Monday, December 10, 2018

கடவுளின் செயல்(Act of God)

2015ல் நடந்த சம்பவம் இது.  டிசம்பர் விடுமுறையில் இந்தியா
வந்து மூன்று வாரம் இருப்பதாக ஏற்பாடு. விமான டிக்கெட்டும் எடுத்தாகிவிட்டது.  ஆனால், எதிர்பாராத விதமாக சென்னையில்  பயணம் செய்வதற்கு நான்கு ஐந்து நாட்களுக்கு முன் சாதரணமாகப் பெயத் தொடங்கிய மழை பேய் மழையானது. அசாதாரணமான மழை. இரவு, பகல் என விடாமல் தொடர்ந்து பெய்த  கனமழையால் அணை உடைந்து சென்னையின் பல இடங்கள் நீரில் மூழ்கி சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

அன்றிரவு மீனப்பாக்கம் விமானநிலையத்தில் சர்வதேச விமானங்கள் தண்ணீரில் மூழ்கியதால் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டு விமானசேவை ரத்துசெய்யப்படுகிறது. பதைபதைப்புடன்
ஃபிளாரிடாவில் காத்திருந்த நான் விமானசேவை நிறுவனத்திற்கு போன் செய்து கேட்டபோது சென்னை செல்லும் விமானங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்படுகின்றன என்றார்கள். சரி, அங்கிருந்து ? அவர்களிடம் பதிலில்லை.
அடுத்த நாள் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டிருந்த எனக்கு அவர்கள் இரண்டு வாய்ப்புகள் தந்தார்கள். ஒன்று டிக்கெட்டை இன்னொரு நாளுக்கு மாற்றிக் கொள்வது இல்லை முற்றிலுமாக கேன்சல் செய்துவிடுவது.

துரதிஷ்டவசமாக என்னால் அந்த இன்னொரு நாளை தர இயலாத சூழல். சென்னையில் காரோடிய சாலைகளில் படகு ஓடிக் கொண்டிருக்கும் போது
நான் போய் சென்னையில் இறங்கி யார் வீட்டில் தங்கி...

அதனால் டிக்கெட்டுடன் கையில் இருந்த விமான இன்சுரன்ஸை நம்பி பயணத்தை ரத்துசெய்துவிட்டேன். அடுத்து கேன்சல் செய்த டிக்கெட்டுக்கான பணத்தைக் கேட்டு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டபோது தான் வில்லங்கம் வந்து சேர்ந்தது. காலநிலை பிரச்சனைகளால் விமானம் ரத்து செய்யப்பட்டால் நீங்கள் பயணத்தேதியை மாற்றி இருக்கவேண்டுமே தவிர கேன்சல் செய்தது செல்லாது. அதனால் இழப்பீடு இல்லை என கைவிரித்துவிட்டார்கள்.

அவர்களுக்கு சென்னை இந்தியாவில் வடக்கிலா ? தெற்கிலா?  என்று கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கோ மகா எரிச்சல். டிசம்பர் சீசனில் அதிக விலைகொடுத்து வாங்கிய டிக்கெட்டுக்கான பணத்தை வீணாக இழக்க விருப்பமில்லை. இதற்கு பயன்படாத இன்சுரன்ஸ் எதற்குதான் பயன்படும் என நினைத்து ஒரு பெரிய மறுப்புக் கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தேன்.  அதில் இது "அக்ட் ஆஃப் காட் (Act of God)" என ஆங்கிலத்தில் சொல்லும் கடவுளின் செயல். மனிதக்கட்டுப்பாட்டைத் தாண்டிய ஒரு இயற்கை அபாயம்.  நான் துணிந்து சென்னை போயிருந்தாலும் எந்த ஓட்டலும் திறந்திருக்க வாயப்பில்லை. இது வரலாறு காணாத பேரழிவு எனச் சொல்லி அதற்கான பிபிசி, சிஎன்என் போன்ற சர்வதேச ஊடகத் தரவுகளை இணைத்து இதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை எனச் சொல்லி கழுத்தில் துண்டைப் போட்டி இறுக்கினேன்.

ஒருவழியாக ஒரு மாத பரிசிலனைக்கு செய்து பிறகு இழப்பீட்டு பணத்தை
திரும்பத்தருவதாக இமெயில் அனுப்பியிருந்தார்கள். சென்னை வெள்ளம் போன்ற எதிர்பார்க்காத நிகழ்வுகள் எப்பொழுது வேண்டுமானாலும்  பயணங்களைத் தடம் புரளச் செய்து விடலாம் என்பதனால்
இப்பொழுதெல்லாம் தவறாமல் நான் பயண இன்சுரன்ஸ் எடுத்துவிடுகிறேன்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Wednesday, December 5, 2018

தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

இதுவரை வாசித்ததில் ஆகச்சிறந்த பயணக்கட்டுரைத் தொகுதி எழுத்தாளர்
எஸ்.ரா. வின் `தேசாந்திரி `  எனச் சொல்வதில் எனக்குப் பெரிய தயக்கம் எதுவுமில்லை. அமெரிக்காவின் புலிட்சர் பரிசைத் தமிழுக்குத் தருவதாக இருந்தால் சமகாலத்தில் தந்து பெருமை படுத்தப்படவேண்டியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று கூடச் சொல்லலாம்.

தேசாந்திரி -அவர்  வாரந்தோறும் ஆனந்த விகடனில் எழுதியத் தொடர்
பயணக்கட்டுரைகளின் தொகுப்பு.  வடக்கே காசி முதல் தெற்கே குற்றாலம் என தேசம் முழுமையும் திரிந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளின் சிறப்பம்சமே அதன் வடிவம் என்றுகூட சொல்லத் தோன்றுகிறது. வழமையான பயணக்கட்டுரைகளின்  எல்லா
வடிவங்களையும் கட்டுடைத்து ஒரு புதியபாணியில் வாசகர்களின்
மனதோடு பேசி இருக்கிறார். இந்தக் கட்டுரைகள் இலக்கியத் தரத்தோடு இருப்பதும் சிறப்பே.

