Sunday, August 20, 2017

அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் - 99 ஆண்டுகளுக்கு பிறகு

"The Great American Eclipse"  எனும் மிகபிரமாண்டமான முழு சூரிய கிரகணத்திற்கு அமெரிக்கா தயாராகிவிட்டது.

ஆமாம், நாளை 21 ஆகஸ்ட், 2017 வட அமெரிக்காவை குறுக்காக
இரண்டாக வெட்டியது போல   பசிபிக் கடலில் தொடங்கி , அட்லாண்டிக் கடல்வரை கிரகணம்  (12 மாநிலங்கள்) தொட்டுச் சொல்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு
அமெரிக்காவில்  நடந்தது 99 வருடங்களுக்கு முன்பாம்.

இதனால்,  மேற்கே ஆர்கனில் தொடங்கி கிழக்கே தென் கரோலினா வரையிலான 12 மாநில மக்களுக்கு நேரடியாக முழுமையான
கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு நாளை கிடைக்கிறது.

பூமிக்கும், சூரியனுக்கும் நடுவே சந்திரன் தோன்றி சூரியனை மறைப்பது "சூரியகிரகணம்" எனும் 7ம் வகுப்பு அறிவியல் பாடத்தை நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தச் சூரிய கிரகணம்  சந்திர கிரகணம் போல்  அவ்வளவு சாது இல்லை.  கொஞ்சம் முரடானது. அதனால் மிகுந்த எச்சரிக்கை தேவையாம். ஆமாம், கிரகணத்தின் போது சூரியன் மறைந்து சில நிமிடங்கள் இருளாக இருக்கும். ஆனால் சில மணிநேரங்களுக்கு வழக்கத்தை விட சூரியன் மிகவும் பிரகாசமாக தெரியுமாம். அதனால், கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க அனுமதி இல்லை. இதற்கான கறுப்பு கண்ணாடிகளை அணிந்துக் கொண்டு பார்ப்பது உத்தமம். அதை மீறி 'நாங்கல்லாம் யாரு ?' என  சட்டைக் காலரை உயர்த்திக் கொண்டு வெறும் கண்களால் பார்த்தால் இந்த அதிகப்படியான ஒளியால் கண்களை இழக்க நேரிடும். ஜாக்கிரதை!!.

உண்மையில் கிரகணத்தின் பாதையில் நேரடியாக 12 மாநிலங்கள்
மட்டும் இருந்தாலும் வடஅமெரிக்கா முழுமைக்கும்  இதன் பாதிப்பு இருக்கிறது.  அதனால் கடந்த பத்து நாட்களாகவே கிரகணம் பற்றியும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், பள்ளிகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

ஆனால், இதற்கான பிரத்தியோக கறுப்புக் கண்ணாடிகள் எங்களுக்குக் கிடைக்காததால் நாங்கள் வீட்டில் கைவைத்தியம் செய்வதுபோல் Pinhole Projector எனும் "  சிறுதுளை உருப்பெருக்கி"  யை செய்துவிட்டோம். கிரகணத்தைப் பார்க்க இதை விட்டால் பாதுகாப்பான வேறு வழியில்லை. இதைச் செய்வது அறிவியல் சோதனை போல பெரிய பிரமாதமில்லை
என்பதால் என் 10 வயது மகள்  யூடிப்பின் உதவியால் செய்துவிட்டாள் (படம்).


கிரகணம் முடிந்த பின்னால் குளிக்கவோ, இல்லை வீட்டைக் கழுவி விடவோ திட்டமில்லை. ஆனால், முடிந்தால் வீடியோ எடுக்கும் திட்டமிருக்கிறது. அது நடந்தால் பகிர்கிறேன்.


