Thursday, December 31, 2020

பரிசு பெற்ற கிறிஸ்துமஸ் மரம்

 கிருஸ்மசுக்கு வீட்டைச் சிறப்பாக அலங்கரிப்பவர்களுக்குப் பரிசு என HOA-இல் (வீட்டு உரிமையாளர்கள் சங்கம் !?) அறிவித்து இருந்தார்கள். அதில்  Most Creative வகையில் படத்தில் உள்ள டாய்லெட்  தாள் மரம் பரிசு பெற்றிருக்கிறது.




#Goodbye2020


Tuesday, December 29, 2020

தமிழ்ச்சமூகம் - கொடுத்ததும் பெற்றதும்

தொல்தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.  சிறந்த தமிழ் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி என்றெல்லாம் தனித்தனியாக எழுதத் தோன்றவில்லை.கடந்த நூற்றாண்டின் தமிழ் மொழியின் எழுச்சியில் மேலெழுந்து வந்த தமிழ் ஆளுமைகளின்  மறைவு என்பது என்றும் வருத்தமளிக்கும் ஒன்று.





நமது தமிழ்ச்சிந்தனை பரப்பில் செல்வாக்கைச் செலுத்திய இத்தகைய ஆளுமைகளின் தொடர்ச்சியான இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாத ஒன்று. அந்தத் தலைமுறை ஆட்களுக்கு நமது தமிழ்ச்சமூகம் கொடுத்ததை விடப் பெற்றதே மிக அதிகம் என்பதே இங்கிருக்கும் கசப்பான உண்மை.

இனி, மறைவுக்குப் பின் புகழ் பேசுவதை விடுத்து , எஞ்சியுள்ளவர்களையேனும் போற்றுவோம். அடுத்த தொ.பாக்களையும், அப்துல் ஜப்பார்களையும் நம்மில் தேடுவோம். இல்லையெனில் அவர்கள்  உருவாகி வரும் சூழலைத் தருவது தமிழுக்கு அவசரத்தேவையாக இருக்கிறது.

#கொடுத்ததும்_பெற்றதும்

Wednesday, December 23, 2020

அதை ஜப்பானியர்களால் படிக்க முடியாது

ஜப்பானில் 500 ஆண்டுகள் பழமையான லட்சக்கணக்கான புத்தகங்கள்,
அந்தரங்க கடிதங்கள், நாட்குறிப்புகள் என பல கோடி வரலாற்று ஆவணங்கள் உள்ளன. ஆனால், இந்த ஆவணங்களை இன்று வாழும் பெரும்பான்மையான ஜப்பானியர்களால் படிக்க முடியாது, ஏனென்றால் அவை “குசுஷிஜி” (Kuzushiji) எனும் கூட்டெழுத்து வடிவில் (cursive script) எழுதப்பட்டிருக்கின்றன. இதைத் தமிழில் புள்ளி வைக்காமல் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துரு போருலொரு வடிவம் எனப் புரிந்துகொள்கிறேன்.

இந்த குசுஷிஜி ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குசுஷிஜியின் சரளமான வாசகர்கள் மிகக் குறைவு (நவீன ஜப்பானிய பூர்வீக மக்களில் 0.01% மட்டுமே). இதை வாசிக்க போதிய மனிதர்கள் இல்லாததால், இந்த அரிய வரலாற்றுத் தரவுகள்  தானாகவே அழியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த எழுத்துருவை அடையாளம் காணவும் அவற்றை நவீன ஜப்பானிய எழுத்துக்களாக மொழிபெயர்க்கவும் இயந்திர கற்றல் (Machine Learning) எனும் தொழில் நுட்பத்தை ஜப்பானியர்கள் நாடி இருக்கிறார்கள்.

இந்தச் சவாலை ஏற்க உலகம் முழுவதிலும் இருந்து இயந்திர கற்றல் நிபுணர்கள் (Machine learning experts) தேவை எனும் அறிவிப்பை ஜப்பானிய இலக்கியத்தின் தேசிய நிறுவனம் (The National Institute of Japanese Literature) வெளியிட்டிருக்கிறது. இதுபோல நம்முடைய  தமிழி எனும் தமிழ்ப் பிராமி எழுத்துகளையும் ஒலைச் சுவடிகளையும்  இயந்திர கற்றல் வழியாக வாசித்து ஆவணப்படுத்தவேண்டிய தருணம் இது.

இப்படி இயந்திர கற்றல் வழியாக மொழிமாற்றம் செய்வது  சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு மட்டுமல்ல.  இது நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் புதிய உண்மைகளுக்கும் திறப்புகளுக்கும் வழிவகுக்கும்.

Monday, December 21, 2020

நோபல் பரிசு - ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

தமிழில் மட்டுமே வாசிக்க முடிந்த ஒருவர் இன்று நோபல் பரிசு பெற்ற புத்தகத்தை வாசிக்க இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனும் நிதர்சனத்தை எஸ்.ரா தனது  வலைப் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.


"தாய்மொழி - தமிழ், நமது உயிர்மொழி" எனப் பேசி புலகாங்கிதம் அடையும் நாம் இப்படிச் சில எளிய இலக்குகளைத் தொடக் கூட பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டி இருப்பது வேதனை தருகிறது.


நோபல் பரிசு பெற்ற படைப்புகளுக்கே இந்த நிலை என்றால் நம்மால் மற்ற படைப்புகளைப் பற்றி யோசிக்க கூட முடியாது. இந்தப் படைப்புகள், இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவரும் போது அதற்கு இருக்கப் போகும் வாசகர் பரப்பைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும். 

மற்றபடி, "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்.  தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும், என அன்றே சொன்னான் பாரதி " என மேடையில் பேசினால் மட்டும் போதாது. அறிவுசார் சூழலில் இயங்கும் உள்ளூர், வெளியூர் தமிழ் அமைப்புகளும், இசை நிகழ்ச்சி என நட்சத்திர விருந்து வைக்கும் அனைத்து அயல்நாட்டு தமிழ்மன்றங்களும் மொழிபெயர்ப்பிற்கு நிதி சேகரிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

அதுபோல, வரி விலக்கு எனச் சொல்லி வரிப்பணத்தைத் திரைத்துறைக்கு வாரிவிடும் அரசுகளும், கல்வி நிதி உதவி பெறும் பல்கலைக் கழகங்களும் இதை ஓர் இனத்திற்கு செய்யவேண்டிய அறிவு முதலீடாகக் (knowledge investment) கருதி செய்ய முன்வர வேண்டும்.

மற்றபடி, தமிழில் இல்லை என்றால் என்ன ? ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே தேடி பிடித்து வாசித்து விடுவார்கள். தமிழர்களிடம் வாசிப்பு குறைவு போன்ற காரணங்களைத் யாரும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். வாசிப்பும் ,எழுத்தும் மட்டும் இல்லை என்றால் தமிழகமும், தமிழினமும் என்றோ இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கும் என்பது நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எஸ்.ராவின் கட்டுரை இணைப்பு https://www.sramakrishnan.com

Thursday, December 10, 2020

இர்மா - புதிய முயற்சி

என்னுடைய "இர்மா-அந்த ஆறு நாட்கள்"- ஐ வாசித்துவிட்டு சென்னை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் ஒருவர் பேசினார்.

இன்றைய அரசியல் சமூக வாழ்வில் செல்வாக்கு செலுத்திவரும் 
அமெரிக்கர்களின் வாழ்வியல் பற்றிய பல குறிப்புகளை "இர்மா" நாவலின் வழியாக அறிந்துகொள்ள முடிந்தது. புதிய முயற்சி என வாழ்த்தினார்.


அது மட்டுமல்லாமல், அவருக்குத் தெரிந்தவரை அமெரிக்க பயண நூல்கள் பற்றி சிலர் ஆய்வுக் கட்டுரைகள் செய்திருப்பதாகவும், அமெரிக்கப் பின்புலத்தில் எழுதப்பட்ட தமிழ்கதைகளைப் பற்றிய பெரிய மதிப்பீடுகள் எதுவும் இதுவரை  நிகழவில்லை என்றார். புதிய ஆய்வு மாணவர்கள் கவனிக்கலாமே...

Monday, December 7, 2020

ஏ.ஆர்.ரஹ்மான்

தொலைகாட்சி என்றால் தூர்தசன் என்றிருந்த காலம். வெள்ளிக்கிழமை ஓளியும் ஓலியும்-க்கும் ஞாயிற்றுக் கிழமை படத்துக்கும் தமிழ்நாடே காத்துக் கிடந்த நாட்கள். ரோஜா படம் வெளியான வாரம் ஒளியும் ஒலியுமில் சின்ன சின்ன ஆசை பாடலை ஒளிபரப்புகிறார்கள். நானோ பத்தாவது படிக்கும் சின்னப் பையன். 

அதற்கு முன், குமுதம் இதழில் 'விக்ரம்' படத்தில் கமல் சொந்தக் குரலில் பாடிய  'விக்ரம்... விக்ரம்...' பாடலின் இசையில்தான் முதன்முதலாக  கம்யூட்டரில் கம்போஸ் செய்தார் இளையராஜா. அதன்பிறகு 9 வருடங்கள் கழித்து 'ரோஜா' படப் பாடல்களை  ஏ.ஆர்.ரஹ்மான் கம்யூட்டரில் சிறப்பாக கம்போஸ் செய்திருக்கிறார் என எழுதியிருந்ததைப் படித்திருந்தேன். 

ஆனால்,  இளையராஜா இரசிகனாக இருந்த எனக்கு சின்னப்பையன் என்ன பெரிய பிரமாதமாகச் செய்திருக்கப் போகிறான் என்ற அவநம்பிக்கையோடுதான் அந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலின் புது புது இசைத்துணுக்குகள் இதுவரை கேட்டிராத வித்தியாசமான ஒலியோடு என் காதில் நுழைகிறது. அது தமிழ்த்திரை இசையின் அடுத்த சகாப்தம் என அப்போது கண்டிப்பாக நினைக்கவில்லை. ஆனால், வித்தியாசமான ஏதோ ஒன்று இந்தப்பாடலில் இருக்கிறது என்று மட்டும் மனசு சொல்லியது. 

