Thursday, December 30, 2021

ஐடி துறையில் ஆள்பற்றாக்குறை

இது வெளியில் இருக்கும் மற்ற துறை ஆட்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் அல்லது பொருந்தும் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால்,  கொரோனாவுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் ஐடி துறை மிகப்பெரிய ஆள்பற்றாக்குறையை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக... என்பது போல் இது செயற்கையாக  இல்லாமல் இது உலகம் முழுவதும் உண்மையாக உணரப்படும் ஒரு விசயம்.  திட்ட மேலாளர் (Project Manager),  வடிவமைப்பாளர், டெவலப்பர் (Developer) எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி தொழில்நுட்பம் சார்ந்த எல்லா ஊழியர்களுக்கும்  இப்போது ஏக கிராக்கி.

ஐடித் துறையின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் உயர் அதிகாரி (இந்தியா) ஒருவரிடம்  நேற்று பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன்னுடைய 25 ஆண்டுகால அனுபவத்தில்  இப்படி ஒரு பற்றாக்குறையைத் தான் சந்தித்ததில்லை என்கிறார். உதாரணமாக ஒரு காலி இடத்தை நிரப்ப சுமாராக 5  பேருக்கு ஆபர்லெட்டர் கொடுத்தால் அதில் ஒருவர் மட்டுமே வந்து வேலையில் சேருவதாகச் சொல்கிறார். அதுவும் அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் தங்களால் இயன்ற உச்சகட்ட சம்பளத்தைத் தருவதாக ஒத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.  இது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் விசயம் அல்ல. சின்ன நிறுவனம் பெரிய நிறுவனம் என்றில்லாமல் இது எல்லா நிறுவனங்களிலும் எல்லா மட்டங்களிலும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. இப்படி அமெரிக்காவில் மட்டும் கடந்த மாதம்  பல மில்லியன் பேர் தங்கள் வேலையை ராஜினா செய்துவிட்டு புதுவேலையில் சேர்ந்திருக்கிறார்கள். 

நான் ஒரே சமயத்தில் 5-க்கும் மேற்பட்ட ஐடி சேவை நிறுவன உயர் அதிகாரிகளுடன் தொழில் முறையில் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் இதை முழுமையாக உணர்கிறார்கள்.

இந்த ஆள்பற்றாக்குறையால் பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வேலையை அவர்களால் எடுத்து செய்ய முடியவில்லை. "எங்களால் செய்து முடித்துவிட முடியும்.." என ஒப்பந்தமிட்ட பல திட்டங்களைக் கடைசி நேரத்தில்  ஆட்கள் கிடைக்கவில்லை என திரும்ப ஒப்படைத்ததும். தொடங்கிய திட்டங்களைத் திறமையான ஆட்கள் இல்லாத காரணத்தால் பாதியிலேயே கைவிட்டு விட்டு கழண்டு கொண்ட கதையும் நடக்கிறது.

இதனால் பாதிக்கப்படுவது பெரும் பணபலம் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தான்.  கொரனாவுக்குப் பிறகு இயல்புநிலை மெள்ள திரும்பும் சூழலில் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை. அதாவது,  கையில் பணத்தோடு அவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். 

இதில் பயன்பெறுவது ? வேறு யார் ஊழியர்கள் தான். பலர் கைகளில் நான்கு, ஐந்து வாய்ப்புகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் ஆண்டுக்கு 10 இலட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார். கடந்த வாரம் பேசியபோது  தன்னை 3 நிறுவனங்கள் தலா 25, 28, 29 இலட்சங்கள் தருவதாக அழைத்திருக்கிறார்கள் என்கிறார். இத்தனைக்கும் அவருக்கு அனுபவம் குறைவு, புதிய தொழில்நுட்பங்களில் போதிய அனுபவம் கிடையாது.

நாம் கொரோனா உச்சத்துக்குச் சென்றபோது எல்லா ஐடி ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை செய்யட்டும் பிறகு பார்க்கலாம் என மேம்போக்காக விட்டு விட்டோம். ஆனால், இப்போது அவர்களில் பலர் தாங்கள் திரும்ப அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதில் விருப்பமில்லை என்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் ஊழியர்கள் ஒருபடி முன்னேறி இப்போது வேலை செய்ய விருப்பமில்லை. சில ஆண்டுகள் இடைவெளி விட்டுவிட்டுத் தொடரலாம் என நினைக்கின்றேன் என்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை தருவதாக சொன்ன ஒரு கம்பெனிக்கு மாறிவிட்டேன். சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கே வந்துவிட்டேன். இது வீட்டையும் பிள்ளைகளையும் கவனிக்க வசதியாக இருக்கிறது என்கிறார். தற்போது அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தபடி பணி செய்வதால் நிறுவனங்களுக்கு எப்படியோ வேலை நடக்கிறதுதான் என்பது உண்மைதான். ஆனால், அவை நீண்டகாலத்துக்கு உதவாது. 

ஒரு குழுவாக செயல்படுவது, நேரடியாக கண்களைப் பார்த்து, பேசுவது விவாதிப்பது, மற்றவர்களுக்கு உதவி, இணைந்து செயல்படுவது போன்ற பல நல்ல விசயங்கள் இல்லாமல் அனைத்து ஊழியர்களும் தனித் தனி தீவாக செயல்படுவது நீண்டநாள் பலனைத் தராது என்பதை அவர்கள் நன்றாக உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

புதிய புதிய தொழில் நுட்பங்களைக் கற்று திறமையை வளர்த்துக் கொண்டு மேலே வரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்கள் இப்போது வீட்டில்  வேறுவழியில்லாமல் அடைப்பட்டு கிடப்பது ஒருபுறம் என்றால் இருப்பது போதும் வீட்டில் இருந்தபடி ஏதோ ஒரு வேலையைப் பார்ப்போம் என்பது மறுபுறம். சிலர் தொழில்நுட்பத்தின் மெய்நிகர் தொடர்பு வழியாகவே விட்ட பழைய இடத்தைப் பிடிக்கலாம் என்றும் முயற்சி செய்கிறார்கள் (புதிதாக ஐடி துறைக்கு நுழைபவர்கள் ஒருபுறம்).

இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு எப்படித் தொடரும் என்பது யாருக்கும் சரியாக புலப்படவில்லை. எது எப்படியோ, ஐடி துறை வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

Thursday, December 16, 2021

ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

சமீபத்தில் ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி நாவல் வாசித்தேன். 

அல்லிக்கேணி சற்று ஏறக்குறைய 1970 களின் இறுதியில்  சென்னை திருவல்லிக்கேணியில் வளரும் நண்பர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. இது ராம்ஜியின் முதல் படைப்பு என்பதைச் சற்று சந்தேகத்தோடுதான் பார்க்க வேண்டி இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கு வாசகர்களைக் கட்டிபோடும் விறுவிறுப்பான எழுத்து நடை. அதிலும் குறிப்பாக, பகட்டில்லாமல் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது.

(எ.டு.) கதையோட்டத்தோடு  “அவர்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியவில்லை. ஹரி பேசிய தெலுங்கு அவனுக்கே புரியவில்லை..'' என்பதையெல்லாம் வாசிக்கும் போது  சிரிப்பு வெடிக்க வைக்கிறது. அதுபோல,  ''மாமா- நீங்க உண்மையாகவே போலிஸ் ஸ்டேசனை இடிச்சிடுவீங்க ? '' எனும் கேள்விக்கு மாமா-வாக வருபவர் சொல்லும் பதிலைக் கேட்டு நீங்கள் கண்டிப்பாக சில நிமிடங்களாவது வயிறு குலுங்க சிரிப்பீர்கள் (page 61) என்பதற்கு நான் உத்திரவாதம் அல்ல.  எழுதிய ஆசிரியர் ராம்ஜியே உத்திரவாதம்.

அதே நகைச்சுவையோடு , பார்த்த உடனே மாற்றம் தெரியவில்லை என்றால் அது மாற்றமே இல்லை. "எப்படி இருக்கு?" என்று கேட்கவே கூடாது. உண்மையான மாற்றம் பார்த்தாலே தெரிந்துவிடும் (page 71) என்பது மாதிரியான அருமையான பல முத்துக்களும் உண்டு.



இந்த நூலின் வழியாக 1980 களின் சென்னையை அதிலும் குறிப்பாக  அன்றைய திருவல்லிக்கேணி அங்கிருந்த குடும்ப, சமூகச் சூழலை நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.  

நாவலில் கல்லூரி வயது பையன்கள் வழக்கம் போல ஊர் சுற்றுகிறார்கள். காதலிக்கிறார்கள். அடிதடிக்கு போகிறார்கள். படம் பார்க்கிறார்கள். பஞ்சாயத்து பண்ணுகிறார்கள். வர வேண்டிய பணத்தை வசூலித்துத் தருகிறார்கள் என்பது மாதிரியான  வீர பிரதாபங்களோடு நாட்கள் நகர்வது போல தெரிந்தாலும் அதன் மையச் சரடாக அவர்கள் அந்த வயதில் தங்களுடைய ஆளுமையை வளர்த்தெடுக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

அந்த காலகட்டம் முடிந்து வேலை, சம்பாத்தியம் என வாழ்வின் அடுத்த கட்டம் நோக்கி நகரும் போது அவர்கள் ஒவ்வோருவரும் எப்படி   தங்களுக்குத் தெரிந்த வழிகளில், சொந்த திறமையைப் பயன்படுத்தி அதே நகரில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வாழ்வில் தங்களைச் சுற்றி நடந்த விசயங்களை உள்ளது உள்ளபடியே ரசிக்கும்படி பதிவு செய்வது  என்பது ஒரு கலை. அந்தக் கலை ராம்ஜிக்கு சிறப்பாக கை கூடி வந்திருக்கிறது.  வாழ்த்துகள் !

நூல் - அல்லிக்கேணி/ALLIKENI

ஆசிரியர் - ராம்ஜீ நரசிம்மன்/RAMJEE NARASIMAN

வெளியீடு - எழுத்து பிரசுரம்

விலை - ரூ. 249

https://www.zerodegreepublishing.com/products/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?_pos=1&_sid=f95bdcd88&_ss=r


Tuesday, December 7, 2021

பெண்களின் இரகசியம்

என்கிரிப்சன் (Encryption) எனும் மறையாக்கம் பற்றி ஒரு புத்தகம் எழுதும் ஆசையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அளவுக்கு தகவல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். பிறகு, ஏதோ காரணத்தால் தடம் மாறி சமூக ஊடகங்கள் பற்றி எழுதத் தொடங்கிவிட்டேன்.

