Sunday, June 26, 2016

சஞ்சாரம் - எஸ். ராமகிருஷ்ணன்

சமீபத்தில் எஸ்.ரா.வின் "சஞ்சாரம்" நாவல் வாசித்தேன். நாவலுக்குள் செல்லும் முன் எனக்கும் இசைக்குமான பரிச்சயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

நான் வளர்ந்த திருவாரூருக்கும் இசைக்கும் நெருங்கியத் தொடர்பிருக்கிறது.  கர்னாடக சங்கீதத்தின் முன்னோடிகளாகக் கருதப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சியாமா சாஸ்திரி எனும் மும்மூர்த்திகள் பிறந்த ஊர் திருவாரூர்.

தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் வருடாவருடம் நடைபெறும் புகழ்பெற்ற தியாகராஜ ஆராதனை விழா இசை நிகழ்ச்சியைப் போல திருவாரூரில் மும்மூர்த்திகளின் நினைவாக வருடாவருடம் மும்மூர்த்திகள் ஆராதனை விழா நடைபெறும்.  சுமார் ஓரு வாரம் நிகழும் அந்த விழாவுக்குச் சிறுவயதில் தினமும் என்னுடைய பாட்டனாருடன் சென்றிருக்கிறேன்.

அதுபோல் திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வருடாவருடம்  தெப்பத்திருவிழா நடக்கும். அப்போது பின்னிரவு வரை கலைஞர்களின்  இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். இப்படிதான் ஜேசுதாஸ், பாம்பே சகோதரிகள், நித்யஶ்ரீ, கன்னியாக்குமரி, குன்னக்குடி, விக்கி வினாயக்ராம்  போன்ற பல புகழ் பெற்ற இசைக்கலைஞர்களின் இசையை நேரடியாக கேட்டும் பார்த்தும் அனுபவித்திருக்கிறேன்.

தஞ்சை மண்ணில் வளர்ந்த எனக்கு இப்படி பல இசை அனுபவங்கள் இருந்தாலும் நாதஸ்வரம்  அன்னியமில்லாத, மனத்துக்கு நெருக்கமான ஒன்று.

சரி, சஞ்சாரம் நாவலின் கதைக்கு வருவோம். நாவலின் கதைக்களம் கரிசல் மண். கதை அங்குள்ள இரு நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றியது.

பக்கிரி, ரத்தினம் எனும் அந்த இரு நாதஸ்வர கலைஞர்களை ஒரு கிராம மக்கள் அவமதிக்கிறார்கள். அவர்களைப் பழிவாங்கும் வகையில் பக்கிரி செய்யும் ஒரு காரியம் அங்கே சில உயிர்களை காவு வாங்கிவிடுகிறது. அதனால் அவர்கள் போலீஸுக்குப் பயந்து பல ஊர்களுக்குப் பயணமானபடி இருக்கிறார்கள். இந்தப் பயணத்தில் அவர்கள் நினைவுகளின் வழியாக நாதஸ்வரக்கலையையும், கலைஞர்களையும், கரிசல் மண்ணையும் ஆசிரியர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

கரிசல் காட்டு நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்வை ஆவணப்படுத்த வேண்டும் எனும் நல்ல மனநிலையில் ரசனையோடு  பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் பாராட்டுக்குரியவர்.

ஆசிரியர்  பல ஆய்வுகளையும் களப்பணியையும் செய்திருப்பார் என நினைக்கிறேன்.  ஒரு கதைக்குள் வேவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்த பல கிளைக் கதைகள். அதில் அபூர்வமான, ஆச்சர்யமூட்டும் வரலாற்றுத் தகவல்கள் பல இருக்கின்றன.

கரிசல் காட்டின் பல நுட்பமான தகவல்களைப் பதிவு செய்கிறார். உதாரணமாக. அது போன்ற ஓரு காலத்தில் அதே ஊரோடிப் பறவைகள் திரும்பவும் வானில் பறந்து வந்தன. .. கரிசல் கிராமங்களின் மீது பறந்தபடியே 'ஊராரே ஊராரே மண்ணு வேணுமா, பொன்னு வேணுமா' எனக் கேட்டன” (பக்கம்-53)

ஊரோடிப் பறவைகளைப் பற்றி   கோபல்ல கிராமத்தில் படித்த நினைவு இருக்கிறது. அந்த வகையில் கி.ரா.வின் ஆஸ்தான கோட்டையான கரிசல் பூமியை எஸ்.ரா.வும் கொண்டாடி மகிழ்கிறார்.

