Sunday, September 25, 2016

இவர்கள் வாசகர்கள்-4

நண்பர்களே,  எனது இரண்டாவது புதினம் என்னுடைய பெரும்பான்மையான நேரத்தை கேட்கிறது.  போன வாரம்
ஒரு வழியாக  எழுத்துப்பணி நிறைவடைந்து இந்த வாரம்
பிழைத்திருத்தத்தில் இருக்கிறேன். முழுதாக முடிந்ததும் சொல்கிறேன்.

"இவர்கள் வாசகர்கள்" பகுதியில்  "பங்களா கொட்டா" புதினம்
பற்றி  குமுதம் புகழ் நண்பர் சுரேஷ் கண்ணன் அவரகளின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.  நான் முன்பே சொன்னது போல வாசகர்களின் கருத்துகளை அப்படியே உங்களின் முன் வைக்கிறேன்.

வாசகர்களின் பரந்துபட்ட கருத்துகளால்,  நான் ஒரு படைப்பாளியாக நிறைய கற்றுக் கொள்கிறேன் என சொல்லிக் கொள்வதில் மிகையோன்றுமில்லை.

***********

நண்பர் ஆரூர் பாஸ்கர், அவருடைய நாவலான 'பங்களா கொட்டா'வை அனுப்பித் தந்தார்.
அது பற்றிய விமர்சனக் குறிப்பு, புத்தக மதிப்புரைகளுக்கென வெளிவரும் பிரத்யேக மாத இதழான 'அலமாரி'யில் வெளிவந்துள்ளது.
நண்பருக்கு வாழ்த்துகள்.

அலமாரி  (கிழக்கு பதிப்பகம்)





பங்களா கொட்டா வை வாசித்து கருத்துகளைச் சொன்ன சுரேஷ் கண்ணனுக்கு எனது நன்றிகள்!!

Friday, September 16, 2016

துயரங்களின் பின்வாசல் - கவிஞர் உமா மோகன்

ஜூலையில்  கவிஞர் உமா மோகனின் "துயரங்களின் பின்வாசல்"
கவிதைத் தொகுப்பு இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறி என் முன்வாசல் வழியாக வந்தது.

நூலின்  எனும் தலைப்பை பார்த்தவுடன் ஓருகேள்வி
எனது மனத்தை துளைக்கத்தொடங்கியது.   துயரத்தின் பின்வாசல் எப்படியானது ? நல்லதா ? கெட்டதா ?  என்பது பற்றியது.  எங்கள் ஊர் பக்கம் எந்த நல்லவிசயம் செய்தாலும் வாசல் பக்கமாக  செய்ய வேண்டும் என்பார்கள்.  அதாவது யாருக்காவது  நெல்லோ, பணமோ, கூலியோ எது
கொடுப்பதாக இருந்தாலும் அது  முன் வாசலில் வழியாகதான்.   அது நல்ல சுபமான  காரியங்களுக்கு. துயரத்துக்கு ? துயர வீட்டை கடந்து பின்வாசல் வழி வெளியேறிச் செல்வது சுபமாகதான் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் நூலின் உள்ளே நுழைந்து வெளியேறி சரியெனத் தெளிந்தேன்.

நீங்கள் என்னதான் சொன்னாலும் ஓரு கவி சாதாரணமானவன் அல்ல.

அவன் இந்த உலகை  தன் புறக்கண்ணால் பார்த்து எளிதில் கடந்துபோகக்கூடியவனில்லை. அவன்  இந்த உலகை அகக்கண்ணால் கண்டு அதை உயிரின் உள்கடத்தி அந்த அனுபவத்தை கவிதையாய் வடித்துத் தருபவன் என்பதை உமா மோகனின் துயரங்களின் பின்வாசல் கவிதைத் தொகுப்பில் அறியமுடிகிறது.

எந்தவோரு நிகழ்வையும் புறவயமாக கடந்துசெல்லாமல் தன் மனதின்
தவிப்புகளை   அழகான கவிதைகளாக்கியிருக்கிறார். அந்தக் கவிதைகளின்  நுட்பத்தை கண்டு வியந்தேன். உதாரணமாக இதைச் சொல்லிவிடுகிறேனே. கவிஞரின் பூங்கொத்து கவிதையை பாருங்கள்

பூங்கொத்து அழகாகத்தான் இருக்கிறது...
முன்னறியா நிறங்களில்
வித்யாசத் தோற்றங்களோடு
..
விலை கேட்டதும் 
நாளை வாடிவிடுமே எனத்தான்
தோன்றுகிறது
 ..