சரி விசயத்துக்கு வருவோம்.  என்கிரிப்சன் குறித்த பழைய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்த போது அது தொடர்பான தகவல் கிடைத்த ஒரு இடம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அது வாத்ஸ்யாயனரின் "காமசூத்திரம்".

அதில்  பெண்கள் அறிந்திருக்க வேண்டிய 64 கலைகள் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது.  ஓவியம், சமையல், மசாஜ், வாசனை திரவியங்கள் தயாரித்தல் என நீளும் அந்தப் பட்டியலில் 45 வது இடத்தில் இருப்பது  "மிலேசிடா-விகல்பா" (Mlechita-vikalpa)எனும் இரகசிய எழுதும் கலை. அதைப் பயன்படுத்தி பெண்கள் இரகசியமாக தங்களுடன் தொடர்புகள் இருப்பவர்களுடன்  விவரமாக தகவல்களைப்  பரிமாற சொல்லித் தருகிறார் வாத்ஸ்யாயனா.




அப்போது கண்ணில் பட்ட இன்னொரு விசயம் நந்தியின் காமசூத்திரம்.
சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஒரு ஐதீகம் இருக்கிறதாம்.  வாத்ஸ்யாயனா அந்த நந்தியின் நூல் தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் கூட சொல்லி இருக்கிறாராம்.  

ஓ.... காப்பிரைட் எனும் பதிப்புரிமை மீறல் விவகாரம் அன்றைக்கே தொடங்கிவிட்டதா சரிதான்... :)

Monday, November 22, 2021

வனநாயகன் குறித்து-20 (இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி நினைவுக்கு வருகிறது)

அமெரிக்க வாசக நண்பர் திலகா எனது "வனநாயகன்-மலேசிய நாட்கள்" நாவல் வாசிப்பனுபவம் குறித்துப் பகிர்ந்தது ... நன்றி  திலகா!


//

வனநாயகன் (மலேசிய நாட்கள்) முதல் வாசிப்பு (பருந்து பார்வை) முடித்தேன். இன்னமும் ஆழமாக இரண்டாவது முறை படித்துப் பார்க்க வேண்டும்.


முதல் நாவலை ஒப்பிடும் போது எந்தவித தயக்கமும் இல்லாமல், சரளமாக வழுக்கிச் செல்கிறது எழுத்து நடைழ உரையாடல்கள் கன கச்சிதமாக அமைந்துள்ளன.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி  நாவலும் நினைவுக்கு வந்தது. அந்தக் கதையும் கிட்டத்தட்ட இதே சாயலுடன் இருக்கும். இரண்டிலும் கதாநாயகன் பாத்திரங்கள் மட்டும் சுபாவத்தில் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர்.


அவர் டில்லி சூழ்நிலையை மையமாக வைத்துக் கதையை நகர்த்தி இருப்பார். மொத்தத்தில் தேர்ந்த நாவலாசிரியருக்கான அறிகுறி தெரிகிறது. இது போல இன்னும் பல அற்புதமான நாவல்களைப் படைத்திட எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். !!

//

இணையத்தில் வாங்க இணைப்பு கீழே;

https://dialforbooks.in/product/9788184936773_/

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள்

இயல்புக்கு மாறாக கன மழை பெய்தால் இல்லை ஒரு  கோடையில் தாங்க முடியாத வெயில் அடித்தால் இயற்கையைச் சபிப்பார்கள். இல்லை மிஞ்சிபோனால் அரசியல்வாதிகளைச் சபித்துவிட்டுக் கொஞ்ச நாளில் அதையும் மறந்துவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விடுவார்கள்.

இங்கே  பருவநிலை மாற்றம், சூழலியல் போன்ற விசயங்கள் பரவலாக  வெகுமக்கள் ஊடகத்தில் விவாதிக்கப்படுவதில்லை. அதனால்தான் அது குறித்து தமிழில் விரிவான காத்திரமான கட்டுரைகளைப் பார்க்க முடிவதில்லை என நினைக்கிறேன். 

அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் கனடா நண்பர் ரவி நடராஜன் 'பருவநிலை மாற்றம் சார்ந்த விஞ்ஞான திரித்தல்கள்' என்ற தொடர் கட்டுரையைச் சொல்வனத்தில் எழுதிவருகிறார். மிகச் சிறப்பாக இருக்கிறது.


இங்கே, அறிவியல் கட்டுரைகள் என்றால் பலர் மேலோட்டமாக பகடியோடு வேண்டும். சினிமா கலந்து எழுது. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல எழுது என்றெல்லாம் சொல்லி வடையை விட்டுவிட்டு பொத்தல்களை எண்ணத் தொடங்கி விடுகிறார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பல ஆண்டுகளாக ரவி நடராஜன் விரிவாக அதே சமயத்தில் எளிமையாக, புரியும்படியான அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல தானியங்கி கார்கள் குறித்து அவர் சொல்வனத்தில் தொழில்நுட்ப நெடுந்தொடர் எழுதியது நினைவிருக்கலாம். 


இவை சும்மா கற்பனையில்  வந்ததை எழுதிவிடும் விசயம் இல்லை. தரவுகளைத் தேடித் தேடி படிக்க வேண்டும். காணொலிகளைப் பார்க்கவேண்டும். ஈவு இரக்கமின்றி பல ஆயிரம் மணி நேர உழைப்பை வேண்டுபவை.

அவர் இதற்கெல்லாம்  ஒரு பைசா வாங்குவதுபோல தெரியவில்லை. முழுவதுமாக தன்னார்வத்தில் மட்டுமே செயல்படுவாராக இருக்கும். கனடாவில் வசிக்கும் அவருக்கு ஏடுகள் தரும் சிறிய சன்மானங்கள் ஒரு பொருட்டல்ல என்றாலும் அவர் போல பல்லாண்டுகளாக தன்னார்வமாக  அறிவியல்,தொழில்நுட்பப் புலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் எந்தவிதமான மரியாதையைச் செய்துவிட்டோம் ?

நாம் புனைவைக் கொண்டாடுவது போல ஏனோ கட்டுரையாளர்களைக் கொண்டாடுவதில்லை என நினைக்கிறேன். இதில் அரசியல் கட்டுரையாளர்களைக் கூட ஒருவிதத்தில் சேர்க்கலாம். ஆனால், ரவி நடராஜன், சைபர் சிம்மன் போன்ற அறிவியல், தொழில்நுட்பக் கட்டுரையாளர்கள் ? சுத்தம்.

குறிப்பு- ரவி நடராஜனின் புவி சூடேற்றம் குறித்த சொல்வனம் கட்டுரைகளின் இணைப்பு கீழே..

https://solvanam.com/author/ravinatarajan/


Tuesday, November 16, 2021

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள்

சிறுபிள்ளைகளுக்கு சமூக ஊடகங்கள் வேண்டாம் என பெற்றோர்களாகிய நாம் ஏன் நினைக்கிறோம் தெரியுமா ?

சமூகஊடகங்களில் தகாதவை அதிகம் அதனால் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்றே பெரும்பாலும் நினைக்கிறோம்.  ஆனால், அவற்றில் நல்லவைகளே இருந்தாலும் சிறுவயதில் தரவேண்டாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அதற்குக் காரணம் Social Media is Complicated என்பதே பதிலாக இருக்கிறது. 



அதாவது பெரியவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் முழு மூளை வளர்ச்சி பெறாத பிள்ளைகள் கிரகிக்க மிகக் கடினமானதாம். சந்தைப் படுத்துதல் என்றால் என்ன? தனிமனிதத் தகவல் திருட்டு என்றால் என்ன?, விளம்பரங்களின் வழியாக தங்களை யார் எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என பலவற்றை அவர்களால் பிரித்து அறிய முடியாதாம்.


கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கோ (10+), வேறு விதமான பிரச்சனைகள். போட்டி, பொறாமை. எனக்கு அவளைப் போல ஆயிரக்கணக்கான நண்பர்களும், பின் தொடர்பவர்களும் வேண்டும், என்னுடைய படத்துக்கு ஆயிரம் லைக்குகள் வாங்கி புகழ்பெற வேண்டும் என்பது மாதிரியான ஏக்கங்கள். அது கிடைக்காத போது தாழ்வு மனப்பான்மை போன்ற பல உளவியல் தொந்தரவுகள்.

கூடுதலாக, சக நண்பர்களின் கேலி, பாலியல் அத்துமீறல்கள் அதனால், இளம் பருவத்திலேயே தூக்கத்தின் தரம் குறைதல், மனச் சோர்வு,உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் முற்றி தற்கொலை வரைப் போகும் ஆபத்துகள் வேறு.

ஆனால், இன்றைய சூழலில் பெற்றோர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிள்ளைகளிடம் இருந்து ஃபோனையோ, சமூக ஊடகங்களையோ மறைக்க முடியாது. ஆனால், நேரக்கட்டுப்பாடு இன்றி சின்ன வயதிலேயே சொந்த ஃபோன் தருவது என்பதையாவது முடிந்தவரைத் தள்ளிப் போடுங்கள் என்கிறார்கள். யோசியுங்கள்...

படம் - நன்றி இணையம்.

Friday, November 5, 2021

சங்கப் பாடங்கள் ஆங்கிலத்தில் - நந்தினி கார்கி

சங்கப் பாடல்களை கார்கி வைரமுத்துவின் மனைவி நந்தினி மிகத் தெளிவான ஆங்கில உச்சரிப்பில் (தமிழ் அல்ல) தொடர்ச்சியாக ஒலி உரையாக வழங்கி வருகிறார். நாம் உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் நமது சொந்தமண்ணின் கலாச்சாரத்தை அறியவேண்டும். அதற்கு நாம் சங்கஇலக்கியத்தை  நாட வேண்டும் என அறிமுக உரையில் சொல்லி இருக்கிறார். அவருடையத் தனித் தனிப்பாடல்களின் ஒலி உரைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகவும் ஆப்பிள் பாட்காஸ்டாகவும் கிடைக்கிறது. தமிழ் தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

ஏன், தமிழ் தெரிந்தவர்களுக்கும் தான். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.  ஆனால், எனக்கு இதுபோன்ற ஆங்கில உரைகளின் நடுவில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென இதுவரைக் கேட்டிராத



வித்தியாசமான உச்சரிப்பில் தமிழ்சொற்களைக் கேட்கும் போது சொல்ல இயலாத ஒருவித உணர்ச்சி ஏற்படுகிறது. :)

பாட்காஸ்ட் இணைப்பைக் கீழே தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

podcast

https://podcasts.apple.com/us/podcast/sangam-lit/id1449878007

Wednesday, November 3, 2021

சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை

நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !!. "சோஷியல் மீடியா -இது நம்ம பேட்டை" அச்சுப் புத்தகமாகத் தயாராகிவிட்டது. கண்ணைக் கவரும் அழகான அட்டைப் பட வடிவமைப்புடன்  இதை ஸீரோ டிகிரி (எழுத்து பிரசுரம்) மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக  தமிழகத்தின் பல முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும்  அவர்களின் புத்தகத் தரத்தைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.