படங்கள் நன்றி
yahoo.com
https://www.nasa.gov/

Saturday, August 19, 2017

வனநாயகன் -வல்லமை இதழில்

எனது 'வனநாயகன்-மலேசிய நாட்கள்' புதினம் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை வல்லமை இணைய இதழில் வெளியாகி உள்ளது.

http://www.vallamai.com/?p=78833

நன்றி: Megala Ramamourty(வல்லமை ஆசிரியர்க்குழு)

**********************************

வல்லமை வாசகர்களுக்கு,

அன்பு வணக்கங்கள். "வனநாயகன்-மலேசிய நாட்கள்" எனும் எனது இரண்டாவது புதினம் (நாவல்) கிழக்கு பதிப்பகத்தால் கடந்த ஜனவரியில் வெளியிட்டப்பட்டது.

2017-சென்னை புத்தகத்திருவிழாவில் வெளியான நாள் முதல் வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வனநாயகனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக மகிழ்ச்சி.

வனநாயகன் குறித்து நான் எழுதுவதைவிட, "காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்" எனும் தலைப்பில் நண்பரும் விமர்சகருமான  சுரேஷ் கண்ணன் எழுதிய விரிவான அறிமுகக் கட்டுரையின் ஒரு சிறுபகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

"
...
மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பான் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 


புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. "

என்னைப் பொறுத்தவரை எழுதுவதைவிடவும், அது அச்சாகி நூலாக வெளியாவதை விடவும் எழுதியவனுக்கு மகிழ்வூட்டக் கூடிய ஒரு விசயம் அந்நூல் குறித்தான உரையாடல்கள் தான். அந்த வகையில் வனநாயகனை வாசித்து பதிவுகள், மின்னஞ்சல்கள் வழியாக தொடர்ந்து உற்சாகமளித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம், 
பக்கங்கள் 304, விலை ரூ.275


"வனநாயகன்-மலேசிய நாட்கள்" - வாங்க

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க

************************************

Saturday, August 12, 2017

வடகொரிய அடாவடிகள் (The Girl with Seven Names, 2015) -நாவல்

அணு ஆயுத வல்லமையுடன் அமெரிக்காவுக்கும்,  தென் கொரியாவுக்கும் பலவருடங்களாக  பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும் வட கொரியாவைப் பற்றி நமக்கெல்லாம்
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உண்மையில் தொலைத் தொடர்பு மிகுந்த, உலகமயமான  இந்த 21ம் நூற்றாண்டில் பெரிதான வெளி உலகத் தொடர்புகள்  எதுவும் இல்லாமல் தனித் தீவுபோல்  இன்னமும்   ஒரு நாடு இருக்கிறது என்றால் அது வடகொரியாவாகதான் இருக்கும்.

இந்த வடகொரியா கடந்த அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக கிம் வம்சத்தின் பிடியில் இருக்கிறது. அவர்கள் மக்களுக்கு பலகட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் என்பதுமட்டுமே
நமக்கு தெரிந்த ஒரு மேலோட்டமான தகவல். மற்றபடி
நம்மிடம் அதிக விவரங்கள் இல்லை.

ஆனால், வடகொரிய  கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்த ஒரு இளம்பெண் (லீ ஹெயான் சீயோ) அங்கு நடக்கும் அடாவடிகளை சமீபத்தில் விரிவாக ஒரு புத்தகமாக எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

மேற்கு நாடுகளில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் The Girl with Seven Names: A North Korean Defector’s Story (Book by David John and Lee Hyeon-seo)

வடகொரியாவில் இருந்து தன் குடும்பத்தை பிரிந்து தன்னந்தனியாக  சீனாவுக்கு தப்பித்த அவர்
தன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை விறுவிறுப்பாக பகிர்ந்திருக்கிறார்.

முதலில் வடகொரியாவில் இருந்து வெளியேறி  சீனாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் முதலில் தஞ்சமடைந்து பின்,  அவர்கள் ஏற்பாடு செய்தத் திருமணம் பிடிக்காமல் அங்கிருந்து தப்பித்து ஒரு விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து  ஒரு வழியாக தப்பித்து ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேருகிறார். ஆனால் அங்கேயும்  சரியான டாக்குமெண்டுகள் இல்லாமல் தலைமறைவாக வாழவேண்டிய கட்டாயம்.