பூங்கொத்தின் விலை கேட்டாலே அது வாடிவிடுமே என நினைக்கும்
அந்த மென்மையான மனநிலை ஓரு ஆச்சர்யம்.  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை  அல்லவா கவிஞர்
நினைவுபடுத்திவிட்டார்.

கவிஞரால் இந்த அவசர யுகத்தில் அந்த சின்ன  மகிழம்பூக்களை நினைக்க முடிகிறது.  அதைப் பற்றி  அவரால் உருகியபடி  கவிதையும் எழுதமுடிகிறது.


அந்த வீதியின்
மகிழம்பூக்கள்
நினைவில் காய்ந்துக் கொண்டு
நடத்தல் சாத்தியமில்லை.. - பக்கம்-18

அந்த மகிழம்பூவிலிருந்து "உங்கள் மழையும் எங்கள் மழையும் ஓன்றல்ல " எனும் கவிதையில் விவசாயக் குடும்பத்தின் அவலத்தை சொல்வது வரை 
பல கவிதைகளில் இவர் இந்த மண்ணை,  மக்களை மழையை,  இயற்கையை நேசிக்கும் மென்மனது கவிஞராய் மிளிர்கிறார்.



தனது முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சொன்னது போல உமா மோகன் தன் கவிதைகளின் மூழம் துயரத்தின் பின் வாசல் வழி அனைவரும் வெளியேறினார்களா ? எனும் தவிப்புடன் பதைபதைக்கிறார்.

அது போல,  மாய்ந்து மாயந்து   விலை மதிப்பான வைரம் வாங்கும் சமூகம், "வைரம்" எனும் பெயரை பழசு என குழந்தைகளுக்கு வைக்க மறுக்கும்
முரணான மடமையை கவிஞர்  ஏக்கத்தோடு பதிவு செய்கிறார்.

பார்ப்பதே களைப்பு உனக்கு
பறத்தலின்  
சுகம் அறியாய்
அலங்காரத்துக்கேனும்
சிறகு விரித்துப் பார்.  -51

என்பதில் அவர் சகமனிதர்களிடம் வைத்திருக்கும்  அந்த வாஜ்ஜை தெரிகிறது.

குறிப்பெழுதி வைக்காமலே
எங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது எனத்
தெரியுமளவு
இன்னும் கொஞ்சம் நல்லாப் படிப்போம் - பக்கம்-34

எதைக் கண்டும்
காறித்துப்புமளவு எச்சில்
சுரப்பதில்லை இப்பொதெல்லாம்..பக்கம் -56

எனும் போது அவர் தன் ஆற்றாமையை சொல்கிறார்.


ஓரு கவிதை தொகுப்பை ஓவ்வோருவரும் தங்களுக்கு பிடித்த வகையில் மனதுக்குள் கற்பனை செய்துக் கொள்கிறார்கள்.சிலருக்கு மலர்த் தோட்டம்,
கரும்புத் தோட்டம், நீரோடை  இப்படி பல.  எனது முதல் தொகுப்பான
"என் ஜன்னல் வழிப் பார்வையில்" க்கு  முன்னுரை எழுதிய நிரஞ்ஜன் பாரதி கூட வீட்டின் சமையலறையிலிருந்து வரும் சர்க்கரைப் பொங்கல் போல மணம் வீசுவதாக வாழ்த்தியிருந்தார். அது அவர்களின் மனநிலையை பொறுத்தது என்பேன். இந்த தொகுப்பில் பல கவிதைகள் எனக்கு இனிப்புத்துண்டு.

 நாம்  சமயங்களில் சில இனிப்புகளை சாப்பிடும் போது அதன் முதல்
கடியின் சுவையிலேயே  அதிசயித்து திகைத்து நின்றுவிடுவோம். அந்த ஓரு துண்டின் சுவையிலேயே லயித்து, திளைத்து நம்மை மறந்து பேரானந்தம் அடைவோம்.  குறிப்பாக  துயரங்களின் பின்வாசல் எனும் இந்தக்  கவிதையை படித்த போது அந்த அனுபவம் எனக்கு.

மையோ மரகதமோ அய்யோ வும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஓன்றாகுமா .. பக்கம் -91

மேலும் சிறக்க வாழ்த்துகள் உமா மோகன்.

நூல்  : துயரங்களின் பின்வாசல்
ஆசிரியர் :  உமா மோகன்
வெளியீடு : வெர்சோ பேஜஸ்
விலை : 80