Monday, December 28, 2015

கடவுள் ஆவது

  நான் தீவிரமாக உரைநடை எழுதத் தொடங்கியபின் கவிதை எதுவும் பெரிதாக எழுதவில்லை அல்லது தோன்றியதை பதிவு செய்யவுமில்லை.

அதற்காக இரண்டும் வேறு வேறு உலகங்கள் என்று அர்த்தபடுத்திக் கொள்ளவேண்டியதில்லை. நாம் கவிதை என பெரிதாக நினைத்து அல்லது நம்பி கொண்டிருப்பதை சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளிலோ அல்லது நாவலிலோ மிக சர்வ சாதாரணமாய் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது எனது அனுபவத்தில் கண்டது.

சரி விஷயத்துக்கு வருவோம். சில மாதங்களுக்கு முன் 'கடவுள் ஆவது' எனும் தலைப்பில் எழுதிய கவிதை ஓன்றை இங்கே பகிர்கிறேன்.


கடவுள் ஆவது
-----

கடவுள் ஆவது அவ்வளவு
சிரமமாய் இருக்கவில்லை.

நேற்று நீர்வீழ்ச்சி வரைந்த
அதே தூரிகையில்

இன்று
பாலைவனத்தையும்
வரைந்து முடித்தபின்.




தொடர்ந்து வாசித்து, கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!. 2016ல் மேலும் பல வெற்றிகளை பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

-ஆரூர் பாஸ்கர்.

நன்றி:
Image: http://ngm.nationalgeographic.com




Sunday, December 20, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-5

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4  (முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக).

அமானுச சக்திகள் இருக்கின்றனவா இல்லை மூட நம்பிக்கையா? என்ற விவாதத்துக்குள் போகமால். பயண அனுபவமாக மட்டும் இதை படிக்கவும்.

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் உள்ளவர் அப்படினு வச்சுகிட்டா, உங்க ஆசை அதிகபட்சமா  என்னவா இருக்கும் ?

ராத்திரி பனிரெண்டு மணிக்கு சுடுகாடுக்கு இல்ல கல்லறைக்கு போறது ?  இல்ல பேய் நடமாடறதா சொல்லபடுகிற இடத்தை ராத்திரியில போய் பார்க்குறது ?


அப்படினா நீங்க நியூ ஆர்லியன்ஸை பார்க்க பிரியப்படுவிங்க. ஆமாம், இதுமாதிரியான விஷயங்கள் எல்லாம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ரொம்ப சகஜம்.  இதுக்காகவே ஓரு டூர் (அல்லது) சுற்றுப்பயணம் இருக்குனா பாத்துக்கோங்க. 

ஆம், நியூ ஆர்லியன்ஸ்  அமேரிக்காவின் 'அதிபயங்கர பேய் நகரம்'.  இந்த டூரை எனது 8 வயது மகள் கண்டிப்பாக பார்த்துவரச் சொல்லியதால் வேற வழியில்லாமல் பார்த்துவிட்டு வந்தேன். :)

(மேலே- ஸ்ட் லூயிஸ் கல்லறை)

டூர் இரவு 8 மணிக்கு தொடங்கி முடிய பத்து மணி ஆகிறது. Walking tour அல்லது 'நடை பயண' வகையைச் சார்ந்தது. ஓரு வழிகாட்டி பதினைந்து பேர் கொண்ட ஓரு குழுவை வழிநடத்துகிறார். பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பப்படுகிற இடங்களுக்கு நம்மை நடத்தி கூட்டிச் சென்று கதை கதையா எடுத்து விடுகிறார். அவரை ' வழிகாட்டி' என்பதை விட 'கதைச் சொல்லி' அப்படின்னு சொல்லலாம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி.


நியூ ஆர்லியன்ஸை பேய் நகரமானது எப்படி ? 

துர் மரணமடைபவர்களுடைய ஆன்மாவைதான் பேய், பிசாசு, மோகினி அப்படின்னு பல பெயரில் சொல்லும் நம்பிக்கை இருக்கிறது. அப்படி பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரில் மரணித்திருக்கிறார்கள். 

இந்த நகரில் தீ, தொற்றுநோய்கள், போர்கள் மற்றும் கட்ரீனா சூராவளி போன்ற பல பேரழிவுகளில் அவர்கள் மரணித்திருக்கிறார்கள்.

அதையும் தாண்டி, இன்னோரு விஷயம்  வன்முறை.  பல நூறு ஆண்டுகளாக இருந்த இந்த நகரில் கட்டுப்பாடற்ற குடி,  மாது, அடிமைதனம்,சட்ட ஓழுங்கின்மை இவை ஓரு சாராரை வதைத்து, கொன்று கொடுமைப் படுத்தியுள்ளது. அவர்களின் கொடுமையான மரணங்களும் இதற்கு காரணமாயிருக்கலாம்.

அவர் காட்டிய சில இடங்களும் சொன்ன சில சுவாரசியமான விஷயங்களும்:

லல்வரே மாளிகை (Lalaurie House)-  இங்கிருந்த ஓரு சீமாட்டி (1834ம் வருட வாக்கில்) தனது மாளிகையில் பல கருப்பின அடிமைகளை சித்ரவதை செய்து கொன்றுள்ளார். கொடுமைனா எந்த அளவுக்குன்னா- உடல் உறுப்புகளை வெட்டி, கை, கால்களை பிணைத்து உயிருடன் ஆடு,மாடுகளை போல தொங்கவிட்டிருந்திருக்கிறார். இந்த இடத்தில் பேய் நடமாட்டத்தை பலர் பதிவு செய்திருக்கிறார்கள். மாளிகையின் பழைய படம் கீழே




புதிய படம்:


இணையத்தில் இது பற்றிய பல தகவல்கள், பேய் நடமாட்டத்திற்கான படங்கள் என பல கொட்டிக் கிடக்கின்றன.ஆர்வமிருந்தால் பாருங்கள்.

அப்புறம், இந்த மாளிகையை ஒரு துரதிஷ்மான இடமாகவும் சொல்கிறார்கள். உதாரணமாக சமீபத்தில் இதை வாங்கியபின்தான் மிகப் பெரிய ஹாலிவுட் நடிகர் நிக்கலஸ் கேஜ் படமே இல்லாமல் படு தோல்வியடைந்ததாரம்.

இன்னோரு சுவாரசியமானது-  ஓரு உணவகத்தில் தினமும் இரவு ஓரு வெற்று மேசையில் உணவு பரிமாறி வைத்து விட்டே பின்பே மற்றவர்களுக்கு உணவு தருகிறார்கள். கேட்டால், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்?. அங்கே தூக்கில் தொங்கிய அந்த இடத்தின் சொந்தக்காரர்  தினமும் உணவருந்த வருகிறாறாம். இந்த படத்தில் அந்த மேசையைப் பாருங்கள்.




சரி, நான் அங்கே பேய பாத்தேனா? அப்படின்னு நீங்க கேட்டா, அதுக்கான பதில் இந்த படத்துல. அந்த நீல நிற புள்ளியை கவனிங்க மக்களே!





இது நான் எடுத்தது. என்னுடன் அங்கே வந்தவர்களில் ஓரு பெண்மணி இது கண்டிப்பா அமானுச சக்தி அப்படின்னு பயபக்தியா சொன்னாங்க. இதை பார்த்த என் மகள் ' அப்பா போய் பொழப்ப பாருங்க' னு சொல்லிட்டா.  :)

பொழப்ப பாக்குறத்துக்கு முன்னாடி சின்னதா ஓரு ஜோக்: இப்படி தான் பேய், பிசாசு பற்றியேல்லாம் ஆராய்சி செய்யும் ஓருவர் தன்னோட நண்பர் கிட்ட ரொம்ப பெருமையா சொன்னாறாம். 'நான் இதை கடந்த 5 வருசமா பண்றேன். எனக்கு துளி கூட பயம் இல்லை' ன்னு. அதுக்கு நண்பர் சொன்னாராம் 'இது என்ன பிரமாதம் !? நான் ஓரு பிசாசு கூட 25 வருசமா குடும்பமே நடத்திகிட்டே இருக்கேன்'. அப்படின்னு.  கொஞ்சமாவது சிரிங்க பாஸ்!!  :)

நியூ ஆர்லியன்ஸ் பயணம் முடிந்தது!.
 
இதுவரை என்னுடன்பயணித்த அனைவருக்கும் நன்றி!!


படங்கள் நன்றி : GOOGLE

Sunday, December 13, 2015

தமிழ் சினிமா - அன்றும் இன்றும்

தமிழர்களையும் தமிழ் சினிமாவையும் தனியாக பிரித்துப் பார்க்க இயலுமா தெரியவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக சினிமா சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே ஆளும் மாநிலம் தமிழ்நாடு. உலகத்தில் வேறு எங்கும் இது போலதோரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை.  