கூடவே விடாத போலீஸ் துரத்தல்கள் . கள்ள பாஸ்போர்ட். அதற்கு உதவும் ஏஜண்டுகள். இதற்கு நடுவில் மெல்லிய காதல் என ஒரு திரைப்படத்துக்கு குறைவில்லாத சுவாரசியம்.

கதையின் ஊடாக  கிழக்கு ஆசிய மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள்
அவர்களுடைய பழக்க வழக்கங்கள், கொரிய வரலாறு போன்ற விசயங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். அலுக்கவில்லை.

அதுபோல, தனது சிறுவயது வடகொரியாவைப் பற்றிச் சொல்லும் போது  ஒட்டு மொத்த நாடே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல பல கட்டுப்பாடுகளுடன் இருந்தது என நினைவுகூறுகிறார். அதுகுறித்து அவர் சொல்லும் பல விசயங்கள் நமக்கு ஆச்சர்யமூட்டுகின்றன.

சில ஆச்சர்யங்கள் உங்களுக்காக-

ஊடகங்கள், நீதிமன்றம் போன்ற ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் அரசாங்கத்தின் கையில்.

அயல்நாட்டு கலை வடிவங்களான திரைப்படம், டிவி, பாடல்கள் போன்ற எந்த விசயத்திற்கும் அங்கே  அனுமதி இல்லை.

மீறி அதை  யாரேனும் பார்த்து ரசிப்பது தெரியவந்தால் சிறை தண்டனை

பெண்கள் சிறப்பு சிகை அலங்காரங்கள் செய்துகொள்ளக் கூடாது.
பகட்டான உடைகள், வாசனைத் திரவியங்களுக்கு அனுமதியில்லை.

நாட்டின் முக்கியத் தலைவரை அடைமொழியில்
மட்டும் குறிப்பிடவேண்டும். தவறுதலாகக் கூட அவருடைய
பெயரை யாரும்  உச்சரிக்கக் கூடாது.

அதுபோல அவருடைய பெயரை தங்கள் வாரிசுகளுக்கு சூட்டவும்
பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

அரசாங்கத்துக்கு  எதிராக செயல்படுவதாக சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு
பொது இடத்தில் மரணதண்டனை வழங்கப்படும்.

பொது இடத்தில்  வழங்கப்படும் அந்தத் தண்டனையை அனைவரும்
பார்க்கவேண்டும் (பள்ளி மாணவர்கள் உட்பட) என்பது கட்டாயம்.

அரசாங்கம் அனுமதிக்காத வெளிநாட்டு பொருட்களை வைத்திருக்க, பயன்படுத்த யாருக்கும் அனுமதி இல்லை

கம்யூனிச நாடு என்பதால் உணவு, உடை, வாழ்விடம் என சகலத்திலும் அரசாசங்கத்தின் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

ஆனால்,  அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் மட்டத்தில் ஊழல் மிக சாதாரணம்.  அதனால், அரசுக்கு நெருங்கியவர்களும், பணம் படைத்தவர்களுக்கும் சட்டம் வளைகிறது.

பத்தாண்டுகளுக்கு மேலாக சீனாவில் வாழ்ந்த லீ ஹெயான்
இறுதியில் தென் கொரியாவில் அடைக்கலம் பெறுகிறார். இதற்கிடையில் வடகொரியாவில் இருக்கும் தன் குடும்பத்தினரை கள்ள ஏஜண்டுகள் மூலம் தப்பிக்க வைக்கிறார்.

இப்படி பல சவால்களுக்கு பின் இறுதியில் லீ  தன் குடும்பத்தோடு இணைந்தாரா ? என்பதைப் புத்தகத்தை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இந்தப் புத்தகம் திரைப்படமாவதற்கு எல்லா வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது. பார்க்கலாம்.


Name:The Girl with Seven Names: A North Korean Defector’s Story
Originally published: July 2, 2015
Authors: Lee Hyeon-seo, David John
Original language: English
Nominations: Goodreads Choice Awards Best Memoir & Autobiography

அமேசான்:
https://www.amazon.com/Girl-Seven-Names-Korean-Defectors-ebook/dp/B00JD3ZL9U

படங்கள்: நன்றி இணையம்-
www.thestar.com
www.goodreads.com

Wednesday, August 9, 2017

த மேன் இன் ஹைய் கெசில் (The Man in the High Castle,1962) -நாவல்

சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் ஆளாமல் வேறோரு கட்சி
ஆண்டிருந்தால் இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்து இருக்கிறீர்களா?