சோழர்களின் கலை உச்சமாகக் கருதப்படும் கங்கைகொண்ட சோழபுரம்,
தஞ்சை சரபோஜியின் சரஸ்வதி மகால், நல்லதங்கங்காள் தன் பிள்ளைகளோடு கிணற்றில் விழுந்து மாண்டதாக நம்பப்படும் அர்ச்சுனாபுரம்  என நீளும் அவருடைய இந்தப் பயணம் மிக நீண்டது.
அந்தப் பயணத்தில் வாசகனோடு ஆத்மார்த்தமான நெருங்கிய உரையாடல் செய்தபடி அவனுடைய கரம் பிடித்து அழைத்துச் செல்லும் எழுத்து
நேர்மையானது.

வெவ்வேறு தளத்தில் இயங்கும் இந்தக் கட்டுரைகள் தண்ணீரை ஒரே மடக்கில் முழுவதுமாக குடிப்பது போல்  ஒரே மூச்சில் தொடர்ந்தார்போல் வாசிக்கக் கூடியது அல்ல. மாறாக அலாதியான வாசிப்பனுபவத்தைப் பெற தினம் ஒரு கட்டுரை என வாசித்தாலும் குற்றமில்லை எனச்
சொல்லும்படியான ஆழமான எழுத்து. கட்டுரைக்குப் பொருத்தமாக கவிதைகளும், ஒவியங்களும் துருத்திக்கொண்டில்லாமல் இயல்பாக சேர்த்திருப்பது கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணமானத்தைத் தந்திருக்கிறது.

தொகுப்பில் குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல பெரிதாக இல்லை. மாறாக இந்த எழுத்தோவியத்துக்கு அட்டைப் படமாக புத்தரின் புகைப்படம் ஏனோ பொருத்தமில்லாமல் தோன்றுகிறது. அதுவே வேறு ஓவிமாகவோ இல்லை புத்தரின் ஒவியமாக கூட இருந்திருந்தால் அது புத்தகத்தை இன்னொரு படி உயர்த்திப் பிடித்திருக்கும்.

எஸ்.ரா. இந்தப் பயணத்தின் ஊடாக இன்று  நமது பாரம்பரியமான கலைகளும், பண்பாடும் மரபும் மக்களால் பின்தொடரப்படாமல் கைவிடப்பட்டு உதாசினப்படுத்தப்படுவதை ஆதங்கத்தோடு கவலை தேய்த குரலோடு பதிவுசெய்திருக்கிறார். அது ஒரு தமிழ் எழுத்தாளனின் குரல் என்பதைத் தாண்டி அது காலத்தின் குரலாகவே பதிவுசெய்யப் பட்டிருப்பதாக நினைக்கிறேன். தமிழின் முக்கியமான இந்தச் சமகால நூலை அனைவரும் வாசிக்கவேண்டும்.

குறிப்பு- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை வாழ்த்துவோம்.

Saturday, December 1, 2018

நவம்பர் - தேசிய நாவல் எழுதும் மாதம் (NaNoWriMo)

எழுதுவது என்றில்லாமல் பொதுவாக கலை தொடர்பான விசயங்களுக்கு
படைப்பூக்கம் அவசியம். அதுவும் புனைவு எழுதுபவர்களுக்கு அது கூடுதலாக தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். அந்தப் படைப்பூக்கத்துக்கான தூண்டுகோல் எது ?

பெரும்பாலும் இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. அவை அவர்களின் வாழ்வோடு
ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவை. அவர்கள் வாழ்வில் தன்னைப் பாதித்த, தான் கடந்து வந்த வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களை, தனது உணர்ச்சிப் போராட்டத்தை அல்லது தான் சந்தித்தவர்களின் மறக்கமுடியாத அனுபவங்களை எழுத்தில் நாடகமாக நடத்திக் காட்டுவார்கள்.

அப்படி ஒரு கதையை எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். சிலருக்கு அது ஒரு பயணம் போல. சிலருக்கு அது ஒரு  குறுக்கெழுத்து விளையாட்டு போல. சிலருக்கு எழுத்து இருட்டில் மெழுகுவர்த்தி போல.
சமயங்களில் எழுத்து சிலருக்கு மனக்காயங்களுக்கு மருந்தாகவும், துயரத்துக்கு வடிகாலாகவும் அமைவது உண்டு. அந்த வகையில் நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

தற்போது கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கும்
காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான காட்டுத்தீ. அந்த நெருப்புக்குத் தான் குடிருந்த வீட்டையும் மொத்த கம்யுனிட்டியையும்
இழந்த எழுத்தாளர் மாட் ஃபோர்ப்ஸ். தனது அனுபவத்தை நாவலாக
எழுதத் தொடங்கியிருக்கிறாராம். வாழ்க்கையின் துன்பத்துக்கு  மிகச்சிறந்த பதில் அதன் அழிவுகளில் இருந்து மீண்டுவருவதே. அவர் அந்தத்  துன்பங்களில் இருந்து மீள்வது என்பது தனக்கு எழுதுவது என்கிறார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஃபிளாரிடா மாநிலத்தை உலுக்கிய இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதிமுடித்திருக்கிறேன். உலகமெங்கிலும் நவம்பரை தேசிய நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகிறார்கள் (NaNoWriMo). அந்த (30-Nov) நவம்பரில் இதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

Thursday, November 22, 2018

கஜா புயலில் கால்நடைகள்

ஆடு, மாடு, நாய், பறவை மட்டுமல்லாமல் பொதுவாகவே விலங்குகளுக்கு புயல்,வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

அவை மனிதர்களைப் போல் இல்லாமல் சூழ்நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து அவற்றை முன்கூட்டியே  உணர்ந்து கொள்கின்றன. குறிப்பாக புயல் சமயங்களில் வானிலையில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாட்டைத் தெரிந்துகொள்கின்றன. அந்தச் சமயங்களில் அவற்றின் போக்கு வழக்கத்திற்கு மாறாக இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பறவைகள் வித்தியாசமாக ஒலி எழுப்பியபடி அவசர அவசரமாக கூட்டுக்குத் திரும்பவதையும், நாய், மாடு, பூனைகளின் கண்களில் தோன்றும் ஒருவித மிரட்சியையும் கவனித்திருக்கலாம்.

அப்போது நாய்கள் குட்டிபோட்ட பூனைபோல நிலையில்லாமல் உலாத்திக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். சில நாய்கள்
பயத்தில் வாலை  உள்நோக்கி சுருட்டி வைத்துக் கொண்டிருக்கும். சில வீட்டில் பாதுகாப்பான இடத்தைத் தேடி பதுங்கும். சில வழக்கத்திற்கு மாறாக நம் கால்களைச் சுற்றி சுற்றி வரும்.

