Friday, August 30, 2019

திருநெல்வேலி திருடர்கள்

திருநெல்வேலி அருகே முதியவர்கள் இருவர் திருடர்களை  விரட்டயடிக்கும் வீடியோவை பல நண்பர்கள் பகிர்ந்திருந்தனர்.  தற்போது அந்த வீடியோ வைரலாகி வீரத்தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன என்பதையும் கேள்விப்பட்டேன்.

இப்படி ஆயுதங்களுடன் தாக்க வந்தவர்களைத் தீரத்தோடு போராடி ஜெயித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால், உணர்ச்சி வேகத்தில் அவர்களைப் பாராட்டும் அதே வேளையில் இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால்  இருக்கும் ஆபத்து பற்றியும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் நிதாமாக பேசுவோம். உண்மையில் இதுபோன்ற சம்பவங்கள்  எதிர்பாராமல்  எந்தவொரு அவகாசமும் இல்லாமல் நடப்பவை.  யோசிக்க
போதிய நேரம் கிடையாது. அதனால் பெரும்பான்மையானவர்களுக்கு அந்த பதற்றத்தில் என்ன செய்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பிடிபடாது. அந்தப் பதற்றத்தையும் குழப்பத்தையும் பயன்படுத்தியே  முன் அனுபவம் உள்ள திருடர்கள்  நினைத்ததை முடித்துக்கொள்வார்கள். அந்தச் சமயங்களில் உடமையாளர்கள் ஒத்துழைக்காமல் தாக்க முற்பட்டாலோ இல்லை பிடிக்க முற்பட்டாலோ அவர்கள்  கொலை கூட செய்யக் தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இப்படி கொஞ்சம் மாற்றி யோசித்து பார்க்கலாமே.  திருட வந்தவர்களுக்கும் உடமையாளர்களுக்கும் நடந்த சண்டையை ஒருமுறை அதில்  ஒருவர்  முதியவரின் பின்னால் வந்து  கழுத்தை பலங்கொண்ட மட்டும் இறுக்குகிறார். மற்றோருவர் பெண்மணியிடம்  ஆக்ரோசமாக அருவாளை வீசுகிறார். இந்தப்போராட்டத்தில் யாரேனும் ஒருவர் படுகாயமடைந்திருந்தால் இல்லை நடக்கக்கூடாதது நடந்திருந்தால் என்ன சொல்லி இருப்போம் ? "எதுக்கு இந்த வேண்டாத வேலை, போனா போகுது காசு தானே, போனா சம்பாரிச்சுகலாமே" என்றுதானே ?. இல்லை திருடனே கொல்லப்பட்டிருந்தால். இன்றைய சூழலே சுத்தமாக மாறி இருந்திருக்குமே ? அந்த வீடியோவை சகஜமாக வெளியாக அனுமதித்திருப்பார்களா ?  இல்லை தற்காப்புக்காக செய்தோம் என உடமையாளர்கள் நிம்மதியாக  வீட்டில் இருந்துவிட முடியுமா  என்ன ? அந்த அளவுக்கு குடிமக்களுக்கு அனுசரணையான சட்டதிட்டங்கள் நம்மிடம் இன்று இருக்கின்றனவா என்ன ?

அதனால், உடமைகள் முக்கியம்தான் அதைவிட பாதுகாப்பு அதிமுக்கியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தற்காப்பு  எனும் பெயரில் யாரும்   சாகச செயலில் இறங்காமல் இருப்பதே நல்லது.

அரசு வீரத்தம்பதியினருக்கு விருது வழங்கும் அதே வேகத்தை ஏன் அதைவிட கூடுதல் வேகத்தை இதுபோன்ற சமூகவிரோதிகளைப் பிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் காட்டவேண்டும்.  இதுபோல நேற்று சென்னையில் காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனைத் 
பறித்து சென்றவனைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். காரணம் கேட்டால் "காதலியின் பரிட்சைக்கு பணம் காட்ட காசில்லை" என்றானாம்.
அது எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை.  ஆனால், பெருகிவரும் வழிப்பறி,  திருட்டு கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுக்கு குடி, போதை, சமூக ஏற்றத் தாழ்வு, வேலைவாய்ப்பின்மை என பலகாரணங்களைச் சொல்கிறார்கள் . உண்மை காரணங்களைக் கண்டுபிடித்து சீர் செய்யவேண்டியது அரசின் கடமை.