இல்லை. தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் கடந்த அரைநூற்றாண்டுகள் ஆட்சிசெய்யாமல் இருந்திருந்தால் ?
என்பதை யோசனை செய்து பார்த்தது உண்டா ?

அதுபோல  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மனியப் படை வென்றிருந்தால் ? அப்படியொரு அதிகப்படியான கற்பனை செய்து  எழுதப்பட்ட புதினம் (நாவல்) "த மேன் இன் ஹைய் கெசில்" (The Man in the High Castle,1962 ). கற்பனை செய்தவர் எழுத்தாளர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) .

கதைப்படி போருக்குபின்னால் வெற்றிபெற்ற  ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி எனும் மூன்று நாடுகள் பெரும்பான்மை உலகை தங்களுக்குள் பிரித்துக்கொள்கின்றன. ஹிட்லர்  உயிருடன் இருக்கிறார். வேண்டாதவர்கள் என நினைக்கப்படுபவர்கள் அழித்தொழிக்கப்படுகிறார்கள். தப்பிப்பிழைத்த சில யூதர்களும் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதுபோல உலகம் முழுவதும் வாழும்  கறுப்பர்கள் அடிமைகளாக மிகமோசமாக நடத்தப்படுகிறார்கள். அந்த உலகை நினைத்துப் பார்க்கவே அச்சமூட்டுகிறது.

பூமியைத் தாண்டி சந்திரன், செவ்வாய், வெள்ளி போன்ற பிற கோள்களும் காலனியாக்கப்பட்டிருக்கிறன. மிக வேகமாக பயணிக்கும் சாகச  விமானங்களை அவர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என பல  சாத்தியமான விசயங்களை நம்பும்படியாக எழுதியிருக்கிறார்.

முக்கியமாக அமெரிக்கா ஜெர்மன், ஜப்பானியர்களால்
துண்டாக்கப்பட்டு ஆளப்படுகிறது. ஆனால்,  உண்மையில்
போருக்கு பின் ஜெர்மனிதான் மேற்கு,கிழக்கு என பிரிந்து கிடந்தது என்பது நாமறிந்த வரலாறு.

கதைப்படி  ஜெர்மனின் கிழக்கு அமெரிக்காவில் இருக்கும் ஒரு முன்னாள் போர் வீரன் ஜப்பான் ஆளுமையில் இருக்கும் மேற்கு பகுதியில் இருக்கும் ஒருத்தியை சில ரகசிய ஆவணங்களுடன் சந்திக்க பயணிக்கிறான்.

அந்த சந்திப்பு நிகழ்ந்ததா, அந்த ரகசியம் என்ன, அதன் பின் விளைவுகள் என்ன என்பதை நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

வாசிக்கமுடியாதவர்கள் பார்த்தும் ரசிக்கலாம். ஆமாம்,
அமெரிக்காவில்  இந்தக் கதை அமெசானால் டிவி சீரியலாகவும் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பைப்  பெற்றிருக்கிறது.  முதல் சீசனின் முதல்பாகம் கூட யூடியூபில் இலவசமாக கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள்.

இதன் ஆசிரியர். பிலிப்.கே.டிக் (Philip K. Dick) ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் கூட. பல வருதுகளைப் பெற்றவர்.  "பிளேட் ரன்னர்", "மைனாரிட்டி ரிப்போர்ட்" போன்ற பல பெருவெற்றி அடைந்த ஹாலிவுட் படங்கள் இவருடைய நாவல்கள் தான்.

Wednesday, August 2, 2017

மாணவர்களின் கேடயம்

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  திருவாரூர் மாவட்டத்தில்  100 சதம்  வெற்றி பெற்ற அரசுப்பள்ளிக்கள்
இரண்டு பள்ளிகளில்   ஒன்று மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி.