நான் இங்கே தமிழ் சினிமாவைப் பற்றி எழுதக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் பழைய சினிமா டைரக்டர் ஓருவரிடமும், டிஸ்டிரிபியூட்ர் ஓருவரிடமும் தனித்தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். 

முதலில் அந்த டைரக்டரைப் பற்றிப் பார்ப்போம். பெயர் வேண்டாமே. அவர் 80களில் பல நூறு நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம் ஓன்றைத் தந்தவர். அந்தப் படத்தின் பாடல்களை இன்றும் வானோலியில் நீங்கள் கேட்கலாம். அதன் பிறகு நல்ல வாய்ப்புகள் வராமல் அல்லது வந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தியவர்.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பின் சமிபத்தில் தன் சொந்த செலவில் ஒரு படத்தை எடுத்து சரியாக டிஸ்டிரிபியூட் செய்ய இயலாமல் படு தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது தனது அடுத்த படத்திற்கான தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறார். ஆசை யாரை விட்டது சொல்லுங்கள் ?. அதை 'ஆசை'  என்று சொல்லி ஓற்றைச் சொல்லில் என்னால் எளிதாகக் கடந்துச் செல்ல முடியவில்லை. ஏதோ ஓரு உந்துதல், ஆங்கிலத்தில் Urge என்று சொல்வார்கள் இல்லையா அது போல. தன்னை மீண்டும் நிருபிப்பேன் என்ற எண்ணம் தான் வேறு என்ன.

சரி போகட்டும். இவர் தன்னுடைய வாலிப வயதில் தமிழ்த் திரை உலகின் ஜாம்பாவான்களிடம் பால பாடம் படித்தவர்தான்.  தன்னுடைய நேரத்தையும் விதியையும் குறை சொல்லும் அதே நேரத்தில் தமிழ்த்திரை உலகின் இன்றைய நிலை பற்றி ஆற்றாமையோடு புலம்பிக் கொண்டிருந்தார்.

விஷயம் நாம் அறிந்த ஓன்றுதான். தமிழ் சினிமாவில் தற்போது நிலவும் நிலையாமை மற்றும் ஆரோக்கியமற்ற சூழல் பற்றிதான். கதை, நட்சத்திரங்கள்,பாடல்கள், தயாரிப்பு, விற்பனை, விநியோகம்,தொழில்நுட்பம் என பெரிய பட்டியலே வாசித்தார். எல்லா முனைகளிலிருந்தும் நெருக்குதல் என்கிறார். 

தாறுமாரான தயாரிப்பு செலவு. அதே நேரத்தில், பெரிய நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் படம்கூட வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்லை. இவ்வளவு தெரிந்தும் படத்தின் வெற்றி தோல்விபற்றி கவலைப்படாமல் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளாத நடிகர்கள். 

தனது கவர்ச்சியையும்  பொலிவையும் இழந்து வரும் மனதில் நிற்காத இசை மற்றும் பாடல்கள்.  அப்படி வரும் பாடல்களையும் டிஜிட்டலில் விலையின்றி தரவிரக்கம் செய்யும் இளைஞர்கள்.  இதன் தொடர்சியாக சில வருடங்களில் ஆங்கிலப் படங்கள் போல பாடல்களே இல்லாது படங்கள் வரும் காலம் தூரத்தில் இல்லை என்கிறார். இனி பாடலுக்காக ஓடிய படங்கள் வரப்போவதே இல்லை என உறுதியாகச் சொல்கிறார்.

கதைப் பற்றாக்குறை- முன்பே சொல்லப்பட்ட கதை அல்லது கதாபாத்திரங்கள். ரசிகர்களின் உலகத்தரமான  எதிர்பார்ப்பு, இணையம் என இது ஓரு பக்கம்.

அப்புறம் எல்லோரும் படம் எளிதாக படம் எடுக்கலாம் என்ற சூழலில் வெளியிட
தியேட்டர்கள் கிடைக்காத நிலை.  அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் முன்னூறு, ஐநூறு என டிக்கெட்டுக்கு அடங்காமல் கொட்டமடிக்கும் மல்டிபிலக்ஸ் தியேட்டர்  உரிமையாளர்கள்.

24 X 7 டிவி சானல்கள், சீரியல்களைத் தாண்டி முன்னூறும் ஐநூறும் கொடுத்து படம் பார்க்கவருபவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.  புதுப்புதுக் கேமராக்கள்,லென்சுகள் என மாறும் தொழில்நுட்பம். அத்தனையும் தாக்குப்பிடிக்கும் சூட்சுமம். இப்படிப் பல. 

திருட்டு விசிடிக்கள், இணையம் என எளிதாக நடைபெறும் திருட்டு. இதற்கு சேரனின் Direct to Home அல்லது DTH நல்ல மாற்றாக இருக்கும் என நம்பும் அதே வேலையில் திரைத்துறையில் சிலர் இதைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்ய முயலுவதையும்  சுட்டிக் காட்டினார்.

முன்பேல்லாம் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சில நடிகர்களின் படமெனில் ஓரு மினிமம் கியரண்டி இருந்தது. அந்த காலம் மலை ஏறிவிட்டது. அப்படி வளர்ந்து வந்தவர்கள் தானே இன்றைய விஜயகாந்த் போன்ற நடிகர்கள் என்கிறார் நான் பேசிக் கொண்டிருந்த பழைய விநியோகஸ்தர்.

அவரும் 80களில் மதுரையில் விநியோகஸ்தரராக பல வருடங்கள் இருந்தவர் தான். நடிகர்கள் விநியோகஸ்தர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் வைத்திருந்த மரியாதை சுத்தமாய் போய்விட்டது. நட்சத்திரங்களை சுற்றி மட்டுமே மொத்த படக்குழுவும்  இயங்கத் தொடங்கிவிட்டதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். 

உச்ச கட்ட நடிகரிடம் தானே தமிழ்நாடு வெள்ள நிவாரணத்தை எதிர்பார்கிறது. ஏன் ஓரு உச்சகட்ட டைரக்டரிடம் எதிர்பார்ப்பதில்லை என்பதற்கான விடை மேலேயே இருக்கிறது.

இப்போது ஸ்டாக் மார்க்கெட் வணிகத்தில் இருக்கும் இவர் கமல் ஓருமுறை இவரை காரிலிருந்து இறங்கிவந்து மரியாதை செய்ததை நினைவு கூர்ந்தார். அந்தநாளில் ரஜினியுடன் ஓரு விநியோகஸ்தராக தன்னால் 3 மணி நேரம் பேசமுடிந்தது என்று சிலாகிக்கும் இவர். AVM தனது படத் தயாரிப்பை நிறுத்தி, அடுக்குமாடி கட்டிடம் பக்கம் திரும்பியது கூட இந்த காரணங்களுக்காக தான் என்கிறார்.

சினிமா உலகத்தில் பார்வையாளர்களைத் தாண்டி ஓட்டு மொத்த தொழிலும் மாறி விட்டதை தெளிவாக உணர முடிகிறது. 'மாற்றம் என்ற சொல்லே மாறாதது' என்பார்கள். அது போல மாறும் விஷயங்களுக்கு ஏற்றாற் போல மாறாதவர்கள் கரை ஓதுங்கிய சிப்பிகள்.  அவர்கள் கடலை வெறித்துப் பார்ப்பதன்றி வேறேன்ன செய்ய, சொல்லுங்கள் !.

குறிப்பு: இது எனது சொந்தக் கருத்து மட்டுமே.

நன்றி: google images

Wednesday, December 9, 2015

2015 தீபாவளி கலை நிகழ்ச்சி -டண்டனக்கா


இங்கே அமேரிக்காவில் தென் ஃபுளொரிடா நிலப் பரப்பில் மிகப் பெரியது தான். ஆனால் தமிழர்களின் அடர்த்தி எனப் பார்த்தால் குறைவே.  அட்லாண்டா,சான் ஃபிரான்ஸிஸ்கோ போன்றவற்றுடன் எண்ணிக்கையில் ஓப்பிட்டால் மிகச் சொர்ப்பம் தான். நான் வசிக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குஜராத்தவர்கள் தான் அதிகம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். கடந்த வாரம் சனிக்கிழமை தென் ஃபுளொரிடா தமிழ்ச் சங்கம் நடத்திய 2015ம் ஆண்டுக்கான தீபாவளி கலை நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்.   கடந்த வருடத்தை விட இந்த வருட நிகழ்ச்சிகளில் பல மாற்றங்களை பார்க்க முடிந்தது. அதிலிருந்து சில துளிகள்.