மாலிக் காபூர் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்த நிகழ்வைச் சொல்லும் 'அரட்டானம் '  எனும் தலைப்பில் வரும் பகுதி அட்டகாசம். அருமையான கதைச் சொல்லலில் அந்த  நிகழ்வுகள் நம் கண்முன்னே அழகாய் விரிகின்றன. (பக்கம்-46)

மாலிக் காபூர் படையெடுத்து வந்தபோது அரட்டானம் என்ற கரிசல் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலைக் கொள்ளையடிக்கப் படைகளுடன் நுழைகிறான். ஊரே காலிசெய்து ஓடிவிட நாயனக்காரர் லட்சய்யா   என்பவர் மட்டும் கோவிலில் நாதஸ்வரத்தை மெய்மறந்து வாசித்தபடி இருக்கிறார். அவர் வாசிப்பில் கல்லால் செய்யப்பட்ட யானைச்சிலையும் காதை அசைப்பதைப் பார்த்து மாலிக் காபூர் பிரமித்து அந்த கோயிலை கொள்ளையிடாமல் சென்றான் என கதை தொடர்கிறது.

ஆசிரியர் கரிசல் மண்ணின் நாதஸ்வரக் கலைஞர்களின் அன்றைய வாழ்வையும் இன்றைய நிலைமையையும் ஒரே புனைவுக்குள் கொண்டுவர முயற்சித்திருக்கிறார். ஆனால், நாவலை வாசிக்கும்போது வாசகனால் நூறு சதவீதம் கதையோடு சேர்ந்து பயணப்பட முடியவில்லை.  துண்டு துண்டாகப் பல செவிவழிக் கதைகளை ஒன்றாக இணைத்து நாவலை அமைத்ததுபோல ஒரு உணர்வு மேலிடுகிறது.   அதே போல்,   கதாபாத்திரங்களை இன்னமும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

கதையில் அன்றைய மாலிக் காபூரையும், இன்றைய சிகரெட் அட்டை பொறுக்கும் சிறுவனையும் ஒரே புனைவில் எளிதாக ஆசிரியர் இணைத்துச் செல்கிறார். ஆனால் படிக்கும் வாசகனால் அவ்வாறு முடியவில்லை. அதற்கு மொழி நடையும் ஒரு காரணமாக இருக்கலாம். கரிசல்மண் எனும் இந்த கதைக்களத்தை வட்டார வழக்கில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது.

அது மட்டுமில்லாமல், சில கிளைக் கதைகள் மையக்கதைக்குத் தொடர்பில்லாமல்  இருக்கின்றன. உதாரணமாக 'கிதார மகாலிங்கத்தின்' கதையைச் சொல்லலாம் (பக்கம் 196). அவருக்கும் நாதஸ்வரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.  அது ஒரு கரிசல் காட்டு செவிவழிக் கதை என்பதைத் தவிர வேறுசிறப்பு இருப்பது மாதிரித் தெரியவில்லை.

ஆனால், நாவலை வாசித்து முடித்த பின்பும் நாதஸ்வரத்தின் இனிமையான ஒலியை மீண்டும் ஒருமுறையேனும் கேட்கவேண்டும், கேட்டு ரசித்து அதில் லயிக்க வேண்டும் எனும் ஆவலை வாசகனுக்கு உண்டாக்கி விடுவதில் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது.

இசை மேல் ஆர்வமிருக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.

அப்புறம், வாய்ப்பிருந்தால் பிபிசி வெளியிட்ட 'மறைந்து வரும் மங்கல இசை'  எனும் செய்திக் கோவையின் ஒலிவடிவத்தை நீங்களும் கேட்டுப் பாருங்கள். நாதஸ்வரம் பற்றிய மிக அருமையான, விரிவானதொரு ஆவண ஒலிப்பேழை இது.

http://www.bbc.com/tamil/arts_and_culture/nagaswaramseries ( இணைப்பு )

இந்தக் கட்டுரை ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.


http://omnibus.sasariri.com/2016/06/blog-post_16.html


சஞ்சாரம் – நாவல் – எஸ் ராமகிருஷ்ணன் – 375 பக்கங்கள்
 – விலை ரூ.370 – உயிர்மை பதிப்பகம், 11,29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18

Sunday, June 19, 2016

கும்பாபிஷேகமும் கண்ணீரும்

கடந்தவாரம் பதிமூன்றாம் தேதி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பில் 
2016-பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்று முதல்மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினோம். 

