Monday, March 29, 2021

திருவாரூர் தேரோட்டம்

பெயருக்கு முன்னால் ஊர் பெயரை ஆரூர்-ஐ வைத்துக் கொண்டு திருவாரூரில் நடக்கும் தேரோட்டத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா என்ன ?

கொரோனா காரணமாக சென்ற ஆண்டு  தடைபட்ட தேரோட்டம் இந்த ஆண்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.



தேரோட்டம் பற்றி நண்பர் 'வாலு டிவி' மோகனனின் காணொளியை இணைத்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

https://youtu.be/hUa62vZoCbw


Wednesday, March 24, 2021

சிங்கப்பூர் நூலகங்களில் இர்மா(அந்த ஆறு நாட்கள்)

சிங்கப்பூரில் வசிக்கும் வாசகி ஒருவர்  வழியாக நேற்று ஒரு தகவல் வந்தது.

எனது "இர்மா-அந்த ஆறு நாட்கள்" (நாவல்) சிங்கப்பூரில் 20-க்கும் அதிகமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கிறதாம். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நண்பர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் நூலகத்தில் புத்தக இருப்பை சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் இணையதளத்தின் மூழம் தெரிந்து கொள்ளலாம். முகவரி:

catalogue.nlb.gov.sg

Sunday, March 21, 2021

சாதனை சியமளா

 40+ என்பது கொஞ்சம் தடுமாற்றமான வயதுதான். ஒருவருடைய  சராசரி  வாழ்நாள் வயது 80-இல் இருந்து 85 என வைத்தால் கூட, இந்த 40+ என்பது ஏறக்குறைய வாழ்வின் பாதியை வாழ்ந்து முடித்த வயது. பலர் வாழ்க்கையில் ஒரு விதமாக செட்டில் ஆகி இருக்கும் வயதும் கூட. 

வாழ்வின் முதல் பாதியை இதுவரை  எப்படிப் பயணித்தோமா அதே பாதையில் தொடர்ந்து பயணிப்பதா ? அல்லது முற்றிலும் வேறு ஒன்றைத் தேர்ந்தெடுப்பதா என்பதைப் பற்றிகூட பலர் யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். ஆனால், வெறும் யோசனையோடு விடாமல் சிலர் மட்டுமே திரும்பி முற்றிலும் வாழ்வின் வேறு திசையில் பயணிக்கத் தொடங்குவார்கள்.

அந்த வகையில் , தெலங்கானாவைச் சேர்ந்த சியாமளா கோலி தனது 48 வயதில் சாதித்திருக்கிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான சியமளா ஒரு குடும்பத்தலைவி. சொந்தமாக தொழில் செய்துவருகிறார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் நிச்சல் பழகி இருக்கிறார். நிச்சல் கற்றுக்கொண்ட கையோடு இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பரப்பை நீந்தி உலக சாதனை செய்திருக்கிறார்.

இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் அந்த கடல் பரப்பு என்பது ஆபத்தான கடல் பாம்புகள், ஜெல்லி மீன்கள் போன்ற பல உயிரினங்கள்  நிறைந்த ஒன்று. அதை  ஏறக்குறைய 14 மணி நேரங்கள் இடைவெளியில்லாமல் கடலில் நீந்திக் கடப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை  குற்றாலீஸ்வரன் 1994-இல் நீந்திக் கடந்து சாதனை புரிந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அப்போது குற்றாலீஸ்வரனுக்கு வயது 13, அதை தனது 48 வயதில் செய்து முடித்த சியமளா இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப்பெரிய ஒரு  உந்துசக்தி.

40 வயதில் தொப்பையோடு கை காலைப் பிடித்துக்கொண்டு ஐயோ, அம்மா என உட்காரும் மனிதர்களுக்கு மத்தியில் இந்த வயதில் உலக சாதனையை நிகழ்த்தியிருக்கும் சியாமளா ஒரு தெறிப்பு. அனைவரும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஒரு ஒளிக்கீற்று. ஏன் நம்பிக்கை தந்து எல்லா வயதினரையும் சாதிக்கத் தூண்டும் ஒரு துருவ நட்சத்திரமும் கூடத்தான்.


ஆதாரம்-பிபிசி தமிழ் 

படங்கள் நன்றி இணையம்.