ஆங்கிலத்தில் சொல்வது போல முதலில் நல்ல விசயங்கள் (Good things First).

* கடந்த வருடம் போல இந்த வருடமும் சுதாகர் அருமையாக பாடி எல்லோர் மனங்களையும் வென்றார்.  அவருக்கு இணையாக இந்த வருடம் ராதாகிருஷ்ணனும்,  அனிதா ஜோசபும். வாழ்த்துக்கள்!!

* நல்ல இரவு உணவு உபசரிப்பு. குறை ஒன்றும் இல்லை எனச் சொல்லத் தோன்றியது. அதிலும் அந்த இனிப்பு ! ஏதோ, ஹைதெராபாத் வகையராவாம். வாழ்க !

* ஆர்வத்துடன் பலர் கலந்துக் கொண்டனர். மற்றுமின்றி சில பங்கேற்பாளர்களின் கடின உழைப்பு அசர வைத்தன. வாழ்த்துக்கள்! குறிப்பாக, குட்டிப்பையன் ஓருவனின் ஆட்டம் (டண்டனக்கா?) அசத்தல்.

மற்ற முக்கியமான விசயங்களுக்கு வருவோம்.

* முதலாக வரவேற்புரை- வருடத்துக்கு ஓருமுறை நடக்கும் இந்த பெரிய விழாவுக்கு, வழங்கப்பட்ட முன் தயாரிப்பற்ற வரவேற்புரை ஓன்று அல்லது இரண்டு நிமிடங்களைத் கூடத் தாண்ட வில்லை. இங்கே 300 பேர் என்பதே பெரிய எண்ணிக்கை. அப்படி இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்களின் கவனத்தை வரவேற்புரையில் ஈர்க்கத் தவறிவிட்டனர்.

 *நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு - அல்லது Coordination. சரியாக தொகுத்து வழங்கப்படாத நல்ல நிகழ்ச்சி கூட பார்வையாளர்களால் கவனிக்கபடுவதில்லை அல்லது அவர்களுக்கு மனநிறைவாய் இருப்பதில்லை.

*இந்த முறை சங்கத்தின் பதவியில் இருக்கும் அனைவருக்கும் பேச, தொகுத்துவழங்க வாய்ப்பு வழங்கியிருந்தார்கள். நல்ல முயற்சி தான். ஆனால் 'நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு' என்பது ஓரு கலை. அதற்கு நிறைய பயிற்சி தேவை என்பதை இப்போது அனைவரும் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

*உதாரணமாக, நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்பதைத் தாண்டி நிகழ்ச்சி நடக்கும் போது கூட சிறுசுகள் விளையாடியபடியும், பெருசுகள் செல்லில் நோண்டியபடியும் அல்லது பக்கத்தில் பேசியபடியும் இருந்தனர். மேடையில் தோன்றிய நல்ல திறமையான பலரை இதனால் கவனிக்க இயலவில்லை. 

*ஓருங்கிணைப்பு குறைபாடு என மேலே சொன்னதை சுத்தமா ஓதுக்கவும் முடியவில்லை. பெற்றோர்களும் கொஞ்சம் யோசிங்க,  இதே விஷயத்தை வெளியே ஓரு திரை அரங்கில் செய்வோமா?. தமிழ் நிகழ்ச்சின்னு கூடுதல் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறோமா?

*நிகழ்ச்சி நிரலின் முதல் பக்கத்தில் தப்பான வருடத்தை அச்சடித்ததிலிருந்து பல குளறுபடிகள் இருந்தன. அதன் உச்சமாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓரு பெண்கள் குழுவை மேடையில் அறிமுகம் செய்ய, வந்து ஆடியதோ ஆண்கள் குழு.

*விருது வழங்கும் நிகழ்ச்சியில் என்ன போட்டி, எப்போது நடந்தது, யாருக்கு, எதற்காக விருது ? ஓன்றும் பார்வையாளர்களுக்கு புரிந்த மாதிரி தெரியவில்லை. மின்னல் மாதிரி அந்த முக்கிய நிகழ்வு நடந்து முடிந்தது. அந்த நிகழ்வு வென்றவரை வாழ்த்தவும், கலந்து கொள்ளாதவர்களை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டாமா. நேரமின்மை என்பதால்... 

*நிகழ்ச்சியில் சென்னை அடர் மழை நிவாரணத்துக்கு நிதி சேகரிப்பதாக அறிவிப்பு செய்தார்கள். அதற்காக ஓரு விண்ணப்பத்தையும் கூட வாசலில் வைத்திருந்தனர். ஆனால், விழா முடிந்ததும் பலர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை என்ன செய்வது , யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல் குழம்பி அதை வெறுமனே அங்கேயே வைத்துச் சென்றதைப் பார்க்கையில் மனது வலித்தது.

ஓருவரை பொறுப்பாளராக நியமித்திருந்து, நிகழ்ச்சியில் சரியான முறையில் followup செய்திருந்தால் ? 300 பேர் ஓன்றாகக் கூடிய இடம். We lost a golden opportunity to raise the fund. for sure!!. ஆங்கிலத்தில் எழுதினால் நேரடியாக போய் சேராதா என்ற சின்ன ஆசைதான்.

இதேல்லாம் நடந்து, எழுதிக்கொண்டிருக்கும் நேரத்திற்கு முன்பே அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலையிலேயை  மத்திய ஃபுளோரிடா முத்தமிழ்ச் சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் சென்னை மக்களுக்குச் சென்று சேர்ந்திருந்தது. நன்றி, வாழ்த்துக்கள் ஃஓர்லாண்டா மக்களே! அந்த படம் இங்கே. ( நன்றி : நண்பர் விஜய செந்தில்)









காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - யாரோ சொல்லக் கேள்வி.


*நான் கேட்டவரை மொத்தமாக திட்டமிடப்பட்ட  20 நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவிர்த்து வந்த 'நீல மயில் மீது' எனும் முருகன் பக்திப்பாடல் மட்டுமே சினிமா சம்பந்தப்படாதது.

 *தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் பத்திரிக்கைகளிலும், டிவியிலும் திட்டமிட்டு பரப்பப்படும் சினிமா. கடல் தாண்டி வந்ததில் ஓன்றும் ஆச்சர்யமில்லை தான். ஆனால் அதுவும் அனைத்தும் 'குத்து' பாட்டு ரகமாகத்தான் இருக்க வேண்டுமா ?

*அந்த பாடல்களிலிருக்கும் சில வரிகள் தாங்க முடியவில்லை. 'பல்லாவரம்..' ன்னு ஏதோ ஓரு பாட்டுக்கு ஆடினாங்க. அதுல ஓரு வரி வருது 'நாளேல்லாம் தண்ணியடி'ன்னு. பக்கத்துல விவரம் புரியாம விசாரிச்சா. சென்னையில தண்ணி கஷ்டமா இருக்கச்ச எழுதியிருப்பாங்கன்னாரு. 'சரி' ங்கறதா இல்ல 'சிரி'க்கிறதான்னு புரியல.

*சிறுவர்களை தவிர்த்து விட்டு பார்த்தாலும் நடனமாடிய குடும்ப பெண்களும் அந்த மாதிரியான பாடலைதான் தேர்வு செய்திருந்தனர்.  அவர்களின் உழைப்பு ஆபாசமற்ற அந்த நடனத்தில் தெரிந்தது.  கண்டிப்பாக அதை எதாவதோரு தமிழ் நாட்டுப்புற பாடலுக்கு பயன்படுத்தியிருக்கலாம்.

அமேரிக்காவில் இருக்கும் குழந்தைகளுக்கு நாமாவது நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்துவோமே. குத்துப் பாடலுக்குதான் சூப்பரான பல சிங்கர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களே. தமிழ் நாட்டுப் பாடலும் துள்ளலிசையே, அது எந்த விதத்திலும் குத்துப் பாடல்களுக்கு குறைந்ததில்லையே.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன,  என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் பண்பாட்டை,பெருமையை காக்கும் நிகழ்ச்சியா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆடிப் பாடி, மகிழத்தான் இந்த கொண்டாட்டங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், முன்பேல்லாம் திபாவளி, பொங்கல் போன்றதோரு  கொண்டாட்டங்களில் இந்த 'துக்கடா' க்கள் ஓன்று, இரண்டு கண்டிப்பாக இருக்கும். சமீபகாலங்களில் ? எல்லாமே வா ?

ஆங்கிலத்தில் சொல்வது போல் இதுதான் New Normal ?? அதற்கு தமிழ் சங்கங்கள் துணைதான் போக வேண்டுமா ?  நிர்வாகத்தினர் சிந்திக்க வேண்டும்.