அன்று பலருக்கு கம்ப்யூட்டர் என்றால் என்ன ? சின்தசைஸர் (synthesizer) என்றால் என்ன ? எனப் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை கம்யூட்டர் என்பது ஒரு இயந்திரம். ஒரு இயந்திரத்தை வைத்து இளையராஜா எனும் மிகப்பெரிய மனிதரை ஓடங்கட்டிவிட முடியுமா என்ன ? 'இதெல்லாம் பிஸ்கோத் வேலை, எத்தனை நாளைக்கு கம்ப்யூட்டர வைச்சு மியூசிக் போட முடியும். நீ வேணா பாத்துக்கிட்டே இரு, ஒரே படத்தோட இவன் போய்டுவான் பார்' என என்னைப் போன்ற விடலைகள் எதிர்பார்த்திருந்த நேரம்.

ஆனால், அவரோ ரோஜாவுக்கான தேசிய விருதோடு நின்றுவிடாமல் ஜென்டில்மேன், திருடா திருடா, புதியமன்னர்கள் என தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களைத் தந்து என்னைப் போன்ற அன்றைய விடலைகளை அவருடைய இரசிகராக்கிவிட்டார். 

தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் 'கம்ப்யூட்டர்' குறித்து எழுதிய சிறிய குறிப்பில் இருந்து...

Friday, December 4, 2020

நிராகரிப்பு (Rejection) என்பது...

காலை எழுந்தவுடன் 'குடிக்க, காஃபி இருக்குமா ?' எனப் பாவமாகக் கேட்கும் நமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு  குடிக்க டீ தரப்படும்போது தொடங்குகிறது நிராகரிப்புடனான நமது உறவு.

உண்மையில் Getting Rejected அல்லது நிராகரிக்கப்படுவது என்பது நமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் ஒரு சகஐமான விசயம் தான். காலையில்
வீட்டில் கேட்ட காஃபி கிடைக்காவிட்டால் பெரிய பிரச்சனை இல்லை.
ஆனால், ஆபிசில் கேட்ட புரோமோசன் அல்லது சம்பள உயர்வு  கிடைக்காவிட்டால் ? இல்லை ஒரு வேலை தேடிக்கொண்டிருப்பவர்
நேர்காணலின் இறுதிச் சுற்றில் நிராகரிக்கப்பட்டால்  ? உருகி உருகி காதலித்தவர் நிராகரித்துவிட்டு சென்றால் ? அதெல்லாம்
நமக்குப் பெரிய மன உளைச்சலை தரக்கூடிய விசயங்கள். கொஞ்சம் நிதானதாக யோசித்தால் நிராகரிக்கப்படுவது ஒருவித வலி என்பது கூட புரியும். இப்படி நாம் அன்றாட வாழ்வில்  நிராகரிக்கப்படுவதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவது தொடர்பான ஒரு ஆங்கிலபுத்தகத்தைப் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Rejection Proof by Jia Jiang. அருமையான புத்தகம். ஆசிரியர் இந்த விசயத்தைத் தத்துவார்த்தமாக அணுகாமல் பிராக்டிகல் எக்பரிமெண்ட்ஸ் (practical experiments) எனப்படும் நடைமுறை விசயங்களால் இதை அனுகிருப்பதால்,  நிராகரிப்பு தொடர்பான பல புதிய திறப்புகளை நமக்குத் தருகிறார்.



உதாரணமாக,  'நல்லா தயார் செய்திருந்தேன். ஆனால், இண்டெர்வியூவில் ரிஜெக்ட் ஆயிட்டேன். எனக்கு எதற்கும் தகுதியில்லை' என தலையில் கைவைத்து உட்கார்ந்து விடாமல் , அந்த நிராகரிப்பு என்பது உண்மை (fact) இல்லை. மாறாக அது வெறுமனே ஒருவருடைய அபிப்ராயம் (opinion) மட்டுமே எனும் புரிதல் வந்துவிட்டால் தாழ்வு மனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கையோடு இன்னோரு இடத்தில் முயற்சி செய்தால் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது.

அதுபோல நீங்கள்  ஒரு நல்ல பிராஜெக்ட் புரபோசலை அல்லது பாலிசி ஏதோ ஒன்றை யாரிடமாவது விற்க முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் 'வேண்டாம்' (No) என ஒற்றை வார்த்தையில் நிராகரித்துவிட்டார் என்றால். நீங்கள் மனம் புண்பட்டு அங்கிருந்து அவசரமாக நகர வேண்டியதில்லை. அதற்கு பதிலாக அந்த 'வேண்டாம்' க்கு பின்னால் எவ்வளவோ காரணங்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் உணர்ந்தால் நல்லது.

உதாரணதாக அவருக்கு அந்தப் பூவின் நிறம் பிடிக்காமல் இருக்கலாம். இல்லை அந்தப் பூ வாடி இருப்பதால், வேறோன்றைக் கொடுத்தால் வாங்குவாராக இருக்கும். அதுபோல அந்தப் பாலிசியை அவர் முன்பே எடுத்திருக்கலாம், பேசினால் அது தேவைப்படும் இன்னொருவர் பற்றிய ஆலோசனையை அவர் உங்களுக்குத் தரலாம்.

இப்படிப்பட்ட நிராகரிப்புகளைத் தவிர்க்கும் வகையில் மற்றவர்களிடம் பேசுவது கூட ஒருவித கலை தான் என்பதைத் தொடுகிறார். அதுபோல உங்களுக்குத் தேவைப்பட்டால் எப்படி நிராகரிப்பது  (Saying No) என்பதும் நாம் கைகொள்ளவேண்டிய அவசியமான ஒரு விசயம் தான் என்பதைத் பேசுகிறார்.
முடிந்தால் வாசியுங்கள்.

இந்தப் புத்தகம் அமேசானில் அச்சுப்புத்தகமாகவும், கிண்டில் வடிவிலும், ஒலி வடிவத்திலும் கிடைக்கிறது. 

***இது 2018-இல் எழுதிய குறிப்பு***

Monday, November 16, 2020

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் - கவிஞர் வைரமுத்து

"...தமிழில் நம்பிக்கை இல்லாத, தமிழை எழுதவோ படிக்கவோ தெரியாத, ஏன் தமிழை பேச மறுக்கிற ஒரு தலைமுறை எங்கள் கண் முன்னால் நிற்பது கண்டு இதயம் நடுங்குகிறது.." என  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ் குறித்து தனது ஆதங்கத்தையும் அதிர்ச்சியையும் கவிஞர் வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில், நமது தாய்மொழி நம் கண் முன்னால் இன்று அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து  நாம் ஒவ்வொரும் அச்சப்படத்தான் வேண்டும்.


அதே செவ்வியில் கவிஞர் ,  “இனி எந்த மொழி தொழில்நுட்பத்தின் தோள்களில் ஏறி தொண்டு செய்கிறதோ அந்த மொழிதான் நிலைக்கும். துருப்பிடித்த பழம்பெருமைகள் மட்டும் இனி ஒரு மொழியைத் தூக்கி நிறுத்த முடியாது. இன்று சர்வதேச சமூகம் 3 மொழிகளை முன்னிலைப்படுத்துகிறது. ஆங்கிலம் - சீனம் - ஜப்பான். இந்த 3 இனங்களுமே தொழில்நுட்பத்துக்கு தங்கள் மொழியைக் கொம்பு சீவுகின்றன. தமிழுக்கும் அந்த தகுதி இருக்கிறது. தமிழர்களுக்குத்தான் நம்பிக்கை வேண்டும்”. என்றும் சொல்லி இருக்கிறார். 

இதை நாம் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆனால், அறிவுசார் புலத்தில் இதுபற்றிய தீவிர உரையாடல்களோ ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளோ இல்லை. காரணம் பலர் இங்கே மொழியை தங்களை அதிகார மையத்தை நோக்கி நகர்த்தும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. 

பலருக்கு மத்திய அரசின் ஆசி இல்லாமல் பிராந்திய மொழியால் என்ன பெரிதாக சாதித்துவிட முடியும் எனும் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். வையத் தலைமை கொள்! என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும். 

இது தொடர்பாக தமிழ்ச்சரம்.காம்- வுடன் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

கவிஞரின் செவ்வி இணைப்பு.

https://youtu.be/ue0zc1fgdVA

Saturday, November 14, 2020

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக்

ஜெப்ரடி (jeopardy) புகழ் அலெக்ஸ் ட்ரெபெக் பற்றி தனியாக எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

"ஜெப்ரடி" நிகழ்ச்சியை அமெரிக்கத் தொலைக்காட்சியில்  தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த அலெக்ஸ் இரண்டு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 80.

தனது இறுதி நாட்கள் வரை வழக்கம்போல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அலெக்ஸ் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் தொகுத்து வழங்கிய ஜெப்ரடி ஒரு வினோதமான ஒரு வினாடி வினா நிகழ்ச்சி. வழக்கமான கேள்வி கேட்டு பதில் சொல்லும் நிகழ்ச்சியாக இல்லாமல் போட்டியாளர்களுக்கு பதிலைக் கொடுத்து கேள்வியை
எதிர்பார்க்கும் ஒரு நிகழ்ச்சி.  

எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வி... "கீதாஞ்சலி எழுதியவர்." என்பது கேள்விக் குறிப்பு என்றால்,  அதற்கான சரியான பதில் "யார் தாகூர் ? (Who is Rabindranath Tagore )" என்பதாகும்.

இப்படி கலை,இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், பூளோகம்,வரலாறு என எண்ணற்ற பல துறைகளில் பொது அறிவை வளர்க்கும் விதமாக அமைந்த இந்த நிகழ்ச்சியை  ஆர்வத்தோடு பல ஆண்டுகளாக வீட்டில் பார்க்கிறோம். தேவையற்ற வெட்டி பேச்சுகள் இன்றி, அதே சமயத்தில் போட்டியாளர்களைச் சற்று நகைச்சுவையோடு உற்சாகப்படுத்திப் பேசும் அவருடைய ஆளுமை அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. அதீத ஆர்வமும், கடும் உழைப்பும் உள்ள ஒருவரால் மட்டுமே இத்தனை ஆயிரம் நிகழ்ச்சிகளைக் கண்டிப்பாக செய்திருக்க முடியும்.