எண்ணிக்கை அடிப்படையில் இது என்னுடைய ஐந்தாவது புத்தகம். ஆனால்,  புனைவல்லாத முதல் நூல் என்ற வகையில் புதிய வாசகர் பரப்புக்குள் நுழைகிறேன்.

'சோஷியல் மீடியா' வில் இயங்கும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது மட்டுமல்ல. இதன் தொடர்ச்சியாக வரப்போகும் அடுத்த புத்தகமும் தான்.

10% சதவிகிதத் தள்ளுபடியில் புத்தகத்தை ஆர்டர் செய்ய நண்பர்கள் கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

https://www.zerodegreepublishing.com/products/social-media-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-aroor-bhaskar-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

Saturday, October 30, 2021

வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறதா? - லேனா தமிழ்வாணன்

யூ-டியூபின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சித்ரா லட்சுமணன் திரைத்துறையோடு நின்றுவிடாமல் தற்போது "சோசியல் டாக்கீஸ் (Social Talkies)" என்ற பெயரில்  மற்ற துறை ஆளுமைகளையும் சந்தித்து வருகிறார்.  நல்ல அவசியமானதொரு முன்னெடுப்பு .

கடந்தவாரம் எழுத்தாளர் தமிழ்வாணனின் மூத்த புதல்வர் லேனா தமிழ்வாணனை சித்ரா  நேர்காணல் செய்திருந்தார். நிகழ்ச்சி வழக்கம் போல குழப்பங்கள் எதுவும் இல்லாமல் மிகக் கண்ணியமாகத் தெளிவாக இருந்தது. பல பயனுள்ள கேள்விகள்.  நிறைவாக இருந்தது. முக்கியமாக எழுத்துத் துறை பற்றியும், இணைய எழுத்து குறித்து லேனா மிகச் சரியாக அவதானித்து இருக்கிறார்.

அவருடைய பார்வையில், இன்று தமிழில் எழுத  மிகச் சரியான களம் பிளாக் (blog) எனும் வலைத்தளத்தைக் குறிப்பிட்டார். ஏனோ சமூக ஊடகங்களைத் தவிர்த்து விட்டார். (நம்பிக்கை இல்லை ? ) . அவரைப் போல வலைத்தளங்களை விரும்பும் பலருக்கு தமிழ்ச்சரம் (Tamilcharam) எனும் வலைத்திரட்டி இருப்பது குறித்து தெரியுமா எனத் தெரியவில்லை. அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பயன்படும்.


இல்லை என்றால் விடுங்கள். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த பெட்னா நிகழ்ச்சியில் பார்த்துக் கொள்ளலாம்.  சிகாகோவில்  கடந்த முறை சந்தித்தபோது அடுத்த முறை வர முயற்சி செய்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார்.

வாசிப்புப் பழக்கம் குறைந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு  நேர்மையாக பதில் சொல்லி இருந்தார்.  நான் இரசித்த இன்னொரு விசயம் நிகழ்ச்சியின் இறுதியில் தன்னைப் போல தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசுகள் தனது எழுத்தையும் பதிப்பகத்தையும் ஏற்று நடத்த முடியாத சூழல் இருப்பதை மிக நேர்மையாக ஒத்துக்கொண்டது.

நிகழச்சிக்கான முகவரி:

https://www.youtube.com/watch?v=iUJyvCA1BYA&t=47s

Tuesday, October 19, 2021

சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை

கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக  சுமந்து திரிந்த  ஒரு சுமையை இறக்கி வைத்திருக்கிறேன். ஆமாம், சமூக ஊடகங்கள் குறித்து எழுதிக் கொண்டிருந்த புத்தக வேலை  இன்றோடு நிறைவு பெற்றது.  

ஆரம்பத்தில் ஒரு புத்தகம் எனத் தொடங்கிய வேலை, எடிட்டரின் கைகளுக்குப் போனபோது இரட்டிப்பானது. முழுமையாகப் படித்த எடிட்டர் அதில் இரண்டு புத்தகங்களுக்கான உள்ளடக்கம் இருப்பதைக் கண்டு கொண்டதால், புத்தகத்தை இரண்டாக பிரித்து எழுதிவிட்டேன். இரட்டைப் பிள்ளைகள் !  :)

முதல் புத்தகத்தின் இறுதி பிழைத்திருத்தம் முடித்து பின்னட்டைக் குறிப்பையும் சேர்த்து பதிப்பகத்துக்கு அனுப்பி விட்டேன். 

பதிப்பகம் ? கடந்த முறை இர்மா(அந்த ஆறு நாட்கள்) நாவல்-ஐ வெளியிட்ட "ஜிரோ டிகிரி" தான் இந்த முறையும் வெளியிடுகிறது.

இது என்னுடைய முதல் புனைவில்லாத நூல் (non fiction) என்பதால்  ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்தச் சுவடே இல்லாமல் நூல் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அந்த மூத்த எழுத்தாளர் சொன்ன போது கூடுதல் நம்பிக்கை வந்திருக்கிறது.


முதல் புத்தகம் சமூக ஊடகங்களைப் புரிந்துகொள்ளவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகின்ற மிகச் சிறந்த கையேடாக இருக்கும்.

புத்தகத் தலைப்பு ? "சோசியல் மீடியா- இது நம்ம பேட்டை".  தலைப்பே  நல்ல ரகளையான வந்திருப்பதாக நினைக்கிறேன். இரண்டாவது புத்தகம் பற்றி வரும் நாட்களில் சொல்வேன்.

புத்தக விழா-வுக்குப் போகும் நண்பர்கள் ஒவ்வொரு முறையும் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் புதிய புத்தகங்களை வாங்கி வர வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இந்த முறை நான் கண்டிப்பாக  நண்பர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வேன்.

தொடர்ந்து உற்சாகப்படுத்தி துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

Saturday, October 16, 2021

அது என்ன சோசியல் இன்ஜினியரிங் ?

இணையபாதுகாப்பு அதிகாரி(Cyber Security Officer) வீட்டில் நடந்த ஒரு சம்பவம்:

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை  சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு (National Cyber Security Awareness Month.) மாதமாக கொண்டாடுவதால், அது தொடர்பான பல கூட்டங்கள் இங்கு நடக்கின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லரை வணிக நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடைய அனுபவத்தைக் கேட்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. அது  சைபர் விழிப்புணர்வு பற்றி இதுவரை நமக்கு  இருந்த புரிதலுக்கு புரிய பரிமாணம் தருவதாக இருப்பதால் பகிர்கிறேன்.

இதுவரை, குறுஞ்செய்தி, இமெயில்களில் வரும் லிங்குகளைக் கவனமாக சொடுக்குங்கள். சந்தேகத்துக்கு இடமான தளங்களுக்கு போகாதீர்கள். கிரெடிக்ட் அட்டை பயன்பாடு, தனிமனித தகவல் பரிமாற்றத்தில் கவனம் தேவை என ஒரு மிகப்பெரிய பட்டியல் வைத்திருந்தோம். அதில் இன்னொரு விசயம்.

சமீபத்தில் மேற்சொன்ன நபருடைய வீட்டுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது. பிரித்துப் பார்த்தால் ஆச்சர்யம். அதில் அவருக்குத் தெரிந்தவர்களுடைய பெயர் எதுவுமே இல்லை. ஆனால்,"கல்யாணத்தில் கலந்து கொள்ள இங்க போய் உங்க விருப்பத்தைச் சொல்லுங்க..."  எனச் சொல்லி ஒரு இணையதள முகவரி ஒன்றைத் தந்திருக்கிறார்கள். 

உடனே உசாரான நபர் உள்ளே கொஞ்சம் உள்ளே இறங்கி பார்த்தபோது, அது ஒரு போலி அழைப்பிதழ் என்றும் அந்த இணைப்பின் வழியாக அவருடைய ஃபோன் அல்லது கணினியில் மால்வேர்(Malware) எனும் தீம்பொருளை நிறுவ திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவர் பாதுகாப்பு அதிகாரி என்பதால் உசாராகி விட்டார். ஆனால், பெரும்பாலான சாமானியர்கள் கவனக்குறைவாக ஆர்வத்தில்  அந்தத் தளத்துக்கு போய் ஏமாந்திருப்பார்கள் என்பது என்னவோ உண்மை.

அங்க தொட்டு, இங்க தொட்டு எங்கே வந்திருக்கிறார்கள் பாருங்கள் ?. இப்படித்தான்,  பெரிய செப்படி வித்தைகள் ஏதுவும் இல்லாமல் நம்முடைய ஆர்வத்தை மட்டும் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு விசயத்தைச் செய்து நம்மை ஏமாளி ஆக்கி விடுகிறார்கள் கயவர்கள். இதைத் தான் சோசியல் இன்ஜினியரிங் என்கிறார்கள்.

இணையம் பெருகிய இன்றைய டிஜிட்டல் உலகில், அலுவலகம் என்றில்லை. பள்ளி,கல்லூரி, வீடு என எங்கும் அனைவருக்கும் இந்தப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. கவனமாயிருங்கள்.

முன்பே சொன்னது தான், போக போக வரும் நாட்களில் பாதுகாப்புக்காக  தூங்கும் போது கூட ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும் போல..

இணைய_வழி_பாதுகாப்பு


 


தொலைதூரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்று உங்கள் ஊழியர்களுக்குக் கற்பிப்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது


Sunday, September 26, 2021

அருஞ்சொல் இதழுக்கு வாழ்த்து

'அருஞ்சொல்'  எனும் தளத்தின் வழியாக இணையத்தை தனது முதன்மைக் களமாக்கி செயல்படத் துவங்கி இருக்கும் இதழாளர் சமஸ்-சுக்கும் அவருடைய இதழுக்கும் வாழ்த்துகள். 

மிகச் சரியான திசை, வெல்க... !!

