Saturday, July 23, 2016

அமேரிக்காவில் கபாலியும் எட்டு பேர்களும்

நண்பர்களே,

'கபாலி' யை  இப்போது தான் பார்த்துவிட்டு திருப்பினேன்.  தியேட்டரில் என்னையும் சேர்த்து மொத்தமாக 8 பேர்தான் இருந்தோம்.

இன்று  அமேரிக்காவில்  கபாலி வெளியான மூன்றாவது நாள். ஆனாலும் கட்டணம் சாதாரண படங்களை போலின்றி இரண்டு மடங்கு வசூலித்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது.

அமேரிக்காவில்  சிலர்  படம் பார்க்க நூற்றுக்கணக்கான மைல்கள் டிரைவ் செய்வதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால்
பொதுவாக நான் அது போன்றதோரு வேலைகள் பிடிக்காததால்
அப்படிச் செய்வதில்லை.

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து கபாலி சுமார் 30 நிமிட டிரைவில்
திரையிடப்பட்டதால்தான்  சென்றேன். அதுமட்டுமில்லாமல் மலேசிய கதைக்களத்தை எப்படி திரையில் கையாண்டிருக்கிறார்கள் எனும் ஆர்வதிலும் சென்றிருந்தேன். என்னுடைய அடுத்த நாவல் மலேசிய கதைக்களம் என்பது  இங்கே கூடுதல் தகவல். :)

இனி,  படத்தைப் பற்றி எனது அனுபவங்களைப் பார்கலாம்.
என்னுடைய கருத்தை நீங்கள் வாசிக்கும் முன்  ஓரு விஷயம். இதுவரை கபாலி பற்றி எந்த ஓரு விமர்சனத்தையும் நான் வாசிக்க வில்லை. இவை எனது சொந்த கருத்து மட்டுமே. மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன்.

முதலில் படத்தின் கதையை பற்றி பார்போம்.  இதை
ஓரு
மலேசிய தாதாவின் பழிவாங்கும்  கதை என்பதா ?,
இறந்துபோனதாக நினைத்த மனைவியையும், மகளையும் 25 வருடங்களுக்கு பின் சந்திக்கும்
ஓரு மனிதனுடையதா ?,  இல்லை
மலேசிய இன வர்கப்பிரிவினையை எதிர்த்துப் போராட்டுபவனின் கதையா  ?என்றால்,  இது மேலே சொன்ன எல்லாமும் சேர்ந்த கதை எனலாம். ஆனால் மேலேச் சொன்ன எந்தவொரு விசயமும் ஆழமாக சொல்லப்படவில்லை என்பது எனது அபிப்ராயம்.  இருந்தாலும், ரஜினி எனும் ஓரு மிகப்பெரிய சக்தியை வைத்து எல்லாதரப்பையும் திருப்தி படுத்துவது போல படமெடுப்பது
அவ்வளவு எளிதல்ல என்பதேன்னவோ உண்மை.

குறிப்பாக ,ரஜினியின்  முந்தைய படங்களின் சாயல் வரக்கூடாது.
அதுபோல  கமலின் நாயகன் படம் போல வரக்கூடாது என இயக்குநர் மேனக்கெட்டிருப்பார் போல இருக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த படங்கள் வெற்றி அடைந்த சூட்சுமத்தை கண்டேடுத்து கபாலியில் பயன்படுத்தியிருக்கலாம்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஓருவர் மலேயில் பக்கம் பக்கமாக பேசி வெறுப்பேற்றினார். அதுபோல, கொஞ்சம் வன்முறையை குறைத்திருக்கலாம். 1980 களில் நடக்கும்  நிகழ்வுகளில் உடை தேர்வு அற்புதம். ஆனால் , சில  காட்சி அமைப்பில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறைகள் கண்ணுக்கு தெரிகிறது.

