Wednesday, December 27, 2017

அறம்- எழுத்தாளர் ஜெயமோகன்

புதிதாக என்னை(எனது எழுத்தை) வாசிக்கத் தொடங்குபவர்கள் தனது "அறம்" தொகுப்பில் இருந்துத் தொடங்கலாம் என எழுத்தாளர் ஜெயமோகன்
ஒருமுறை சொன்னதாக நினைவு.

அந்தத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தாலும், அதில்
குறிப்பாக  3 கதைகள் மட்டும்  மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுபவை. அவருடைய மொழியில் சொல்வதென்றால் தீராத மனஎழுச்சி கொள்ளச் செய்பவை. அந்த 3 கதைகள் "சோற்றுக் கணக்கு", "யானை டாக்டர்", "நூறு நாற்காலிகள்". ஆச்சர்யப்படத் தக்கவகையில் அந்த மூன்றும் தொகுப்பில் 4,5,6 என வரிசையாக இடம்பிடித்திருக்கிறன.

என்னைப் பொறுத்தவரை, அந்தத் தொகுப்பின் ஆகச்சிறந்த கதை சந்தேகமின்றி 'சோற்றுக் கணக்கு'. அப்படிச் சொல்ல அந்தக் கதையில் வரும் கெத்தேல் சாகிபு போலோருவர் எனது கல்லூரி நாட்களில் இருந்ததுகூட காரணமாக இருக்கலாம்.

அறத்தின் எல்லா சிறுகதைகளும் அவருடைய தளத்தில் இலவசமாகவும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள்.

அறம், ஜெயமோகன், வம்சி பதிப்பகம்

Saturday, December 2, 2017

தொழில் பிரச்சனை-2

(முதல் நிகழ்வை வாசிக்காதவர்கள், என்னுடைய முந்தைய பதிவை வாசித்துவிட்டு வரவும் )

நிகழ்வு#2 ;

முதல் உணவக உரிமையாளர் கைவிட்டபின் விருந்துக்குக் கையில் இருந்த 4
நாட்களில், அவசரம் அவசரமாக இரண்டாவது உணவகத்தை நண்பர்கள் மூலம் தேடிப்பிடித்தேன்.  அவர் புதிதாக தொழில் தொடங்கியிருந்தார். தரம் பராவாயில்லை ரகம்.  ஆனால், அவர் ஆரம்பம் முதலே விலை விசயத்தில் தெளிவில்லை. எது கேட்டாலும் குழப்பமான பதில் வந்தது.
இவ்வளவுக்கும் நான் அவரை நேரில் பார்த்து பேசினேன்.
மெனு குறித்து ஏதேனும் போனில் பேசினால்,  'ஃசெப்பிடம் கேட்கவேண்டுமே' என்பார். அந்தப் பதிலுக்கும் நான் அவருக்கு  திரும்ப போன் செய்ய வேண்டும். சமயங்களில் போனை கூட எடுக்க மாட்டார். பின் சில மணி நேரங்கள் கழித்து மெசேஜ் செய்வார். எனக்கும் வேறு வழியில்லாததால் நான் பொறுத்துக் கொண்டேன். ஒருவழியாக  மெனு, டாலரை ($) உறுதிசெய்தோம்.

அந்த சுபநாளும் வந்தது. அவரிடம் விருந்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பு வந்துவிடுங்கள் என நேரம் சொல்லியிருந்தேன். அதனால், அவருக்கு நினைவூட்டலாக முதல் முறை 2 மணி நேரத்திற்கு முன்பு போன் செய்தேன். '
மறக்கவில்லை, சரியான நேரத்திற்கு வரும்' என்றார். பின் திரும்ப இரண்டாம் முறை நினைவூட்டலும் செய்தேன் (30 நிமிடத்திற்கு முன்). ' இதோ கிளம்புகிறோம்'  என்றவர் கிரடிக்ட் கார்டையெல்லாம் வாங்கிக் கொண்டார்.

அவருக்கு சொன்ன நேரம் வந்தது. ஆனால், ஆளைக் காணோம். போன் செய்தேன். அவர் எனது எந்த அழைப்பையும் தொடர்ச்சியாக எடுக்கவில்லை.   பொறுப்பை எடுத்துக்கொண்ட எனக்கோ அதிர்ச்சி.
வேறு வழியில்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து  உணவகத்துக்கு போன் செய்து பார்த்தோம். வாடிக்கையாளரை எதிர்கொண்டு பழக்கமில்லாத ஒரு பெண்.  அவர் வேறு யாரையோ கூப்பிட்டார். அவரிடம்
பிரச்சனையைச் சொன்னோம்.  கடைசியாக இதோ, அதோ எனச் சொல்லி அவர்கள் அனுப்பி வைத்த ஆள் 1;30 மணிநேரத் தாமதமாக வந்துசேர்ந்தார்.

அதிஷ்டவசமாக அது ஸ்னாக்ஸ் பார்ட்டி, மட்டுமில்லாமல்  நாங்கள் கூடுதலாக அமெரிக்க உணவையும் ஆர்டர் செய்திருந்ததால் தப்பித்தோம்.
ஆனால், இந்திய உணவை எதிர்பார்த்து வந்த சிலர் ஏமாற்றத்தோடு திரும்பிவிட்டனர்.  கொஞ்சபேர் அந்த ஆள் வரும் வரை  காத்திருந்தார்கள். அதனால் நிறைய உணவு மீந்துவிட்டது.

'ஏன் லேட் ?, நான் லேட்டாக வந்த உணவுக்கு பணம் தரமுடியாது
என மறுத்தேன். '  வந்தவர், உரிமையாளர் உங்களுக்கு போனில் விளக்குவார்  என்றார்.   1;30 மணிநேர தாமதமாக விருந்துக்கு உணவு எடுத்து வந்தவரிடம் இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருந்தேன். பேசியபடி பணத்தை கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக முடிந்தால் இலவசமாக கொடுங்கள் இல்லை 50% வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.

அதற்கு  அவர்கள் இதை  இலவசமாக தருகிறோம். ஆனால், அடுத்த
விருந்து ஆர்டரை எங்களுக்கு கொடுத்து இன்னோரு வாய்ப்பு தாருங்கள் என்றார்கள்.  எங்களுக்கு இன்னோரு முறை அவர்களுக்கு வாய்ப்பு
தர விருப்பமில்லாததால்,  அடுத்த நாள் 50 % பணத்தைக் கொடுத்து கணக்கை சரிசெய்தோம்.

இவ்வளவுக்கு பிறகும், என்னைச் சலனப்படுத்தி எனக்குத்  தீராத மன உளைச்சலைத் தந்த அந்த உரிமையாளர் இன்றுவரை எனக்கு  ஃபோன் செய்யவில்லை.  பதிலாக அவர் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார்.
// My sincere apology, I know this shouldn't have happen. I was suppose to come with the food. That was the plan.. // இப்படி வந்த அந்தச் செய்திக்கு ஒற்றை வார்த்தை பதில் அனுப்பினேன். "நன்றி".  அதைத் தவிர நான் அவருக்கு என்னதான் சொல்லுவேன். சொல்லுங்கள் நண்பர்களே.