அங்கு 2016ல் "சிறகுகள் கல்வி அறக்கட்டளை"யின் கல்வி உதவித்தொகை வழங்கும்  நிகழ்வில்  'டிரஸ்ட் சார்பில்  எங்கள் பள்ளியைத் தத்து எடுத்துக் கொள்ளுங்கள்' எனும் கோரிக்கை வைத்தபோது, 'செய்யலாம்,  100 % ரிசல்ட்  கொண்டுவாங்க.'  என மேடையிலேயே அறிவித்திருந்தோம். அதைச் சவலாக எடுத்துக்கொண்டவர்கள் இந்த வருடம் எங்களாலும் முடியும் என நிருப்பித்திருக்கிறார்கள்.

ஒரு கிராமப்புற அரசுப்பள்ளியில்  100% வெற்றி என்பது பல தடைகளைத் தாண்டிய ஒரு சாதனை. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இந்தச் செய்தியை நண்பர்களுக்கு முன்பே பகிர்ந்திருந்தேன் என

நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இந்தவருடமும் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு  சிறகுகள் சார்பில்  கல்வி உதவித்தொகை வழங்கினோம்.

தேர்வில் முதல்  மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்ற
சந்தியாவுக்கு ஐந்தாயிரமும் இரண்டாம், மூன்றாம் மதிப்பெண் பெற்ற ரூபன்ராஜ் , வினிதாவுக்கு 2,500, 1,000 வழங்கினோம்.

அதுபோல தமிழில்
சிறப்புகவனம் செலுத்துபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வருடந்தோரும் தமிழில்
முதல் மதிப்பெண் பெறுவருக்கு சிறப்பு பரிசாக
இரண்டாயிரத்து ஐநூறு வழங்குவோம்.  இந்தவருடம் அந்தப் பரிசையும் மாணவி சந்தியா பெற்றார்.  மனப்பூர்வமாக  வாழ்த்துகள் மாணவர்களே.

நாம் வழங்கும் இந்தச் சிறிய  உதவித்தொகை அவர்களின் உயர்க்கல்விக்கு எதேனும் ஒரு வகையில் உதவும் என கண்டிப்பாக நம்புகிறேன்.

வசதியானவர்களுக்கு தனியார் கல்வி எனும் இன்றைய நிலையில் எளியவர்களின் கடைசி நம்பிக்கை அரசுப்பள்ளிகள் மட்டுமே. அங்கே சுயநலமின்றி அக்கறையுடன்
உழைக்கும் ஆசிரியர்களும் இருக்கதான் செய்கிறார்கள். அவர்களின் முயற்சியில்லாமல் முழுதேர்ச்சி, நல்ல மதிப்பெண் எல்லாம் கண்டிப்பாக  சாத்தியமே இல்லை.  அவர்களுக்கு நமது
பாராட்டுகளும் , நன்றியும்.

பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டபடி வெற்றிபெற்ற எல்லா மாணவர்களையும் உற்சாகபடுத்தும் விதமாக
விழாவில் அனைவருக்கும் ஒரு கேடயத்தை நினைவுப்பரிசாக வழங்கினோம்.

எனக்கு இதுபோன்றதோரு உலோகக் கேடயத்தில் எல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லை. ஆனால், எளியவர்களுக்கு அவர்கள் பெறும் நல்ல கல்வி மட்டுமே வலிமையான கேடயம் என உறுதியாக நம்புகிறேன். அது நல்லதொரு ஆயுதம் கூட.  அவர்கள் எதிர்காலத்தில் வாழ்க்கையில் போராடி  வெல்ல அதைப் போன்றதோரு கூர்மையான வேறு ஆயுதம் இருக்கமுடியுமா என்ன ?

தேர்வில் மதிப்பெண்கள் முக்கியம் எனச் சொல்லும் அதே நேரத்தில் நமது கிராமப்புற மாணவர்களின் திறன் வளர்க்கப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கென பள்ளியில் பயிற்சிப்பட்டறைகள், குழு விவாதங்கள் நடத்தும்
எண்ணம் இருக்கிறது. நண்பர்களின் உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறேன்.நன்றி