அலெக்சின் இழப்பைக் குடும்ப உறுப்பினர் ஒருவருடைய இழப்பாக நினைகின்ற பல மில்லியன் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. RIP Alex !

Friday, November 6, 2020

திருமதி. மேகலா இராமமூர்த்தி - ஃபிளாரிடா

பேச்சு என்பது ஆற்றல் வாய்ந்த ஒரு கலை. அதுவும் மேடைப் பேச்சு என்பது பேராற்றல் வாய்ந்த ஒன்று. அந்தக் கலையில் வித்தகர் ஒருவர் இங்கே ஃபிளாரிடாவில் இருக்கிறார். அவர் திருமதி. மேகலா இராமமூர்த்தி.

வெளிப்படையாக சொல்தென்றால் பலர்  மேடையில் பேச சந்தர்ப்பம் கிடைத்தால் தான் பேச எடுத்துக் கொண்ட விஷயத்தை மறந்துவிட்டு
தன் பெருமையை எடுத்துக் கூறுவதில் ஈடுபட்டு விடுவார்கள். சிலர்
தான் எதைப்பற்றி பேச போகிறோம் என்ற தெளிவு இல்லாமல் அல்லது யாருக்காக பேசுகிறோம் என்ற சரியான புரிதல் இல்லாமல் பேசுவார்கள்.

 

ஆனால்,  மேகலா இதுபோன்ற குறைபாடுகள் எதுவும் இல்லாமல்  இலக்கிய, ஜனரஞ்சக மேடைகளில் கேட்பவர்கள் கவனம் சிதறாமல் ஆற்றொழுக்காக பேசுவதில் வல்லவர். மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பேசும் மேகலா
தொடர்ந்து பல வானோலி நிகழ்ச்சிகளை அமெரிக்காவில் இருந்து அதுவும் நான் வசிக்கும் ஃபிளாரிடாவில் இருந்து செய்து வருகிறார்.


2020- ஜனவரியில் கூட எனது அழைப்பினை ஏற்று இர்மா நாவலை அறிமுகப்படுத்த ஓர்லாண்டோ தமிழ்ச்சங்க விழாவில் மேடையேறியவர் மிகக்குறுகிய நேரத்தில் படைப்பின் சாரம்சத்தைச்  சுருக்கமாக அதே சமயத்தில் சுவாரசியம் குறையாமல் அழகாக அறிமுகம் செய்து பேசிவிட்டு இறங்கினார்.

மேகலா சிறந்த பேச்சாளர் என்பதை தாண்டி அவர் கவிஞர், எழுத்தாளர், தமிழ் ஆர்வலர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். அவருடைய கவிஞர் மகுடேசுவரனுடனான சமீபத்திய நேர்காணல் முக்கியமான ஒன்று.

"தமிழர்களிடம் இருப்பது மொழிப் பற்றா இல்லை மொழி வெறியா ? இன்றைய  தமிழக கல்விச் சூழலில் தமிழின்  நிலை என்ன ?"  என்பது போன்ற பல முக்கிய வினாக்களை நிகழ்வில் எழுப்பி இருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் கேளுங்கள்.

**யூடியூப்- இணைப்பு**

இர்மா-அறிமுக விழா (4:20-8:50)

Irma

கவிஞர் மகுடேஸ்வன்- நேர்காணல்

மகுடேஸ்வன்


Monday, November 2, 2020

வனநாயகன் குறித்து-18 ( ஆர்வத்தைத் தூண்டுகிறது )

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  குறித்து எனது மதிப்பிற்குரிய தமிழ்
ஆசிரியர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துகளை இங்கே நண்பர்களுடன் பகிர்கிறேன். 

//

வனநாயகன் புதினம்  ஒரேமூச்சில் படித்தேன்.

என்ன அழகாக விறுவிறுப்பாக,சொல்லாட்சிச் சிறப்புடன்  உள்ளது! முன்னரே கதை எழுதிப் பழக்கம் உண்டா? 

இதழ்களில் எழுதியது உண்டா? முன்னர் எழுதிய.பங்களா கொட்டாவை விட எவ்வளவு சிறப்பாக உள்ளது இது. 

உங்கள் சொந்தக்கதையா ? முழுவதும்  கற்பனையாகத் தெரியவில்லை.பெரிய சிக்கலான அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இல்லையென்றலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
.... காட்சிகளை வருணிப்பதிலும் நிகழ்வுகளை விவரிப்பதிலும்  தேர்ச்சி பளிச்சிடுகிறது.

பெண் கதாபாத்திரங்களின் பெயர் சுருக்கம் சற்று குழப்பமடையவைக்கிறது......

மற்றபடி, பெண்களை எழுத்தால் காட்சிப் படுத்துதல் மிக அருமை; தேர்ச்சி தெரிகிறது. சிங் பாத்திரம் நன்று.பெரிய இடங்களில் நடக்கும் தில்லுமுல்லுகள்,ஒழுக்கக்கேடுகள் அம்பலமாகியுள்ளன. மகிழ்ச்சி  பாராட்டுகள் !

//

வனநாயகன் வெளியாகி சுமார் 4 ஆண்டுகள் (December 1, 2016) கடந்தும் படைப்பு தொடர்ந்து வாசிக்கப்பட்டு பேசப்படுவது மகிழ்ச்சியோடு உற்சாகத்தையும் தருகிறது.



Wednesday, October 21, 2020

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

மருத்துவம், கணினி போன்ற துறைசார் பின்புலத்தில் இருந்து தமிழில் எழுதபவர்கள் குறைவு. அதில் புனைவு எழுதபவர்கள் குறைவு.அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையில் இருந்து புனைவு எழுத வருபவர்கள் என்பது மிகக் குறைவு.

அந்த வகையில், மருத்துவர் மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய, ''பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்''  சமீபத்தில் கண்ணில் பட்டது.  அமேசான் கிண்டிலில் வாசித்தேன்.

ஒரு சாமானியன் தனது வாழ்க்கையை வாழ்வது என்பது ஒரு வெள்ளைத் தாளில் 'வாழ்க்கை' என எழுதி அழைத்துவிடும் விளையாட்டு அல்ல. அவன் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்குக் கிடைத்த இந்த மனித இருப்பை அவன் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் பயணித்து கடக்கவேண்டி இருக்கிறது. பிறப்புக்கும், இறப்புக்குமான இந்தப் பயணத்தில் தான் எத்தனை துயரம் ?  எத்தனை துரோகங்கள், இடர்பாடுகள், கயமைகள் .. இவற்றை எல்லாம் அவன் சகித்துக்கொண்டுதான் இந்த வாழ்வை வாழ வேண்டியிருக்கிறது.

இந்த வாழ்வை எதிர்கொள்ள விரும்பாதவர்கள், இந்தக் கீழ்மைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புபவர்கள் தற்கொலை எனும் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.  

இதுபோன்றதொரு தற்கொலையில் தான் மயிலன் ஜி சின்னப்பனின்


‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ துவங்குகிறது.  அந்த துர்மரணத்தின் மறுபக்கத்தை ஒரு நண்பன் அறிந்து கொள்வது தான் கதை. உண்மையில், வாழ்க்கையில் ஒருமுறையேனும் தற்கொலை எண்ணம் ஏற்படாதவர்கள் வெகு குறைவு என்பதே நிதர்சனம்.

மயிலனின் இந்தப் படைப்பு மருத்துவத்துறையின் உள்ளிருந்து இயங்குபவர்களின் சிக்கல்களைப் பல அடுக்குகளில் சொல்லிச் செல்கிறது . மருத்துவத் துறையை வெளியில் இருந்துப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அதனுள் நடக்கும் பல விசயங்கள் அதிர்ச்சி தருகின்றன.

கதை துப்பறியும் நாவல்களைப் போல மேலோட்டமாக இல்லாமல் தத்துவார்த்தமான விசயங்களையும் அலசுகிறது. உண்மையில், ஒரு தற்கொலை என்பது மரணிப்பவர்களுக்குப் பூரண விடுதலையைத் தந்து விடுவது இல்லை. மரணித்தவனை அதுவரைத் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தங்கள் நினைவுகளின் வழியாக ஏதோ ஒருவிதத்தில் அவனைப் பின்தொடரவே செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கீழ்மையான எண்ணங்களின் ஊடாகவே அவனுக்குத் துலக்கம் அளிக்கிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லும்  கதை.

முதல் படைப்புகே உரிய ஓரிரு குறைகள் இருந்தாலும் (எ.டு.  இறுதியில், இணைப்பாக ஆசிரியர் 'ஆசிரியராக' தன்மையில் சொல்லி இருக்கும் சில அத்தியாயங்கள். கண்ணில் படும் எழுத்துப் பிழைகள் -இது மயிலனின் தவறல்ல. இது பதிப்பக வேலை

மற்றபடி,  'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' மூழமாக தமிழ் எழுத்துலகுக்கு மயிலன் ஜி சின்னப்பன் எனும் ஒரு சிறந்த படைப்பாளர் கிடைத்திருக்கிறார் எனத் தயங்காமல் சொல்லலாம். வாழ்த்துகள் மயிலன் !

Saturday, October 10, 2020

ஸீரோ டிகிரி பப்ளிஷார்

எழுத்தாளர் சாருவின் எக்ஸைல்  MARGINAL MAN எனும் பெயரில் ஆங்கிலப் புத்தகமாக அமேசானில் (amazon.com) கிடைக்கிறது. வாசிக்கும் பழக்கம் உள்ள ஒரு அமெரிக்க நண்பருக்குச் சமீபத்தில் வாங்கி பரிசளித்தேன். பாராட்டினார்.



சரளமான மொழிபெயர்ப்பு, தரமான தாள், குறைவான எடை, அழகிய அட்டைப்படம் என மிகவும் நேர்த்தியான புத்தக வடிவமைப்பு.  மற்ற மலிவு விலை புத்தகங்கள் போல் இல்லாமல் அமெரிக்காவில்  நேரடியாகத் தயாராகும் புத்தகத் தரத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் ராம்ஜி இதைப் கொண்டுவந்திருக்கிறார்.  வாழ்த்துகள் ராம்ஜி !