உதாரணமாக தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சமூகவிரோத வழக்குகள் எத்தனை. அது முந்தைய பத்தாண்டுகளைவிட எத்தனை மடங்கு அதிகம் போன்ற உண்மை  தரவுகளை வெளிப்படையாக
தவறில்லாமல் வெளியிடவேண்டும். அதை நீண்டகால நோக்கில்  களைய என்ன வழி என்பதையும் யோசிக்கவேண்டும். அதை விடுத்து வெகுஜன மக்களைத் கையில் தடி எடுக்கச் சொன்னால் அது காலப் போக்கில் பல புதிய பிரச்சனைகளுக்கு  வழிவகுத்துவிடும். அது  அனுமனின் வாலில் வைத்த தீ போல மோசமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.

Wednesday, August 21, 2019

மதுரையில் ஓடிய கடல் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -4)

இதன் முந்தைய பதிவு இங்கே..

சூலை-7 ஞாயிற்றுக் கிழமை 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்
இறுதி நாளாக இருந்தாலும். ஒரு விதத்தில் பிரகாசமான நாளாக இருந்தது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அமெரிக்கப் பேரவை விழா, சிகாகோ தமிழ்ச்சங்க பொன்விழா, தொழிற் முனைவோர் கூட்டமைப்பு
என கோலகலமாக அரங்கங்களில் களைகட்டியிருந்த மக்கள் கூட்டம்
அன்று குறைந்து தமிழ் அறிஞர்களுக்கு பூரணமாக வழிவிட்டிருந்தது.

அதுபோல மற்ற நாட்களைப் போல உணவுக்காக நீண்ட வரிசையில்
காத்திருக்க வேண்டிய நெருக்கடியும் அன்று இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக காலை உணவு நேரம்
தமிழகத்தில் இருந்து வந்த பல விருந்தினர்களுடன் நெருக்கடி இன்றி
உரையாட வாய்ப்பாக இருந்தது. பேராசிரியர் ஞானசம்பந்தம், மருத்தவர் சிவராமன், எழுத்தாளரும், பதிப்பாசிரியருமான லேனா தமிழ்வாணன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், கவிஞர் சல்மா, பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரன் பலரைச் சந்தித்து உரையாட முடிந்தது.

காலை அமர்வுகள் 8:30 மணி முதல் 11:45 மணி வரை ஏற்பாடாகி இருந்தன. அந்த அமர்வுகளில் மொத்தமாக 17 ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன.  இணை அமர்வு எனும் நேர நெருக்கடி இருந்ததால் முன்பே திட்டமிட்டு விருப்பமான சில  ஆய்வுக்கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன்.

அதுமட்டுமில்லாமல் ஆய்வரங்குகள் அடுத்தடுத்து இருந்ததால் பார்வையாளர்கள் தயக்கமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகளுக்குச் சென்று விருப்பமானவற்றைத் தேர்தேடுத்தார்கள். காலையில் நான் கலந்து கொண்ட ஆய்வரங்கங்கள் புகைப்படங்களுடன்..

1. "Unfurling the mysteries behind ancient port city Poompuhar and understanding the socio-cultural evolution of the Tamils" -  Dr. SM. Ramasamy / Dr. Saravanvel

ஆய்வின் நோக்கம்-  பண்டைய துறைமுக நகரமான பூம்பூகாருக்குப் பின் உள்ள மர்மங்களை அவிழ்த்து, தமிழர்களின் சமூக-கலாச்சார பரிணாமத்தைப் புரிந்துகொள்வது.

முதலில் கடல்கோள் (கடல் நீர்மட்ட உயர்வு) நிகழ்வால் இன்றுவரை  பூம்புகாரின் உண்மையான வயதைக் கணக்கிடுவது மர்மமாகவே தொடர்வதாக சொன்னவர்கள்.
பிறகு பழைய புகார் இன்றைய பூம்புகாரில் இருந்து  தள்ளி 30 கீ.மீ தூரத்தில்
கடலுக்குள் இருப்பதாக பல தரவுகளை முன்வைத்தனர். பிறகு பூம்புகார் குறித்த இலக்கியச் சான்றுகளைத் தாண்டி அறிவியல் பூர்வமான
சான்றுகளைத் தேடி கடலுக்கடியில் திட்டமிடப்பட்டுள்ள, நடைபெறும்  ஆராய்ச்சி பற்றியும் விளக்கினார்கள். அதுபோல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்டைய மதுரையில் கடல் ஓடியது. ஒரு காலத்தில் காவேரி சென்னை வரைப் பாய்ந்தது என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிட்டார்கள்.