அருஞ்சொல் | சமஸ் | arunchol.com

Tuesday, September 21, 2021

டிக்டாக் -அமெரிக்க பள்ளிகளில் தலைவலி

 'ஸ்வீட் எடு கொண்டாடு' என்பது போல அமெரிக்க  பள்ளி மாணவர்கள் மத்தியில்  டிக்டாக் வழியாக ஒரு புதிய சவால் ஒன்று வைரலாகி உலாவுவதாக ஒரு இமெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன்படி,  மாணவர்கள் பள்ளிக்கு சொந்தமான பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்வது இல்லை அவற்றைத் திருடிக் கொண்டு வருவது போன்ற காணொலிகளை எடுத்து பகிரவேண்டுமாம். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளின் கதவுகளை அடித்து உடைப்பது, அங்கிருக்கும் டாய்லட் பேப்பர்களை உருவி வீசுவது, பள்ளிகளில் இருந்து லேப்டாப்புகளைத் திருடிக் கொண்டு வருவது போன்ற வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்களாம்.


இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு அவர்கள் மேல்  குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். கூடவே இதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு பெற்றோர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றிருக்கிறார்கள். 

தலைவலி. தரமான கல்வி அனைவருக்கும் இலவசம் என மாணவர்களை பள்ளிக்கு அழைத்தால் அவர்கள் செய்யும் வெறியாட்டத்தை எந்த விதத்தில் சேர்ப்பது.  குறும்புத்தனத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது தானே. இவர்கள் எல்லாம் படித்த படிப்புக்கு என்ன மரியாதை செய்கிறார்களோ தெரியவில்லை. 

முக்கியமாக, சிறுவயதில் வன்முறை இப்படிக் கொண்டாட்டமாவது என்பது சரியான அறிகுறி அல்ல. ஆபத்து.

#TikTokvandalism

Saturday, September 11, 2021

மர அலமாரிக்குள் ஒரு மணலுள்ள ஆறு...

உள்பெட்டிக்கு வந்த ஒருவர்,  "என்ன நண்பரே முன்ன மாதிரி கவிதையெல்லாம் பகிர்வதில்லையே ? What is the matter ? " என்றார்.

மேட்டர் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. மொழியின் ஆகச்சிறந்த வடிவம் கவிதை என்பதில் என்றும்  எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. அதற்காக கவிதை நேரம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கி வாசிக்கும் பழக்கமும் இல்லை.

ஆனால், திட்டமிடுதல் எதுவுமின்றி தோன்றும் போது கண்ணில் படும் கவிதைகளை எடுத்து வாசிப்பேன். அதை எழுதியது தபூ சங்கர், மனுஷ் ... என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வாசிக்கும் கவிதைகளில் ஏதோ ஒரு வரியோ சொல்லோ தெறிப்பாக வந்து நிற்கும் போது புத்தகத்தை மூடிவைத்து விடுவேன்.

பிரமிப்பு தரும் அந்தச் சொல்லோ, வரியோதான் அன்றைய நாள் முழுவதும் மனதுக்குள் பறவை போல தாழபறந்து  சுழன்று கொண்டேயிருக்கும்.

அப்படிச் சமீபத்தில் வாசித்து லயித்த கல்யாண்ஜி-யின் கவிதை ஒன்று மணல் உள்ள ஆறு தொகுப்பில் இருந்து  (சந்தியா பதிப்பகம்)

ஆச்சி இறந்து

அநேக காலம் ஆயிற்று.

அவளுடைய மரஅலமாரியில்

வேறெதையோ தேடுகையில் கிடைத்தது

ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்

அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்.

எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்

தவறி விழுந்தததோ,

எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக

ஒட்டிய மணல் சோப்பில்.

தெரியாமல் போயிற்று

இத்தனை காலமும்

ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது

மர அலமாரிக்குள் ஒரு

மணலுள்ள ஆறு என்று..




Friday, August 27, 2021

சின்னிஜெயந்த் குடும்பத்துக்கு வாழ்த்துகள் !

"காசு பாத்து வளர்ந்த பசங்க படிக்காது. இந்த காலத்து பசங்களுக்கு அப்ப மாதிரி டிரைவே இல்ல.." என்றெல்லாம் யாராவது சொல்வதைக் கேட்கும் நேரத்தில் இது போன்ற சில விசயங்கள் கண்ணில்படுகிறது.

அது, திரைநடிகர் சின்னிஜெயந்தின் மகன் இந்திய ஆட்சித் துறை ( IAS) தேர்வெழுதி தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராகி இருக்கிறார் என்பதாகும்.




சமுதாயத்துக்குப் பங்களிப்பு தரும்படியான வேலையைத் தேடிக்கொள் என
பெற்றோர்களாகிய நாம் என்னதான் சொன்னாலும், பிள்ளைகளுடைய வளரும் சூழல், நண்பர்கள், பழகும் மனிதர்களின் தாக்கம் என்பது மிக அதிகம்.

அந்த வகையில் , மகனிடம் உயரிய சிந்தனையை விதைத்து அதை வென்றெடுத்த சின்னிஜெயந்த்-தின் குடும்பம் பாராட்டுதலுக்கு உரியது.


அவரைப் போல, சிறுவயதில் பிள்ளைகளின் மனதில் உயரிய சிந்தனைகளை ஆழமாக, ஆத்மார்த்தமாக விதைக்க முயற்சி செய்யும் எல்லா பெற்றோர்களையும் வாழ்த்துவோம் !

படங்கள் நன்றி- ஆனந்தவிகடன்.

Sunday, August 1, 2021

பற.. பற.. பற...

விடுமுறை முடிந்து வீட்டுக்கு வந்தால் உடனே வேலை என்ற பதற்றத்தோடும் சிவந்த கண்களோடும் வீடு வந்து சேர்ந்தேன். சிவந்த கண்கள் என்ற உடன் ஏதோ கம்யூனிச படம் போல என நண்ப்ரகள் நினைக்கத் தேவையில்லை.

நள்ளிரவில் கிளம்பி விடியல் காலையில் வரும் விமானங்களை ரெட் ஐ பிளைட் (red-eye flight) என்கிறார்கள். என்னுடையது நான்கு மணி நேர விமான  பயணம் என்றாலும் பயணம் அலுப்பூட்டக்கூடியதாகவே இருந்தது.  சரியான தூக்கமில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்ததில் கழுத்துவலி. கூடவே, முகக்கவசம் எனும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டிய இம்சை வேறு சேர்ந்துகொண்டது.

பொதுவாகவே விமானப்பயணங்கள் மிகவும் அலுப்பூட்டக்கூடியவை. அதனால் தான், வந்த புதிதில் பயணிகளைக் கவர  நல்ல சுவையான உணவு, இலவசங்கள், வெளிநாட்டு மது வகைகள், கவர்ச்சிகரமான பணிப்பெண்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் என்றெல்லாம் தூண்டில் போட்டார்கள்.



என்னதான் அவர்கள்  வருந்தி வருந்தி அழைத்தாலும் உள்ளே இடநெருக்கடி, ஒரே இடத்தில் கட்டி போட்டது போல அடைத்து வைப்பது. எகானமி, பிசினஸ் கிளாஸ் என அதிக பணம் தந்தால் கூடுதல் சொகுசு எனும் பாகுபாடு , அதிக உயரத்தில் காது அடைப்பு, வாந்தி, பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகள் என பலருக்கு விமானப் பயணம் என்பது உவப்பனதாக இருப்பதில்லை.

எனக்கும் 35 ஆயிரம் அடி உயரத்தில் ஜிவ்வென பறந்த போது வந்த ஆரம்ப கட்ட சிலிர்ப்பும், கவர்ச்சியும் என்றோ மங்கி விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பல இலட்சம் மைல்கள் பறந்தாகி விட்டது. உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380-யிலும் பயணித்தாகி விட்டது. இருந்தாலும் விமானப் பயணம் என்பது இன்றும் 'கடி'யாகவே இருக்கிறது.

ஆனால், இந்தச் சூழல் விரைவில் மாறும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.  சமீபமாக பிரிட்டனின் ரிச்சர்ட் பிரான்சன், அமெரிக்காவின் எலான் மாஸ்க், ஜெப் பெசோஸ் (Jeff Bezos) போன்றவர்கள் செய்யும் விண்வெளிப் பயணங்கள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. அந்த முன்னெடுப்புகள் சமானியர்கள் பயணிக்கும் கமர்சியல் ஏர்லைன் துறையிலும் மிகப்பெரிய வெடிப்பைக் கண்டிப்பாக ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.


இன்று, அமெரிக்கா-இந்தியா பயண நேரம் என்பது சராசரியாக குறைந்தது 20 மணி நேரமாக இருக்கிறது.  ஸ்பேஸ்-X இன்  ஏவுகணைத் தொழில்நுட்பம்  SpaceX Starship போன்றவை நடைமுறைக்கு வந்தால் பூமி பந்தின் எந்தப் பகுதிக்கும் ஒரு மணி நேரத்திற்குள் நம்மால் சென்றடைந்துவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறது.

ம்... காலையில் சென்னையில் டிபன் , அதற்கு காஃபி நீயூயார்க்கில் என்பதை  நினைத்தால் நன்றாகதான் இருக்கிறது. பார்ப்போம்.

நன்றி- படங்கள் இணையம்.

Friday, July 23, 2021

வனநாயகன் குறித்து-19 ( படிக்க வேண்டிய புதினம்! )

அட்லாண்டா ஜெயா மாறன்-இன் எனது வனநாயகன்-மலேசிய நாட்கள் நாவல் வாசிப்பனுபவம் (முகநூலில் பகிர்ந்தது) ... நன்றி ஜெயா !

//

வனநாயகன் - ஓர் அறிமுகம்: 

மனதுக்கு நெருக்கமான மலேசியாவைக் கதைக்களமாக வைத்து புதினம் எழுதும் கனவின் நனவு தான் 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' என்கிறார் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர்.

கோலாலம்பூரில் IT துறையில் வேலை செய்யும் திறமையான, நேர்மையான 28 வயது வாலிபன் சுதாங்கன். அவர் வேலை செய்யும் bank merger project வெற்றிகரமாக live சென்றவுடன், காரணமே சொல்லப்படாமல் fire செய்யப்படுகிறார். விரக்தி ஒரு புறம் குடும்பபாரம் ஒரு புறம் அழுத்த வேறு வேலை தேடுகிறார். மலேசியாவில் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்து சம்பாதித்தாக வேண்டிய நிலை. ஆனால், அவருடைய முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. 

தன்னை வேலையைவிட்டுத் தூக்கியதற்கும், தான் மலேசியாவில் இருக்கவே கூடாது என்று தடுக்கப்படுவதற்கும் என்ன காரணம்? தான் அறியாமல் தன்னை சுற்றி ஒரு வலை பின்னப்பட்டிருப்பது ஏன்? என்ற குழம்புகிறார். 