பொதுவாக,  தமிழ்சூழலில் எழுத்தாளருக்கு உரிய அங்கீகாரம் இல்லை என தொடர்ந்து பேசுகிறோம். சரி,  மொழிபெயர்பாளர்களுக்கு ? அவர்களுக்கு  எழுத்தாளர்களுக்குத் தரப்பட்ட இடம் கூட இல்லை என்கிறோம். 
சரி,  எடிட்டிங் எனும் பிரதி மேம்படுத்துபவருக்கு ? அட்டை வடிவமைப்பாளர் ?  புரூப் ரீடர் எனும் மெய்ப்பு பார்ப்பவர் ?  இப்படித் தமிழ் பதிப்புத்துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறை என்ற பேச்சே பொதுவாக இருக்கிறது. 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் ( இருந்தாலும் அவற்றை முதன்மைப்படுத்தாமல்) பலர் பதிப்புத்துறையில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய தனிமனித உழைப்பைத் தாண்டி மொழி மீதான பற்றினால் நிதி முதலீடு செய்து பல சிரமங்களைக் கடந்து புத்தகங்களைக் கொண்டுவருகிறார்கள். இன்று   "indie" படைப்புகள் மின்னூல்களாக வந்தாலும் பதிப்பகங்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

அதுவும் மொழிபெயர்ப்பு படைப்புகள் என்றால் அதற்கான உழைப்பு என்பது நேரடி வெளியீடுகளை விட இருமடங்காகிறது. அந்த வேலையை ஸீரோ டிகிரி பப்ளிஷார் (எழுத்து பிரசுரம், www.zerodegreepublishing.com)  மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார்கள். வாழ்த்துகள் !!

Monday, October 5, 2020

வனநாயகன் குறித்து-17 (சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று)

"வனநாயகன்"  சமகால புலம்பெயர் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று என  Good Reads தளத்தில் வாசகர் மணிகண்டன்(Mo Manikandan) சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்கிலத்தில் மதிப்புரையோடு, Must read! எனக் குறிப்பிட்டு  5 நட்சத்திர மதிப்பீடும் செய்திருக்கிறார்.  நண்பருக்கு நன்றி சொல்லுவோம்.

//

Very interesting novel that talks about different aspects of "onsite job" or "foreign job" of technical professionals. The author touches Malaysia's geography, linguistics, culture, politics and Malaysian Tamil peoples life along with the story without boring. The corporate politics, office politics, journalism, environmental aspects all are talked through dialogues. The mystery of twists are kept until the end. Must read novel. New generation Tamil novels are fresh, exciting and more relevant to our modern IT lifestyle. Amazon kindle is a brilliant platform for such attempts. Bravo

Lately i wanted to mention that, This is a contemporary immigration fiction! Genre which is not so many in tamil. The one I remember is pa.singaram's "puyalile oru thoni" & "kadaluku appaal" (historical immigration fiction though). Must read!

//


புத்தகத்தை இணையம் வழியாக வாங்க


Sunday, October 4, 2020

350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மச் சாவு

ஓராயிரம் யானை கொன்றால் பரணி என வீரத்தின் பெயரால் அன்று  நம்நாட்டில் பல்லாயிரம் யானைகள் அழிந்தன. பிறகு ஆங்கிலேயர்கள்  காலத்திலும் வேட்டை மோகத்தால் பல்லாயிரக்கணக்கில் யானைகள் அழிந்தன. 




இப்போதும் நாம் பெரிதாகத் திருந்திவிடவில்லை.  யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுகிறோம். காடுகளை அழித்து விவசாய நிலங்களாக்குகிறோம். நீராதாரம் தேடி வரும் யானைகளைக் கூட வெடி வைத்துக் கொல்கிறோம். அத்தோடு விடாமல் காட்டில் மிச்சமிருக்கும் சொற்ப யானைகளையும் கூட அதன் தந்தங்களுக்காகவும், அடிமை வேலை செய்யவும் நாம் விரட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். 

நமது ஆசிய யானைகளின் எண்ணிக்கை கடந்த 75 ஆண்டுகளில் மட்டும்   50 சதவிகிதமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள். இன்று உலக அளவில் சுமார்  40,000 ஆசிய யானைகள் மட்டுமே வனங்களில் எஞ்சியிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை இந்தியாவில் தான் இருக்கின்றன என்று வேண்டுமானால் நாம் கொஞ்சம் ஆறுதல் கொள்ளலாம்.

அதுபோல, ஆப்ரிக்கக் கண்டத்தில்  போட்ஸ்வானாவில் தான் அதிக அளவு யானைகள் (ஆப்பிரிக்க) இருக்கின்றன. அங்கே கடந்த மே, ஜூன், ஜூலை வரையான 3 மாதத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றன. 

இது குறித்து நடந்த விசாரணையின் முடிவில் யானைகள் நச்சுத்தன்மை உடைய நீரை அருந்தியதால் மரணமடைந்திருக்கின்றன என


அறிவித்திருக்கிறார்கள். கூடவே, இறந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே  இருப்பதால் இது  மனிதவேட்டை இல்லை என்பதை அரசு தரப்பில்  உறுதி செய்திருக்கிறார்கள். 

ஆனால், மற்ற காட்டு விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் யானைகள் மட்டும் இப்படிப் பரிதாபமாக இறந்திருக்கிறன. அதனால், இந்த விவகாரம் தற்போது சர்வதேச கவனம் பெற்று விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, மற்ற விலங்குகள் போல் அல்லாமல் யானைகள் மட்டுமே மனிதர்களின் விளைநிலங்களைத் தேடிப் போகும் குணம் கொண்டது என்பதை இங்கே வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.


செய்தி இணைப்பு:

https://www.cnn.com/2020/09/21/africa/botswana-elephant-deaths-intl/index.html



Wednesday, September 30, 2020

இலங்கை வானொலி புகழ் அப்துல் ஹமீது சொன்னது...

இலங்கை வானொலி புகழ் பி. எச். அப்துல் ஹமீதின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். 


நேர்காணல் கண்ட 'பட்டிமன்ற புகழ்' பாரதி பாஸ்கரும், ராஜாவும் ஹமீதுவிடம்
எல்லோரும் வழக்கமாகக் கேட்கும்  திரை நட்சத்திர அனுபவங்களைத் தாண்டி, அவரிடம் பொது வெளியில் இன்றைய தமிழ், மொழியின் எதிர்காலம் போன்ற  சில நல்ல விசயங்களையும் அபூர்வமாக உரையாடினார்கள்.  

இன்றைய இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும். அவர்களைக் கவர வேண்டும் என்றால் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து, ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பேசவேண்டும் எனும் எழுதப்படாத சட்டத்தைத் தமிழக ஊடகங்கள் கையில் எடுத்து பல்லாண்டுகள் ஆகின்றன. அது குறித்து பதில் அளித்த ஹமீது,  ஊடகங்களின் இந்தத் தவறான போக்கை "மயக்கம்" என்றார். என்னைக் கேட்டால், அதை அவர் "மடத்தனம்" என உடைத்துச் சொல்லி இருக்கவேண்டும்.

சரி, பெரும் நிறுவனங்களின் ஊடகங்கள் தான் அப்படி என்றால் சாமானியர்களின் கடைசி போக்கிடமான இணையமும் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பெயர் சீரழிவு என்பதைத் தவிர வேறென்ன.

அந்த நேர்காணலின் முதல் பகுதியின் இணைப்பு

https://youtu.be/49AArBV8OZo


Saturday, September 26, 2020

இர்மா-அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினம்

"இர்மா-அந்த ஆறு நாட்கள் "குறித்து முகநூல் வாசகர்  Senthan Sethirayar  அவர்களுடைய  பதிவை இங்கே பகிர்கிறேன். நன்றி செந்தன் !!

//புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்பது பெரும்பாலும் ஈழ புலம்பெயர் இலக்கிய சூழலையொட்டியே அதிகம் இருக்கும். தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிணி தொழில்நுட்ப வேலைகளினால் கடந்த இருபது வருடமாக பெருமளவில் அதிகரித்ததென்றாலும், இயல்பிலேயே வாசிப்பு தன்மை அதிகமில்லாததால், நம் சமூகங்களிலிருந்து பெருமளவிலான படைப்புகள் உருவாவதில்லை. அப்படியான ஒரு சூழலில் எழுத்தாளர்  திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் “இர்மா - அந்த ஆறா(ஆறு) நாட்கள்”  எனும் புதினம் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கை பதிவு என்றே சொல்லலாம்.

எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் அவர்களின் புத்தக வாசிப்பு பற்றிய பேஸ்புக் நேரலையை பார்த்தபிறகு அவருடைய “இர்மா - அந்த ஆறா (ஆறு) நாட்கள்” 


நாவலை கிண்டிலில் வாங்கினேன். மனிதர் ஏமாற்றவில்லை, கடந்த இரண்டு வருடங்களாக ஃப்ளோரிடா வாசியானதால், இங்கு மக்கள் ஹரிக்கேன் எனும் பெரும்புயலுக்கு எப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியும், அதே சமயம் தெற்கு ஃப்ளோரிடா பகுதியில் வசிக்கும் நண்பர்கள் பலரும் அவர்களின் இர்மா புயல் காலத்திய நினைவுகளை பகிர்ந்திருந்தது என கிட்டதட்ட இந்த புனைவு குறிக்கும் காலநிகழ்வுகளில் இயல்பாக பொருத்திக்கொள்ள முடிந்தது.