முக்கியமாக பூம்பூகாரைக் கண்டடைவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பூகோள மாற்றங்களை மிகச் சரியாக கணிப்பது அவசியம் எனும் கருத்தை முன்வைத்தார்கள். இருந்தாலும் தமிழர்களின் அடையாளம் சிலப்பதிகாரம், பத்தினி தெய்வம் கண்ணகி என்றெல்லாம் பெருமை கொள்ளும் நாம் இதுவரை ஏனோ முறையான அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகளை (for physical evidence) மேற்கொள்ளாமல் இருப்பதை நினைத்து நாம் ஆதங்கப்படுவதைத் தவிர வேறுவழி இல்லை.







ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சாற்றுகள் குறித்து அடுத்த பதிவில்...

Tuesday, August 13, 2019

அமெரிக்கத் தமிழ் பண்பலையில் நேர்காணல்

அமெரிக்கத் தமிழ் பண்பலையின் (US Tamil FM ) வானோலிக்கு தந்த நேர்காணல் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. எழுதுவது என்பது ஒரு கலை என்றால் பேசுவது இன்னொரு கலை.   இரண்டுக்கும் முறையாக பயிற்சி தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எழுத்தும் பேச்சும் இரண்டும் இரு வேறு உலகங்களாக இருக்கின்றன.
எழுத்தில், சிந்தித்து பல மணிநேரங்கள் மெனக்கெட்டு மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிய கட்டுரையைப் பேச்சில் எளிதாக 5 நிமிடங்களில் கேட்பவர்களுக்கு கடத்திவிட முடிகிறது.   எழுத்தில் சொற்களின் தேர்வு, நடை என்றால் பேச்சில் குரலும், போதிய இடைவெளி விடுவதும் சேர்ந்து கொள்கிறது. ஆனால், எழுத்தில் இருக்கும் கட்டட்ற சுதந்திரம் பேச்சில் இல்லை. குறிப்பாக பதற்றம். சொல்லவந்த விசயம் சரியாக சொல்லப்பட்டதா கேட்பவர்களால் சரியாக புரிந்துகொள்ளப்பட்டதா என எழும் அந்த சந்தேகம் இயல்பானதே.

பேச்சில் இருந்துதான் எழுத்து தோன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும் எழுத்தில் கேலோச்சிய ஒரு சில எழுத்தாளர்களே மேடைப் பேச்சிலும்  பரிமளித்திருக்கிறார்கள். ஜெயகாந்தன், சுஜாதா பேசிக் கேட்டவர்களுக்கு இது தெரிந்திருக்கும். அதற்கு மொழி கூட ஒருவித தடையாக இருந்திருக்கலாம். கொஞ்சம்  இதில் உள்ளே நுழைந்து பார்த்தால் எழுதுவதும் பேசுவதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருவதாக சொல்கிறார்கள். ஒரு ஆய்வில் பக்கவாதம் பாதிக்கப்பட்ட சிலரிடம் ஒருவன் ஓடும் படத்தைக் காட்டியபோது "அவன் ஓடுகிறான்" எனச் சரியாக சொன்னவர்கள் எழுதும் போது "அவன் ஓடுகிறது" என தவறாக எழுதினார்களாம்.

நாம் விசயத்துக்கு  வருவோம். வானொலி நிகழ்ச்சி கேள்வி பதில் என்பதனால்  மேடைப் பேச்சு போல் பெரிய முன் தயாரிப்புகள் எதும் தேவைப்படவில்லை. பதில் இயல்பாக இருக்கவேண்டும் என்பதை மட்டும் யோசித்து வைத்திருந்தேன். மற்றபடி எதிர்முனையில் இருந்த தொகுப்பாளர் மனோ எஃப்எம் பாணியில் சரளமாக பேசினார். நான் சிக்கலில்லாத எளிய பதிலை யோசித்து பேசியதாகவே நினைக்கிறேன். நீங்களே கேளுங்கள்.

நேர்காணல் ஒலிப்பதிவின் இணைப்பு:


(https://youtu.be/ZLSp0mR9OBA)
நன்றி  R.J.மனோ

Saturday, August 10, 2019

தமிழில் மெய்யியல் கொள்கைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -3)

முந்தைய பதிவு.

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளைப் பார்ப்பதற்கு முன்பு சில தகவல்கள்.