சரி. இந்தியாவிற்குச் சென்று அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும், அதன் பினனணியில் இருக்கும் அரசியலுக்கும் விடை தேடுகிறார். உள்ளே செல்லச் செல்ல அந்த ஆபத்தின் ஆழம் தெரிகிறது. 

அதில்  அவர் ஜெயித்தாரா? அதில் என்னென்ன ஆபத்துகள் இருந்தன? ...

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் கதையை  கொண்டு செல்கிறார் எழுத்தாளர் . 

“சார், இப்ப முன்ன மாதிரி வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. திறமையில்லா திண்டாட்டம்தான்”

"அறையினுள்ளே முகம் சுழிக்க வைத்த சிகரெட் புகை நேரடியாகப் புற்று நோய் மருத்துவமனைக்கு வழி காட்டுவதாய் இருந்தது" 

"நீங்களெல்லாம் போலீசா? என்று கேட்ட போது, நான் ஆமாம் என்று பொய் சொன்னேன். அப்போதும் புத்தர் ஆழ்ந்த அமைதியில் கண் மூடித்தான் இருந்தார்" - என நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் நடை நயமாய்க் கூட வரும். 

மலேசியக் காடுகளில் திரியும் செந்நிற வாலில்லா மனிதக் குரங்குகளைப் (ஓராங் ஊத்தான்) போல கோலாலம்பூரின் கான்கிரீட் காடுகளில் திரியும் வன நாயகனின் கதை இது!

வனநாயகன் (ஓராங் ஊத்தான்) - படிக்க வேண்டிய புதினம்!

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:
https://www.amazon.in/dp/B06X9VTR71?_encoding=UTF8&keywords=vananayagan&qid=1487947428&ref_=sr_1_1&s=digital-text&sr=1-1

Tuesday, June 22, 2021

நேர்காணல்கள்

மனநல மருத்துவர் ஷாலினியின் நேர்காணல் ஒன்று யூடியூப் சேனலில் வந்திருந்தது (தமிழகத்தின் பரபரப்பான நாளிதழ் தயாரித்தது ).  அதைத் தொடர்ந்தார் போல 5 நிமிடம் கூட பார்க்கமுடியவில்லை.

காரணம் ?, நேர்காணல் செய்தவர் கேட்ட கேள்விகள் தான். கேள்விகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன. "அந்த படம் எடுத்த இயக்குநர் சில்ரண் பத்தி இப்படி ஒரு பதிவ போன வாரம் போட்டிருந்தார்.." , "அந்த இந்தி நடிகர் பேர்ல நேத்து இப்படி ஒரு வாட்ஸ்-அப் வந்ததே , அத பத்தி என்ன நினைக்கீறிங்க.. ? " இப்படி  எல்லாம் வெறும் தட்டையான கேள்விகள். 

இன்றைய நெறியாளர்களின் அனுபவம் என்பது இப்படித்தான் இருக்கிறது.  வாசிப்பு  ? அது சுத்தமாக இல்லை. சரி, நேர்காணல் செய்பவருக்கு சுயமான சிந்தனை வேண்டாம்.  கேட்க  நாலு உருப்படியான கேள்விகள் கூடவா இல்லை ?  ஒரு மனநல மருத்துவர்களிடம் விவாதிக்க தெருவில் போகும் நாலு பேரை நிறுத்தி  விசாரித்தாலே ஆயிரம் பிரச்சனைகளைச் சொல்வார்களே. கூடவே, அவருடைய கேள்விகள் அனைத்தும் ஆங்கில மயம். தமிழைத் தேடித்தான் பார்க்கவேண்டி இருந்தது.

புதிதாக நேர்காணல் செய்ய கிளம்புவர்களுக்கு  இங்கே சில அறிவுரைகள். தமிழர்களுக்காக உருவாகும் நிகழ்ச்சிகளில் நெறியாளர்கள் முடிந்தவரைத் தமிழில் பேசவேண்டும் எனும் உயரிய மாண்பை எல்லாம் இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பார்வையாளர்களின் நேரத்துக்கு  மதிப்பளிக்கப் பழகுங்கள். முடிந்தவரை முன்தயாரிப்போடு வாருங்கள் என்று தான் சொல்கிறோம்.  

விருந்தினரின் அனுபவத்துக்குத் தகுந்த கேள்விகளைக் கேளுங்கள். கண்டபடி உளராமல் நேர்காணல் செய்பவரைப் பற்றி கொஞ்சமாக தெரிந்து கொள்ளுங்கள்.  கூர்மையான கேள்விகளைக் கேட்க பழகுங்கள்.  ரபி பெர்னாட், சித்ரா லட்சுமணன், மு.குணசேகரன் போன்ற பல அனுபவமுள்ளவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்கள்.

Wednesday, June 16, 2021

பனிப்பாறைகள் (iceberg) உடைந்து உருகுவதால் என்ன நட்டம் ?

காஃபியில் சர்க்கரைக்குப் பதில் தவறுதலாக உப்பு கொட்டுவது வேண்டுமானால் கொஞ்சம் அபூர்வமான நிகழ்வாக இருக்கலாம். ஆனால்,  பனிப்பாறைகள் உடைந்து கடலுக்குள் விழுந்து உருகுவது என்பது காஃபியில் சர்க்கரை கொஞ்சம் தூக்கலாகி விடுவது போலொரு சாதாரண நிகழ்வாகி விட்டது.

அந்த விதத்தில்,  அண்டார்டிக்காவில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று  சமீபத்தில்  உடைந்து "வெடல்" கடற்பகுதிக்குள் மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். 



 ‘அண்டார்டிகா ஏ-76‘  எனப்  பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு  கொண்டதாம்.  நீளம் 175 கி.மீ. அகலம் 25 கி.மீ. ஏறக்குறைய நமது சென்னையின் பரப்பளவைப் போல இரண்டு மடங்கு.




இப்படிப் பனிப்பாறைகள் (iceberg) உடைந்து உருகுவதால் என்ன நட்டமாகிவிடப் போகிறது ?.  விஞ்ஞானிகளைக் கேட்டால், இது ஒரு இயற்கை நிகழ்வே. இவை உருகுவதால் கடல் மட்டத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.  இது நமது டம்ளர்களில் மிதக்கும் ஒரு பனிக்கட்டி துண்டு போன்றதே  என்கிறார்கள்.  அதேசமயத்தில், பனி அடுக்குகள் (ice sheets) உருகினால் (நிலத்தோடு உறுதியாக இணைந்துள்ளவை) கடல் நீர் மட்டம் உயர்ந்து கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கின்றன என்கிறார்கள்.




அதைப் பருவநிலை மாற்றத்தோடு தொடர்பு படுத்துவதை யார் ஏற்றுக்
கொள்கிறார்களோ இல்லையோ பல அரசியல்வாதிகள்  ஏற்றுக்கொள்வதில்லை.  

இப்படிக் காலநிலை மாற்றமும் அரசியல் சித்தாந்தத்துக்குள் சிக்கியது  என்பது ஒருவித பின்னடைவே.

Sunday, May 30, 2021

திசையெல்லாம் நெருஞ்சி

சுருங்கச் சொல்கிறேன் பேர்வழி எனத் தொடங்கி நான்கு, ஐந்து பக்கங்களாக இருந்த சிறுகதைகள் பிறகு மூன்று, இரண்டு, ஒன்று எனப் படிப்படியாக  இறங்குமுகமாகி பின் தடாலடியாக தூண்டில் கதைகள், சிறுசிறுகதைகள் (சிசிகதைகள்), உடனடிக்கதைகள் (sudden fiction) என வேகமெடுத்து இன்று இரண்டு சொற்களில் வந்து நிற்கிறது.

என்ன இரண்டு சொற்களில் சிறுகதையா ? எனக் கேட்பவர்களுக்காக
சட்டென நினைவில் இருக்கும் ஒரு கதை (தலைப்புடன் சேர்த்து வாசிக்கவும்)

தலைப்பு: 2050இல் குழந்தை
கதை: தங்கச்சின்னா என்னம்மா ?

அதுபோல இன்னொன்று
தலைப்பு: ஆபிஸ்ல எத்தனை ஆம்பளைங்க ?
கதை: முதலிரவில் கேள்வி

இதுபோல சொற்சிக்கனத்துடன் எழுதுபவர்களின் திறமைக்கு சவால் விடும் வகையில் அமைந்த பல கதைகளை எழுத்தாளர் சுஜாதா குமுதத்தில் அறிமுகப்படுத்தியதாக நினைவு. 

வாசிப்பு அரிதாகத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களிலேயே சுஜாதா சுதாரித்து விட்டதாக நினைக்கிறேன்.

இதையெல்லாம் கதைகளா ? தமாஷ்!  எனச் சொல்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், எழுத்தாளர்கள் சமயங்களில் புனைவு எழுதும்போது சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் இடைப்பட்ட ஒரிடத்தில் சிக்கிக் கொள்வார்கள். அதாவது சிறுகதைபோல சில பக்கங்களில் சொல்லவும் முடியாது பலநூறு பக்கங்கள் வரை இழுக்கவும் முடியாது. சிறுகதைக்கும் குறுநாவலுக்கும் உள்ள அந்த இடைவெளியை (நெடுங்கதை ?) மிகச் சரியாக எழுத்தாளர் சு.வேணுகோபாலன் பயன்படுத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.

அந்தவகையில் அவருடைய "திசையெல்லாம் நெருஞ்சி" தொகுப்பைப் பார்க்கிறேன். மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய
எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல்  இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் "உருமால் கட்டு" கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று "இரட்சணியம்" - பதின்மவயது  விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், "திசையெல்லாம் நெருஞ்சி"-  எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.

இதில் ஏனோ இரட்சணியம் வாசிக்கையில் மட்டும்  சற்று நெருடலாக உணர்ந்தேன். மற்றபடி வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.