இந்த முறை திருவாரூருக்கு அருகில் உள்ள மாங்குடி அரசினர் உயர்நிலைப் பள்ளியை தேர்வு செய்திருந்தோம். கல்வி உதவித் தொகையை வழங்கும் அதே நேரத்தில் அந்த உதவி உரிய பயனாளிகளுக்குதான் சென்று சேருகிறது என்பதை கருத்தில் கொண்டே மாங்குடி பள்ளியை தேர்வு செய்தோம்.  

இதை ஏன் சொல்கிறேன் என்றால் -  எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நிதிஉதவியும் ஊக்கமும் கிடைத்துவிடுவதில்லை. அதே சமயத்தில் ஓரு அரசுப்பள்ளி வசதியான சூழலில் அமைந்துவிட்டால் ஓரளவேனும் அப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகள் யார் மூழமாகவோ கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் மாங்குடி பள்ளி மிகச் சரியான தேர்வு. 

பரிசு பெற்றவர்கள், மதிப்பெண்ணுடன் கீழே.

சுந்தரேசன்  - முதல் மதிப்பெண்** 475
ராஜகுமாரன்  - இரண்டாவது மதிப்பெண்** 466 
சர்மிளா தேவி - மூன்றாவது மதிப்பெண்** 463

முதல் பரிசாக ரூபாய் ஐயாயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டன.

சிறப்பு பரிசாக வழங்கப்படும்  'தமிழ்ப்பாடத்தில் முதல்  மதிப்பெண் ' பரிசைப் பெற்றதும் சுந்தரேசன்தான். அவருக்கு ரூபாய் மூவாயிரம் கூடுதல்பரிசாக வழங்கப்பட்டது. பரிசு பெற்ற அனைவருக்கும் சிறகுகள் சார்பில் பாராட்டு சான்றிதழும்  வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் அறக்கட்டளை சார்பில் அப்பாவும் (R.சிவசுப்பிரமணியன்), அப்பாவின் நண்பரான திரு. V.G. கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும்  சிறகுகள் அறக்கட்டளை சார்பில் மனமார வாழ்த்துவோம்.

இந்தச் சிறிய கல்வி உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நான் நம்புகிறேன்.

முக்கியமாக சமீபத்தில் தன் தந்தையை இழந்த சுந்தரேசனுக்கு இந்த தொகை கண்டிப்பாக பெரிய உதவியாக இருக்கும்.  சுந்தரேசனுடன் பரிசுபெற மேடைக்கு அழைத்தபோது கணவனை இழந்த  அந்த தாய் அழுதபடி மறுத்து விட்டாராம். அப்போது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் சுந்தரேசன் போன்ற பொறுப்பான, துடிப்பான மாணவர்கள் படித்து கண்டிப்பாக சாதிப்பார்கள். தங்கள் அம்மாக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பெருகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. 

இந்த மாணவர்கள் பந்தயக் குதிரைகள் போல. அவர்கள் போட்டியில் ஓடி ஜெயிக்கத் தயாராயிருக்கிறார்கள்.  அறிவார்நத சமூகமாக  நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கான சரியான இலக்கையும் அதை வென்றுமுடிக்க வேண்டியதைச் செய்வதுமே. 

அப்புறம்,  விழாவில் கலந்து கொண்ட எண்பது வயதுப்  பெரியவர் தனது சொந்த நான்கு மா  நிலத்தை இந்த அரசு பள்ளிக்கு  தானமாக தந்தவராம்.  இதற்கும் அவர் ஓன்றும் பெரிய உத்யோகத்தில் இருந்தவரில்லை. சாதாரண அரசு ஆசிரியராக இருந்து தனது குடும்பத்தை கரையேற்றியவர்தான். அந்தகாலத்தில்  ஓரு ஆசிரியராக அவர் பெரிதாக என்ன சம்பாதித்திருக்கப் போகிறார் சொல்லுங்கள். இவரைப் போன்ற சாதாரண மனிதர்கள் இன்னமும் வாழ்வதால்தான் ஊரில் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். 

நிகழ்வின் முடிவில் அந்த பெரியவர் ' கோயில்  கும்பாபிஷேகம் போல நிகழ்ச்சி சிறப்பா பண்ணிட்டீங்க ' என்றாராம். ஆனால் கும்பாபிஷேகத்தை விட அந்த தாயின் கண்ணீரே மனதில் நின்றது. 

நாம் கோயில் கும்பாபிஷேகத்தை பற்றி பெரிதாக பேசவேண்டியதில்லை. ஏனேன்றால் அந்த பாரதி கண்ட கனவே பள்ளித் தலம் அனைத்தும் கோவில்கள் செய்வது தானே.