கதையின் மையம் என்பது வாழ்வின் நிலையில்லாமையை காட்டுகிறது, நிகழ்வுகள் யாவும் பரணி எனும் கதை நாயகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. பரணி வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்தாலும், சொந்த ஊரின், மக்களின் நினைவுகள் பரணியின் மனதில் வரும் போது காட்டும் நிலையில்லாமையிலிருந்து, இர்மா எனும் ராட்சத ஹரிகேனினால் தன் வீட்டை விட்டு பாதுகாப்பு தேடி வேறு ஊருக்கு செல்லும் போது பரணிக்கு ஏற்படும் மனபோராட்டம் காட்டும் நிலையில்லாமை என்று தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் மிக விரிவாக அமெரிக்க வேலை சூழல், வீட்டு சூழல், குடியுரிமை பிரச்சனைகள், புலம்பெயர்ந்த ஒருவனின் பார்வையில் அமெரிக்க மக்கள் பற்றிய அவதானிப்புகள், அமெரிக்காவின் பொது நிர்வாக கட்டமைப்புகள், கருப்பின மக்களின் துயரங்கள் என்று பலவற்றையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் அதுவே சற்று தோய்வாகவும் இருக்கிறது. ஆனால் அமெரிக்க புலம்பெயர் சூழலில் வாழாதவர்க்கும் சேர்த்தே எழுத்தப்பட்டது என்பதால்,இப்படி இருப்பதே புனைவினுள்ளே வாசகனை இழுக்க செய்கிறது. 

ஹரிக்கேன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ஊரைவிட்டு வேறு பாதுக்காப்பான ஊர்களுக்கு போகலாமா வேண்டாமா என்று நடக்கும் மன போராட்டம் என்பது ஃப்ளோரிடா மாகாணத்தில் வாழ்ந்திராதவற்கு விளங்காத ஒன்று. ஆனால் அப்படியான நாட்களில் பரணியின் எண்ணவோட்டம் என்பது இங்கு வாழும் பெரும்பாலானவர்களின் எண்ணவோட்டங்களை  அப்படியே பிரதிபலிக்கிறது. கடந்த   ஹரிக்கேன் சீசனில் வந்த புயலில் ஏறகுறைய இதே நிலைமை தான் எனக்கும். 

அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முதல்தலைமுறை தமிழர்கள் பலரின் நெருக்கடிகளை அப்படியே எழுதியிருக்கிறார். பரணி புயல்கால சமூக பணிகளுக்கு(volunteering) தன் பெயரையும் கொடுக்கட்டுமா என கேட்கும் போது அவன் மனைவி, வீட்டில் பிள்ளை குட்டிகளை வைத்து கொண்டு தங்கள் பாதுக்காப்பே கேள்விக்குறியாக இருக்கும் போது எதற்கு இந்த வேண்டாத வேலை என கடிந்துகொள்வது, என்ன தான் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க வீடு வாங்கி பிள்ளைகளோடு வாழ்ந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும் போது பலருக்கும் புலம்பெயர்ந்த நிலம் அன்னிய நிலமாகவே தம் காலமுழுதும் இருக்கும் என்பதை அழகாக சில சொற்களில் காட்சிபடுத்தியிருக்கிறார்.

அதே போல, தன் சக பணியாளர்கள் புயலுக்கு பிறகான மறுசீரமைப்பு வேலைகளில் கடுமையாக வேலை செய்யும் போது, தான் மட்டும் அட்லான்டாவில் பாதுக்காப்பாக இருப்பதில் பரணிக்கு ஏற்படும் குற்றயுணர்ச்சியை காட்டும் இடங்கள் அருமை.  

அமெரிக்க வாழ்க்கை பற்றி பரணியின் எண்ணங்களாக வரும் வார்த்தைகள் எல்லா புலம்பெயர் தமிழர்களின் எண்ணங்களே, இவ்வாழ்க்கையில் பல சமயங்களில் பெறுவதை விட இழப்பது அதிகமென்றே தோன்றும். இங்கே புதிதாக தமிழர்களை சந்திக்க நேர்ந்தால், பேச்சு அமெரிக்கா வந்ததினால் ஏற்படும் இழப்புகளை பற்றி பேசாமல் முடியாது. 

அதே சமயம், சில சமயங்களில் பரணியின் மனவோட்டங்களாக எழுத்தாளரின் எண்ணங்கள் வலிந்து திணிக்கப்பட்டது போன்று தோன்றவதையும் சொல்லியாக வேண்டும் , குறிப்பாக புயலை நினைத்து வருத்தப்படும் போது வாழ்கையை பற்றிய அவதானிப்புகள் ஏற்கனவே பல புதினங்களில் படித்தது போலவே இருப்பது, அட்லான்டா நோக்கி பயணப்படும் போது வரும் புலம்பெயர்தல் பற்றிய வர்ணனைகள், என்று, சில இடங்களில் சற்று ஆசுவாசபடுத்துகிறது. ஒன்பதாவது அத்தியாயத்தில் வரும் கருப்பர் இன சம்பந்தமான பதிவுகளும், புனைவும் தேவையில்லாமல் கருப்பர்கள் பற்றிய கருத்தை பதிவிட எழுதப்பட்ட இடைச்சொருகளாக தோன்றியதை தவிர்க்கமுடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மனவோட்டங்களையும் அதனுள்ளே இழையோடும் நிலையில்லாமையையும் இவ்வளவு விரிவாக வேறு யாரேனும் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அதற்காகவே அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான புதினங்களில் ஒன்று.

ஒரே வருத்தம், பதிப்பித்த நூலில், மேலும் சில பின் இணைப்புகளை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன், அவற்றை வாசிக்கமுடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் வாங்கி வாசிக்க வேண்டும். 

கிண்டிலில் வாங்க - https://www.amazon.com/அந்த-நாட்கள்-Tamil-ஆரூர்-பாஸ்கர்-ebook/dp/B07NBDM78S/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=இர்மா&qid=1592258584&sr=8-1

//

புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

Wednesday, September 23, 2020

பாமாயிலும் குரங்குகளும்

குரலுக்கு வயதில்லை


ஓராங் ஊத்தான் (Orangutan) குரங்கிற்கும் நாம் சாப்பிடும் காலை உணவான சீரியலுக்கும் (Cereals) தொடர்பிருக்கிறதா  ?  ஆமாம்.  சரி.  ஓராங் ஊத்தானுக்கும்  பாமாயிலுக்கும் ?  அதற்கும் தொடர்பு இருக்கிறது. மேலே படியுங்கள்...

நமது அன்றாட உணவில் பாம் ஆயில் தெரிந்தோ தெரியாமலோ  நேரடியாகவோ  அல்லது மறைமுகமாகவோ  கலந்திருக்கிறது. அந்தப் பாமாயில் தோட்டங்களை அமைக்க  பல இலட்சம் ஏக்கர் மழைக் காடுகள் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

இதனால்,  அந்தக் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட விலங்குகள் கொன்றழிக்கப்படுகின்றன. முக்கியமாக  ஓராங் ஊத்தான் குரங்குகள் பல்லாயிரக்கணக்கில் செத்து மடிகின்றன. இந்த அவலங்களை என்னுடைய "வனநாயகன்" நாவலும் பேசி இருக்கும்.

இந்த விவரங்களை அறிந்திருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தற்செயலாக தங்களுடைய காலை உணவான சீரியலில் பாமாயில் கலந்திருப்பதைக் கவனித்தனர். அதுவும் காடுகளை முறையின்றி அழித்து பாமாயில் தோட்டங்களை ஏற்படுத்தும் ஒரு நிறுவனத்திடம் வாங்கியவை.

உடனே செயலில் இறங்கிய அந்தக்  சிறுமிகள் முதல்கட்டமாக குறிப்பிட்ட நிறுவன தயாரிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தினார்கள். அது மட்டுமல்லாமல்,  இது குறித்து தயாரிப்பவர்களுக்கு ஒரு புகார் கடிதமும் அனுப்பி இருக்கிறார்கள். அந்தப் புகார் கடிதத்தில் எத்தனை பேர் கையெழுத்திட்டவர்கள் எத்தனை பேர்தெரியுமா  ? 8 இலட்சம் பேர்.

மேலே சொன்ன புகாருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த சீரியல் நிறுவனம். வேறு வழியில்லாமல், வரும் நாட்களில் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாத பாமாயில் உற்பத்தியாளர்களிடம் இருந்து மட்டும் எண்ணெய் கொள்முதல் செய்வதாக அறிவித்திருக்கிறது. 

படத்தில்- சூழல் சீர்கேட்டுக்கு எதிராக கொடி பிடித்த இங்கிலாந்து சிறுமிகள் ஆஷா (12) , ஜியா (10).


இப்படிப் பாமாயில் மரத் தோட்டங்கள் அமைக்கும் பொருட்டு ஒரு நாளைக்கு சராசரியாக 25 ஒராங்குட்டான்கள் கொல்லப்படுகின்றன என்பது இங்கே கூடுதல் செய்தி.

Friday, September 4, 2020

இந்தியாவிலே நீண்ட பெயருள்ள இரயில் நிலையம் எங்கு இருக்கிறது ?

பொதுவாக, இந்தியர்களின் பெயர்கள் கொஞ்சம் நீளமானது என்ற வகையில் நமது பெயர்கள் மேற்கு நாடுகளில் கிண்டலடிக்கப்படும்.  "பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் தானே எல்லாம் இருக்கிறது" என்ற ஒரு கவிதையைக் கூட கேட்ட ஞாபகம் இருக்கிறது. அதற்காக நாம் எண் கணிதம் எனும் நியூமராலஜிக்குள் (numerology) நுழையவேண்டியதில்லை.

இத்தனைக்கும், மேற்கு நாடுகளில் முதல் பெயர் (First Name), குடும்பப் பெயர் (Last Name) ஏன் மிடில் நேம் (Middle Name) கூட வைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமக்கு,  அப்பா பெயரைக் குடும்பப் பெயராக பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவில்  பெரும்பான்மையான மாநிலத்தினர் இன்னமும் ஜாதி பெயரைச் சுமந்து திரிகிறார்கள். 

நான் கவனித்தவரை, ஆந்திர நபர்களின் பெயர்கள் (குறிப்பாக ஆண்கள்) மிக மிக நீளமானவை. நா.முத்துக்குமாரின் "ஆடு மாடு மேல உள்ள பாசம், வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்..." எனும் திரைப்பாடல் வரிகள் போல. ஆந்திர மக்கள் இன்னமும்  தாத்தா, பாட்டி பெயர், ஊர்ப்பெயர், குல தெய்வப் பெயர்களை எல்லாம் இணைத்துக் கொள்கிறார்கள். 