அது போல சிலகாட்சிகள் இழுவை, உதாரணமாக மனைவியை தேடி மலேசியாவிலிருந்து சென்னை, புதுவை எனச் சுற்றுவது. ரஜினிக்கு இவையெல்லாம் வெகு சாதரணமாக இருக்கிறது.
மலேசிய படம் எனும் முத்திரை வரக்கூடாது என தமிழ்நாட்டுக் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.

இனி நல்ல விசயங்களை பார்கலாம். ரஜினியின் நடிப்பு அபாரம்.
உணர்ச்சி பூர்வமான நடிப்பு. கண்களாலே பேசி மனிதர் அசத்துக்கிறார். அதுவும் 25 வருடத்திற்கு பிறகு மனைவி, மகளை பார்க்கும் காட்சி.   படம் முழுமையும் அப்படி தொடராதா என
ஏங்கத் தூண்டுகிறார்.

ரஜினி, நாசர் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் படத்தில் இல்லை. இருப்பினும் ரஜினியுடன், தோள் கொடுத்து படத்தில் பலமூட்டியிருப்பவர்கள் அவரது மகள்களாக நடித்த இரண்டு பெண்களும் குறிப்பாக ரஜினி தத்தேடுக்கப் போவதாக சொல்லுபவர் அற்புதம். ரஜினியின் மனைவியாக வருபவர் (ராதிகா ஆப்தே) நடிகை செளந்தர்யாவை நினைவுபடுத்துகிறார். அதுபோல  ரஜினியின் நண்பராக வரும் அமீர் எனும் கதாபாத்திரம் கச்சிதம்.

பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன, படம் பார்த்து முடியும் வரை. பிண்ணனி இசை படத்திற்கு கண்டிப்பாக நல்லபலம்.   சில இடங்களில் கண்ணீரை வர வைக்கிறார். படத்தில் நகைச்சுவை இல்லை எனும் குறை எல்லாம் கண்டிப்பாகத் தோன்றவில்லை.
அது போல  ரஜினியை ஓரு நல்ல  நடிகராக இயக்குநர் மறுகண்டெடுப்பு செய்திருக்கிறார். அந்த வகையில் பாராட்டுக்குரியவர்.

ரஜினி ஓரு சூப்பர் ஸ்டார் என்பதைத் தாண்டி. இதை ஓரு திரைப்படமாக பார்க்கும் போது சொல்லவந்த கருத்தை இன்னமும் வலுவாக சொல்லியிருக்கலாமே எனத் தோன்றுகிறது.
மலேசிய தமிழர்களின்/தோட்டத் தொழிலாளர்களின் கதையை திரையில் இன்னும் யாராலும் முழுமையாக, ஆழமாகச் சொல்லவில்லை. கபாலியும் விதிவிலக்கல்ல.  லேசாக தொட்டிருக்கிறார். அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் என எடுத்துக் கொள்ளலாம் என்பது எனது கருத்து.

மலேசிய தமிழர்கள் மட்டுமே  தங்களை, தங்களின் வாழ்வை திரையில் பார்த்து, உணர்ந்து இதற்கான பதிலை சொல்லவேண்டும்.

Monday, July 18, 2016

தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகம் - அ. ராமசாமி

பேராசிரியர் அ. ராமசாமி  தமிழ் இலக்கிய உலகில்  தவிர்க்க முடியாத ஆதர்சனங்களில் ஓருவர். பேராசிரியராக, திறனாய்வளராக, விமர்சகராக, நூலாசிரியராக, நாடகவியல் ஆய்கவாளராக இன்னும் பல துறைகளில் பல்லாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர்.

பேராசிரியர் தற்போது அமேரிக்காவிற்கு விடுமுறைக்காக வந்திருக்கிறார்.  (இவருடைய மகன் பாஸ்டனில் இருக்கிறார்)
அவர் இந்த மாத தொடக்கத்தில்  நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 2016ம் ஆண்டு தமிழ்விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அப்போது  பேராசிரியரின் அறிமுகம் கிடைத்தது மிக மகிழ்ச்சி. அதற்கு உதவிய நண்பர் ஆல்பிக்கு எனது நன்றிகள்.