மற்ற அமேரிக்க தமிழ்ச் சங்கங்கள் எப்படி இதை எதிர்க் கொள்கிறார்கள் ? பிரத்தியேகமாக Item Songs நிகழ்ச்சி? தெரிந்தவர்கள் உங்கள் கருத்துகளை பதிலிடுங்கள்.

கடந்த வருட நிகழ்வின் போது எழுதிய  இந்த பதிவில் பழசு இப்படி எழுதியிருந்தேன்.

"நிகழ்ச்சி நடந்த இடம் என் வீட்டில் இருந்து சுமார் 80 மைல், ஏறக்குறைய 130 கி.மீ. ஆனால் கலைநிகழ்ச்சிகள்  தந்த உற்சாகத்தில் திரும்பி வருகையில் நள்ளிரவிலும் பயணம் களைப்பின்றி இருந்ததென்னவோ உண்மை."

துரதிஷ்டவசமாக, இந்த வருடம் நான் மிகக் களைப்பாக உணர்ந்தேன்.

குறிப்பு:: இது நான் பார்த்து, சிலர் சொல்லக் கேட்ட என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நம்முடைய பங்குக்கு ஓரு சிறு கல்லை நகர்த்த முயற்சிக்கலாம் என்று . :)

Tuesday, December 1, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-4

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் பகுதி-1, பகுதி-2, பகுதி-3  முன்பு வாசிக்காதவர்களுவர்களுக்காக.

குறிப்பாக, இந்த கட்டுரையை வாசித்து தொடர்ந்து வாசித்து போனிலும், மின்னஞ்சலிலும் உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !!!.  யாராவது ஓருத்தர் சொன்னாலும் இப்படிதான், அதை கண்டுகாதிங்க  .. :)

அப்புறம்,  நாம் இதுவரை நியூ ஆர்லியன்ஸ் நகரைப் பற்றி பேசவே ஆரம்பிக்கவில்லை. இன்னைக்கு அதப் பத்தி பார்க்கலாம்.

நிறைய எழுத முடியாவிட்டாலும் நியூ ஆர்லியன்ஸ் பற்றி சில முக்கியக் குறிப்புகள் இங்கே. 

  1. நியூ ஆர்லியன்ஸ் நகரம் இருக்கும் லூசியானா மாகாணத்தின் பழையப் பெயர் புதிய பிரான்ஸ்.
  2. ஆம், முதலில் லூசியானா  பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு நெப்போலியனால் 1803 இல் லூசியானா அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது.
  3. ஆரம்ப காலங்களில் சர்க்கரை மற்றும் பருத்தி இதன் பிரதான பயிராக இருந்தது. அவ்வாறு பயிரடப்பட்டவை நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தின் வழியாக மற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டது.
  4. அடிமைகள் வர்த்தகத்திலும் இந்த நகரம் மிக முக்கியஇடம் வகித்துள்ளது.
  5. இருபதாம் நூற்றாண்டிலும் ஓரு வர்த்தக நகராகவே நியூ ஆர்லியன்ஸ் தொடர்ந்தது.
  6. 1960களில் சிவில் உரிமைகள் இயக்கத்திலும் இந்த நகரம் முக்கிய பங்காற்றியுள்ளது
  7. நியூ ஆர்லியன்ஸ் தனது தனிப்பட்ட கட்டடக்கலை பாணியால் உலக புகழ் பெற்றது.
  8. jazz இசை பாரம்பரியம் இதன் தனித்தன்மை. அதுபோல கடல் உணவுகள் இங்கே ரொம்ப மவுசு
 ஆற்றின் கரைகளில் அல்லது படுகைகளில் தான் நாகரிகம் தோன்றியது என்பது நீங்கள் அறிந்ததே. அப்படி மிசுசிபி ஆற்றின் கரையில் தோன்றிய நகரம்தான் நியூ ஆர்லியன்ஸ்.
இது அமேரிக்காவில் உள்ள மிகப் பழமையான வரலாற்றுப் பிண்ணனி உள்ள நகரங்களில்  இதுவும் ஓன்று.   குறிப்பா சொல்லனும்னா மிசுசிபி மெக்ஸிக்கோ வளைகுடாவில் கலக்கும் இடத்தில் தான் நியூ ஆர்லியன்ஸ் நகர் இருக்கிறது.  ஆற்றின் போக்கை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்.



மிசுசிபி என்பதற்கு "கிரேட் ரிவர்" என பூர்விக குடிகளின் மொழியில் பொருள்படும். நியூ ஆர்லியன்ஸில் எவ்வளவோ பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது. நேரமின்மையால்,  நான் ஓரு சில இடங்களை மட்டுமே பார்த்தேன்.  அதில் மிசுசிபிஆற்றுப் பயணம் நான் ரசித்த ஓன்று. அதைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

தற்போது அமேரிக்காவில் நீராவியால் இயங்கி புழக்கத்தில் உள்ள ஓரு சில படகுகளில் இதுவும் ஓன்று. இதன் மொத்த பயண நேரம் 2 மணி நேரங்கள். 





பயணத்தின் போது, நியூ ஆர்லியன்ஸ நகர வரலாறு, ஆற்றின் ஓரத்தில் இருக்கும் தொழிற்ச் சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் அதன் புராதான சிறப்புகள் என்றபடி நீள்கிறது. அந்த 2 மணி நேரங்கள் போனது தெரியவில்லை.

மரங்கள் மற்ற பிற உற்பத்தி பொருட்களும் ஆற்றின் ஓரங்களில் இருந்து பார்ஜ் என்ற சிறிய படகுகள் மூழமாக கடற்கரைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்து செல்வது அழகாக இருக்கிறது.

அங்கு நின்று கொண்டிருந்த ஓரு அமேரிக்கப் போர் கப்பலைக்  'கிளுக்'கினேன்.




அது மட்டுமில்லாம, லைவ் JAZZ இசையும் படகில் இசைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அங்கேயே உணவும் கூட சாப்பிடலாம்.

ஓரு காலத்தில்  கொடி கட்டி பறந்த இந்த மாதிரியான நீராவி கப்பல்கள் மற்றும் படகுகள் இப்போது ஓரு காட்சிப் பொருள்தான் என்பதே நிதர்சம். பழையன கழிதலும்...

நீங்க பேய், பிசாசு, மோகினி மேல ஓரு ஆர்வம் இல்லை ஈடுபாடு (?) இருந்தா  அடுத்த பதிவை படிக்க தவற விட்டுடாதீங்க..    ஆனால், பேய் படம் பார்பதற்கு பயப்படுவரா இருந்தா?  எதுக்கும் pls wait.. :)

பயணங்கள் முடிவதில்லை...

படங்கள் நன்றி :
http://www.steamboatnatchez.com

Sunday, November 22, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-3

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் இரண்டாம் பகுதியில், நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி அதில் மக்கள் பட்ட அவதி குறித்து பார்த்தோம். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

அந்த இக்கட்டான சூழ்நிலையை  கட்டுப்படுத்த யாரை  ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? எனக் கேட்டிருந்தேன்.

அப்படி அனுப்பட்டவர் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் "ரசல் எல் ஹானோரெ" (Russel L. Honoré). இவர் இந்தியா சுதந்திரம் அடைந்த அதே ஆண்டு பிறந்தவர் ஆம். 1947ல் பிறந்தவர். அவரோட படம் கீழே.


இவர் அமேரிக்க ராணுவத்தில் மிகவும் அனுபவமுள்ளவர் மற்றும் பல உயர்ந்த பதவிகளில் இருந்தவர்.  தென் கொரியாவில் வெள்ள நிவாரணப் பணிகளில் இவருக்கு இருந்த அனுபவத்தாலும், இவருடைய தலைமைத்துவ  பண்புகளாலும் இந்த பணிக்காக  தேர்வு செய்யப்பட்டார்.பதவி ஏற்றபின் புயல்  மற்றும் வெள்ள நிவாரணத்துக்காக ஏறத்தாழ 58,000 தேசிய பாதுகாப்புப் படையினருடன் நியூ ஆர்லியன்ஸ் வந்து இறங்கினார்.


தேவையான படை பலம் இருந்தாலும் இவருக்கு முன்னால் மிகப் பெரிய சவால் ஓன்று இருந்தது.  அது ஏழை மக்களை உள்ளூர்,மாநில, மத்திய அரசாங்கங்கள் கைவிட்டுவிட்டன, அவர்கள் உதாசினப் படுத்தப்படுகிறார்கள் என்பது.

அந்த பிம்பத்தை உடைத்தெடுத்து அந்த மக்களை  அரவணைத்து, நகரையும் இழந்த நற்ப்பெயரையும் மீட்டெடுக்க வேண்டியது என்பது மிகவும் கடினமானதோரு இலக்கே. அந்த வேலையை எப்படி கச்சிதமாக முடித்தார் என்பதே இவரை மிகச்சிறந்த கதாநாயகனாகவும், உயரிய வழி காட்டியாகவும் இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது.