இது நாய்கள் வீட்டில்  ஊளையிட்டால் மரணத்தின் சகுனம் என்பது போல நம்பிக்கை சார்ந்த விசயமில்லை. மாறாக மனித செவி உணர இயலாத தாழ்ஒலிகளை விலங்குகளால் உணரமுடியும் என்பது அறிவியல் உண்மை.
இங்கே அமெரிக்காவின் ஃபிளாரிடாவில் ஹரிக்கேன் சமயங்களில் சுறாமீன்கள் முன்கூட்டியே ஆழ்கடல் பகுதிகளுக்குத் தஞ்சம் புகுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுபோல ஆபத்து சமயங்களில் விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுவதும், வெள்ள சமயங்களில் மேடான இடங்களுக்கு கூட்டமாகத் தப்பித்துச் செல்வதும் இயற்கையான நிகழ்வுகளே.

சமீபத்திய கஜா புயலில் சிக்கி பல ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துபோனதைப் பார்த்தோம்.  புயலின்போது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டும் நாம் ஐந்தறிவுள்ள விலங்குகளுக்கு என்ன
செய்துவிட்டோம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
இயற்கைப் பேரிடருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரிதமாகச் செயல்பட்டு  மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினோமா ?  அப்படி அனுப்பியிருந்தால் அதே அளவு கரிசனத்தை நம்முடைய கால்நடைகளுக்கும் காட்டியிருக்க வேண்டாமா ? 2004இல் வந்த சுனாமி போல எந்தவொரு முன்னறிவுப்புமின்றி ஒரு பேரழிவு
வரும்போது விலங்குகளைத் தவிக்கவிட்டு மனிதர்களாகிய நாம் தப்பிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், முன்னெச்சரிக்கையோடு கஜா போன்ற பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது ?

எல்லா மாவட்டங்களிலும்  இயற்கைப் பேரிடர்களின் போது மக்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க இடம் இருப்பது போல விலங்குகளுக்கு
இருக்க வேண்டியது அவசியம் தானே. எல்லா மாவட்டங்களிலும்
இல்லாவிட்டாலும் கால்நடைகள் அதிகமுள்ள கடலோர மாவட்டங்களிலாவது செய்திருக்கலாமே. அதிகம் வேண்டாம் புயலின் கண் (cyclone eye) நேரடியாக தாக்கப் போகிற வேதாரண்யம், கோடியக்கரை கடலோரப் பகுதிகளில் இதுமாதிரியான முன்னெச்சரிக்கைகளைச் செய்திருந்திருக்கலாமே.

சரி, நாகை மாவட்டத்தின் நன்னம்பிக்கை முனையான கோடியக்கரையில் வன விலங்கு சரணாலயம் என்ற பெயரில் அடைத்து வைத்திருந்த
காட்டுயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கையாக நாம்  என்ன செய்தோம் ?
கடலில் இருந்து தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் அந்தச் சராணாலயத்தில் மான்கள் உள்ளிட்ட பல ஆயிரம் விலங்குகள் வீசிய புயல்காற்றில் சிக்கி தப்பிக்க வழியின்றி திணறியிருக்குமே. அச்சத்தில் துள்ளி ஓடிய அந்த மான்களின் கூக்குரல் மனிதர்களுக்குக் கேட்டிருக்குமா ?  இல்லை அலறியபடி மரத்துக்கு மரம் தாவி ஓடிய குரங்குகளின் அலறல் தான் கேட்டிருக்குமா ?

வாய்ப்பு இல்லை. விலங்குகளிடமிருந்து இந்த பூமியைக் கவர்ந்த மனிதன் அவற்றைப் பல லட்சம் ஆண்டுகளாக அடிமையாக்கி அல்லவா வைத்திருக்கிறான். அடிமைகளுக்கு இந்த உலகில் குரல் இருக்கிறதா என்ன ?

Monday, November 19, 2018

கஜா- அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள்

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்கவாழ் தமிழ்நண்பர்கள் தன்னார்வமாக ஒரு குழுவாக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

இந்தக் குழு புயலால் கடும் சேதமடைந்தவர்களுக்கு உதவும்பொருட்டு நிதி உதவி என்பதைத் தாண்டி களப்பணியாளர்களையும், பயனாளிகளையும் ஒருங்கிணைக்கும் பணியையும் அதற்குத் தேவையான தொழிநுட்ப வசதிகளையும் மிகத் துரிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

நிவாரண உதவி தேவைப்படுபவர்களும் அதற்குத் தன்னார்வமாக உதவி செய்ய நினைப்பவர்களும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக்
கொள்ளலாம். களப்பணியாளர்களை ஒருங்கிணைக்கும் குழு 24X7 செயல்படுகிறது.


அவர்களுடைய இணையதளம் - http://www.gajahelp.valaitamil.com/
விழுப்புணர்வு காணோளி-  https://youtu.be/XR4QkEMz4Xc

Sunday, November 18, 2018

கஜாவுக்குப் பிறகு...

கஜா பேரழிவுக்கு பிறகான பாதிப்பு குறித்த செய்திகள் உள்மாவட்டங்களில் இருந்து மெள்ள வரத்தொடங்கியிருக்கின்றன. புயலுக்கு இதுவரை 45க்கு அதிகமானவர்கள் மரணமடைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எங்கள் ஊரில் இருந்து வந்திருக்கும் நிழற்படங்களையும், வீடியோக்களையும் என்னால் முழுதாகப் பார்க்க முடியவில்லை. புயலின் கோரதாண்டவத்தால் ஊரே சூரையாடப்பட்டு முற்றிலுமாக உருகுலைந்து கிடக்கிறது.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் வீட்டைச் சுற்றி நின்ற முப்பது, நாற்பது வருட மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து அகாலமாக விழுந்துகிடக்கின்றன.  வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி கிளைகள் உடைந்து, மரக்கொப்புகள் விழுந்து, பசுந்தலைகள் கொட்டி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.  வீடியோவில் பறவைகளும், அணில்களும், சில் வண்டுகளும் விடாமல்  தொடர்ந்து அலறி ஏதோ நிகழக்கூடாத அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைச் சொல்வது போல போரோலி எழுப்பும் காட்சிகள் வயிற்றைப் பிசையவைக்கின்றன.


