Wednesday, September 26, 2018

கலைஞர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

கலைஞர் மறைவையொட்டி கடந்த ஒரு மாத காலமாக  உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் கலைஞர் குறித்த தமிழக இலக்கியவாதிகளின்
அரசியல் சார்பற்ற மதிப்பீடு  என்னவாகும் இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்த போது எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த உரையைக் கேட்க நேர்ந்தது.

அவர் கலைஞர் குறித்தும் கலைஞர் தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த மகத்தான பங்களிப்பு குறித்தும் தனது காத்தாரமான கருத்துகளை
மிகக் குறுகிய நேரத்தில் (15 நிமிடங்கள்) உணர்வுப்பூர்வமாக பதிவுசெய்திருக்கிறார்.

கலைஞர் குறித்த எஸ்.ரா வின் இந்த உரையை நேரமிருந்தால் தவறாமல் கேளுங்கள்.

https://youtu.be/kiPNIqrGC40

#எஸ்.ரா

Saturday, September 22, 2018

அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா

மாணவர்களின் சேர்க்கைக் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி
தமிழக அரசு பலநூறு அரசுப் பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
அந்தச் செய்தி ஏனோ  ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும்  பெரிதாக விவாதிக்கப்படவில்லை என நண்பர் ஒருவர் முகநூலில்  வருத்தப்பட்டிருந்தார்.

கூடவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. இது நடப்புக் கல்வியாண்டில்  மேலும் குறைந்து 46 லட்சமாகி உள்ளது (-தினத்தந்தி)  என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நாம் இங்கே கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாமே. அரசுப் பள்ளிகளையோ இல்லை அரசு உதவிபெறும் பள்ளிகளையோ இதுபோலத் தொடர்ந்து மூடிக்கொண்டிருந்தால் யார் கவலைப்படுவார்கள்? உண்மையில்  அங்குப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு குற்றச்சாட்டாக, விமர்சனமாக முன்வைக்காவிட்டாலும் இதுதான் இன்றைய நிதர்சனம்.

தரமான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களை
மக்களுக்கு வழங்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறியதால்
வாய்ப்புள்ளவர்கள் விலகி இதற்கெனத்  தனியார் பக்கம் திரும்பி பல வருடங்களாகிவிட்டது.

இன்று சரியான  குடும்பச் சூழல் அமையாத வேறுவழியற்ற விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமே அரசுப்பள்ளிகள் எனும் எண்ணம் நிலைபெற்றுவிட்டது.
இந்த நிலைக்குக் காரணம் வெளிப்படையானது.  பல வருடங்களாக
அதிகாரத்தில் இருந்தவர்கள் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பிலும், கல்வித் திட்டத்திலும் உரிய நேரத்தில் கவனம் செலுத்தாமல் மெத்தனமான போக்கைக் கடைபிடித்து திட்டமிட்டு அரசுப்பள்ளிகளை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

எது தரமான கல்வி ?  அதை யார் நிர்ணயிக்கிறார்கள் ? அதை  எந்த மொழி வழியாகக் கற்பது? இந்தியா போன்ற துணைக்கண்டங்களில் மாநிலம் தழுவிய சமச்சீர்க் கல்வி உயர்ந்ததா  இல்லை ஒற்றைத் தன்மையான மத்திய அரசாங்கப் பாடத்திட்டக் கல்வி உயர்ந்ததா ?  அதுபோல  எதிர்காலக் கல்வியை வடிவமைப்பதில் இன்றைய தொழில்நுட்பத்தின் பங்கு என்ன ? பிள்ளைகளின் சிந்தனையைத் தூண்டுவதோடு உயர்கல்விக்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்க எந்த மாதிரியான கல்விக்கொள்கை அவசியம் என்பது போன்ற விவாதங்கள் இந்தியாவைப் போல, தமிழகத்தைப்போல உலக அரங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.  இனி வரும்காலங்களில் நம்நாட்டு
மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களின் மூலமாக மட்டுமே என்பது உறுதியாகிவிட்டது.  அதனால், அதற்கு உதவும் வகையில் அரசு  கல்வித் துறையைத் தனியாருக்கு முழுமையாகத் தாரைவார்த்துவிட்டு நாங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறோம் என வெளிப்படையாக அறிவிக்க  இயலாத தர்மசங்கடத்தில் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