மாநாட்டிற்கென உலகம் முழுவதிலும் இருந்து பல
பல்கலைக்கழகங்கள், தமிழ்ஆர்வலர்கள் என பலநூறு ஆய்வுக்கட்டுரைகள் வந்ததாக சொன்னார்கள்.

அதன்படி, "தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்." எனும் கருப்பொருளில் "ஆராய்ச்சிக் கட்டுரை சுருக்கத்தையும்" (ABSTRACT), "ஆராய்ச்சி விரிவுக் கட்டுரைகளையும்" (RESEARCH PAPER)
கேட்டிருந்தார்கள். அப்படி வந்த பலநூறு கட்டுரைகளில் தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரை ஆசிரியர்களுக்கு மட்டுமே சிகாகோ மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாம். அதுபோல தேர்தேடுக்கப்பட்ட சில கட்டுரைகளை "ஆய்வுக்கட்டுரைகள்-வரைவு " எனும் தலைப்பில் ஆய்வரங்க கையேட்டில்
வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி அந்தக் கட்டுரைகளைத் தேர்வுசெய்தார்கள் ?, எதன் அடிப்படையில்? அதன் வெளிப்படைத் தன்மை என்ன? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.  மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் மன்றத்தை நேரடியாக தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

இங்கே சூலை 6,7-ம் தேதிகளுக்கான நிகழ்ச்சி நிரலின் இணையதளமுகவரியைத் தருகிறேன். https://www.icsts10.org/wp-content/uploads/2019/06/World_Tamil_Conference_Schedule.pdf

கூடவே சூலை-6, சனிக்கிழமை அன்று மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கட்டுரைகளை இங்கே  படங்களாகவும் இணைத்திருக்கிறேன். (ஆய்வரங்க கையேட்டில் இருந்து)



அன்று நான் ஆர்வமாக கலந்து கொள்ள நினைத்த பல நிகழ்வுகள் இணை அமர்வாக இருந்ததால்  1. "Evolution of the Tamil Script : An Archaeological Perspective"2. " ஆசீவகம் என்னும் அறிவியல்" என இரண்டு அமர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.


ஆய்வரங்கில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் சில:

ஒவ்வொரு  அமர்விலும் ஆய்வாளருக்கு குறிப்பிட்ட காலகெடு வழங்கப்படுகிறது.  அந்த காலகெடுவுக்குள் அவர் தனது ஆய்வை
முன்வைத்து பேசியபின்,  அமர்வின் தலைவர் அதில் திருத்தங்கள் இருந்தால் சொல்கிறார்.
சமயங்களில் அதுதொடர்பான சில கேள்விகளையும் எழுப்புகிறார். இறுதியாக பார்வையாளர்களும் தங்கள் கேள்விகளை  ஆய்வாளருக்கு எழுத்து மூலமாக அனுப்பி விளக்கம் பெறலாம்.

உண்மையில் அவசரகதியில் என்னால் மேலே சொன்ன இரண்டு நிகழ்வுகளையும் கூட ஆழமாக கருத்தூன்றி முழுமையாக கவனிக்க இயலவில்லை. மேலோட்டமாக எடுத்த எனது  குறிப்பில் இருந்து சில தகவல்கள்:


திருக்குறளைத் தொடக்கத்தில் "முப்பால்" என்றே அழைத்தார்கள். குறள் குறித்து எழுதப்பட்ட  "திருவள்ளுவ மாலை " எனும் நூல் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு (50 பாடல்கள்) ஆகும்.  இப்படி ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ  எல்லாப் புலவர்களும் முதலில் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.

மொழிக்கலப்பு- சங்க இலக்கியத்தில் வட சொற்கள் 2% மும்,  திருவாசகத்தில் 8% மும்  கலந்திருக்கின்றன.  அவை தமிழில் இருந்து அங்கே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறதாம்.

ஆசீவகம் என்பது ஒரு தமிழ் மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கத்தையும் குறிக்கிறது. அதைப் பின்பற்றுபவர்களை ஆசீவகர்கள் என்கிறார்கள். தமிழ் மெய்யியல் கோட்பாடு- கிரேக்க தத்துவஞானி பிளாட்டோ கோட்பாடு அதன் பகுப்பாய்வு போன்ற தரவுகளும் பேசப்பட்டன.