தோட்டத்தில் மா,பலா, வாழை, தென்னை, பாக்கு, தேக்கு, கொய்யா, வேம்பு, நார்த்தை, எழுமிச்சை என பலநூறு மரங்கள் மல்லாந்து தலைசாய்த்து கிடக்கிறன. பாதிரி, ஒட்டு, பங்கனப்பள்ளி, நீலம் என வகைவகையாக காய்த்துக்கொண்டிருந்த மாமரங்கள் அத்தனையும் ஒன்றுவிடாமல் வேரோடு சாய்ந்துகிடக்கின்றன.

அதுபோல செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் என குலைதள்ளிய வாழை மரங்கள் நுனி முறிந்து கிடக்கின்றன.
பல்லாண்டுகளாக காய்த்துக்கொண்டிருந்த பலா மரங்கள் சுழல்காற்றில் சிக்கி தலைதிருகி போட்டதுபோல மரணித்துக் கிடக்கின்றன. மரங்களோடு சேர்ந்து மின்கம்பங்களும் விழுந்து கம்பிகள்  அறுந்து கொடிபோல சுற்றிக் கிடைக்கின்றன. அகன்ற கிளைகள் கொண்ட முதிர்ந்த தேக்கு மரங்கள் வேரோடு முறிந்து பாதையில் விழுந்து கிடப்பதால் தோட்டத்தின் உள்ளே முன்னேறி செல்லமுடியாத நிலை.

இப்படி ஊழித் தாண்டவமாமாடிச் சென்றிருக்கும் கஜா இது போல எத்தனையோ லட்ச கிராமமக்களின் வாழ்வாதாரத்தை பறித்துச் சென்றிருக்கிறது.  மண், மரம், பறவை, அணில் என இயற்கையோடு இயைந்து வாழ்ந்த கிராமத்து மனிதர்களின் உயிர்குலையைச் சுத்தமாக அறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

தடைபட்டுள்ள மின்சாரம் வந்து, தகவல்தொடர்பு கிடைத்து அவர்களுடைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப கண்டிப்பாக சில மாதங்கள் ஆகலாம்.  அவர்கள் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறார்கள். கஜா விட்டுச் சென்றுள்ள இந்த வடு இனி வரும் பல்லாண்டுகளுக்கு அவர்களின்
நினைவை விட்டு அகலப் போவதில்லை.  நேற்றுவரை மற்றவர்களுக்கு உணவளித்த அந்த வெள்ளந்தி மனிதர்கள் இன்று உதவிக்கு நிவாரண முகாம்களில் கையெந்தும் நிலை.

புயலுக்குப் பின்  சாலைகளில் கிடக்கும் மரங்களை அகற்றும் வேலையை அரசாங்கம் உடனடியாக செய்து தருமே தவிர விளைநிலங்களையும், மரங்களையும், கால்நடைகளையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிற்பவர்களுக்கு  அரசு நிவாரணம் உடனே கிடைத்துவிடும் என நான் நம்பவில்லை.

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற
அத்யாவசியங்கள் உடனடியாக தேவை. பல இடங்களின் விவசாயிகளின்
வீடுகளைச் சுத்தப்படுத்தவும் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தக் கூட ஆட்கள் கிடைக்காது என்பதே உண்மை அப்படியே கிடைத்தாலும் செலவு செய்யமுடியாத சூழல். அதனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நமது உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது. அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்பது நமது கடமையும் கூட.


படங்கள். நன்றி - இணையம். (கடைசி படம்)

Monday, November 12, 2018

மறப்போம்... மன்னிப்போம்

துபாயிலிருந்து கிளம்பி நீயூயார்க் விமானநிலையத்தில்  வந்து
இறங்கி பெட்டியைத் தேடினால்  அதிர்ச்சி. செக்கின் செய்த இரண்டு பெட்டிகளில் ஒன்று வந்து சேரவில்லை. விமானத்தில் ஏற்றிய கடைசி பெட்டி 
வெளியே வரும் வரை பொறுத்து பொறுத்துப் பார்த்து காத்திருந்துதான் மிச்சம். கடைசிவரை பெட்டி  வரவில்லை. கூடவே அகோர பசி வேறு. விதியை  நொந்தபடி அங்கே இங்கே என விசாரித்து  ஒருவழியாக காணவில்லை என வாடிக்கையாளர் சேவையில் புகார் தந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வரும்போது நள்ளிரவு 1 மணி.  24 மணி நேரப்பயணக் களைப்பு.
அசதியில் படுக்கையில் விழுந்து காலையில் அலுவலகத்துக்கு கிளம்பலாம் என எழுந்தால் அடுத்த அதிர்ச்சி. பல் துலக்க, சவரம் செய்ய,குளிக்க எனத்
தேவையான எல்லாம் காணாமல் போன பெட்டியில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி ? வீட்டில் இருந்த பழைய பேஸ்டை தேடி எடுத்து பிதுக்கி துவம்சம் செய்து பல் துலக்கினேன். விடுமுறைக்கு பின் அலுவலகம் போவது பெருங்கொடுமை அதுவும் இரண்டுநாள் தாடியோடு போவது ?
காலையில் திறந்தும் திறக்காமலும் இருந்த கடையில் முதல் ஆளாக
நின்று 'அத்தியாவசிய'ங்களை (essentails) வாங்கி ஒருவழியாக வேலைக்குப் போய் சேர்ந்தேன்.

பெட்டி காணாமல் போன மூன்றாவது நாள் கண்டுபிடித்துவிட்டோம்
என வீட்டுக்கு பெட்டியை அனுப்பியிருந்தார்கள். பெட்டியில் இருந்த
பொருட்களை சரிபார்த்த கையோடு 'அத்தியாவசியம்' என முதல்நாள்
வாங்கிய ரசீதைத் தேடி எடுத்தேன்.  உங்களுடைய கவனக்குறைவால் தான் இதெல்லாம் வாங்க நேரிட்டது, கூடவே மனஉலைச்சல் வேறு  எனச் சொல்லி
நஷ்டஈடு கேட்டு அந்த ரசீதை விமானசேவை நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தேன்.

எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கான முழுத்தொகையையும் காசோலையாக அனுப்பியவர்கள் கூடவே ஒரு வருத்தக்கடிதத்தையும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்கள். போனால் போகிறார்கள். மறப்போம்.  மன்னிப்போம். :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Sunday, November 11, 2018

மலையாள மேலாளர் வாக்கு

பல வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு மலையாளி எனக்கு மேலாளராக இருந்தார். அப்போதே அவருக்கு வயது 60 இருக்கும். அடுத்தவர்களை சரியாக எடைபோட்டு வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். அலுவலகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிழும் சரளமாக பேசினாலும் அடிக்கடி மலையாள பழமொழிகளை அப்படியே மேற்கோள் காட்டுவார்.

ஒருமுறை அறைக்குப் பேச அழைத்திருந்தார். போயிருந்தேன்.
அப்போது புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ஒரு பையனின் பெயரைச் சொல்லி, அவனுக்கு என்ன வேலை கொடுக்கலாம் ? என ஆலோசனை கேட்டார். நிலுவையில் இருந்த எல்லா வேலைகளையும் சொன்னேன்.  கடைசியில் இதெல்லாம் சரியா வராது என்றவர், தானாகவே உருப்படாத வேலை ஒன்றைச் சொல்லி அதைக் கொடுக்கலாம் என்றார். "அதை புதிதாக வந்தவரால் செய்யமுடியாதுங்க" என விளக்கியபோது.  "எனக்கு அதுதான் வேணும், அவன் அடிக்கடி கேஃப்டேரியா பக்கம்  தேவையில்லாமல் கடலை போட்டுகிட்டு திரியிரான்" என்றவர் சிரித்தபடி 'பட்டிக்கு முழுவன் தேங்கா கொடுத்தது போல இருக்கனும்' என்றார்.

நான் புரியாமல் தலைசொறிந்த போது, அவர்  சிரித்தபடி "மலையாளத்துல அப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்கப்பா. இட்ஸ் Like a dog  gets a whole coconut. give something which they cannot use.. அதாம்பா தொந்தரவு தற்ர நாய்க்கு முழுத்தேங்காய கொடு. அது நம்மல விட்டு போய் கொஞ்ச நேரத்துக்கு  அத போட்டு உருட்டி திரிஞ்ட்டு வரட்டும் " என அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படும் பல விசயங்களைப் பார்க்கும்போது அந்த மலையாள மேனேஜரை தான் நினைத்துக்கொள்கிறேன். :)

Tuesday, October 30, 2018

என் பெயர் லோலோ...

ஒருநாள் மதிய உணவுக்குப்பின் லேசாக கண் அசரும் சமயத்தில் வந்த
அந்தப் போனை பதறியடித்து எடுத்துப் பேசினேன். உடைந்த ஆங்கிலத்தில்
ஒரு பெண் குரல். மெக்சிகன் உணவகத்தில் இருந்து பேசுவதாகச் சொன்னாள்.

நடந்தது இதுதான் . கடந்த வாரம் நான் அங்கே போயிருந்த போது
எனது கிரெடிக்கார்டு ரசீதில் ஒரு சின்னக் குளறுபடி செய்துவிட்டார்கள்.  அதாவது அசலான தொகைக்கு பதிலாக இரண்டு மடங்கு எடுத்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அது ருசியும், தரமும் இல்லாத உணவு.  மாத இறுதியில் அது எப்படியோ எத்தேர்சையாக என் கண்ணில் பட, நல்ல சாப்பாட்டுக்கு கொடுத்தாலும் பரவாயில்லை, இவர்களுக்கு எதற்கு? அநியாயம் என நினைத்து அவர்களை  இரண்டு முறை அழைத்து  புகார் சொல்லியிருந்தேன்.

அதற்காக அழைத்தவள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டாள். ' பராவாயில்லை, அடுத்து நடக்கவேண்டியதை சொல்லுங்க'  என்றேன்.
' உங்க கிரெடிக் கார்ட் நம்பரைக் கொடுங்க'  என வாங்கி கொண்டவர்கள், பாக்கியை திரும்ப அனுப்பிவிடுவதாக சொன்னார்கள்.

பிறகு  கொஞ்சம் தயக்கத்தோடு, 'நடந்த தவறுக்கு நீங்களும் ஒரு
காரணம்' என்றாள். நான் குழப்பத்தோடும், கடுப்போடும் 'புரியலயே' என்றேன்.  'உங்க போனுக்கு ரசீதின் நகலை அனுப்பியிருக்கேன், பாருங்க 'என்றாள். பார்த்த பிறகு புரிந்தது. 'டிப்' என்ற இடத்திலும், 'மொத்தத் தொகை' என்ற இரண்டு  இடங்களிலும் '$20' என எழுதியிருக்கிறேன்.

வேறு வழியில்லாமல். ' ஓ.. ஓகே... என வழிந்துவிட்டு , இவ்வளவு நல்லா இங்கிலீஸ் பேசும் உங்க பேரு என்ன ?'  எனக் கேட்டு சமாளித்தேன்.

' தேங்யூ ' என வெட்கப் புன்னகை பூத்தவள். ' லோலோ' என்றாள்.

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Wednesday, October 17, 2018

பிரிக்க முடியாதது - காதலும் .... ?

முன்பெல்லாம் காதலர்கள் ரகசியமாக கடிதங்களைப் பரிமாறிக்கொள்ள
வேண்டியிருந்தது. மற்றவர்களைக் குழப்பவேண்டும் என்பதற்காக  "காதலிக்கிறேன்" என்பதை "ன்றேகிக்லிதகா"  என்றெல்லாம் பின்புறமாக  எழுதி நம்மைத் தலைசொறிய வைத்தார்கள்.

ஆனால், இப்போது  பிரிக்க முடியாதது காதலும் ரகசியமும் என்றிருந்த காலமெல்லாம் கடல் ஏறிப் போய்விட்டது. இமெயிலும், கைதொலைபேசியும் தாராளமாகப் புழக்கத்தில் இருப்பதால் காதலர்கள்  ரகசியமாகச் செய்திகளை அனுப்ப ரொம்ப அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை.

ஆனால், இன்றும்  கிரிப்டோகிராஃபி எனும் ரகசிய எழுத்துக்கலை
ராணுவத்தில் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அதுவும் போர் நடக்கும் சமயங்களில் எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு ரகசியமாக செய்தி பரிமாறுவது அதி முக்கியம். அதுவே போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது. சமீப காலமாக  இந்தத் துறை உலகம் முழுவதும் கணினிகளின் கைகளுக்குப் போய்விட்டது. அதனால் ரகசிய செய்திகளை வழிமறித்தாலும் குறியீடுகளை உடைப்பது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  மிகச் சவாலாகியிருக்கிறது. அப்படியும் கூட  விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசானாஜ் போன்ற ஹேக்கர்கள் வென்று கொண்டுதானிருக்கிறார்கள்.