#அரசுப்பள்ளிகள்

Thursday, September 13, 2018

யானையைச் சாப்பிடுவது

'உங்கள் வாசிப்பின் ரகசியம் என்ன? ' என நண்பர் ஒருவர் உள்பெட்டியில்  கேட்டிருந்தார். உண்மையில் இதில் ரகசியம் எதுவும் கிடையாது.

எனக்கு மட்டுமில்லாமல் வாசிப்புப் பழக்கம் எங்கள் வீட்டில் அனைவருக்கும்  பொதுவான ஒன்று. வீட்டில்  சமையலறைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும்  கண்ணில்படும்படியாக எப்போதும் புத்தகங்கள்  கிடக்கும்.  அதனால் வாசிப்பு கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு கோடை விடுமுறையில் மட்டுமே டிவி என்பதால் வீட்டில் வாசிப்பு எப்போதும் பிரதானமே.

வாசிப்பைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த, கவர்ந்த ஏதாவது ஒன்றைத் தேர்ந்தேடுத்து தொடர்ந்து வாசியுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் வாசிப்பில் நான்  எழுத்தாளர் சுஜாதா சொன்ன ஒரு நுட்பத்தை கடைபிடிக்கிறேன். அதாவது ஒரே சமயத்தில் பல புத்தகங்களை வாசிப்பது.

தற்போது எனது வாசிப்பில்

வரவேற்பறையில்- தேசாந்திரி ( எஸ்.இராமகிருஷ்ணன்)
அலுவலக அறையில் - Outliers Book by Malcolm Gladwell மால்கம் கிளாட்வெல்
காரில் ஒலிப்புத்தகமாக - The Last Voyage of Columbus Book by Martin Dugard
படுக்கை அறையில் - இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் (வைரமுத்து)

இதை நீங்களும்  முயற்சி செய்துபார்க்கலாம். அதன்படி வீட்டில் அறைக்கு ஒரு புத்தகத்தை வைத்து வாசிக்கலாம். இல்லை பயணங்களில் ஒரு புத்தகம், நண்பிக்காக பீச்சில் காத்திருக்கும் சமயங்களில் (!) ஒரு புத்தகம் என நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிரமமின்றி எளிதாக நிறைய புத்தகங்களை வாசித்துவிட முடியும்.

இப்படி ஒரே சமயத்தில் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் வெவ்வேறு ரசனைகளில் தேர்ந்தேடுத்துக் கொள்வதுகூட வாசிப்புக்குச் சுவை கூட்டும்.

ஆனால்,  வாசிப்பு ஒருவிதத்தில் அந்தரங்கமானது. அதனால் நான் இங்கு சொல்வது அனைவருக்கும் சரியானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.  சிலர் பெரிய திட்டமிடல் எதுவும் இன்றி ‘கண்டதையும்’ வாசிப்பார்கள். சிலர்  தேர்ந்தெடுத்து வாசிப்பார்கள். சிலர் நூலகத்திற்கு போய் வாசிப்பார்கள்.

அதனால் உங்கள் வசதிபடி  உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, முக்கியமாக தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைகொள்ளுங்கள்.

நம்மூரில்  சிறு துளி பெருவெள்ளம் எனச் சொல்வது போல ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக ஒரு பெரிய திட்டத்தை, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக கைகொள்வதை Eat the elephant one bite at a time எனச் சொல்வார்கள். அப்படி நீங்களும் வாசிப்பு யானையைச்  சுவைக்கலாம்.

படங்கள்- நன்றி இணையம்.