என்னுடன் வேலை செய்த ஒரு தெலுங்கு நபருடைய பெயர் 'ராஜிவ் கிருஷ்ணமாச்சாரியலு ஸ்ரீமத் திருமலை சதீஷ்'. அவரைச் சுருக்கமாக சதீஷ் என்போம். இவ்வளவு ஏன், இந்தியாவிலே நீண்ட பெயருள்ள இரயில்  நிலையம் ஆந்திராவில் தான் இருக்கிறது.  'வெங்கட நரசிம்ம ராஜுவரிபேட்' (Venkata Narasimha Rajuvaripet) என்கிறது கூகுள்.




நமது வீடுகளில்  நாராயணசாமி என்ற பெயரே கொஞ்சம் நீளமாக இருப்பதாகக் கருதி  நாணு என்றோ, சிவக்குமாரை சிவா என்றோ காமாட்சியை காமு என சுருக்கி வசதிக்காக அழைப்போம். அந்த வகையில், நகரத்தார் வீடுகளில் விசாலாட்சியை, சாலா என்றும், சிவகாமியை சோகு என்றும், பழனியப்பனை பழம் என்றும் கூப்பிடுவார்களாம்.

பிளாக் எனும் வலைப்பூக்கள் வந்த சமயத்தில் பலர்  வேதாளம், சிறுத்தகுட்டி, புலிக்குட்டி என்றெல்லாம் புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருந்தார்கள். 
நேற்று கூட 'போடா டேய்' என்ற பெயருடைய ஒருவர் நட்பு விடுப்பு கொடுத்திருந்தார். அந்த நாட்களில் இராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் போன்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது போல, பள்ளி நாட்களில்  சுண்டெலி, கணக்குப்புலி, மூக்கொழுகி எனப் பட்டப் பெயர்கள்  வாங்கியவர்கள் தானே நாமெல்லாம் ? :)


Sunday, August 30, 2020

வனநாயகன் குறித்து-16 (கார்ப்ரேட்டின் மற்றொரு முகம்)

தமிழ்ப்படம் பார்க்கும் 1000 பேரில் ஒருவர் வாசிப்பவராக இருந்தால் கூட ஆண்டுதோறும் விற்பனையாகும் தமிழ்ப் புத்தகங்கள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  என எழுத்தாள நண்பர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.
அந்த 1000-க்கு 1 எனும் கணக்கெல்லாம் எந்த அளவு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால்,  கருத்துகளைப் பகிர்வதில் கண்டிப்பாக வாசகர்களைக் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை.  கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாகப்  பல வாசகர் கடிதங்கள், மதிப்புரைகள் எழுதியிருக்கிறார்கள்.
நேற்று "வனநாயகன்-மலேசிய நாட்கள்" குறித்து goodreads  தளத்தில் பிரியதரிசினி எழுதிய ஒரு மதிப்புரை கூட கண்ணில் பட்டது...


எப்பொழுதுமே மனிதன் தன்னை மற்றொன்றுடன் பொருத்தி பார்த்து தான் தன் சூழலின் ஆழத்தை உணருகிறான். நாவலில் சுதாவும் தான் வேலை செய்யும் நாடான
மலேஷியாவில் சொல்லப்படும் பழங்கதையான வனநாயகன் என்று அழைக்கப்படும் குரங்கின் நிலையுடன் தன்னை ஏமாற்றியவர்களின் செயல்களால் சொல்லமுடியா அவமானத்தை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு ஒப்பீட்டு அளவில் மனதை தேற்றி கொண்டாலும் கிடைத்த குறுகிய காலத்தில் தனக்கான நியாயத்தைத் தேடுபவனுக்குக் கிடைத்தது கார்ப்ரேட்டின் மற்றொரு முகம். 


சுதாவின் வழியே மலேஷியாவின் முக்கிய இடங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும். மனிதர்களின் குணங்களும் என்று புதிய சூழலை கண் முன் கொண்டு வருகிறது. கதையின் மென்நகர்வு அதற்கு ஏற்ப அமைந்ததால் இயல்பான சம்பவங்களாக நடந்தேறுகிறது.

தற்பொழுது இந்த நாவலை படிக்கும் போது ஒரு தலைமுறை இடைவெளியை

துல்லியமாக உணரமுடிகிறது. கடந்தக் காலத்தை திரும்பி பார்க்கும் நிகழ்வாகவே முற்றிலும் அமைந்தது எதிர்பாராமல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அதுவும் யாஹூ சாட் பற்றி எல்லாம் படிக்கும் போது ஞாபகங்களைத் தட்டி எழுப்பிவிடுகிறது.
ஒரு வருடம் மலேஷியாவில் இருந்த சுதாவிற்கு முடியும் காலம் கசப்பாகவே அமைந்தாலும் பல மனிதர்களுடனான தொடர்பு வாழ்ந்த காலத்தின் எச்சமாகவே மனதில் நின்றுவிடுகிறது. காதல் என்று நினைப்பது காதலல்ல அது உணரும் போது எதிரில் இருப்பது தான் காதல் என்று பத்மாவின் மூலம் அமைந்த நகர்வு எதார்த்தம்.

நாம் அனைவருமே எதார்த்தவாதிகள் தான் ஆனால் நாவல் வாசிக்கும் போது நம்மையும் மீறி ஒரு ஹீரோயிசத்தை எதிர்பார்க்கும் மனதை அடக்கத் தெரியாதவர்களும் என்பது உண்மை. சுதாவிற்கு ஏற்பட்ட மறைமுகத் துரோகத்திற்கு அவன் எதாவது அதிரடி செய்வானோ என்று எதிர்பார்த்துக் கொண்டே கடைசிவரை வந்ததும் நம் மனம் தான்.

வாடிக்கையாளர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் தேவைப்படுபவர்களுக்கு. இதில் சம்பத் என்ற கதாபாத்திரம் கார்ப்ரேட்டின் ஒரு முகம். அது இல்லாத இடம் இல்லை. தன்னை உயர்த்த கீழே இருப்பதின் மேல் கால் மட்டும் தான் வைக்க வேண்டும் மனதை வைத்தால் முதல் பலி அவனாகத்தான் போவான்.

சாரா மாதிரி பத்திரிக்கையாளர்களின் பிரசன்னமே நியாயத்தின் வாழ்விற்காக எதிர்பார்த்திற்கும் மக்களுக்கு ஒரு பலத்தை அளிக்கிறது.

பலிகளைக் கொண்டு தான் கார்ப்ரேட் வளர்கிறது. உண்மைகள் வெளிவந்த பிறகு அதற்கான அழிவு என்று சொல்வது முடிவல்ல மற்றொரு தொடக்கத்தின் புள்ளி அது.

..
கிழக்கு பதிப்பக வெளியீடான வனநாயகன் புத்தகமாகவும், கிண்டிலிலும் கிடைக்கிறது.  இணைப்பு விவரங்கள்.
https://dialforbooks.in/product/9788184936773_/

https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-VanaNayagan-Malaysia-Naatkal-ebook/dp/B06X9VTR71



Monday, August 24, 2020

பாலுமகேந்திராவின் வீடு

32 ஆண்டுகளுக்கு முன் சென்னை மாநகரில் ஒரு  சாதாரண குடும்பம் வீடு கட்டுவதற்காக எத்தனைத் துயரங்களைச் சந்திக்கிறது என்பதைப் பேசும் படம் பாலுமகேந்திராவின் "வீடு". 

வீடு படத்தைச்  சின்ன வயதில் கறுப்பு வெள்ளையாக தூர்தசனில் பார்த்தது. நேற்று மறுபடியும் பார்த்தேன். 

அறியாத வயதில் பார்த்த போது படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதாக உணர்ந்திருந்தேன். அதைத் தவிர படம் குறித்த வேறு எந்த நினைவும் இருந்திருக்கவில்லை. அதனால்,  புதிய படம் பார்க்கும் அதே ஆர்வத்துடனே  நேற்று பார்த்தேன். வீட்டில் பார்ப்பதால் தேவையற்ற காட்சிகளை வலிந்து ஓட்டும் வசதி இருந்தும் ஏனோ ஒரு வினாடி கூட அப்படிச் செய்ய தோன்றவில்லை.

இருந்தாலும், சில காட்சிகளை ஒருங்கிணைத்து ஒரே காட்சியாகச் செய்திருக்கலாமோ எனும் எண்ணம் ஓரிரு இடங்களில் தோன்றியதை மறைக்க வேண்டியதில்லை.

முன்பு, முற்றிலும் மனித உழைப்பைக் கொண்டு அஸ்திவாரம் என்னும் கடைக்கால் போடுவதில் இருந்து பக்கத்தில் நின்று சொந்த வீடு கட்டும்
பழக்கம் இன்று வழக்கொழிந்து வருகிறது. பணம் இருந்தால்  உடனே  கையில் வீடு எனும் நிலை இருப்பதால்  வீட்டைக் கட்டிப்பார்.. பழமொழி பெரும்பாலும் இன்று செல்லுபடியாவதில்லை.

அதனால், வீடு கட்டுவதன் சிரமங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்,
படம் ஒட்டு மொத்தமாக 30 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் மத்தியதர வாழ்வை அழகியலோடு ஒரு சொட்டாக நம் கண் முன்னால் நிறுத்துகிறது.

வீட்டில் அக்காவுக்குப் பிறந்தநாள் எனும்போது மதியம் பாயசமும், மாலை வடையும் வேணும் எனக் கேட்டு வாங்கிக்கொள்ளும் தங்கை.
பிறந்தநாளுக்குத் தாத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதத்துடன் 1 ரூபாய் பெற்றுக் கொள்ளும் நாயகி.  அவள் கடன் கேட்ட இடத்தில் கிடைக்காத எரிச்சலில் வீட்டுக்கு வரும் போது தங்கையிடம் காட்டும் கோபம். என குடும்ப நிகழ்வுகளை  மிக இயல்பாக செயற்கைத்தனங்கள் இன்றி அழகாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாலுமகேந்திரா.