நேற்றைய  (ஜூலை, 17, 2016) நிகழ்வுக்கு வருவோம். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாதமொருமுறை இலக்கியச் சொற்பொழிவு நிகழ்வை நடத்திவருகிறது.  அந்த நிகழ்வில் பேராசிரியர் அவர்கள் பாஸ்டனிலிருந்து  பல்வழி இணைப்பு வழியாக கலந்துக் கொண்டார்.

தனது பேச்சின் தொடக்கத்தில் தமிழ் விழா 2016 பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்தார்.  பின் "தமிழ் நாடகம் ; அடையாளமும், போக்குகளும்" எனும் தலைப்பில் பேசினார்.  நான் சமீபத்தில் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் சிறப்பானதொரு நிகழ்வு இது.  தனது பேச்சில் நூற்றாண்டு பாரம்பரிய தமிழ் நாடக உலகின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றார்.

அவருடைய பேச்சை தனியாக குறிப்புகள் எதுவும் எடுக்கவில்லை.
அதனால் நிகழ்வின் இறுதியில் கேள்வி நேரத்தில் அவர் தந்த பதில்களை நினைவில்  இருந்ததை  மட்டும்  உங்களுக்கு தருகிறேன்.
(எதேனும் விடுபட்டிருந்தால் அது எனது தவறு மட்டுமே.)  இவை தமிழ் பேசும் அனைவரையும் சிந்திக்கவைப்பது.

தமிழ் நாடக உலகின் மூத்தவர் என  சங்கரதாஸ் சுவாமிகள் மட்டும் கொண்டாடப்படும் அதே வேளையில் பாஸ்கர தாஸ் அதிகம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஓட்டிக் கேட்கப்பட்ட கேள்விக்கு. 

அது திட்டமிட்டு செய்யபடும் இருட்டடிப்பு அல்ல. சங்கரதாஸ் அவர்கள் நாடக உலகின்  முன்னோடி என்ற அளவில்  பெரிதும் பேசப்படுவதாகச் சொன்னார்.

தமிழ் சிறுகதைகளை நாடகமாக்குதல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு

தமிழ்நாட்டில் முதன்முதலில் சிறுகதைகளை நாடகமாக்கியதில் தனது பங்கை குறிப்பிட்டார்.  மேலும் ஓருபடி மேலேபோய், கதை என்ன ?, கவிதையையே நாடகமாக்கியிருக்கிறோம் என்றது ஆச்சர்யமே.

காலஞ்சென்ற இயக்குநர் பாலு மகேந்திராவின் கதைநேரம் போன்றதோரு முயற்சிகள் தொடரவேண்டும்.

கர்நாடக சங்கீத சபாக்களில் நாடகங்கள் பற்றி ?

கர்நாடக சங்கீத சபாக்களில் முன்னுரிமை எப்போதும்
இசையென்ற போதிலும்,  அங்கே மற்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஈட்டு நிரப்ப தொடங்கப்பட்டவையே  இயல், இசை, நாடகம் எனும் வரிசையில்  பேச்சும், நாடகமும்.

அந்த நாடகங்கள் நடுத்தர மக்களின், குறிப்பாக சென்னையில் வாழும் குறிப்பிட்ட  ஓரு சமூகத்தின் வாழ்க்கையை ஓட்டியே வளர்ந்து வந்ததாகச் சொன்னார்.

இந்த தகவல்  கண்டிப்பாக புதியவர்களுக்கு நல்லதோரு செய்தியாக இருக்கும்.

தமிழ் சூழலில் நாடகத்தின் இன்றைய நிலை ?