மேலே உள்ள நிகழ்ச்சி நிரல்படி சனிக் கிழமை அன்று மட்டும் மொத்தமாக  32(15+17) கட்டுரைகள் அறிமுகமாகி இருக்கின்றன.  அன்று பல அமர்வுகளில் திருக்குறள் பற்றி ஆய்வுக்கட்டுரைகள் முன்வைக்கப்பட்டாலும், இணை அமர்வு எனும் தொல்லையால் என்னால் ஓர் அமர்வில் கூட முழுமையாகக் கலந்துகொள்ள இயலவில்லை எனும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தமிழ்மன்றம் இந்த நிகழ்வுகளை காணோளி மூலமாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். அவை  அனைவருக்கும் பயன்படும் வகையில்  கூடிய விரைவில் பொதுவில் பகிர்வார்கள் என நம்புவோம்.

Thursday, August 1, 2019

கல்கண்டு லேனா தமிழ்வாணன் தந்த ஆச்சர்யம்

கல்கண்டு பத்திரிகை பள்ளி நாட்களில் அறிமுகமான போது பத்து, பதினோரு வயது இருக்கும் என நினைக்கிறேன். அப்போது பக்கத்து வீட்டில் வாங்கிக்கொண்டிருந்தார்கள். அளவில் மிகச் சிறியதாக  இருக்கும் அந்தப்புத்தகம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்க்கு கிடைத்ததாக ஞாபகம்.  அப்போது கல்கண்டு கையில் கிடைத்தால் ஆர்வமாக முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வாசித்துவிட்டுத் தான் கீழே வைப்பேன். அந்த அளவுக்கு விறுவிறுப்பான பல விசயங்கள் இருந்தன. இத்தனைக்கும் அவர்கள் சினிமாவுக்கு என ஒருபக்கம் மட்டுமே ஒதுக்கியிருந்ததாக நினைவு. அதில் முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்தது வெளிநாட்டுத் துணுக்குச் செய்திகளும் லேனா தமிழ்வாணனின் பயணக்கட்டுரைகளும் தான்.

சொந்த ஊரை வீட்டு வெளியூர் போவதே பெரிய விசயமாக இருந்த அந்தநாட்களில் அவருடைய பயணக்கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பாக இருந்தன. அவர் ஒவ்வொரு வாரமும் ஜப்பான், சுவிச்சர்லாந்து என பறந்து
பறந்து எழுதும் கட்டுரைகளை வியப்போடும், ஆச்சர்யத்தோடும் படிப்பேன். கூடவே லேனா தனது அக்மார்க்கான கறுப்புக்கண்ணாடியுடன்  மிக நேர்த்தியாக உடையணிந்த வண்ணப் படங்களைப் பார்க்கும்போது
ஏக்கமாக இருக்கும் எனச் சொல்வதில்
எனக்கு பெரிதாக வெட்கமில்லை.
நான் இன்று அமெரிக்காவில் வசிக்கிறேன். ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் பல வெளிநாடுகளுக்கு ஊக்கத்தோடு பயணப்பட்டிருக்கிறேன். அந்தப் பயண ஆர்வத்துக்கு கல்கண்டு பத்திரிக்கையும், லேனாவும் ஒருவிதத்தில் காரணம் என்றே நினைக்கிறேன்.

சமீபத்தில் சிகாகோ மாநாட்டில் லேனா தமிழ்வாணனைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நல்லிரவிலும் வழக்கமான உற்சாகத்தோடு பேசினார். எனது வனநாயகன் நாவலைப்
பரிசளித்தபோது,  "அமெரிக்கா வந்தும் உங்களுக்கு தமிழ் ஆர்வமா.." எனப்  பாராட்டியர், "ஓ, கிழக்கு பதிப்பகமா ?  தரமான நூல்களை வெளியிடுவார்களே..." என சிலாகித்தார்.

இன்று மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாகியான அவர் அப்படி மனம் திறந்து என்னிடம் சொல்லியிருக்கத் தேவையில்லை.  அது அவருடைய வெளிப்படைத் தன்மையைக் காட்டுகிறது. இறுதியாக அவருடைய பயணக்கட்டுரைகள் என் வாழ்வில் மிகப்பெரிய தூண்டுதல் என்றபோது மகிழ்ச்சியாக சிரித்தபடி கைகுலுக்கி விடைபெற்றார். ஒரு எழுத்தாளனுக்கு  ஒரு வாசகன் இதைவிட வேறென்ன பெரிய பாராட்டைத் தந்துவிட முடியும் சொல்லுங்கள்.

நன்றி - முதல் படம் இணையம்.