இதுதொடர்பான ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதன்முதலாக ரகசியச் செய்திகளை ஸ்பார்டன்கள் எனும் கிரேக்கர்கள் தான் மறையாக்கம் (Encryption) செய்தார்களாம். மறையாக்கம் என்பதை மலையாக்கம் எனப் படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பல்ல. அதாவது சாதரணமான  மூலச்செய்தியை ரகசிய குறியீட்டு உதவியால் மற்றவர்களுக்கு எளிதில் புரியாத வகையில் மாற்றுவதை மறையாக்கம்
என்கிறார்கள். அப்படிப் பரிமாறிக்கொண்ட செய்தியை மீண்டும்
அசலான செய்தியாக மாற்றிப் புரிந்துகொள்வதை மறைவிலக்கம் (Decryption) என்கிறார்கள். எளிதாகச் சொல்வதென்றால் "ஐ லவ் யூ" என்பதை "143" எனச் சுருக்கமாக சொல்வதைப் புரிந்து கொள்வதுகூட ஒருவித ரகசியச் செய்தி பரிமாற்றம் தான்.

பழங்காலத்தில் ரகசியச்செய்தி பரிமாற்றத்திற்குப் பெரிதாகச் சிரமப்பட்டது போலத் தெரியவில்லை. எளிதாகதான் இருந்திருக்கிறது. ரோமானிய மன்னர் சீசரின் காலத்தில் கூட DOG எனும் சொல்லை ITL என மறையாக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது Dயில் இருந்து ஐந்தாவது எழுத்து  I, Oவில் இருந்து ஐந்தாவது  T எனப் போகிறது. இந்த 5 எனும் எண்ணை அடுத்தநாள் 9 என மாற்றியிருந்தாலும் இதெல்லாம் வெறும் ஜூஜூபி சமாச்சாரங்கள்.

இந்தத் துறையில் படிப்படியாக முன்னேறி அமெரிக்காவில் சிவில் வார் எனும் உள்நாட்டுப் போர் நடைபெற்ற சயமயத்தில் சுழலும் தகடுகள் (Rotating Disks) எனும் எந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் அகர வரிசையில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சிறிதும் பெரிதுமாக இரண்டு வட்டுகள் இருந்தன. வெளிவட்டம் சுழலும் வகையில் இருந்திருக்கிறது. அதன் உதவியால் பயனர் செய்தியை மறையாக்கம் செய்து அனுப்பிவிடுவார்.
சுழலும் தகடுகள்
அதாவது (படம்) உள்வட்டத்தில் இருக்கும் A எனும் எழுத்துக்கு நேராக வெளிவட்டத்தில்  Dஐ பொருத்தி செய்தி அனுப்புவதாக முடிவெடுத்துவிட்டால்
GOD எனும் சொல்லை JRG என மறையாக்கம் செய்திருப்பார். எதிர்முனையில் இருப்பவருக்கு A to D எனும்  இந்தச் சேர்க்கை தெரிந்தால்
இன்னொரு எந்திரத்தின் உதவியால் ரகசியச் செய்தியைப் புரிந்துகொள்ளலாம். நிகழ்தகவின் (Probability theory) எனும் கணிதக்கோட்பாட்டின் உதவியால் இதையெல்லாம் எளிதாகப் பிரித்து மேய்ந்துவிடலாம். இன்று இதைச் சிறுவர்கள் விளையாட்டு பொருளில் சேர்த்துவிட்டார்கள்.

பின்னாள் வந்த நாட்களில் தொலைபேசி, மோர்ஸ் குறியீடு போன்ற விசயங்கள் வந்துவிட்டன. முதன்முதலில் ஜெர்மனிய
எனிக்மா
ராணுவம்  ரகசியச் செய்திகளை அனுப்ப
நவீன இயந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கினர்.  அவர்கள் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய  எனிக்மா (Enigma) எனும் எந்திரம் புகழ்பெற்றது.


அதனால் ஜெர்மனிய ராணுவத்தின் ரகசியத் தகவல் போக்குவரத்தை முறியடிக்க இங்கிலாந்து படாதபாடு பட்டிருக்கிறது. லண்டன் நகரின் மையத்தில் யாருக்கும் தெரியாமல்
கணித நிபுணர்கள், தேர்ச்சி பெற்ற
புதிர் விர்ப்பணர்கள் என
10,000 நிபுணர்களைப் பிலெல்பி பார்க்
பிலெல்பி பார்க்
பகுதியில் தங்கவைத்து  இரவுபகலாக பல வருடங்கள் போராடி இருக்கிறார்கள் . அவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மரக் குடிசைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தார்களாம். அப்போது மரக்குடிசை எண் 8ல் தங்கியிருந்த அலன் டூரிங் (Alan Turing) , ஒரு செஸ் விளையாட்டு வீரரின் உதவியுடன் பாம்பீ (Bombe) எனும் எந்திரத்தைக் கண்டுபிடிக்கிறார். அது ஜெர்மனியர்களின் எனிக்மாவின் ரகசியசெய்திகளின் சூட்சுமத்தை வெற்றிகரமாக முறியடித்துவிடுகிறது. அதன் பிறகு நடந்தது வரலாறு.

அந்த பாம்பீயைக் கண்டுபிடித்த அலன் டூரிங்கைக் "கணிப்பொறியியலின் தந்தை" என்கிறார்கள். அவருடைய டூரிங் எந்திரத்தைதான் இன்றைய கணினிகளின் முன்னோடி என்கிறார்கள்.

உலகப்போரின் போதும் போர் முடிந்தபின்பும் பிலெல்பி பார்க் விவகாரம்
ரகசியதாகவே இருந்திருக்கிறது. வெளியுலகுக்கு ஏன்அங்கு வேலைசெய்தவர்களின் குடும்பங்களுக்குக் கூட அந்த விசயம் மறைக்கப்பட்டிருக்கிறது. போர் முடிந்த உடன் அப்போதைய இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் பிலெல்பி பார்க் தொடர்பான எல்லா ஆவணங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப்பிறகு பிலெல்பி பார்க் விவகாரம் வெளிவுலகுக்குத் தெரியவந்த பின் அனைவரும் ஆச்சர்யப்பட்ட ஒருவிசயம் அங்கே வேலைசெய்த 10,000 பேர்களில் 75% சதவீதத்தினர் பெண்கள் என்பதுதானாம். அதுசரி பெண்களிடம்
ஜெர்மானியர்கள் என்ன, யாரால் தான் ரகசியத்தை மறைக்க முடியும் !?.