உண்மையில் அன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏறக்குறைய  ஒரே பொருளாதார நிலையில் இருந்தனர். உறவுகள் மகிழ்ச்சியை ஒன்றாக அனுபவித்தனர். துன்பத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறினர். அதனால் அன்று உறவுகள் பலப்பட்டன. வளர்ந்தன.  என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அதுபோல, பணத்தால் சக பெண் ஊழியரைப் படுக்கைக்கு இழுக்க நினைக்கும் அலுவலக உயர் அதிகாரி ஒருபுறம் என்றால் சித்தாளைத் தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் மேஸ்திரி என வாழ்வின் இரு புறங்களையும் காட்டும் நேர்த்தி என படம் அழகான யதார்த்தமான சிறுகதையாகத்  திரையில் விரிகிறது. இறுதிக் காட்சி கூட வலிந்து திணித்தது போல இல்லாமல் இயல்பாக வந்திருக்கிறது. பாடல்கள் இல்லாத படத்துக்கு இளையராஜாவின் இசை பக்க பலமாக இருக்கிறது.

முக்கியமாக, படத்துக்கு மிகப்பெரிய பலம் அர்ச்சனாவும், அவருடைய தாத்தாவாக வரும் சொக்கலிங்க பாகவதரும். அதை நடிப்பு என்பதை விட அந்தப் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் அது தேய்வழக்காகவே இருக்கும். அதிலும் குறிப்பாக, வீட்டுக்குக் கடைக்கால் போடும் நிகழ்ச்சியில் அர்சானாவை முன்னிருத்திச் சடங்கு செய்யும் காட்சி அதில் அவருடைய முகத்தில் தெறிக்கும் பெருமையும், கம்பீரமும் படம் பார்க்கும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. இப்போது எங்கே இருக்கிறீர்கள் அர்ச்சனா ?

இன்னமும் 30 ஆண்டுகள் கழித்து அடுத்த தலைமுறையினர் பார்த்தாலும் (தமிழ் வசனங்களுக்கு ஆங்கில சப்டைட்டில் தேவைப்படலாம்) அவர்களையும் வியக்க வைக்கும் ஒரு தரமான படமாக "வீடு" கண்டிப்பாக இருக்கும்.

Thursday, August 20, 2020

தமிழ் என்ன தாடியா, வளர்க்க ? - கவிஞர் வாலி

வாலி- இயக்குநர் வெங்கட் பிரபு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நேற்று பார்த்தேன். வாலி வழக்கமான ஓர் இளைஞனுக்கான உற்சாகத்தோடும்  இயல்பான நகைச்சுவையுடனும் பேசினார்.

அதில், கேட்கப்பட்ட  முக்கியமான ஒரு கேள்வி - "சினிமாவில் பாடல் எழுதி மன நிறைவு அடையாமல் தான் வெளியில் புத்தகங்கள் எழுதுகிறீர்களா ? "

அதை இல்லை எனக் கண்டிப்பாக மறுத்தவர்,  தான் சினிமாவுக்குத் தமிழ் வளர்க்க வரவில்லை என்றவர் சற்று இடைவெளி விட்டு  'தமிழ் என்ன தாடியா, வளர்க்க ?' எனக்  கேட்டு குறும்பாகச்  சிரித்தார்.


அதைத் தொடர்ந்து பேசியவர் தான் ஒரு சினிமா கவிஞராக மட்டும் மக்கள் நினைவில் வைத்திருப்பதை விரும்பவில்லை என்றும் தானும் கண்ணதாசன் போல ஓர் இலக்கியவாதியாகவும் அறியப்பட வேண்டும் என விரும்புவதாகச் சொன்னார்.  

அதாவது, திரைத்துறையைத் தாண்டி வெளியில் இலக்கியம் எழுதினால் தான் நல்ல பெயர் வரும். இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஓர்
அந்தஸ்து பெற முடியும். அதைப் பெறத்தான் தான் புத்தகங்கள் எழுதுவதாக வெளிப்படையாகச் சொன்னார்.

உண்மையில் தமிழில் இலக்கியவாதிகள் என அறியப்படும் கூட்டம் மிகச் சிறியது.  அதுவும் யாராலும் பெரிதாக கண்டு கொள்ளப்படாத ஒன்று என்பார்கள்.  ஆனால்,  அதில் இணைய வாலி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களே பிரயத்தனப்பட்டிருப்பது வியப்பே.

யூ-டியூப் இணைப்பு 


Friday, July 31, 2020

எண்ணும் இளம் பெண்ணும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்திருந்த போது நடந்த ஒரு சம்பவம்.  என் நினைவு சரியாக இருந்தால் அது  எழும்பூர் இரயில் நிலையம் என நினைக்கிறேன்.  அதிகாலை சுமார் 5 மணி இருக்கும். இருள் பிரியும் அந்த வேளையில் இரயிலில் நிலையத்துக்கு  வெளியே  ஆட்டோவுக்குக் காத்திருந்தேன்.

அப்போது தீடிரேன  "ஐயோ... அம்மா போயிடுச்சேமா..." எனும் பெருங்குரல் குரல்  வந்த திசையில் திரும்பினேன்.  சற்று தூரத்தில்
மங்கலான மஞ்சள் ஒளி கசிந்த மின்கம்பத்துக்கு கீழே  15-16 வயதுமதிக்கத்தக்க இளம் பெண்.  பாவாடை சட்டை 
போட்டிருந்தாள். கூடவே  கையில் மூட்டை முடிச்சுகளுடன் அவளுடைய  அப்பா, அம்மா. ரொம்ப வசதியானவர்களாக  தெரியவில்லை. ஊரில் இருந்து வந்திருப்பார்கள் போல. 

அந்த இளம்பெண் செல்போனை அந்த பஸ்டாப்பில் தொலைத்து விட்டாள் போல. வேறு பஸ்சில் திரும்பி வந்து தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை போல.  ."இங்க தானே மா வச்சிட்டு இருந்தேன்... ஐயோ அம்மா.. எல்லாம் போச்சே மா...."  என செல்போன் தொலைந்து விட்ட துயரம் தாங்காமல் வாய்விட்டு அழத்தொடங்கினாள். 

அந்த அழுகை  "ஐயோ ராசா எங்கள விட்டுட்டு இப்படி போயிட்டியே..."  என செத்த வீட்டில் துக்கம் தாளாமல் நெஞ்சில் அடித்துக்கொண்டு 
அழுவது போல மரண ஓலம் எழுப்பினாள்.  நெருங்கிய குடும்ப உறவை இழந்தது  போன்ற உணர்வுப்பூர்வமாக அவளுடைய அழுகை 
பொங்கி பொங்கி கண்ணீராக வழிந்து ஓடி கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.

அவளுடைய அம்மா, அப்பாவும் எதுவும் பேசாமல்  யாரோ எவரோ என்பதுபோல் நின்றிருந்தார்கள். அவர்கள் அவளைச் சமதானபடுத்த எந்த முயற்சியும்  செய்ததாக தெரிய வில்லை.  சும்மா ரோட்டை 
வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். அவர்களைய உடல் மொழி இது உன்னோட தவறுதானே அனுபவி என்பது போல இருந்தது.

அந்த பெண் கூட செல்போன் தொலைந்ததால் திரும்ப வாங்க வேண்டுமே என கவலைப்பட்டதாக தெரியவில்லை.  
மாறாக,  அவள்  "என்னோட பிரென்ட்ஸ்ச எப்படி நான் தேடி புடிப்பேன்...  இனிமே நான் எப்படி பேசுவேன்..." என சொல்லி வாய்விட்டு கதறிக்கொண்டிருந்தாள்.

பொது இடத்தில் நிற்கிறோம், ஒரு செல்போனுக்காக வாய்விட்டு அழுகிறோம் என்ற எந்தவித பிரக்ஞையும் இ்ல்லாமல் அன்று அவள் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தது இன்று வரை மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

அவளைப் போல இளைய தலைமுறைக்கு நாம் நண்பர்கள் எனச்சொல்லி வெறும் எண்களை அறிமுகம் செய்துவிட்டோமோ என 
இன்று நினைத்துக்கொள்கிறேன். நீங்கள் ?

——

Sunday, July 19, 2020

அது என்ன இன்ஸ்டாகிராம் ?

இன்ஸ்டாகிராமில் பெயருக்காக ஒரு  கணக்கு தொடங்கி வைத்ததோடு சரி.  மற்றபடி அந்தப்பக்கம் பெரிதாகப் போவதில்லை .  பெரும்பாலும்   ஃபேஸ்புக்கில் தான் குடித்தனம்.

இன்ஸ்டாகிராம் (instagram.com) பற்றித் தெரியாதவர்களுக்கு - இன்ஸ்டாகிராம்
உலகளவில் 6வது பிரபலமான சமூக வலைத்தளம். பெரும்பாலும்
அங்கே   புகைப்படம், வீடியோக்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. இதற்கும் முதலாளி பெரியண்ணன் பேஸ்புக் தான்  .

இன்று கிடைத்த கொஞ்ச நேரத்தில், சும்மா  அங்கு என்னதான் நடக்கிறது என எட்டிப் பார்த்தால் ஆச்சரியம்.  கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இன்ஸ்டாகிராமில் நமக்கு யாரையும் பெரிதாக தெரியாது என்பதால் சும்மா குருட்டாம் போக்கில் தெரிந்த தமிழ்ப் பெயர்களைத் தேடினால், "priyabhavanishankar" என்பவருடைய கணக்கு வந்தது. சரி அவர் யாரேன கூகுள் செய்தால்,  "பிரியா பவானி சங்கர்"  ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட நடிகை என்றது. "கடைக்குட்டி சிங்கம்" என்ற படத்தில் நடித்திருக்கிறாராம்.  அவருடைய படங்களுக்குப் பல இலட்சம் லைக்குகள்.

அவர் சும்மா "Because it’s been a while!" என ஒரு புகைப்படத்தைப் போட்டிருக்கிறார். அதை 2 இலட்சம் பேர் மிகச் சாதாரணமாக லைக் செய்திருக்கிறார்கள். ஆமாம், இரண்டு இலட்சம் பேர் கை வலிக்க வலிக்கப் பொத்தானை அழுத்தி இருக்கிறார்கள்.