மிக முக்கியமானதோருக்குக் கேள்வி.  தனது உரையில் பல இடங்களில் இதை தொட்டுச் சென்றார். அதை குறிப்புகளாகத்
தருகிறேன்.


  • இன்று  வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும்  திரைப்படங்களும், அரசியலுமே பேசுகின்றன. அவையே  பெரும்பான்மை மக்களின் பொழுதுபோக்காக தொடர்ந்து முன்  வைக்கப்படுகிறது.
  • சின்னத்திரையின் தாக்கம்,  நகர்மயமாதல் போன்ற காலச் சூழல்
  • நாடகம் எனும் கலை மக்களின் பெரும் ஆதரவு இல்லாத போதிலும் இந்திய அரசின் உதவியாலும், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் நாடகங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய நாடக முயற்சிகள் தொடர்கின்றன.


தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?

கலை வடிவங்களான கவிதை, நாடகம்,  எழுத்து, மேடைப் பேச்சு,
திரைப்படம்  இவற்றின் மூழம் ஆட்சியைப் பிடித்த அரசியல்
கட்சிகள் அந்த விழுமியங்களை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆதங்கப்பட்டார். கேரள, மகாராஷ்டிர, வங்காள மாநிலங்களை  நல்ல எடுத்துக்காட்டாக சுற்றிக் காட்டினார்.


அடுத்த தலைமுறையில் நாடகத் துறையை வளர்க்க ?

பல கல்லூரிகளில் தொடங்கப்பட்டு, மாணவர்கள் விருப்பிச் சேரும்
ஓரு துறை விசுவல் கம்யூனிகேசன். அந்த  மாணவர்களுக்கு ஓரு குறும்படம் இயக்குவது  என்பது பாடத்திட்டத்தில் இருப்பதால் அவர்கள் நாடகவடிவத்தை  தேடி அணுகும் போக்கு வளர்ந்திருப்பதாகச் சொன்னார். அது  லேசாக
நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

இளைய தலைமுறையிடம்  (மாணவர்களிடம்)  நாடகத்தை கொண்டு செல்வதன் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான முயற்சியில் தன்னுடைய மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பாக பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைச்  சொன்னார்.

இப்போது திரைப்படங்களுக்கும்  இந்த  பின்புலம்  (Stage) தேவை எனும் நிதர்சனம் புரியத் தொடங்கியிருப்பதாக  ஜிகிர்தண்டா திரைப்படத்தை மேற்கோள் காட்டியதாக நினைவு.

கேள்வி நேரத்தில் நான் கேட்க நினைத்த கேள்விக்கு பேராசிரியரே
கடைசியில் பேச்சுனுடே பதில் சொல்லிவிட்டார். ஆங்கிலத்தில் Reading between the Lines  என்று சொல்வதுபோல. அதை நான்
புரிந்து கொள்கிறேன்.

நான் கேட்க நினைத்த கேள்வி "தமிழ்நாட்டில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நாடகத்தின் நிலை என்னவாக இருக்கும் ? "

அவர் சொன்ன அந்த வரி  " நாடகம் அழியுமோ என்ற கவலை இருக்கிறது "  .

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பேராசிரியர். அ.ராமசாமி
அவர்களுக்கு  வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Sunday, July 10, 2016

சொல்வனம் இதழில் ...

