பொழுதெல்லாம் கிராமங்களில் கல்யாண வீடுகளில் ஓவ்வொருவர் தரும் அன்பளிப்பையும், மொய் பணத்தையும் மைக் போட்டு அறிவிப்பார்கள்.
அங்கே அது அவர்களுக்கு  ஒரு கொளரவப் பிரச்சனைக்கூட.  வயலில் அறுவடை முடிந்த காலத்தில் கல்யாணம் வைப்பதுக்கூட ஒருவகையில் மொய் பணத்‌தை வசூல் பண்ணத்தான்.

நம்மிடம் மொய் பணம் வைப்பதிலும் ஒரு கணக்கு இருக்கிறது.  11, 21, 51, 101, 501 எனக் கொடுப்பதைத்தான் சொல்கிறேன். இந்த ஐதீகத்திற்கான காரணம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். இப்போ இருக்கிற விலைவாசியில்  பத்து ரூபாய்க்கு பணம் போடுற கவர் வேணா கிடைக்கும்னு நினைக்கிறேன். :)

ஆனால், நான் சொல்லவந்தது சீனாவின் ஐதீகம் பற்றி. அங்கே புது வருடம் போன்ற நல்ல நாட்களில் பெரியவர்கள் இளையவர்களை ஆசிர்வதித்து பரிசாக சிறுதொகை தருவது வழக்கமாம். அந்த தொகையை ஒரு சிகப்பு நிற உறையில் இட்டு தருகிறார்கள். சிகப்பு நிறம் வளமையை தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்ப புரிஞ்சுதா ? சீனா கொடி ஏன் சிகப்பா இருக்குன்னு :)

முக்கியமாக ,அப்படி பரிசாக தரப்படும் பணத்தில் எண் (4)  நான்கு கண்டிப்பாக இருக்க கூடாதாம். அதனால் 40,400,404 போன்ற தொகைகள் கொடுக்கப்படுவதில்லை. நான்கு என்ற எண்ணே அங்கே அமங்கலமாக கருதப்படுகிறது. நான்கு என்பது சீன மொழியில் 'மரணத்'தை ஒத்த ஓலி கொண்டதாம்.

சீனாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடாதவை என்று பல உண்டு. முடிவெட்டக்கூடாது, விவாதம் கூடாது, கடன் வாங்கக் கூடாது என நீளும் 'கூடாது' பட்டியலில் துடைப்பமும் பயன்படுத்தவும் கூடாதம்.
துடைப்பம் கொண்டு வீட்டைக் கூட்டிப் பெருக்கும்போது, குப்பையுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் அடித்து செல்லப்படலாம் என நம்புகிறார்கள்.

மூடநம்பிக்கைகளில் நம்மை விட சீனர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை போல இருக்கிறது.