"திசையெல்லாம் நெருஞ்சி" எனும் தலைப்பில்  உள்ள "நெருஞ்சிச் செடி"
ஒரு மூலிகை. நீர்க் கடுப்பைப் போக்கும், ஆண்மை பெருக்கி என்பது மாதிரியான பல நூறு மருத்துவப் பயன்கள் இணையத்தில்
கொட்டிக்கிடக்கின்றன. தேவைப்படுபவர்கள் தேடிக்கொள்ளலாம்.
80களில் முருங்கைக்காய் தமிழ் திரையுலகில் (உபயம்-இயக்குநர் பாக்கியராஜ்) ஒரு வலம் வந்தது
போல இந்த நெருஞ்சி வர வாய்ப்பிருக்கிறதா என்ன? :)

எழுத்தாளர்:சு. வேணுகோபால்
பதிப்பகம்:தமிழினி

Sunday, May 23, 2021

தமிழ் விசைப்பலகை

10 ஆண்டுகளுக்கு முன் தமிழில் முழுமையாக எழுதுவது என இறங்கிய புதிதில் தமிழ் எழுத்துருவை இணையத்தில் எழுதுவது மிகுந்த சிரமமாக இருந்தது. இத்தனைக்கும் நான் தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தட்டச்சு செய்வதில் ஹையர் (முதுநிலை) வரை படித்தவன். ஒருங்குறி எழுத்துரு எனும் Unicode நடைமுறையில் வந்திருந்தாலும் கூட அப்போது பல தமிழ் தளங்கள் பூச்சி பூச்சியாக தெரிந்தன.

வந்த புதிதில் எனக்கு முதலில் வழங்கப்பட்ட அறிவுரை இதுதான். தமிழில் சரளமாக எழுத உனக்கு ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும்.  அதற்கென இருக்கும் செயலியைப் பயனபடுத்தி தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அச்சடித்து அப்படியே நகல் செய்து ஒட்டு என்றார்கள். அதாவது, ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்,  செயலிகள் அதை 'அன்பு' என்று மாற்றித்தரும் என்றார்கள். 

ஆங்கிலத்தில் அடித்து அதைத் தமிழாக மாற்றுவதில் எனக்கு முற்றிலுமாக உடன்பாடு இல்லை. சிந்தனைக்கும் எழுத்துக்கும் நடுவில் இன்னொரு ஆள் (ஆங்கிலம்) தேவையில்லை என நினைத்துத் தேடியபோதுதான் இ-கலப்பை (ekalappai) என்ற மென்பொருள் கண்ணில் பட்டது. சிக்கென பற்றிக்கொண்டேன்.  பலர் இன்று தமிழ் தனிமொழி வடிவத்துக்கு என்.எச்.எம். (nhm)  பயன்படுத்துவதாக அறிகிறேன். இந்த மென்பொருள்களை நாம் நேரடியாக தமிழ் டைப்ரைட்டரைப் போல பாவிக்கலாம்.


நான் இ-கலப்பையைக் கணினியில் பயன்படுத்தும் போது தமிழ்-99 எனும் எழுத்துரு (font)-வைத் தேர்ந்தெடுக்கிறேன் (படம் கீழே). 


தமிழ் 99  (Tamil99)  என்பது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விசைப்பலகை தளவமைப்பு ஆகும்.

இதெல்லாம் பழைய கதை.  இன்று, கைபேசிகளில் தமிழ் விசைப்பலகை  வந்த பின் வாழ்க்கை மிக எளிதாகி விட்டது. அதில்,  தேவையான எழுத்துருக்களை மிக மிக எளிதாக 30 பொத்தானுக்குள் அடக்கிவிட்டார்கள். 


 அதனால், கூட்டெழுத்துகள் வழியாக எந்தவித சிரமமும் இல்லாமல் அடித்துவிட முடிகிறது. இதைப் பாவிக்க பயனாளர் ஆங்கில தட்டச்சோ இல்லை தமிழ் தட்டச்சோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனாலும், இன்னமும் கூட தமிழ் கூறும் நல்லுலகில் ஏனோ தமிங்கிலம்  (Tanglish)  திமிங்கிலமாக உலாவுவது வருத்தமளிக்கிறது.

இதை முகநூலில் பகிர்ந்த போது, சிலர் செல்லினம் எனும் ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தட்டச்சு செய்ய உதவும் ஒரு மென்பொருள் பற்றி குறிப்பிட்டிருந்தனர். அதுபோல, Gboard எனும் கூகுள் விசைப்பலகையைப் பயன்படுத்தி வாய்வழியாக பேசியே  ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் எழுதலாம் என்பதையும் பகிர்ந்திருந்தனர்.

Monday, May 17, 2021

கி.ரா - அஞ்சலி

இலக்கியத்துக்கான நோபல் பெற எல்லா தகுதிகளையும் கொண்டிருந்த மகத்தானதொரு தலைமகனை இழந்திருக்கிறோம். ஆழ்ந்த இரங்கல் ..



Wednesday, May 12, 2021

அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த கல்லூரி பேராசிரியர்

வெளியூர் பேருந்துகள் அப்போது  திருவள்ளுவர் என்ற பெயரில்  ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பேருந்துகளில் ஒட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் கம்பி போட்ட அடைப்பு ஒன்று இருக்கும். பெரும்பாலும்   அங்கு நிறுத்தித் தான் பிள்ளைகளுடைய உயரத்திற்கு ஏற்றாற் போல அரை டிக்கெட் எடுப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். ஏனென்றால், நம்மூர் ஆட்களிடம் வயதைக் கேட்டாலோ இல்லை படிக்கும் வகுப்பைக் கேட்டாலோ ஒன்றிற்கு இரண்டு குறைத்தே சொல்வார்கள் என்ற நம்பிக்கை தான். :)

இதை ஓட்டி சமீபத்தில் படித்த ஒரு சம்பவம். இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பு நடந்தது. அவர் ஒரு கல்லூரி பேராசிரியர். அரசாங்க விதிகளை மிகக் கடுமையாகப் பின்பற்றும் பழக்கம் உள்ளவர். அவர் ஒருமுறை தனது மகளுடன் இரயிலில் பயணப்பட்டார். அன்று இரவு அவருடைய மகளுக்கு 12 வயது முடிந்து 13 வயது ஆரம்பித்தது. ஆனால், அவரோ 12 வயதைக் கணக்கில் கொண்டு மகளுக்கு அரை டிக்கெட் மட்டும் எடுத்திருந்தார். இப்போதோ வயது 13. விதிமுறைப்படி அந்த வயதில் பயணிப்பவர்கள் முழு டிக்கெட் எடுத்திருக்க வேண்டும்.

அதனால், இரயிலில் டிக்கெட் பரிசோதகரைத் தேடி இருக்கிறார். எவ்வளவு தேடியும் ஆள் சிக்கவில்லை. ஆனால், தான் விதிமுறை மீறல் செய்வதாக உணர்ந்த அவர் உடனே இரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இரயில் நின்றது. வந்த அதிகாரிகளிடம் தான் இரயிலை நிறுத்த நேரிட்டதை விவரித்தார்.

அதிகாரிகள் அவருக்கு மீதி பயணத்துக்கு முழு டிக்கெட்டு வழங்கினார்கள். கூடவே,  உரிய காரணமின்றி இரயிலை நிறுத்தியதற்குத் தண்டனையாக ரூபாய் ஐம்பது விதித்தார்கள். அவர் அதையும் சேர்த்தே கட்டினார். செலுத்தியபின் சொன்னாராம், 'இனி என் மனசாட்சி உறுத்தாது, மீதி பயணத்தை நான் நிம்மதியாகத் தொடர்வேன்' என்றராராம் அந்த "ரூல்ஸ்" இராமானுஜம்.

Sunday, April 25, 2021

நேர்த்தியான கதைச்சொல்லி - அட்லாண்டா ஜெயா மாறன்

கழுத்தை நெரிக்கும் அன்றாட லெளதீக இடைஞ்சல்களைத் தாண்டி  கலை, இலக்கியம், எழுத்து எனப் பொதுவெளியில் செயல்படுவது என்பது சவாலான ஒன்று. அதை ஒரு வேலையாக, ஒரு பாரமாக நினைத்துப் புலம்புபவர்களுக்கு மத்தியில் முழுமனதோடும், தன்முனைப்போடும் தொடர்ந்து  செயல்படுபவர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களைப் பாராட்டுவதே சரியாக இருக்கும்.

அந்த வகையில் அமெரிக்காவின் அட்லாண்டா மாநகரில் இருந்து பல ஆண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் ஜெயா மாறன். முகநூல் வழியாக எனக்கு அறிமுகமான ஜெயாவின் சொந்த ஊர் மதுரை. தொழில் முறையில் ஜார்ஜியா டெக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி செய்கிறார்.



பகுதி நேரமாகத் தமிழாசிரியர், மேடைப் பேச்சாளர், கவிஞர், நாடகக் கலைஞர் என தமிழின் பல தளங்களில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கி வரும் ஜெயாவின் பரந்துபட்ட ஆர்வம் ஆச்சர்யம் தருகிறது. அவருடைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு JeyaMaran என்னும் YouTube சேனலில் இருக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.குறிப்பாக, சிறுவர்களுக்கு  எளிதில் புரியும் வகையில் அவர் உணர்வோட்டத்தோடு கதை சொல்லும் நேர்த்தி அபாரம். உலகத்தரம்.


கையில் எடுத்த ஒன்றுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒருவரால் மட்டுமே இந்த அளவுக்குச் சிறப்பாக செய்யமுடியும்.  அந்த வகையில் ஜெயா மாறன் நம் பாராட்டுதல்களுக்கு உரியவர். வாழ்த்துகள் ஜெயா ! தொடர்ந்து இயங்குங்கள்.

நேரமில்லை.. நேரமில்லை.. எனப் புலம்பாமல் அவர் ஒளவையாரின் மூதுரையை  ஜென் கதையோடு இணைத்து அழகாக சொல்லும் 3 நிமிட காணோலியைக் கீழே  தருகிறேன் பாருங்கள்.

யாருக்கு உதவலாம்? | மூதுரை | ஒளவையார் | Jeya Maran

Sunday, April 11, 2021

ஃபோன்களும் கண்களும்

நாளொன்றுக்கு நான் குறைந்தது 10 மணிநேரமாவது கணினியில்
நேரம் (ஃபோன் நேரம் தனி)  செலவிடுகிறேன்.

என்னைப் போல இங்கே பலரும்  பெரும்பான்மை நேரத்தை தினமும் கணினி, புத்தகம், ஃபோன் என ஏதோ ஒன்றை  கூர்ந்து பார்ப்பதில் இல்லை படிப்பதில் நேரத்தைச்  செலவு செய்வீர்கள்.

இப்படி  நாம் சராசரியாக பார்க்கும், படிக்கும் நேரம் என்பது போன தலைமுறை இதற்காகச்  செலவிட்ட நேரத்தைவிட  அதிகம் என்பதில்  இங்கே கண்டிப்பாக மாற்றுக் கருத்து இருக்காது. 