படம் - நன்றி இணையம் , https://bletchleypark.org.uk

Friday, October 5, 2018

கவிஞர் மு.மேத்தா - ஒரு சந்திப்பு

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்களென்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.

எனும் கவிதையால் கல்லூரி நாட்களில் அறிமுகமாகி மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் மு.மேத்தா வை சமீபத்தில் இந்தியா சென்றிருந்தபோது சென்னையில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.

"புதுக்கவிதையின் தாத்தா-மேத்தா" என வலம்புரி ஜான் அவர்களால் செல்லமாக பாராட்டப்பட்டவர் .சென்னை மாநிலக் கல்லூரியில்  35 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.


ஆனால், நேரில் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் மிக எளிமையாக பழகினார்.
தற்போதைய தமிழ் கவிதைப் போக்கு,  தமிழக அரசியல் பற்றி
எந்தவித தயக்கமும் இன்றி மிகச் சரளமாக மனம் திறந்து பேசினார்.
ஒர் ஆசானுக்குரிய கண்டிப்பையும்,
ஒரு தந்தைக்குரிய பாசத்தையும் அவர் பேச்சில் காணமுடிந்தது சிறப்பு.

என்னுடைய வனநாயகனை கவிஞரிடம் வழங்கியபோது எடுத்தபடம் இங்கே உங்களுக்காக.

"ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம்.." எனும் பாடல் மூலம் நம்மை வசீகரித்த கவிஞர் வசிப்பது சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராஜராஜன் தெரு என்பது இங்கே கூடுதல் தகவல்.

#மு.மேத்தா

Wednesday, September 26, 2018

கலைஞர் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்

கலைஞர் மறைவையொட்டி கடந்த ஒரு மாத காலமாக  உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் கலைஞர் குறித்த தமிழக இலக்கியவாதிகளின்
அரசியல் சார்பற்ற மதிப்பீடு  என்னவாகும் இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்த போது எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த உரையைக் கேட்க நேர்ந்தது.

அவர் கலைஞர் குறித்தும் கலைஞர் தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த மகத்தான பங்களிப்பு குறித்தும் தனது காத்தாரமான கருத்துகளை
மிகக் குறுகிய நேரத்தில் (15 நிமிடங்கள்) உணர்வுப்பூர்வமாக பதிவுசெய்திருக்கிறார்.

கலைஞர் குறித்த எஸ்.ரா வின் இந்த உரையை நேரமிருந்தால் தவறாமல் கேளுங்கள்.

https://youtu.be/kiPNIqrGC40

#எஸ்.ரா

Saturday, September 22, 2018

அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா

மாணவர்களின் சேர்க்கைக் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி
தமிழக அரசு பலநூறு அரசுப் பள்ளிகளை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
அந்தச் செய்தி ஏனோ  ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும்  பெரிதாக விவாதிக்கப்படவில்லை என நண்பர் ஒருவர் முகநூலில்  வருத்தப்பட்டிருந்தார்.

கூடவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கோடியாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2015-ஆம் ஆண்டில் 56 லட்சமாக குறைந்துள்ளது. இது நடப்புக் கல்வியாண்டில்  மேலும் குறைந்து 46 லட்சமாகி உள்ளது (-தினத்தந்தி)  என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

நாம் இங்கே கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாமே. அரசுப் பள்ளிகளையோ இல்லை அரசு உதவிபெறும் பள்ளிகளையோ இதுபோலத் தொடர்ந்து மூடிக்கொண்டிருந்தால் யார் கவலைப்படுவார்கள்? உண்மையில்  அங்குப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு குற்றச்சாட்டாக, விமர்சனமாக முன்வைக்காவிட்டாலும் இதுதான் இன்றைய நிதர்சனம்.

தரமான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களை
மக்களுக்கு வழங்க வேண்டிய கடமையில் இருந்து அரசு தவறியதால்
வாய்ப்புள்ளவர்கள் விலகி இதற்கெனத்  தனியார் பக்கம் திரும்பி பல வருடங்களாகிவிட்டது.

இன்று சரியான  குடும்பச் சூழல் அமையாத வேறுவழியற்ற விளிம்பு நிலை மக்களுக்கு மட்டுமே அரசுப்பள்ளிகள் எனும் எண்ணம் நிலைபெற்றுவிட்டது.
இந்த நிலைக்குக் காரணம் வெளிப்படையானது.  பல வருடங்களாக
அதிகாரத்தில் இருந்தவர்கள் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பிலும், கல்வித் திட்டத்திலும் உரிய நேரத்தில் கவனம் செலுத்தாமல் மெத்தனமான போக்கைக் கடைபிடித்து திட்டமிட்டு அரசுப்பள்ளிகளை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டார்கள்.

எது தரமான கல்வி ?  அதை யார் நிர்ணயிக்கிறார்கள் ? அதை  எந்த மொழி வழியாகக் கற்பது? இந்தியா போன்ற துணைக்கண்டங்களில் மாநிலம் தழுவிய சமச்சீர்க் கல்வி உயர்ந்ததா  இல்லை ஒற்றைத் தன்மையான மத்திய அரசாங்கப் பாடத்திட்டக் கல்வி உயர்ந்ததா ?  அதுபோல  எதிர்காலக் கல்வியை வடிவமைப்பதில் இன்றைய தொழில்நுட்பத்தின் பங்கு என்ன ? பிள்ளைகளின் சிந்தனையைத் தூண்டுவதோடு உயர்கல்விக்கும் சிறப்பான எதிர்காலத்திற்கும் அடித்தளம் அமைக்க எந்த மாதிரியான கல்விக்கொள்கை அவசியம் என்பது போன்ற விவாதங்கள் இந்தியாவைப் போல, தமிழகத்தைப்போல உலக அரங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.  இனி வரும்காலங்களில் நம்நாட்டு
மக்களுக்கு வேலைவாய்ப்பு என்பது தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்களின் மூலமாக மட்டுமே என்பது உறுதியாகிவிட்டது.  அதனால், அதற்கு உதவும் வகையில் அரசு  கல்வித் துறையைத் தனியாருக்கு முழுமையாகத் தாரைவார்த்துவிட்டு நாங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறோம் என வெளிப்படையாக அறிவிக்க  இயலாத தர்மசங்கடத்தில் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

#அரசுப்பள்ளிகள்

Thursday, September 13, 2018

யானையைச் சாப்பிடுவது

'உங்கள் வாசிப்பின் ரகசியம் என்ன? ' என நண்பர் ஒருவர் உள்பெட்டியில்  கேட்டிருந்தார். உண்மையில் இதில் ரகசியம் எதுவும் கிடையாது.