இவருடைய வெளிப்படையான, நம்பகப்பூர்வமான, அதிரடி நடவடிக்கைகள் அந்த இக்கட்டான சூழ்நிலையை  முற்றிலும் மாற்றியது. மிகச்சிறப்பாக அந்த  பணியை தனது குழுவினருடன் செய்து முடித்தார். ஓரு நல்ல லீடருக்கு இதை தாண்டி வேறேன்ன பெருமை வேணும் ? 




                                                           (ஜார்ஜ் புஷ் உடன்)

உதாரணமாக, ஓருநாள் துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடி தெருவில் நின்ற சிப்பாய்களை அதட்டி,  "நாம் இங்கே போருக்கு வரவில்லை, மக்களை காப்பாற்ற வந்திருக்கிறோம்". என தடித்த குரலில் இவர் ஆணையிடும் ஓரு காட்சி டி.வியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது அவருடைய வெளிப்படையான தன்மைக்கு ஓரு நல்ல சான்று.


தன்னுடைய பணிக்காக பல உயரிய விருதகளையும் பெற்றுள்ளார். அதில் குறிப்பிடத் தகுந்தது Key to the City Award to New Orleans.

ஓய்வு பெற்றபின் தலைமைத்துவ பண்புகள், ஊக்கமூட்டும் உரைகள் அல்லது motivational speech, தன்முனைப்பு தொடர்பான உரைகளை  இவர் வழங்கி வருகிறார்.

நான் நியூ ஆர்லியன்ஸில் கலந்து கொண்ட கருத்தரங்கில் இவர்தான் சிறப்புரை ஆற்றினார். சுமார் 30 நிமிடங்கள் "21ம் நூற்றாண்டில் தலைமைத்துவ பண்புகளின் தயார்நிலை" (The New Normal- Leadership and Preparedness in 21st Century)  எனும் தலைப்பில் பேசியவர் தனது பேச்சால் ஓரு அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதிலிருந்து சில துளிகள்.

1. தொழில்நுட்பம் உலகின் கடைகோடி ஏழைக்கும் சேரக் கூடியதாக இருக்க வேணும்
2. சாத்தியமற்றதை சாத்தியப்படுத்த தொழில்நுட்பத்தை நம்புங்கள்
3. ஆக்கப்பூர்வமான சிந்தனையின் அவசியத்தையும், ஜார்ஜ் வாஷிங்டனையும் மேற்கோள் காட்டினார். 

கான்பிரன்ஸில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றமைக்காக தனது LEADERSHIP - In the New Normal என்ற புத்தகத்தை  எனக்கு பரிசாக தந்த போது எடுத்த படம்.

கழுத்துல எதுக்கோ செயின் போட்ட மாதிரி இருக்கே? ன்னு நீங்க கேக்குறது, எனக்கு காதல விழவே இல்லயே  !!! :)


முதல் பக்கத்தில் எனது  பெயரை எழுதி ஆட்டோகிராப் போட்டார்.



ஆட்டோகிராப் போட்டுட்டு ஓரு ஜோக்க சொல்லிட்டு எப்படி அட்டகாசமா சிரிக்கிறார் பாருங்க. அது என்ன ஜோக்குன்னு தெரிஞ்சுக்க அடுத்தவாரம் வரை வெயிட் பண்ணுவீங்க தானே ? :)

அவரைப் பற்றி மேலும் தகவல் அறிய:
https://en.wikipedia.org/wiki/Russel_L._Honor%C3%A9

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

Saturday, November 14, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-2

நியூ ஆர்லியன்ஸ் பயண அனுபவங்கள் முதல் பகுதியில் நியூ ஆர்லியன்ஸை 2005ல் தாக்கிய கத்ரீனா சூறாவளி பற்றி கோடிட்டிருந்தேன். அதை வாசிக்கத் தவறியவர்கள்  இங்கே வாசிக்கலாம்.

முன்பே சொன்னது போல , அந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

அமேரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு. உலகில் சர்வ வல்லமையும் மாட்சிமையையும் பொருந்திய நாடு. உலகின் ஓரே போலீஸ்காரன். தொழில்நுட்பத்திலும், படை பலத்திலும் தாதா என்றேல்லாம் கொண்டாடப்படும் நாடு  என்ற வெளித் தோற்றத்தை தகர்க்தேறியச்
செய்தது இந்த கத்ரீனா சூறாவளி எனலாம்.




அப்படி என்னதான் நடந்தது? , இயற்கை சீற்றங்கள் என்பது இயல்புதானே என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது என்னவோ உண்மைதான்.  இயற்கை இது ஏழை நாடு, பணக்கார நாடு என்று பார்ப்பதில்லை. 

ஆனால் அப்படி எதேனும் இயற்கை சீற்றங்கள் நிகழும் போது சம்பந்தப்பட்ட நாடு அல்லது சமூகம் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. நிகழ்வுக்கு பின் அவர்களின் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் மற்றும் மக்களை காப்பாற்று திறன் போன்றவை அதி முக்கியம். ஆனால்,  துரதிஷ்ட வசமாக அமேரிக்க தேசம் உள்நாட்டிலும் அயல் நாட்டிலும் கத்ரீனா விஷயத்தில் மிக மோசமான விமர்சனத்துக்கு உள்ளானது.

கத்ரீனா சூறாவளி சம்பந்தமாக அமேரிக்க அரசாங்கம் உலக அரங்கில் அவ்வாறு விமர்சிக்கப்பட்ட முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

Mismanagement எனப்படும் தவறான நிர்வாகம்-  1) சூறாவளிக்கு மக்களையும் நகரங்களையும் சரிவர தயார்படுத்தாதது. 2) சூறாவளிக்கு பின் நிவாரணப் பணிகளில் சுணக்கம் காட்டியது.

ஒரு பருவ மழைக்கே தாங்காமல்  நீரில் மூழ்கும் தமிழக நகரங்களை இங்கே ஓப்பிடாதீர்கள்.
கத்ரீனா சூறாவளி அதையும் தாண்டி, அது செய்த கோரதாண்டவத்தை பார்க்கலாமா.

பல மாநிலங்களைத் தாக்கிய இந்த சூறாவளி வகை ஐந்தைச் (category-5) சார்ந்தது, அதாவது மழை மற்றும் காற்றின் வேகம் 251 km/h. கத்ரீனா போகும் வழியேங்கும் வீடுகள், தொழிற்சாலைகள்,கட்டிடங்கள் என அனைத்தையும் பெயர்த்து எறிந்து எங்கும் வெள்ளக்காடக்கியது. குறைந்தது 1,245 பேர், சூறாவளி மற்றும் அடுத்தடுத்த வந்த வெள்ளத்தால் இறந்தனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான கத்ரீனவின் பாதையை இங்கே பாருங்கள்.




உதாரணத்திற்கு அடித்த காற்றில் பல வீட்டின் கூரைகள் ஆயிரம் அடிகள் கூட பறந்ததாம், உயரமான கட்டிடங்களின் மாடியில் இருந்த படுக்கைகள் மற்றும் மரச்சாமான்கள் ஐன்னல் வழியாக தூக்கிவீசப்பட்டதாம்.

முக்கியமாக நியூ ஆர்லியன்ஸ் நகரின் எண்பது சதவீதம் (80%) வெள்ளம் புகுந்தது மூழ்கியது.   நகரின் சில முக்கியப் பகுதிகளில் 20 அடி நீரில் மூழ்கியது. இதில் ஏறத்தால 1 லட்சம் பேர் நகரின் வெள்ளத்தில் சிக்கினர்.

எல்லாவற்றிக்கும் மேலாக நகரின் வெள்ளத் தடுப்பு அணைகள் உடைந்து நகரை மேலும் சின்னாபின்னமாக்கியது.  இப்படி அடி மேல் அடி வாங்கி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நியூ ஆர்லியன்ஸ் மக்களின் கதிதான் என்ன?

பலர் தங்கள் வீட்டுக்கு கூரைகளில் ஏறி நின்றுக் கொண்டு உயிர் தப்பினர். அப்படி உயிர் தப்பியவர்கள் தொலைத் தொடர்பு, மின்சாரம், குடிநீர், உணவு என எந்த உதவியும் இன்றி பல நாட்கள் தவித்தனர். இறந்த உடல்கள் நீரில் மிதந்தன. இதை எல்லாம் ஏற்று செயல்படக்கூடிய FEMA எனும் மத்திய அவசரகால நிர்வாக அமைப்பு இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செயய இயலாமல் திணறியது.