தொடர்ந்த ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் நண்பர்களுக்கு நன்றி!!

Friday, June 10, 2016

இவர்கள் வாசகர்கள்-1

நண்பர்களே, எனது "பங்களா கொட்டா" நாவலை வாசித்து ஃபிளோரிடாவில் வாழும் மருத்துவர். திரு. மோகன் அவர்கள் கடந்த மாதம்  எனக்கு எழுதிய கடிதத்தை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
//
Dear Bhaskar

The kuru novel Is well written.  Character description was so clear that I was able to visualize the person.  Story line was very good In all a well written story

Thanks

Mohan Ramanathan DVM MS
www.woolbrightvet.com
Woolbright Veterinary Clinic
//

தொடர் உற்சாகம் தரும் வாசகர்களுக்கும் நன்றி !!

சென்னை புத்தக கண்காட்சியில் "பங்களா கொட்டா" நாவல் டிஸ்கவரி அரங்கு எண்கள் 104-105, 160-161 ல் கிடைக்கும்.

நாவலை வாசித்த நண்பர்களும் தங்கள் விமர்சனங்களை முடிந்தால் அனுப்பிவையுங்கள்.

Monday, June 6, 2016

இவர்கள் வாசகர்கள்

நண்பர்களே, கடந்தவாரம் ஓரு வாசகர் எனது "பங்களா கொட்டா" நாவலை வாங்கி வாசித்துவிட்டு திரு. மோகன் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தை இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.
//
Dear Mr. Bhaskar,
I happened to read your novel, with the compulsion of my wife who herself a writer.
She tempted me saying (Idhu Namma Ooru Kathai, You like it certainly).
Then I started and read it continuously at a stretch, as the story brought many memoirs happened in 1960 to 1970 during my boyhood. I come across with many characters in your story. Especially all the colloquial language written never die.
When you mention Gnanis first love in the last, அவனுள் பெய்த முதல் மழையின் ஈரம் இன்னும் காயாமல் இருப்பதாக பட்டது.
about the aimless life you wrote, many of us neither asking nor knowing the purpose of our life.
As we belong to those places in your story we enjoyed than any others.
Please keep writing.

regards,
n.a.mohan
//

இந்த நிகழ்வை மனதுக்கு நெருக்கமாய் உணர்கிறேன். இதுபோன்ற முகம் அறியா வாசகர்கள் தரும் அன்பும், ஆதரவும், ஊக்கமும் மட்டுமே நம்மை தொடர்ந்து எழுத்துலகில் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறது. அவருக்கு நன்றிகள் பல! ‪#‎bunglawkotta‬.

சென்னை புத்தக கண்காட்சியில் "பங்களா கொட்டா" நாவல் டிஸ்கவரி அரங்கு எண்கள் 104-105, 160-161 ல் கிடைக்கும்.

நாவலை வாசித்த நண்பர்களும் தங்கள் விமர்சனங்களை முடிந்தால் அனுப்பிவையுங்கள்.

குறிப்பு- எனது மன எழுச்சியை இங்கே பதிவு செய்வதை தவிர வேறு எந்த வியாபர தந்திரமும் இல்லை. அதனால் மோகன் இந்த பகிர்தலை தவறாக எண்ண மாட்டார் என நம்புகிறேன்.

Wednesday, June 1, 2016

எதற்காக எழுதுகிறேன் ?

எதற்காக எழுதுகிறேன்? என்ற தலைப்பில் நண்பர் நட்.பாஸ்கர் அவர்களுக்காக பதாகை இணைய இதழுக்காக எழுதியது. உங்களுக்காக.

'எதற்காக எழுதுகிறேன் ?' என்ற கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கான பதில் எந்தவோரு படைப்பாளிக்கும் எளிதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை.

இதுபோல ஏன், எதற்கு, எப்படி எனத்தொடங்கும் கேள்விகளை ஆங்கிலத்தில் ஓபன் என்டட் (Open Questions) கேள்விகள் என்பார்கள். நல்ல ஓபன் என்டட் கேள்விகளை கேட்பது ஓரு கலை என்ற வடிவில் பார்க்கப்படுகிறது. மேலாண்மை துறையில் இருப்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் இதுவும் ஓன்று.