நண்பர்களே,  இந்த வார சொல்வனம் இணைய இதழில் புத்தக அறிமுகம் பகுதியில் எனது  ’பங்களா கொட்டா’ நாவல் வாசகர்களுக்கு அறிமுகமாயிருக்கிறது.
உங்களின் வாழ்த்துக்களுக்கும், தொடரும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.
இனி  சொல்வனத்திலிருந்து..
// *****************
சொல்வனம் பத்திரிகையில் சிறுகதைகள் எழுதி இருக்கிற ஆரூர் பாஸ்கரின் முதல் நாவல் வெளியாகி இருக்கிறது. ’பங்களா கொட்டா ‘ என்ற தலைப்பு கொண்ட இப்புத்தகம் பற்றி அவர் சொல்கிற சில வார்த்தைகளை இங்கே கொடுக்கிறோம்.
விவசாயப் பின்னணியில் வந்த எனக்கும் கிராமங்களுடன் நீண்டதொரு பிணைப்பு உண்டு. இன்று அமெரிக்க மண்ணில் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இன்றும் அதன் நினைவுகளைச் சுமந்து திரிபவன். பால்யத்தில் நான் கேட்ட செவிவழிக் கதைகளையும், எனது கிராமத்து நினைவுகளையும் எழுத்தில் மீட்டெடுத்த முயற்சிதான் ‘பங்களா கொட்டா’ எனும் இந்த நாவல்.
நானும் என் முன்னோர்களும் நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த வாழ்கையின் மெளன சாட்சி எங்கள் கிராமம். அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி வெகு வேகமாய் நகர்மயமாகும் அல்லது நகரமயமான லட்சக்கணக்கான கிராமங்களில் எங்கள் கிராம்மும் ஓன்று என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமை ஓன்றுமில்லை. ஆம், வேப்பங் குச்சியிலிருந்து பற்பசைக்கும், தாவணியிலிருந்து சுடிதாருக்கும், நைட்டிக்கும், கறவை பாலிலிருந்து பாக்கெட் பாலுக்கும் மாறிவிட்ட கிராமங்கள் அவை.
அந்தக் கிராம சூழலில் வெவ்வேறு காலக் கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் வாழ்வை சிறிது கற்பனை கலந்து ஓரு நாவலாக்கியிருக்கிறேன்.
ஒரு பெரும் கனவை நனவாக்கிடத் துடித்து வாழ்க்கையை அர்பணிக்கிறவனின் கதைதான் ‘பங்களா கொட்டா’. உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும் தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஞானி (கதையின் நாயகன்), அதன் பொருட்டு அவன் சந்திக்கிற மனப் போராட்டங்கள் இவைதான் இந்நாவலின் மையம்.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, 1950- களின் நடுவில் கல்வியே தம் விடுதலைக்கான திறவுகோல் என்பதை வலுவாய் உணர்ந்து கொண்ட ஒரு தலைமுறையின் எழுச்சிதான் அன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இன்று அதே கல்வி அமைப்புச் சீரழிந்து, கல்வி வள்ளல்கள் வசூல் தந்தைகளாக மாறி, கல்வி நிலையங்கள் கொள்ளையடிக்கிற வணிகக் கூடரங்களாக மாறிவிட்ட நிலையில், கல்வியின் மேன்மையைப் பற்றி ஓரு காலத்தில் சிந்தித்துச் செயலாற்றியவர்கள் இருந்தார்கள் என்கிறது இந்த நாவல்.
இந்தக் கதையில் – மல்லாரி வாசிக்கையில் பச்சை வண்ணப் பட்டு உருமாவை பரிவட்டமாய் கட்டிக் கொண்ட நாயகன் ஞானி. முண்டாசோட சேர்த்து ஆறடி உயரமிருக்கும் ராசு. விடிய கருக்கல்ல வந்துட்டு பொழுதுவரைக்கும் பண்ணையிலேயே கதியாய்க் கிடக்கும் சின்னு , கல்லறுக்க பண்ணைக்கு வந்த பவுனு எனப் பல மனிதர்கள் பல நிறங்களில்.
இந்த நாவலில் உங்கள் கிராமத்தையோ அல்லது அங்கே வாழ்ந்த மனிதர்களின் சாயலில் வேறு யாரையேனும் ஓருவரை கண்டிப்பாக நீங்கள் பார்க்ககூடும்.
இந்த நாவலை, தரமான இலக்கிய நூல்களை வெளியிடும் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 *****************//
அதன் நேரடி இணைப்பு இங்கே
#bunglawkotta