 FEMAதான் திணறியதே தவிர அமெரிக்காவில் இருக்கக் கூடிய தனியார் தொலைக்காட்சிகள் ஹெலிகாப்டர் மூழம் இந்த அவலக்காட்சிகளை படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக்கியது.




அன்றய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். அப்போதைய அமெரிக்க அரசாங்கத்துக்கு இது மிகப் பெரிய நெருக்கடி, அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டிருந்தாலும் ஏதாவது செய்து நிலைமையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம். அது தவிர நியூ ஆர்லியன்ஸில் வெள்ளத்தில் சிக்கிய பலர் சிறுபான்மை கறுப்பர்கள், ஜனாதிபதி ஓரு வெள்ளையர். கேட்க வேணுமா?



நிலைமையை கட்டுபடுத்த யாரை  நியூ ஆர்லியன்ஸ் அனுப்பினார் தெரியுமா ? அந்த ஓரு முடிவே அவரையும் மக்களையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றியது என்று தெரியுமா?

அவரைப் பற்றியும்,  நான்  அவரை நியூ ஆர்லியன்ஸில் சந்தித்து, உரையாடி புகைப்படம் எடுத்த நிகழ்வு பற்றியும் விரைவில் பேசலாம்.

பயணங்கள் முடிவதில்லை...

நன்றி:  GOOGLE Images

Sunday, November 8, 2015

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ?

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ? மேலே படிங்க..

நமது அன்றாட வாழ்வில் எவ்வளவோ நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் சாதாரணமாக கடந்து போகிறோம்.

ஆனால்  எதேனும் ஓரு கருத்தோ அல்லது நிகழ்வோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு.  நாம மனசு குறு குறுன்னு இருக்குதுன்னு சொல்லுவோமில்லயா அதுமாதிரி. ஆங்கிலத்தில் urgeன்னு சொல்வது போன்ற  அந்த உள்ளவெறியானது (?) குறு நாவலாகவோ அல்லது நாவலாகவோ கூட வெளிவரும்.

அப்படி நாவல் எழுத நினைப்பவர்களை உற்சாகபடுத்தவும், ஊக்குவிக்கவும்
ஓவ்வோரு நவம்பர் மாதமும் தேசிய நாவல் எழுதும் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலத்தில் National Novel Writing Month. சுருக்கமாக NaNoWriMo -"நா-நோ-ரை-மோ" என்கிறார்கள் ( இப்ப புரிஞ்சுதா? ).  அதே பெயரில் உள்ள nanowrimo.org எனும் தளம்  வழியாக இது சாத்தியமாகிறது. இதன் முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதுதான்.

இதில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் கடினமில்லை.
  • இதற்கேன உள்ள பிரத்தியோக தளத்தில் (http://nanowrimo.org/) பதிவு செய்தபின்,  உங்கள் நாவலை எழுதத் தொடங்குங்கள்.

  • பின்பு அன்றைய நாளில் எழுதிய விவரங்களை அவர்களின் வலை தளத்தில் பதிவு செய்து விடுங்கள். 

  • இப்படி மாத இறுதிக்குள் நீங்கள் 50,000 வார்த்தைகளாவது எழுதியிருக்க வேண்டும். இந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய நாவலைத் தேர்ந்தேடுக்கிறார்கள்.

பின் குறிப்பு:

இந்த தளம் நீங்கள் எழுதும் நாவலின் தரத்தை விட நீளத்தில் கவனம் செலுத்துகிறது. முன்பே சொன்னது போல முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதாக இருக்கிறது.

அவர்களின்  கணக்குப்படி  ஆசிரியர் எழுதி முடித்தபின் பின்பு விருப்பப்படி நாவலை திருத்தி தரத்தை உயர்த்தலாம் என்கிறார்கள்.  ஏறத்தால இது ஓரு Draft காப்பி எழுதுறது போல.

இது ஓரு சமூக ஊடகம் என்பதால் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள் சமீபத்திய நிலையை அல்லது Statusஐ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மத்தவங்க எழுதுறத பாத்து நீங்களும் ஆர்வமாக போட்டி போட்டு எழுதுவீங்க தானே ?

அப்புறம், இன்று நேற்றல்ல கடந்த பதினாறு ஆண்டுகளாக  நாவல் எழுதும் மாதம் நடைபெற்று வருகிறது.   2010ல் நடந்த நிகழ்வு மூலம் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 200,000 பேர், மொத்தம் எழுதிய சொற்கள்   பில்லியன் 2.8. அடேயப்பா..

தமிழ் நாவல்களும் இதில் சாத்தியமான்னு தெரியல. ஆனால், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சுஜாதா குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த சமயத்தில் இது மாதிரி ஓரு நாவல் மற்றும் சிறுகதை எழுதும் போட்டி நடத்தியது நினைவுக்கு வருகிறது.

பொறுப்பு துறப்பு:

கசலீனா... அப்படின்னு சமீபத்தில் வந்த ரஜினிபட துள்ளல் பாட்டு மாதிரி,  'நா-நோ-ரை-மோ ' ன்னா ஏதோ புதுப்பட பாடல்ன்னு நீங்க நினைச்சிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லங்க..

Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...

Monday, October 19, 2015

புதுக்கோட்டையிலிருந்து எஸ்.ரா. - பதிவர்களுக்காக

அக்டோபர் 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை
வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015,  நான்காம் ஆண்டுத் திருவிழா இனிதே முடிந்தது. என்னைப்போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு நேரடி ஓளிபரப்பு வழங்கியது கூடுதல் மகிழ்ச்சி.  வாழ்த்துக்கள்.

இந்த விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனும் மனக்குறையைப் போக்கும் வகையில், கலந்துக் கொண்ட அனைவரும் சிலாகித்து எழுதிய பல பதிவுகளையும் பார்த்தேன்.

நம்ம வீட்ல ஓரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணிணாலே நாம
ஆடிப் போயிடுறோம். இது போல நிகழ்ச்சியை ஓருங்கிணைக்கப் பல கைகள் வேணும். நா.முத்துநிலவன், வலைச்சித்தர் மற்றும் விழாக் குழுவினர் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

நிகழ்ச்சியில் எஸ்.ராவின் சிறப்புரை அருமை.  அவர் பகிர்ந்த எல்லா
தகவல்கள் முற்றிலும் உண்மை.  அவருடைய பல கருத்துகள்
நம் போன்ற பதிவர்களின்  மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

அவர் உரையிலிருந்து சில துளிகள்:


பொதுவாக பதிவர்கள் பெரும்பாலும் சினிமா தகவல்களில்
கவனம் செலுத்துகிறார்கள். ஆனால்  அதைத் தாண்டி
ஆய்வுக்கட்டுரைகள், தமிழர் பண்பாடு, ஓவியம், சிற்பக்கலை, வரலாறு,
கட்டிடக்கலை  போன்ற துறைசார் தகவல்களையும் பகிர வேண்டினார்.
இதுல பிரச்சனை என்னன்னா Readership கம்மி என்பதுதான் உண்மை.

பதிவர்கள் தங்கள் பதிவை தனித்துவமாக எழுதுவதின் சிறப்பை எடுத்துரைத்தார். அதுபோல புதிய சிந்தனையின் முக்கியத்துவத்தை ஓரு சாப்ளின் கதை மூழம் அழகாக  விளக்கினார்.

நமது மரபுசார்  அறிவை புரிந்து பகிர்வதின் முக்கியத்துவத்தையும்
எடுத்துரைத்தார். நம்மில் எத்தனை பதிவுகள் இதை ஓட்டியது எனத்தெரியவில்லை. பதிவர்கள் கையேடு இந்த குறைகளை களையும் என நம்புகிறேன்.

புகழ் பெற்ற  புத்தகங்களுக்கே தமிழில் விமர்சனங்கள்
இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.  இது நிதர்சனம். பதிவர்கள் இதை செய்வது கடினமல்ல என்றே நான் நினைக்கிறேன்.

குழந்தைகள் இலக்கியங்கள் அவர்களுக்கான கதைகள் மற்றும்
அறிவுசார்ந்த தகவல்கள் தமிழில் இல்லை என்ற குறையை
களைய முயற்சிக்க சில வழிமுறைகளையும் பகிர்ந்தார்.பதிவர்கள் இதையும்  கவனிங்க.

அதுபோல தன் பேச்சினுடே அறிவு திருட்டை கண்டித்தார். இதைப் படிக்கும் பதிவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஓன்று.  Courtesy அல்லது நன்றி-ன்னு நிஜ படைப்பாளி பெயர போடுங்கப்பா.

தன் வலைத்தளத்தைச் சுமார் 6 ஆயிரம் பேர் தினமும் வாசிப்பதாகவும், இதுவரை 87 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது எனும் கூடுதல் தகவலையும்  பகிர்ந்தார். வாழ்த்துக்கள் சார்.