எளிதாகச் சொல்வதேன்றால் - உங்கள் வீட்டிற்கு நண்பர் ஓருவர் வருகிறார். அவரை வரவேற்று 'டீ இல்ல காப்பி குடிக்கிறீங்களா ?' எனக் கேட்டால் நீங்கள் உங்கள் நண்பருக்கு தேர்வு செய்ய டீ அல்லது காபி எனும் இரண்டு மட்டுமே தருகிறீரகள். அதே சமயத்தில் 'என்ன குடிக்கிறீங்க? ' எனப் பொதுப்படையாகக் கேட்கும் பட்சத்தில். அதற்கான பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். நான் சொல்ல வந்த விஷயம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஓபன் என்டட் கேள்விகள் எதிராளிகளைச் சிந்திக்கத் தூண்டும், அவர்களின் உள்உணர்வுகளையும் அதுனூடான அவர்களின் பார்வையும் நாம் அறிந்துகொள்ள இயலும். இப்படி ஓரு விஷயத்தை அணுகுவது அவர்களுள் பல திறப்புகளை ஏற்படுத்தி உண்மையான 'அவனை அல்லது அவளை' தரிசிக்க இயலும்.

அதுபோல 'நான் ஏன் பிறந்தேன் ? ' என்ற கேள்வியைக்கூட அசட்டுத்தனமாக பார்ப்பது இல்லை அதை உள்ளார்ந்தமாக பார்ப்பது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.

இதுமாதிரியான ஓபன் என்டட் கேள்விகளுக்கு பொறுமையான, நீண்ட பதிலை நாம் எதிர்பார்க்கலாம். அந்த பதில்களிருந்து பல கிளைக்கேள்விகள் முளைத்து அந்த உரையாடல் மேலும் தொடரவும் வாய்ப்பிருக்கிறது. 'எதற்காக எழுதுகிறேன் ? ' என்பதும் அதுபோன்றதே.

எழுத்து ஓரு அழகிய கலைவடிவம். அந்த விதை பொதிந்த மனம் நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் தாண்டி முட்டி மோதி வேர்பிடித்து, துளிர்விட்டு மேன்மேலும் எழுதி எழுதி தன்னை தானே வளர்த்துக்கொண்டு கிளை பரப்பி பிரமாண்ட விருட்சமாகிறது.


பெய்யும் மழை போல ,அடிக்கின்ற அலை போல, அசையும் காற்று போல. எங்கேனும், என்றேனும் யாரேனும் வாசிப்பார்கள், ரசிப்பார்கள் எனும் நம்பிக்கையில் ஓரு படைப்பாளி தன் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான்.

அது பாடும் பறவைகளை , ஓடும் நதிகளை, குளிரும் நிலவை, சுடும் சூரியனை வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஓன்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருப்பதைப் போன்றது.

அப்படி அன்றாட வாழ்வின் நெருக்கடிகளையும் பிடுங்கல்களையும் தாண்டி ஏதோ ஓன்று என்னை எழுத உந்தித்தள்ளுகிறது. தொடர்ந்து எழுத, எழுத எதை எழுத வேண்டும்- எதை எழுத வேண்டாம் எனப்பிடிபடுகிறது. எழுத்து என்னுள் பல திறப்புகளைத் திறந்துவிட்டுச் செல்கிறது.

துக்கம், வலி, மகிழ்ச்சி, கோபம்,பதற்றம் என மனத்தில் தோன்றிய ஏதோ ஓன்றை எழுதி முடித்தபின் எனக்குள் ஓரு பெரிய நிம்மதி. ஆசுவாசம், ஆனந்தம். அதையும் தாண்டி அகமனத்தின் எல்லா அடுக்குகளிலும் போராட்டம் அடங்கிய, அமைதியான ஓரு ஆழ்ந்த ஜென் மனநிலை. அது வெயில் புழுங்கும் வீட்டின் ஜன்னல்களை திறந்தால் வீசும் குளிர்ந்த வெளிக்காற்றின் சுகம் போல.

சிலர் சொல்வதுபோல பணத்துக்காக, புகழுக்காக எழுதலாம்தான். ஆனால் அது பசியில்லாமல் உண்ணும் விருந்துபோல -ருசியிருப்பதில்லை.

அதே சமயத்தில் ஓரு படைப்பாளி தன் படைப்புகளை இந்தச் சமூகத்தின் முன் வைத்து அதற்கான நியாயமான அங்கீகாரத்தை, விமர்சனத்தை எதிர்பார்த்தே காத்திருக்கிறான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

இதன் திருத்தியவடிவம் பதாகை இதழில் வெளியாகியுள்ளது. இணைப்பு கீழே

https://padhaakai.com/2016/06/01/ww-arur-baskar/

படங்கள்:

நன்றி: http://www.mkanokova.com/