இப்படி இளமை பொங்கி வழியும்  இன்ஸ்டாகிராமத்தில், 18-30 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக குடியிருப்பதாகத் தெரிகிறது. 

கூகுளில் இன்ஸ்டாகிராமைப் பற்றி இன்னொரு தகவலும் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமை உலக அளவில் ஆண்களை விடப்  பெண்கள்தான் 
அதிகமான பயன்படுத்துகிறார்களாம்.  இன்ஸ்டாகிராமில், பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கையில் பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் முதல் இடத்தில் (230 மில்லியன் பேர்) இருக்கிறார்.

இந்தியாவில் செல்லப்பிள்ளை கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முதலிடம் (50 மில்லியன்).  தமிழ்நாட்டில் .. ?  ...சமந்தா அக்கினேனி  


#இன்ஸ்டாகிராம்

Wednesday, July 8, 2020

இனி எம்சிஏ (MCA) 2 ஆண்டுகள்

பல தனியார் பொறியியல் கல்லூரிகள்  ஒரு மாணவரைக் கூட சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றன எனபது மாதிரியான செய்திகளை 
இன்று நாம் பரவலாகப் பார்க்க முடிகிறது.

ஆனால், தமிழகத்தில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்  பொறியியல் கல்விச் சூழல் என்பது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும்,  அரசு பொறியியல் கல்லூரிகள் மட்டும் கோலோச்சிய இருந்த அந்த நாட்களில்
தொழிற்கல்வி எனும் ஃபுரொபசனல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக BE Computer Science படிப்பை எல்லாம் நெருங்க முடியாமல் இருந்தது. 

அந்த நாட்களில் +2 (பஃர்ஸ்ட் குரூப்)-க்கு பிறகு பொறியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத என்னைப் போன்ற பலருக்குக் கலைக் கல்லூரிகளில் சேர்ந்து அறிவியல் அல்லது கணிதத்தில் இளங்கலை படிப்பதைத் தவிர பெரிதாக வேறு வழி இருக்கவில்லை என்பதே உண்மை. அப்போது கூட, ஒருசிலர் பொறியியல் சேர்ந்தே ஆக வேண்டும் என விடாப்பிடியாக நின்று  ஓர் ஆண்டு காத்திருந்து "இம்ப்ரூவெமெண்ட்"  எல்லாம் கூட எழுதி பார்த்தார்கள். ஆனால்,  பெரும்பான்மையானவர்களின் தேர்வு என்பது கலைக்கல்லூரிகளாகத் தான் இருந்தது.

அப்படிக் கலைக்கல்லூரிகளில் படித்துக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு வரப் பிரசாதமாகவும், கடைசி நம்பிக்கையாகவும் இருந்தது எம்சிஏ (MCA) எனப்படும் மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படிப்பு. இளங்கலையில் நல்ல மதிப்பெண்களோடு கணிதத்தை ஒரு பாடமாகப் படித்திருந்தால் போதும் எனும் தகுதியோடு சில கலைக் கல்லூரிகளில் செயல்பட்டு வந்த எம்சிஏ படிப்பு பலருடைய தொழிற்கல்வி கனவை அன்று நனவாக்கியது. முன்பு, இளங்கலைக்குப் பிறகு  3 ஆண்டுகள் என்றிருந்த எம்சிஏ படிப்பு இனி 2 ஆண்டுகள் என மாற்றி
நேற்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவித்திருக்கிறது.

மற்ற மாநிலங்களின் நிலவரம் சரியாக தெரியவில்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை இது ஒரு விதத்தில் காலங்கடந்த அறிவிப்பாக தோன்றுகிறது. ஏனென்றால், இன்ஜினியரிங் கல்லூரிகள் மலிந்துவிட்ட இந்த நாட்களில் தமிழகத்தில் எம்சிஏ படிப்புக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

 

Sunday, June 28, 2020

2020 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா

அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு பெட்னா (FETNA-The Federation of Tamil Sangams in North America) தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழா என்பது  திருவிழா போல கொண்டாட்ட மனநிலையைத் தரும் ஒரு நிகழ்வு.

அந்த வகையில், கடந்த ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவுடன் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழாவையும், 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.

அதுபோல,  இந்த ஆண்டும் அட்லாண்டா மாநகரில் கோலாகலமாக திட்டமிட்டபடி  நடந்திருக்க வேண்டிய பேரவை விழா கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், பேரவையின்  தொன்மையைத் தொடரும் விதத்தில் இந்த ஆண்டு  பேரவை விழா  இணைய வழி விழாவாக நடக்க இருக்கிறது. ஆமாம், வரும் ஜூலை 3,4 & 5 ஆகிய தேதிகளில்  நடக்கும் இந்த விழாவை உலகத் தமிழர்கள் உடனடியாக கண்டுகளிக்கும் வகையில் நேரலையையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கவிதை,  இசை, கலந்துரையாடல் எனப் பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்தவிழாவில் தமிழ் நெஞ்சங்கள் தவறாமல்
கலந்துகொண்டு சிறப்பியுங்கள்.

Friday, June 26, 2020

ராக்கெட் தாதா - ஜி. கார்ல் மார்க்ஸ்

எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  கொஞ்சம் வெளிப்படையான மனிதர். மனதில் தோன்றுவதைச் சட்டென சொல்லக் கூடியவர். ஒருமுறை கவிஞர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. என்ன ?...  இரண்டாவது கொஞ்சம் 'லேபர் இன்டென்சிவ்' என்று சொல்லிவிட்டு எளிதாகக்  கடந்து சென்றவர்.

அதுபோல அவர் எல்லா படைப்புகளுக்கும் நற்சான்று கொடுத்துவிடுபவரும் அல்ல. தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத கறார் பேர்வழியான அவர் கடந்த ஆண்டு ஜி. கார்ல் மார்க்ஸின் "ராக்கெட் தாதா" நூலை வெளியிட்டு பேசும் போது ஒரு விசயத்தைக் குறிப்பிட்டார். அதாவது, இந்த நூலின் எழுத்தாளரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. முன் அறிமுகம் எதுவுமில்லை.  ஆனால், நல்ல படைப்பாளர் என்பதால் ஊரில் இருந்து சென்னைக்கு வந்து வாழ்த்துகிறேன் எனச் சொல்லி இருந்தார்.

நாஞ்சில் நாடனைக் கவர்ந்த எழுத்து எனும் காரணத்துக்காகவே நான் அந்த நூலை கிண்டிலில் தேடிப்பிடித்து வாங்கி வாசித்தேன். எழுத்தாளர் ஏமாற்றவில்லை. ஆமாம், ஆசிரியர் சொற்சிக்கனத்தோடு காத்திரமாகக் கதை சொல்லும் நேர்த்தி தெரிந்தவர். உதாரணமாக ராக்கெட் தாதா எனும் அந்தக் கதையே ஒரு திரைப்படத்துக்கான,  நெடுங்கதைக்கான பரப்பியல் கொண்டது. ஆனால், அதை மிக அழகாக ஒரு சிறுகதைக்குள் அடக்கியிருக்கிறார். செறிவான எழுத்து.

தொகுப்பில் தொத்தமாக பதினோரு கதைகள். ஆணோ, பெண்ணோ வாசிப்பவர்கள் எளிதில் தொடர்புபடுத்தக் கூடிய பல பாத்திரங்கள். அதில் காஃபி ஷாப் எனும் பகடி-கதையும் அடக்கம். சில கதைகள் 1980களில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அதுபோல,  தொகுப்பின் கடைசி கதை எத்தனைப் பேருக்குப் புரியும் எனத் தெரியவில்லை.  மற்றபடி வாசிக்கலாம்.

நூல் : ராக்கெட் தாதா
ஆசிரியர்: ஜி.கார்ல் மார்க்ஸ்
விலை: ₹190
ISBN: 9789387333543
வெளியீடு: எதிர் வெளியீடு
வகை: சிறுகதைகள் / குறுங்கதைகள்

Friday, June 19, 2020

'க்ரியா' ராமகிருஷ்ணன்

தமிழ்ச்சரம் (tamilcharam.com) வலைத்திரட்டி வந்தபிறகு, தமிழில் சிறப்பாக எழுதும் பலருடைய புதிய தளங்களின் அறிமுகம் கிடைக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் கண்ணில் பட்டது. ஆசை அவர்களுடைய தளம் (http://writerasai.blogspot.com/).  'ஆசை' என்பது  அவருடைய இயற்பெயரா அல்லது புனைப்பெயரா எனத் தெரிந்து கொள்ளும் ஆசையில் அவருடைய தளத்தைக் கொஞ்சம் துழாவிய போது, ஆசை என்பது ஆசைத்தம்பி என்பதன் சுருக்கம் என்றும் மன்னார்குடிக்காரரான அவர் தற்போது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பணிபுரிகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஆசை தனது தளத்தில் கடந்த சில நாட்களாக  'க்ரியா' ராமகிருஷ்ணன் பற்றிய ஒரு தொடர் எழுதி வருகிறார். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய  75-வயது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஆசை அவருடனான தனது அனுபவங்களை மிகச் சிறப்பாக எழுதிவருகிறார். 

இதற்கு முன் பெரியவர் கிரியா ராமகிருஷ்ணன் குறித்த முன் அறிமுகம் எனக்கு எதுவும்  பெரிதாக இல்லை.  வாசித்த பின்பு, அவர் கிரியா பதிப்பகம் ஊடாக தற்கால தமிழ் அகராதி, புதிய தமிழ் எழுத்துருக்கள்,
 'க்ரியா' ராமகிருஷ்ணன்
குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளின் படைப்புகள்,  பல நேரடி மொழி பெயர்ப்பு நூல்கள்  எனத் தமிழ் பதிப்புத்துறையில் புது இரத்தம் பாய்ச்சியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நவீனத் தமிழுக்குப் பெரும் பங்காற்றியவர்களுள் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து வாசிக்க  ஆர்வமிருப்பவர்களுக்கு - ஆசை அவர்களுடைய தளம் http://writerasai.blogspot.com/