நடைமுறையில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் செயலிகள் வந்தபின் கூர்ந்து படிப்பது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது.  சமீபத்தில் வெளிவந்த ஒர் ஆய்வின்படி அமெரிக்கர்கள் தினமும் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை சராசரியாகத் தங்கள் தொலைபேசியைச் சரிபார்க்கிறார்கள் - அதாவது தூங்கும் நேரத்தைத் தவிர்த்துப் பார்த்தால் ஒருவர் குறைந்தபட்சம் 80 முறை தங்கள் தலைகளைத் தொலைபேசிகளில்  புதைத்துக் கொள்கிறார்கள்.  இந்த எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக இருக்க வாய்ப்பில்லை.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை   ஃபோன்,
ஐபேட் போன்ற விசயங்களை மிக எளிதாகக் கையாளுகிறார்கள். அதில் அவர்கள்   பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக நேரம் செலவிடவும் தயங்குவதில்லை. குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு டிவி,கணினியை விட போஃனில்தான் அதிக நாட்டமிருப்பதாக நினைக்கிறேன்.

நேற்றுவரை, ஃபோன்கள் பேசுவதற்காக மட்டும் என்றிருந்த நிலை மாறி, இன்று ஸ்மார்ட் ஃபோன் வரவுக்குப் பின் நேரப்போக்கிற்காக,  இணையம், அலுவலக இமெயில், செயலிகள் (Apps) எனத்  தவிற்கமுடியாத
ஒன்றாகிவிட்டது. அதனால் இன்று 'ஃபோன் இல்லாவிட்டால் கையும் ஓடல காலும் ஓடல' எனப் புலம்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

பல நல்ல விஷயங்களுக்கு நாம் தினமும்  ஃபோனைப் பயன்படுத்தினாலும்  அதில் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அவைக் குறைந்த அளவிலான கதிர்வீச்சை (RF) வெளியிடுகின்றன என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் துண்டிக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் வாழ்வது, மனஅழுத்தம் போன்ற பல உளச்சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

உடல் ரீதியாகப் பார்க்கையில் தலையைக் குனிந்தபடித் தொடர்ச்சியாக
நாம் போஃனைப் பயன்படுத்துவது, பயணத்தில் படிப்பது,  படுத்தபடியே மணிக்கணக்கில் படம் பார்ப்பது, பல மணிநேரங்கள் எந்த இடைவேளையு
மின்றிப் பேசுவது, இதெல்லாம் நம் உடலுக்கு எந்த அளவு ஆரோக்கியமானது ?   கழுத்து வலி, தோள்பட்டை வலி,  முதுகு வலி வர வாய்ப்பிருக்கிறதே. இது  நமது கண்களுக்கு எந்த அளவுப் பிரச்சனைகளைத் தரும் ? எப்படித் தப்பிப்பது ?  இதையெல்லாம் குறித்து நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் யோசியுங்கள்.

Monday, March 29, 2021

திருவாரூர் தேரோட்டம்

பெயருக்கு முன்னால் ஊர் பெயரை ஆரூர்-ஐ வைத்துக் கொண்டு திருவாரூரில் நடக்கும் தேரோட்டத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா என்ன ?

கொரோனா காரணமாக சென்ற ஆண்டு  தடைபட்ட தேரோட்டம் இந்த ஆண்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.



தேரோட்டம் பற்றி நண்பர் 'வாலு டிவி' மோகனனின் காணொளியை இணைத்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

https://youtu.be/hUa62vZoCbw


Wednesday, March 24, 2021

சிங்கப்பூர் நூலகங்களில் இர்மா(அந்த ஆறு நாட்கள்)

சிங்கப்பூரில் வசிக்கும் வாசகி ஒருவர்  வழியாக நேற்று ஒரு தகவல் வந்தது.

எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" (நாவல்) சிங்கப்பூரில் 20-க்கும் அதிகமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறதாம். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நண்பர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தக இருப்பை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையதளத்தின் மூழம் தெரிந்து கொள்ளலாம். முகவரி:

catalogue.nlb.gov.sg

Sunday, March 21, 2021

சாதனை சியமளா

 40+ என்பது கொஞ்சம் தடுமாற்றமான வயதுதான். ஒருவருடைய  சராசரி  வாழ்நாள் வயது 80-இல் இருந்து 85 என வைத்தால் கூட, இந்த 40+ என்பது ஏறக்குறைய வாழ்வின் பாதியை வாழ்ந்து முடித்த வயது. பலர் வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி இருக்கும் வயதும் கூட. 

வாழ்வின் முதல் பாதியை இதுவரை  எப்படிப் பயணித்தோமா அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பதா ? அல்லது முற்றிலும் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா என்பதைப் பற்றிகூட பலர் யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். ஆனால், வெறும் யோசனையோடு விடாமல் சிலர் மட்டுமே திரும்பி முற்றிலும் வாழ்வின் வேறு திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் , தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி தனது 48 வயதில் சாதித்திருக்கிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான சியமளா ஒரு குடும்பத்தலைவி. சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நிச்சல் பழகி இருக்கிறார். நிச்சல் கற்றுக்கொண்ட கையோடு இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பரப்பை நீந்தி உலக சாதனை செய்திருக்கிறார்.

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் பரப்பு என்பது ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் போன்ற பல உயிரினங்கள்  நிறைந்த ஒன்று. அதை  ஏறக்குறைய 14 மணி நேரங்கள் இடைவெளியில்லாமல் கடலில் நீந்திக் கடப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை  குற்றாலீஸ்வரன் 1994-இல் நீந்திக் கடந்து சாதனை புரிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அப்போது குற்றாலீஸ்வரனுக்கு வயது 13, அதை தனது 48 வயதில் செய்து முடித்த சியமளா இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப்பெரிய ஒரு  உந்துசக்தி.

40 வயதில் தொப்பையோடு கை காலைப் பிடித்துக்கொண்டு ஐயோ, அம்மா என உட்காரும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த வயதில் உலக சாதனையை நிகழ்த்தியிருக்கும் சியாமளா ஒரு தெறிப்பு. அனைவரும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரு ஒளிக்கீற்று. ஏன் நம்பிக்கை தந்து எல்லா வயதினரையும் சாதிக்கத் தூண்டும் ஒரு துருவ நட்சத்திரமும் கூடத்தான்.


ஆதாரம்-பிபிசி தமிழ் 

படங்கள் நன்றி இணையம்.


Friday, March 19, 2021

ஏன் ஆண்-பெண் பாகுபாடு ?

திருமண நிகழ்ச்சி ஒன்றின்  வீடியோவை சமீபத்தில் 8 வயது மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

முதல் நாள் இரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களுக்கு  மரியாதை. முதலில் ஆண்கள். வரிசையாக மேளம், கிடார், கீபோர்ட் வாசித்தவர், பாடியவர், மைக்செட்காரர் என ஒவ்வொருவராக அழைத்து பெரிய மனிதர் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை செய்கிறார். இறுதியாக,  3 பெண் பாடகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் துண்டுவாங்க குனியும் சமயத்தில் பெரிய மனிதர் துண்டைப் போர்த்தாமல். கொஞ்சம் பொறுங்க!! எனச் சொல்லிவிட்டு வேறோரு பெண்மணியை ( அவருடைய மனைவி என நினைக்கிறேன் ) கூப்பிடுகிறார். கூட்டத்தில் அந்தப் பெண்மணியை தேடிக்கண்டுபிடித்து அந்தப் பெண்பாடகிகளுக்கு மரியாதை செய்யச் சொல்கிறார்கள்.

இதைக் கவனித்த மகள், 'ஏன் முதலில் ஆண்களுக்கு மட்டும் முதலில் மரியாதை ? அப்புறம்,  பெண்களுக்கும் அந்தப் பெரிய மனிதரே போர்த்தி இருக்கலாமே ? '   என அடுக்கடுக்காக சில கேள்விகள். நான்  'அது அப்படித்தான். நீ பேசாம பாரு ' என அமர்த்தினேன்.

அடுத்த நாள்  திருமணம்-  சடங்குகள் செய்ய வழக்கம்போல... மணமேடைக்கு முதலில் அழைக்கப்பட்டது மணமகன். பாதபூஜைக்கு  முதலில் அழைக்கப்பட்டது மணமகனின் பெற்றோர். பார்வையாளர்கள் பகுதியில் ஆண்களும், பெண்களும் தனிதனியாக பிரிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த விசயங்களைத் தொடர்ச்சியாக கவனித்தவள்.  'Why there is such segregation against women ? ' என்கிறாள். 

பெண்களை ஏன் இப்படி விலக்கி வைக்கிறீர்கள் என்பதைச் சிறு பெண்ணின் வேடிக்கையான கேள்வி என என்னால் எளிதாக ஒதுக்க முடியவில்லை. அவளே கூட கொஞ்சம் வளர்ந்தால் , ' சடங்குகள் என்ற பெயரால் ஏன்  ஆண் பெண் கழுத்தில் நிரந்தரமாக தொங்க தாலி கட்டுகிறான் ?... மெட்டி அணிவித்து விடுகிறான் ?... '  எனக் கேட்பாளாக இருக்கும்.

Sunday, March 14, 2021

எழுத்தாளர் இமையம் - வாழ்த்துகள் !!

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.



தனது இயல்பான, அதே சமயத்தில் அழுத்தமான எழுத்தால் சமூகத்தின் பல்வேறு தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்தவவர்களில் மிக முக்கியமானவர் இமையம். வாழ்த்துகள் !!

Wednesday, March 10, 2021

சென்னை புத்தகக் காட்சியும் எஸ்.ரா.வும்

44ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது.  

இந்த ஆண்டு புத்தகக் காட்சி தொடர்பாக  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளைக் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன்.  

இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள் என பல நேரலை கட்டுரைகளால் நிகழ்ச்சியை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார் எஸ்.ரா..

தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களை நேரடியாக சந்திக்கும்  அவர் தனது அன்றாட அனுபவங்களை மட்டும் எழுதாமல் புதிய புதிய புத்தக அறிமுகங்கள், பரிந்துரைகள், நூல் வெளியீடுகள், இளம் படைப்பாளிகளின் அறிமுகம் என தொடர்ச்சியாக எழுதிக் குவித்துவிட்டார்.






கடந்த முப்பது ஆண்டுகாலமாக எழுத்தோடு பயணிக்கும் எஸ்.ரா. கடந்த இரண்டு வாரங்களாக மகிழ்ச்சியோடு ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி ஓர் எழுத்தாளனுக்கு தனது எழுத்தை நேசிக்கும் வாசகர்களைச் சந்திப்பதோடு வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது. வாழ்த்துகள் எஸ்.ரா. !! 