Friday, March 19, 2021

ஏன் ஆண்-பெண் பாகுபாடு ?

திருமண நிகழ்ச்சி ஒன்றின்  வீடியோவை சமீபத்தில் 8 வயது மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.

முதல் நாள் இரவு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி. இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இசைக்கலைஞர்களுக்கு  மரியாதை. முதலில் ஆண்கள். வரிசையாக மேளம், கிடார், கீபோர்ட் வாசித்தவர், பாடியவர், மைக்செட்காரர் என ஒவ்வொருவராக அழைத்து பெரிய மனிதர் ஒருவர் துண்டு போர்த்தி மரியாதை செய்கிறார். இறுதியாக,  3 பெண் பாடகிகள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் துண்டுவாங்க குனியும் சமயத்தில் பெரிய மனிதர் துண்டைப் போர்த்தாமல். கொஞ்சம் பொறுங்க!! எனச் சொல்லிவிட்டு வேறோரு பெண்மணியை ( அவருடைய மனைவி என நினைக்கிறேன் ) கூப்பிடுகிறார். கூட்டத்தில் அந்தப் பெண்மணியை தேடிக்கண்டுபிடித்து அந்தப் பெண்பாடகிகளுக்கு மரியாதை செய்யச் சொல்கிறார்கள்.

இதைக் கவனித்த மகள், 'ஏன் முதலில் ஆண்களுக்கு மட்டும் முதலில் மரியாதை ? அப்புறம்,  பெண்களுக்கும் அந்தப் பெரிய மனிதரே போர்த்தி இருக்கலாமே ? '   என அடுக்கடுக்காக சில கேள்விகள். நான்  'அது அப்படித்தான். நீ பேசாம பாரு ' என அமர்த்தினேன்.

அடுத்த நாள்  திருமணம்-  சடங்குகள் செய்ய வழக்கம்போல... மணமேடைக்கு முதலில் அழைக்கப்பட்டது மணமகன். பாதபூஜைக்கு  முதலில் அழைக்கப்பட்டது மணமகனின் பெற்றோர். பார்வையாளர்கள் பகுதியில் ஆண்களும், பெண்களும் தனிதனியாக பிரிந்து உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த விசயங்களைத் தொடர்ச்சியாக கவனித்தவள்.  'Why there is such segregation against women ? ' என்கிறாள். 

பெண்களை ஏன் இப்படி விலக்கி வைக்கிறீர்கள் என்பதைச் சிறு பெண்ணின் வேடிக்கையான கேள்வி என என்னால் எளிதாக ஒதுக்க முடியவில்லை. அவளே கூட கொஞ்சம் வளர்ந்தால் , ' சடங்குகள் என்ற பெயரால் ஏன்  ஆண் பெண் கழுத்தில் நிரந்தரமாக தொங்க தாலி கட்டுகிறான் ?... மெட்டி அணிவித்து விடுகிறான் ?... '  எனக் கேட்பாளாக இருக்கும்.

Sunday, March 14, 2021

எழுத்தாளர் இமையம் - வாழ்த்துகள் !!

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.



தனது இயல்பான, அதே சமயத்தில் அழுத்தமான எழுத்தால் சமூகத்தின் பல்வேறு தட்டு மக்களின் வாழ்வைப் பதிவு செய்தவவர்களில் மிக முக்கியமானவர் இமையம். வாழ்த்துகள் !!

Wednesday, March 10, 2021

சென்னை புத்தகக் காட்சியும் எஸ்.ரா.வும்

44ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு பெறுகிறது.  

இந்த ஆண்டு புத்தகக் காட்சி தொடர்பாக  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளைக் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன்.  

இன்று புத்தகக் கண்காட்சியில் நல்ல கூட்டம். நேற்று ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் திரண்டிருந்தார்கள். அரங்கினுள் வெக்கை தாங்கமுடியவில்லை. வியர்த்து வழிய மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள் என பல நேரலை கட்டுரைகளால் நிகழ்ச்சியை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார் எஸ்.ரா..

தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களை நேரடியாக சந்திக்கும்  அவர் தனது அன்றாட அனுபவங்களை மட்டும் எழுதாமல் புதிய புதிய புத்தக அறிமுகங்கள், பரிந்துரைகள், நூல் வெளியீடுகள், இளம் படைப்பாளிகளின் அறிமுகம் என தொடர்ச்சியாக எழுதிக் குவித்துவிட்டார்.






கடந்த முப்பது ஆண்டுகாலமாக எழுத்தோடு பயணிக்கும் எஸ்.ரா. கடந்த இரண்டு வாரங்களாக மகிழ்ச்சியோடு ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதை அவருடைய கட்டுரைகள் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது.

இப்படி ஓர் எழுத்தாளனுக்கு தனது எழுத்தை நேசிக்கும் வாசகர்களைச் சந்திப்பதோடு வேறென்ன மகிழ்ச்சி இருந்துவிடப் போகிறது. வாழ்த்துகள் எஸ்.ரா. !! 

இணைப்பு

Saturday, March 6, 2021

அரவிந்த் சச்சிதாநந்தம்

சிலர் மிக நன்றாக, வாசிக்கத் தூண்டும் வகையில், வித்தியாசமான கதைக் களன்களில் அசத்தலாக எழுதுவார்கள். அவர்களுடைய படைப்புகள் பல விருதுகள் கூட வாங்கி இருக்கும். ஆனால், ஏதோ காரணங்களுக்காகச் சரியான நபர்களால் அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பரந்த வாசக வட்டத்தில் அரியப்படாதவராக இருப்பார்.

அந்த வகையில் நான் ரசித்து வாசித்து ஆச்சர்யப்படும் ஒரு எழுத்தாளர் அரவிந்த் சச்சிதாநந்தம். எனது நட்பு வட்டத்தில் இருக்கும் அரவிந்த்  மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.



அவருடைய நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.  சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல்-இல் ( அரங்கு எண் 166, 167 ) கிடைக்கிறது.  

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் 

இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் 

கொஞ்சம் திரைக்கதை,  ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் 

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்



2015- 'யுவ புரஷ்கார்' விருது பெற்ற பருக்கை - மறுவாசிப்பில்

 2015 ஆம் ஆண்டுக்கான  'யுவ புரஷ்கார்' விருது  பெற்ற பருக்கை நாவலை (புதினம்) இன்று மறுவாசிப்பு செய்து முடித்தேன்.  இந்த நூல் குறித்து எழுதிய ஒரு பதிவின் மூழமாகவே எழுத்தாளர் சுரேஷ் கண்ணனை நெருக்கினேன் என்பது வேறு விசயம்.

மறுவாசிப்பு செய்தேன் என்பதால் பருக்கை நாவலின்  இலக்கியச் சுவை கருதி அல்லது  கட்டுமானம், அமைப்பு  அல்லது விறுவிறுப்பான எழுத்து நடை கருதி வாசித்தேன்  என்றெல்லாம் நினைக்கத் தேவையில்லை. உண்மையில் கராராக சொல்வதென்றால் மேலே சொன்ன எதுவும் இல்லாத படைப்பு தான் பருக்கை. ஏதோ தோன்றியது எடுத்து படித்தேன். மற்றபடி சிறப்பான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

5 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் வாசிப்பை விட தற்போதைய மறுவாசிப்பு நாவல் குறித்த வேறுபரிணாமத்தைத் தருகிறது. இப்போது வாசிக்கும் போது நாவலில் அவலச்சுவை மேலோங்கி நிற்பதாக தோன்றுகிறது. குறிப்பாக தற்போதைய  வாசிப்பில்  நூல் இன்றைய இளைஞர்களின் நகர வாழ்க்கை , அங்கு நிலவும் வர்க வேறுபாடுகள், அவர்களிடம்  தங்களுடைய எதிர்காலம் குறித்தான அவநம்பிக்கையைப் மேலோட்டமாக பேசுவதாகவே உணர்கிறேன். ஆனால், விசேச வீடுகளில் உணவு பரிமாறும் கல்லூரி மாணவர்களின் கதை என்ற வகையில் பேசப்படாத கதைக்களம் என்ற வகையில் பாராட்டலாம்.