இறுதியில் பதிவர்களின் இன்றைய மனநிலையை தெளிவாகச் சொன்னார். நான் ரொம்ப ரசித்தது இது.

1.  தனக்கென வாசகர் வட்டமோ, அங்கீகாரமோ இல்லாதது அல்லது உருவாகாதது.  - இதைப் பதிவர்கள் தனது தனித்துவமாக எழுத்தின் வழியாக வெற்றிகாண இயலும் என்றார். 

2. பொருளாதார ரீதியாக எந்த ஓரு அங்கீகாரமும் இல்லாதது.  இந்த சூழ்நிலை வரும் நாட்களில் மாறும் என நம்பிக்கை அளித்தார்.  - காலம்தான் இதற்கான பதிலைச் சொல்லும்.

எனக்குத் தெரிந்தே எத்தனையோ பேர் சில வருடங்களில் அல்லது மாதங்களில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்கள்.

சுய உந்துதல் மற்றும் ஆர்வம் மட்டுமே ஓருவரை பதிவர் உலகத்தில் தாக்குபிடிக்க  வைக்கும் என்பது நிதர்சனம்.

எனவே எழுதும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நம்பிக்'கை' யுடன் தொடர்ந்து எழுதுங்கள் நட்புகளே!.

எஸ்.ரா வின் சிறப்புரை-  https://youtu.be/BSZJx91rFWs (Reference)

Wednesday, September 30, 2015

தமிழர் (பண்)பாடு - வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை

மக்களே, "வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டைக்கு" கடைசி நாள் என்பதால் துரிதமாய் 30 நிமிடங்களில் எழுதியது.

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 
அதற்கான உறுதி மொழி:

1) படைப்பு எனது சொந்தப் படைப்பே. 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது”. 

(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“.


தமிழர் (பண்)பாடு
--

பண்பாடு நம் பண்பாடு
பார் போற்றும்- தமிழ் பண்பாடு,
கொண்டது நம் தென்னாடு

(பண்) பாடு நீ (பண்)பாடு
பாண்டிய,சேர, சோழன்
தாண்டியது நம் பண்பாடு

தாய்மொழி போற்றும்
பண்பாடு
அது தமிழ்ச்சங்கம் வளர்த்த
பண்பாடு

வந்தாரை வாழ வைக்கும்
பண்பாடு - அது
உலகம் அறிந்த கண்கூடு

அன்பில் சிறந்த பண்பாடு
அது பெண்ணை போற்றும்  பண்பாடு
வீரத்தில் சிறந்த பண்பாடு
விருந்தோம்பல் விரும்பும் பண்பாடு

வாழ இலக்கணம் சொன்ன
இணையில்லா பண்பாடு.


பண்பாட்டு எதிரிகளை 
கண்டால், நீ 
விடாது பந்தாடு

எட்டு திக்கும் சென்ற நீர்
எட்டு திக்கும் எட்ட
பாடு,  தமிழ் (பண்)பாடு
என்றும் தமிழர் பண்பாடு. 


-ஆரூர் பாஸ்கர்


Sunday, September 20, 2015

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான்

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருந்த
'சாய்வு நாற்காலி' நாவலை கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் கிளாசிக் நாவல் வரிசையில் அறிமுகப்படுத்திய நாவல்களில்  இதுவும் ஓன்று.  1997 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் இது.

இதை எழுதியவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்.   மலையாளப் பின்னணி உடைய இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்லாண்டுகளாக இயங்கிவருபவர்.

ஓரு வரியில் நாவலின் கதையைச் சொல்வதெனில் வாழ்ந்துக் கெட்ட ஓரு குடும்பத்தின் கதை.  இதைப் படிக்கும் போது ஜல்சாகர் எனும் பெங்காளி படம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க  முடியவில்லை.

நீங்கள் ஜல்சாகர் (The Music Room) பார்த்திருப்பீர்களா தெரியவில்லை. புகழ்பெற்ற திரைப்பட மேதை  சத்யஜித் ராய் இயக்கிய பெங்காளி படம் (1958). அதில் வரும் ஜமீந்தார் தனது குடும்பத்தின் வறட்டு கௌரத்துக்காக வீட்டின் கடைசி சொத்தையும் விற்று இசை நிகழ்ச்சி நடத்துவார்.

இந்த நாவலில் முஸ்தபாகண்ணு கதை நாயகன்.  உழைக்காமல் சோம்பேறித் தனமாக பழம் பெருமை பேசியபடி சொத்துகளை விற்றுத் தின்கிறார்.

முஸ்தபாகண்ணுவின் மன ஓட்டத்திலேயே இந்தக் கதை நகர்கிறது. முஸ்தபாகண்ணு சாய்ந்து காலாட்டியபடியே வாசம் செய்யும் சாய்வு நாற்காலியும் பெண்களை அடித்து நெறிப்படுத்தும் அவருடைய அதபு (ஓழுக்கம்) பிரம்பும் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

இதைத் தாண்டி  ஓரு  தலைமுறையின் பெண் சுகம், வெட்டி கௌரவம், ருசி கொண்டு அடங்காத நாக்கு,  குடும்பப் பந்தம் என பல தளங்களில் இந்த கதை பயணிக்கிறது.

கதையில் குடும்பத்தின் இருநூறு ஆண்டு கால வரலாற்றை அஞ்சு தலைமுறை மூலம்  ஆசிரியர் சொல்கிறார்.  இந்த கதையை ஒரு குடும்ப வாழ்வினுடைய வீழ்ச்சி என மட்டும் பார்க்காமல் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் தொடரும் மன ஓட்டத்துக்கான புரிதலாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முழுமையாக வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டிருப்பதால் தங்குதடையின்றி வாசிப்பது கேள்விக்குறியே !.

உதாரணமாகக்  கதையில் முஸ்தபாகண்ணு தனது காலை திடுமெனப் பிடிக்கும் வேலைக்காரனை "நீயாடா, கிறாத்லெப் பெறந்தப் பயலெ" என்கிறார். இதை வாசிக்கும் வாசகன் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது ? எதோ திட்டுகிறார் என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் விவரம் தெரிந்தால் கடைசி பக்கத்தில் கொடுத்துள்ள பொருளைத் தேடலாம். கடைசிப் பக்கத்தில் விளக்கம் இருக்கும் விவரத்தை முன்கூட்டியாவது சொல்லித் தொலைத்திருக்கலாம்,  அல்லது மிக எளிமையாக ஓவ்வொரு பக்கத்தின் கீழேயும் விளக்கம் கொடுத்திருக்கலாம். (பதிப்பகத்தார்- கவனிக்க).  நானும் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி தேடிப்பார்த்து களைத்தே போய்விட்டேன்.


கடைசியாக, இந்த நாவலை படித்து முடித்தபின்  சோம்பலில் ஓரு விதமான 'மதமத'ப்பை நான் உணர்ந்தேன். அதுவே , இந்த புத்தகத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்.

நேரம் அனுமதித்தால் படிக்கலாம்.



தலைப்பு :சாய்வு நாற்காலி
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
ISBN : 9788189359423
பக்கங்கள்: 344
விலை : ரூ.275

Tuesday, September 1, 2015

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சுனா - ரஜினி வசனத்துக்கு சவால்

வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும்.

சிவாஜி படத்துக்கு வசனம் எழுத்தாளர் சுஜதான்னு ஞாபகம். ஆனால்
ரஜினியோட இந்த வசனத்தை சவால் விடும் வகையில் ஓருவர் வாழ்ந்தார் அப்படினா ஆச்சர்யமா இருக்குதுல்ல, மேலே படிங்க..

****
தினமும் அலுவலகத்துக்கு வெகுதூரம் பயணம் செய்யவேண்டியதாக
இருப்பதால் இப்பொழுதேல்லாம் பெரும்பாலும் ஆடியோ புத்தகங்கள்தான் துணை.

அச்சடித்த புத்தகங்கள் போலின்றி இதில் குறைந்த நேரத்தில் அதிகம்
பெற முடிகிறது. எல்லாம் வல்ல மலையாள பகவதி அருளால் பெரும்பாலான நேரம் நல்ல புத்தகங்களாகவே எனக்கு அமையும்.  சமீபத்தில் அப்படி நான் கேட்ட ஆங்கிலப் புத்தகம் மோரியுடனான செவ்வாய்க் கிழமைகள் ('Tuesdays with Morrie').மொத்தமாக மூன்றரை மணி நேரம்தான்.

இது மோரி ஸ்க்வார்ட்ஸ் (Morrie Schwartz) எனும் 78 வயதான சமூகவியல் பேராசிரியரின் தன்நினைவுக் குறிப்பு நூல் (Memoir). இதை எழுதியவர் அவர் மாணவர் மிட்ச் அல்போம் ( Mitch Albom).