இணைப்பு

Saturday, March 6, 2021

அரவிந்த் சச்சிதாநந்தம்

சிலர் மிக நன்றாக, வாசிக்கத் தூண்டும் வகையில், வித்தியாசமான கதைக் களன்களில் அசத்தலாக எழுதுவார்கள். அவர்களுடைய படைப்புகள் பல விருதுகள் கூட வாங்கி இருக்கும். ஆனால், ஏதோ காரணங்களுக்காகச் சரியான நபர்களால் அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பரந்த வாசக வட்டத்தில் அரியப்படாதவராக இருப்பார்.

அந்த வகையில் நான் ரசித்து வாசித்து ஆச்சர்யப்படும் ஒரு எழுத்தாளர் அரவிந்த் சச்சிதாநந்தம். எனது நட்பு வட்டத்தில் இருக்கும் அரவிந்த்  மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.



அவருடைய நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.  சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல்-இல் ( அரங்கு எண் 166, 167 ) கிடைக்கிறது.  

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் 

இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் 

கொஞ்சம் திரைக்கதை,  ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் 

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்



2015- 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற பருக்கை - மறுவாசிப்பில்

 2015 ஆம் ஆண்டுக்கான  'யுவ புரஷ்கார்' விருது  பெற்ற பருக்கை நாவலை (புதினம்) இன்று மறுவாசிப்பு செய்து முடித்தேன்.  இந்த நூல் குறித்து எழுதிய ஒரு பதிவின் மூழமாகவே எழுத்தாளர் சுரேஷ் கண்ணனை நெருக்கினேன் என்பது வேறு விசயம்.

மறுவாசிப்பு செய்தேன் என்பதால் பருக்கை நாவலின்  இலக்கியச் சுவை கருதி அல்லது  கட்டுமானம், அமைப்பு  அல்லது விறுவிறுப்பான எழுத்து நடை கருதி வாசித்தேன்  என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. உண்மையில் கராராக சொல்வதென்றால் மேலே சொன்ன எதுவும் இல்லாத படைப்பு தான் பருக்கை. ஏதோ தோன்றியது எடுத்து படித்தேன். மற்றபடி சிறப்பான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

5 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் வாசிப்பை விட தற்போதைய மறுவாசிப்பு நாவல் குறித்த வேறுபரிணாமத்தைத் தருகிறது. இப்போது வாசிக்கும் போது நாவலில் அவலச்சுவை மேலோங்கி நிற்பதாக தோன்றுகிறது. குறிப்பாக தற்போதைய  வாசிப்பில்  நூல் இன்றைய இளைஞர்களின் நகர வாழ்க்கை , அங்கு நிலவும் வர்க வேறுபாடுகள், அவர்களிடம்  தங்களுடைய எதிர்காலம் குறித்தான அவநம்பிக்கையைப் மேலோட்டமாக பேசுவதாகவே உணர்கிறேன். ஆனால், விசேச வீடுகளில் உணவு பரிமாறும் கல்லூரி மாணவர்களின் கதை என்ற வகையில் பேசப்படாத கதைக்களம் என்ற வகையில் பாராட்டலாம்.

உண்மையில், தினந்தோறும் தமிழகத்தின் கடைகோடிகளில் இருந்து படிக்க அல்லது பிழைப்புக்கு வழிதேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள். அதில் எத்தனை பேர் அங்கு நிலவும் புதிய பொருளாதார, பண்பாட்டுச் சூழலில் தங்களைத் தகவமைத்து நிலை பெறுகிறார்கள் ?. எத்தனை பேர் அந்தச் சூழலில் தங்களைப்  பொருத்திக் கொள்ள இயலாமல், அதன் அழுத்தங்கள் தாங்காமல் கசப்போடும் அவமானத்தோடும் வேறுவழியில்லாமல் ஊர் திரும்புகிறார்கள். 

ஊர்ப்புறத்தில் இருந்து வந்து நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களை வெற்றி பெற்றவர்களாக கொண்டாடும் இந்தச் சமூகம் மற்றவர்களைத் தோல்வியடைந்தவர் பட்டியலில் தயங்காமல் சேர்த்துவிடுகிறது எனும் நிதர்சனம் கசப்பாக மனதில் படிகிறது.




Thursday, March 4, 2021

பாட்டனும் முப்பாட்டனும் ...

உறவினர் வீட்டில் ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சி கும்பகோணத்துக்கு பக்கம். அழைத்திருந்தார்கள். போயிருந்தேன்.

அருமையான பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி நெருக்கமான மரங்கள்,  வாசலில் இருந்தபடியே மயில், குரங்கு, கிளி என சகலமானவற்றையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பார்த்துவிட முடியும். நல்ல இயற்கையான சூழல். 

ஒரு நாள் காலை,  மயில் ஒரு கூட்டமாக வந்து மேய்ந்து கொண்டிருந்தது.


அப்போது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த உறவினர் பையனை நான் தூக்கி வைத்து மயிலை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன். என்ன சொல்லி  வேடிக்கை காட்டி இருப்பேன் ? குயில் என்றா சொல்லி இருக்கப் போகிறேன். மயில் என்றே சொல்லி காட்டி கொண்டிருந்தேன். நகரத்தில் வளரும் பையனுக்கு மயில் எல்லாம் புதுசு என்பதால், பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். நிறைவாக இருந்தது.

பையனுடைய அம்மா இதையெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே மயில் மறுபடியும் வந்தது. இந்த முறை பையனைத் தூக்கி வைத்து வேடிக்கைக் காட்டியது பையனுடைய அம்மா. மயிலைக் கைகாட்டிபடியே "2யே... peacock பாரு... அதோட features  சாஃப்டா எவ்ளோ நல்லா இருக்கு பாரு..." எனச் சத்தமாக என் காதில் விழும்படி சொன்னார். 

அந்தப் பக்கம் வந்த நான் இதைக்  கவனிக்கிறேன் என்பது தெரிந்ததும்கூட இன்னமும் கூடுதல் அழுத்தத்தோடு  peacock, peacock  அழுத்தி சொன்னார். அதாவது, மயில் என்பது peacock எனத் தெரியாத முட்டாள் நான் என்பதை விட  அவருடைய பையன் மனதில் மயில் என்பது தப்பித் தவறிக் கூட  பதிந்து விடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனமாக இருந்தார் என நினைக்கிறேன். ஏனென்றால்,  அதன்பிறகு நாங்கள் அங்கு இருந்த 3 நாட்களும் தவறாமல் அவரே தனது பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு மயிலையும், குரங்குகளையும் Peacock, Monkey  எனக் காட்டிக் கொண்டிருந்தார். மேய வந்த மயில்களும், வாழைப்பழத்துக்காக வந்த குரங்குகளும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரக்க பறக்க வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தன. 

சரி விடுங்கள். நமக்குத்தான் அடுத்தத் தலைமுறை மொழியை இப்படி படிப்படியாக இழக்கிறதே என்ற கவலை, ஆற்றாமை எல்லாம்.  அவைகளுக்கு என்ன... உனது பாட்டனும் முப்பாட்டனும் என்னைப் பல்லாயிரம் ஆண்டுகளாக "மயில்" என்று தானே சொன்னார்கள். இது என்ன புதுசா "peacock ?" என மனிதர்களிடம் கோவித்துக் கொள்ளப் போகிறதா என்ன..

Wednesday, February 24, 2021

சென்னை புத்தகத் திருவிழாவில்...

 சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புத்தகங்கள் கிடைக்கும் அரங்குகள்;


*) வனநாயகன் (கிழக்கு பதிப்பகம்)-ரூ.275, அரங்கு எண் F-7

*) இர்மா-அந்த ஆறு நாட்கள் (ஸீரோ டிகிரி) - ரூ.180, அரங்கு எண்கள் 10, 11

*) பங்களா கொட்டா (அகநாழிகை)- ரூ.130,  டிஸ்கவரி புக் பேலஸ், அரங்கு எண் F-19



வழக்கம் போல புத்தக விற்பனை மூழம் வரும் இராயல்டி தொகை அனைத்தையும்   சிறகுகள் கல்வி அறக்கட்டளை நிதியில் சேர்த்துவிடுவோம். நன்றி !

Wednesday, February 17, 2021

டெக்சாஸில் வரலாறு காணாத பனிப்புயல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கடுங்குளிர். உறைய வைக்கும் குளிரோடு கூடவே தொடர்ச்சியான பனிப் பொழிவால் ஏராளமான சாலை விபத்துகள், உயிர் இழப்புகள் என அங்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. 


இரயில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறன. கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.  அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். உதவிக்கு இராணுவமும் களத்தில் இறக்கியிருக்கிறது.

தொடர்ச்சியாக உறைய வைக்கும் குளிர் காற்று வீசிக்கொண்டிருப்பதால் வீடுகளின் மின்சாரத் தேவை அதிகரித்திருக்கிறதாம்.  அதனால் வந்த மின்தட்டுப்பாட்டால் மின்வெட்டு வேறு. ஓரிரு நாட்களுக்குச் சுழல் தான் முறையில் மின்சாரம் என்கிறார்கள். இங்கே சகலமும் மின்சாரத்தில் இயங்குவதால்,  மின்சாரம் இல்லாத அமெரிக்க வாழ்வை நினைத்துப் பார்க்கவே முடியாது. 

ஹூஸ்டனில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். மின்சாரம் இல்லாததால் இரண்டு நாட்களாக சமைக்க அடுப்பு பற்றவைக்க முடியவில்லை. வெளியில் போய் சாப்பிடவும் வழியில்லை. வெப்பம் உறைநிலைக்குக் கீழே சென்றதால் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. வெளியே சாலைகளில் போக்குவரத்து விளக்குகள் எரிவதில்லை.... என மிக நீண்ட கஷ்டப்பட்டியல் வைத்திருக்கிறார்.

இயற்கை என்ற ஒன்று இருப்பதும். அதனோடு மனிதன் இயைந்து வாழ்வது அவசியம் என்பதையும் இதுமாதிரியான நெருக்கடி காலங்களில் கண்டிப்பாக உணரமுடியும் என்பது நிதர்சனம்.  

கடுங்குளிர், பனிப்பொழிவோடு கடுமையான மின்வெட்டையும் எதிர்கொள்ளும் டெக்சாஸ் மாநில அன்பர்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப விழைகிறேன்.

இது குறித்த ஒரு காணொளி https://youtu.be/qMivwXOfOmM