Sunday, September 2, 2018

ரஜினியின் காலா

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இருந்தபோது ஒரு நாள் மாலை போகலாம் என டக்கென முடிவெடுத்து குடும்பத்தோடு போய்
காலா பார்த்துவிட்டு வந்தோம். தலைக்கு டிக்கெட் 120 ரூபாய்.  நாங்கள் 7 பேர் போயிருந்தோம். மொத்த செலவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். செலவு கணக்கு பேசும்போதே உங்களுக்குப் புரிந்திருக்குமே.

ஆமாம், படம் ஏமாற்றம்.

இன்னொரு விசயம்.  காலாவைத் திரையில் பார்ப்பதற்கு முன்பு நான் எந்த விமர்சனத்தையும் வாசித்திருக்கவில்லை, அது குறித்து யாரிடமும்
விவாதிக்கவும் இல்லை.  அதனால் படம் குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் பெரிதாக இல்லை. அதுபோல படத்தில் ரஜினியைத் தவிர வேறு நட்சத்திரங்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் படத்தைச் சரியாகவே அவதானிக்க முடிந்ததாக நினைக்கிறேன்.

படத்தில் ரஜினியின் அறிமுகமே எனக்கு ஏமாற்றத்தோடு தொடங்கியது. பின் அவருடையக் குடும்பம், அதைத் தொடர்ந்த காட்சிகள் என அறிமுகப்படுத்திய எல்லா கதாபாத்திரங்களும் செயற்கைத் தனமாக மனதிற்கு ஒட்டாமல் நின்றன. அதனால் மனம் தொடக்கத்தில் இருந்து படத்தில் ஒன்ற முடியாமல் திணறியது.

அதுபோல ரஜினி படத்தில் இராவண காவியம் படிக்கிறார். அவருடைய மகன் பெயர் லெனின்  போன்ற பிரச்சாரங்களும் துருத்திக் கொண்டு நிற்கின்றன.  இதெல்லாம் இயக்குநரின் குறைகள்.

ஆனால் ரஜினி தனக்கு தரப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரைப் போல அவருடைய மும்பை மருகளாக வரும் இளம்பெண் நன்றாகவே நடித்திருக்கிறார்.  அவருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமைய வாழ்த்துகள்.

கபாலி படம் தந்த வெற்றியின் தாக்கமோ என்னவோ இதிலும் வயதான தம்பதிகளின் காதல், சோகப்பாடல் என பயங்கர இழுவை. துரதிஷ்டவசமாக படத்தில் ஒரு பாடல் கூட கவனிக்கும்படியாக அமையவில்லை.  ரஜினியின் முன்னாள் காதலி என வரும் நடிகை யாரெனத் தெரியவில்லை. மைதா மாவு போல வரும் அவரையெல்லாம் ஆட, பாட வைத்து  இயக்குநர் ஒருவழியாக  படத்தின் முதல்பாதியை முடித்திருந்தார்.

இரண்டாம் பாதியில் படம் சூடுபிடிக்கிறது. அதிலிருந்து இருந்தே
படம் பார்க்கவந்திருக்கலாம் எனத் தோன்றும் அளவுக்கு முதல்பாதி படு செயற்கை. இரண்டாம் பாதியில் கூர்மையான வசனங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

நாம் இப்போது தானே படம் தொடங்கியிருக்கிறது என நிதானிப்பதற்குள்
டக்கென கிளைமாக்சோடு படம் முடிந்துவிடுகிறது. நல்ல கதைக்கரு. இயக்குநர் அவசரப்படாமல் மெனக்கெட்டிருந்தால் மிகச் சிறப்பாக செய்திருக்கலாம் எனத் தோன்றியது.

அதுபோல படத்தில் எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றும் தலைவன் எனும் வேடத்தைச் சிறப்பாக செய்யும் ரஜினி நிஜ வாழ்வில் அதைக் கொஞ்சமேனும் கடைபிடித்தால் பாராட்டலாம்.

மற்றபடி 1987ல் வந்த கமலின் நாயகன் படத்தை  30 வருடங்கள் கழித்து ரஜினிக்காக மாற்றி எடுப்பதில் இயக்குநர் தோல்வி அடைந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.