உண்மையில், தினந்தோறும் தமிழகத்தின் கடைகோடிகளில் இருந்து படிக்க அல்லது பிழைப்புக்கு வழிதேடி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள். அதில் எத்தனை பேர் அங்கு நிலவும் புதிய பொருளாதார, பண்பாட்டுச் சூழலில் தங்களைத் தகவமைத்து நிலை பெறுகிறார்கள் ?. எத்தனை பேர் அந்தச் சூழலில் தங்களைப்  பொருத்திக் கொள்ள இயலாமல், அதன் அழுத்தங்கள் தாங்காமல் கசப்போடும் அவமானத்தோடும் வேறுவழியில்லாமல் ஊர் திரும்புகிறார்கள். 

ஊர்ப்புறத்தில் இருந்து வந்து நகர்புறங்களிலும், வெளிநாடுகளிலும் தங்களைத் தகவமைத்துக் கொள்பவர்களை வெற்றி பெற்றவர்களாக கொண்டாடும் இந்தச் சமூகம் மற்றவர்களைத் தோல்வியடைந்தவர் பட்டியலில் தயங்காமல் சேர்த்துவிடுகிறது எனும் நிதர்சனம் கசப்பாக மனதில் படிகிறது.




Thursday, March 4, 2021

பாட்டனும் முப்பாட்டனும் ...

உறவினர் வீட்டில் ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சி கும்பகோணத்துக்கு பக்கம். அழைத்திருந்தார்கள். போயிருந்தேன்.

அருமையான பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி நெருக்கமான மரங்கள்,  வாசலில் இருந்தபடியே மயில், குரங்கு, கிளி என சகலமானவற்றையும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பார்த்துவிட முடியும். நல்ல இயற்கையான சூழல். 

ஒரு நாள் காலை,  மயில் ஒரு கூட்டமாக வந்து மேய்ந்து கொண்டிருந்தது.


அப்போது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த உறவினர் பையனை நான் தூக்கி வைத்து மயிலை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தேன். என்ன சொல்லி  வேடிக்கை காட்டி இருப்பேன் ? குயில் என்றா சொல்லி இருக்கப் போகிறேன். மயில் என்றே சொல்லி காட்டி கொண்டிருந்தேன். நகரத்தில் வளரும் பையனுக்கு மயில் எல்லாம் புதுசு என்பதால், பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். நிறைவாக இருந்தது.

பையனுடைய அம்மா இதையெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே மயில் மறுபடியும் வந்தது. இந்த முறை பையனைத் தூக்கி வைத்து வேடிக்கைக் காட்டியது பையனுடைய அம்மா. மயிலைக் கைகாட்டிபடியே "2யே... peacock பாரு... அதோட features  சாஃப்டா எவ்ளோ நல்லா இருக்கு பாரு..." எனச் சத்தமாக என் காதில் விழும்படி சொன்னார். 

அந்தப் பக்கம் வந்த நான் இதைக்  கவனிக்கிறேன் என்பது தெரிந்ததும்கூட இன்னமும் கூடுதல் அழுத்தத்தோடு  peacock, peacock  அழுத்தி சொன்னார். அதாவது, மயில் என்பது peacock எனத் தெரியாத முட்டாள் நான் என்பதை விட  அவருடைய பையன் மனதில் மயில் என்பது தப்பித் தவறிக் கூட  பதிந்து விடக் கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனமாக இருந்தார் என நினைக்கிறேன். ஏனென்றால்,  அதன்பிறகு நாங்கள் அங்கு இருந்த 3 நாட்களும் தவறாமல் அவரே தனது பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு மயிலையும், குரங்குகளையும் Peacock, Monkey  எனக் காட்டிக் கொண்டிருந்தார். மேய வந்த மயில்களும், வாழைப்பழத்துக்காக வந்த குரங்குகளும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரக்க பறக்க வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தன. 

சரி விடுங்கள். நமக்குத்தான் அடுத்தத் தலைமுறை மொழியை இப்படி படிப்படியாக இழக்கிறதே என்ற கவலை, ஆற்றாமை எல்லாம்.  அவைகளுக்கு என்ன... உனது பாட்டனும் முப்பாட்டனும் என்னைப் பல்லாயிரம் ஆண்டுகளாக "மயில்" என்று தானே சொன்னார்கள். இது என்ன புதுசா "peacock ?" என மனிதர்களிடம் கோவித்துக் கொள்ளப் போகிறதா என்ன..