வாழ்வின் மிகப்பெரிய படிப்பினைகளை, இறக்கும் தருவாயில் உள்ள பேராசிரியர் மோரி தன் மாணவரிடம் சொல்வதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

அதன் சுருக்கம் இங்கே.

பேராசிரியர் மோரி ALS எனும் ஓருவகை நரம்புச்சிதைவு நோயால் பாதிக்கபட்டு சாகக்கிடக்கிறார். Amyotrophic Lateral Sclerosis (ALS) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய்க்கு சரியான சிகிச்சை என்று எதுவும் இன்றுவரை இல்லை.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்படியாகப் பேசும் சக்தி, விழுங்குதல் மற்றும் சுவாசித்தல் போன்றவற்றை இழந்து இறுதியில் மரணமடைகிறார்கள். கடந்த ஆண்டு  வைரஸ் போல இணையத்தில் பரவிய 'ஐஸ் பக்கெட் சவால்' வழியாக இந்த ALS பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

ALSல் பாதிக்கப்பட்ட மோரிக்கு மருத்துவர்கள் சில மாதங்கள் என நாள் குறிக்கிறார்கள். "வாழும்போது சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்," என்று ரஜினியின்  'சிவாஜி' படத்தில் ஒரு வசனம் வரும். ஆனால் அப்படி தேதி குறிக்கப்பட்ட மற்றவர்கள் போல் இல்லாமல், ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது மரணம் வழியாக காட்ட இயலும் என தைரியமாக அறிவிக்கிறார். தன்னை மனித புத்தகம் ( Human book) என்றும் அமேரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிப் பேசுகிறார்.

அதை வியப்போடு பார்த்த கோடிக்கணக்கானவர்களில் பேராசிரியரின் முன்னாள் மாணவர் மிட்சும் ஓருவர். அதைப் பார்த்த பிறகு, அதாவது ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது விருப்பத்துக்குகந்த (favourite) பேராசிரியர் மோரியை அவர் வீட்டில் சந்திக்கிறார் மிட்ச். அதுவரை எந்தத் தொடர்புமற்று இருந்தபோதும் மிட்ச்சின் பெயர் சொல்லி அழைக்கிறார் பேராசிரியர்.

அதன் தொடர்ச்சியாக மிட்ச்சிடம் நீண்டகால நண்பராய் பேராசிரியர் உரையாடுகிறார். கல்லூரி நினைவுகளை இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் மிட்ச்சுக்கு மோரியின் நட்பு ஆறுதலாய் இருக்கிறது. இங்கிருந்துதான் கதை தொடங்குகிறது.

பேராசிரியரின் அன்பால் ஈர்க்கப்பட்ட மிட்ச் பல நூறு மைல்கள் தாண்டி ஓவ்வோரு வாரமும் செவ்வாய்க்கிழமை அவரை வந்து சந்திக்கிறார்.  அதுவே "Tuesdays with Morrie". மோரி என்பது ஹீப்ருவில் "என் ஆசிரியர்"  என்றும் அர்த்தப்படுவதால், "எனது ஆசிரியருடனான செவ்வாய்க் கிழமைகள்" என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

சந்திப்பின்போது ஓவ்வொரு வாரமும் அன்பு, திருமணம், குடும்பம், நட்பு, கலாச்சாரம்,மரணம் என மனித வாழ்வின் பல கூறுகளைக் குறித்து அவர்கள் உரையாடுகிறார்கள். உதாரணமாக, மரணத்தை இயற்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லும் அவர், நமக்கென குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது ஒரு சுகானுபவம் என்கிறார். அன்பே பூரணம், அதுவே வாழ்வில் நிரந்தரம், என தனது குடும்பத்தைக் கொண்டு வலியுறுத்துகிறார்.

இதுபோல தனது கடந்த கால அனுபவங்கள், மனதை பாதித்த விடயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக, தான் கோபித்துக் கொண்டு கடைசிவரை பேசாமல் இருந்த, இறந்த ஓரு நண்பரை நினைத்து மிட்ச்சிடம் கண்ணீர் வடிக்கிறார்.

மிட்ச் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பேராசிரியருக்குப் பிடித்த உணவுகளை வாங்கிச் செல்கிறார். அவரால் சாப்பிட இயலாத நிலையிலும் அந்த வழக்கத்தை விடமுடியாமல் தவிப்பது உணர்ச்சிபூர்வமானது.

கூடவே  ஓவ்வொரு வாரமும் பேராசிரியர் உடல்நிலையில் படிப்படியாக ஏற்படும் மோசமான மாறுதல்களை உருக்கமாக மிட்ச் விவரிக்கிறார். இடைவிடாமல் 2 மணி நேர இருமல் போல வேறு கொடுமை இல்லை என்கிறார். கடைசியில் நுரையீரல் அடைப்பால் பேராசிரியர் மரணமடைகிறார். பேராசிரியர் இறக்கும்வரை மொத்தமாகப் பதினான்கு செவ்வாய்கள் இந்தச் சந்திப்பு தொடர்கிறது.

இந்தச் சந்திப்புகள் மிட்ச் தனது வாழ்வில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தியதை உணர்கிறார். தன்னைப் போன்ற இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எல்லா சமகால குழப்பங்களுக்கும் இந்த உரையாடல்கள் விடைதரும் என மிட்ச் நம்புகிறார். இவற்றைத்தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் சாரம் எளிதானது, அதே சமயத்தில் ஆழமானதும்கூட. இயந்திரத்தனமான உலகில் வாழும் நம்மைப் போன்ற எல்லோரும் எளிதாகப் பொருத்திப் பார்க்கக்கூடியதே.

புத்தகத்திலிருந்து என்னைக் கவர்ந்த மேற்கோள்கள் சில.

**அன்பு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது.

**அன்பு செலுத்து அல்லது அழிந்து போ.

**இறப்பு ஒரு வாழ்க்கையை மட்டுமே முடிக்கிறது, ஒர் உறவை அல்ல.

**நீங்கள் இறப்பதற்கு முன் உங்களை மன்னியுங்கள். பின்னர் மற்றவர்களை மன்னிக்கலாம்.

**நீங்கள் இறந்தபிறகும்கூட அன்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

அதே சமயத்தில் ஓரு பேராசிரியக்கும் மாணவருக்குமான உறவைத்தாண்டி இரு தலைமுறைக்கான உணர்ச்சிகரமான உறவை  இந்தப் புத்தகம் மிக நெகிழ்ச்சியாக விவரிக்கிறது. வாழ்ந்த தலைமுறை வாழும் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் மிகப்பெரிய பாடம் அனுபவங்களன்றி வேறேன்ன இருக்க முடியும்?

இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் நல்ல அங்கீகாரம் பெற்று பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடப்புத்தகமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவரேனும் இந்தப் புத்தகத்தைத் தமிழில்  மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது 'Tuesdays with Morrie' எனும் அதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. படத்தின் YouTube இணைப்பு இங்கே

https://youtu.be/gGCYD_7taKA

பேராசிரியர்  மோரியின் பேட்டி

https://youtu.be/-LOdPzZW_aQ

நேரம் அனுமதித்தால் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துவிடுங்கள்.

தலைப்பு :Tuesdays with Morrie
ISBN: 0-385-48451-8
வெளியீட்டாளர்: Doubleday

***

இந்தக் கட்டுரை ஆம்னி பஸ இணைய இதழிலும் வெளியாகியுள்ளது இணைப்பு:

http://omnibus.sasariri.com/2015/08/tuesdays-with-morrie-mitch-albom.html


Sunday, August 23, 2015

ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்

டினோசர் பொம்மைக்கு விளையாட்டாய் ஆப்பிள் ஊட்டிக் கொண்டிருந்த எனது மூன்று வயது மகள் இந்த கவிதைக்கான தூண்டுதல்.

அதுவே 'ஆப்பிள் தின்று கொண்டிருக்கும் டினோசர்' எனும் தலைப்பிட்ட
இந்தக் கவிதையானது.

**
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அது 
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.

சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது

அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி 
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய் 
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்

இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு 
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
***

வெளியிட்டவர்கள்:

இன்மை : கவிதைக்கான இணைய மாத இதழ்.
இணைப்பு:
http://www.inmmai.com/2015/07/blog-post_66.html

ஆனந்த விகடன்-சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியுள்ளது (131வது இதழ்)
இணைப்பு:
http://solvanam.com/?p=40757

கவிதைக்கு செறிவூட்டிய நண்பர் வா.மணிகண்டனுக்கு நன்றிகள் பல!

உங்கள் மேலானக் கருத்துக்களை தெரியப்படுத்துங்களேன்.