எனக்கு மட்டுமில்லாமல் வாசிப்புப் பழக்கம் எங்கள் வீட்டில் அனைவருக்கும்  பொதுவான ஒன்று. வீட்டில்  சமையலறைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும்  கண்ணில்படும்படியாக எப்போதும் புத்தகங்கள்  கிடக்கும்.  அதனால் வாசிப்பு கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு கோடை விடுமுறையில் மட்டுமே டிவி என்பதால் வீட்டில் வாசிப்பு எப்போதும் பிரதானமே.

வாசிப்பைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த, கவர்ந்த ஏதாவது ஒன்றைத் தேர்ந்தேடுத்து தொடர்ந்து வாசியுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் வாசிப்பில் நான்  எழுத்தாளர் சுஜாதா சொன்ன ஒரு நுட்பத்தை கடைபிடிக்கிறேன். அதாவது ஒரே சமயத்தில் பல புத்தகங்களை வாசிப்பது.

தற்போது எனது வாசிப்பில்

வரவேற்பறையில்- தேசாந்திரி ( எஸ்.இராமகிருஷ்ணன்)
அலுவலக அறையில் - Outliers Book by Malcolm Gladwell மால்கம் கிளாட்வெல்
காரில் ஒலிப்புத்தகமாக - The Last Voyage of Columbus Book by Martin Dugard
படுக்கை அறையில் - இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் (வைரமுத்து)

இதை நீங்களும்  முயற்சி செய்துபார்க்கலாம். அதன்படி வீட்டில் அறைக்கு ஒரு புத்தகத்தை வைத்து வாசிக்கலாம். இல்லை பயணங்களில் ஒரு புத்தகம், நண்பிக்காக பீச்சில் காத்திருக்கும் சமயங்களில் (!) ஒரு புத்தகம் என நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சிரமமின்றி எளிதாக நிறைய புத்தகங்களை வாசித்துவிட முடியும்.

இப்படி ஒரே சமயத்தில் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் வெவ்வேறு ரசனைகளில் தேர்ந்தேடுத்துக் கொள்வதுகூட வாசிப்புக்குச் சுவை கூட்டும்.

ஆனால்,  வாசிப்பு ஒருவிதத்தில் அந்தரங்கமானது. அதனால் நான் இங்கு சொல்வது அனைவருக்கும் சரியானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.  சிலர் பெரிய திட்டமிடல் எதுவும் இன்றி ‘கண்டதையும்’ வாசிப்பார்கள். சிலர்  தேர்ந்தெடுத்து வாசிப்பார்கள். சிலர் நூலகத்திற்கு போய் வாசிப்பார்கள்.

அதனால் உங்கள் வசதிபடி  உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுத்து, முக்கியமாக தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைகொள்ளுங்கள்.

நம்மூரில்  சிறு துளி பெருவெள்ளம் எனச் சொல்வது போல ஆங்கிலத்தில் சிறிது சிறிதாக ஒரு பெரிய திட்டத்தை, இலக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக கைகொள்வதை Eat the elephant one bite at a time எனச் சொல்வார்கள். அப்படி நீங்களும் வாசிப்பு யானையைச்  சுவைக்கலாம்.

படங்கள்- நன்றி இணையம்.

Sunday, September 2, 2018

ரஜினியின் காலா

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் இருந்தபோது ஒரு நாள் மாலை போகலாம் என டக்கென முடிவெடுத்து குடும்பத்தோடு போய்
காலா பார்த்துவிட்டு வந்தோம். தலைக்கு டிக்கெட் 120 ரூபாய்.  நாங்கள் 7 பேர் போயிருந்தோம். மொத்த செலவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். செலவு கணக்கு பேசும்போதே உங்களுக்குப் புரிந்திருக்குமே.

ஆமாம், படம் ஏமாற்றம்.

இன்னொரு விசயம்.  காலாவைத் திரையில் பார்ப்பதற்கு முன்பு நான் எந்த விமர்சனத்தையும் வாசித்திருக்கவில்லை, அது குறித்து யாரிடமும்
விவாதிக்கவும் இல்லை.  அதனால் படம் குறித்த எந்தவித எதிர்பார்ப்பும் பெரிதாக இல்லை. அதுபோல படத்தில் ரஜினியைத் தவிர வேறு நட்சத்திரங்கள் யாரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் படத்தைச் சரியாகவே அவதானிக்க முடிந்ததாக நினைக்கிறேன்.

படத்தில் ரஜினியின் அறிமுகமே எனக்கு ஏமாற்றத்தோடு தொடங்கியது. பின் அவருடையக் குடும்பம், அதைத் தொடர்ந்த காட்சிகள் என அறிமுகப்படுத்திய எல்லா கதாபாத்திரங்களும் செயற்கைத் தனமாக மனதிற்கு ஒட்டாமல் நின்றன. அதனால் மனம் தொடக்கத்தில் இருந்து படத்தில் ஒன்ற முடியாமல் திணறியது.

அதுபோல ரஜினி படத்தில் இராவண காவியம் படிக்கிறார். அவருடைய மகன் பெயர் லெனின்  போன்ற பிரச்சாரங்களும் துருத்திக் கொண்டு நிற்கின்றன.  இதெல்லாம் இயக்குநரின் குறைகள்.

ஆனால் ரஜினி தனக்கு தரப்பட்ட வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரைப் போல அவருடைய மும்பை மருகளாக வரும் இளம்பெண் நன்றாகவே நடித்திருக்கிறார்.  அவருக்கு வேறு நல்ல வாய்ப்புகள் அமைய வாழ்த்துகள்.

கபாலி படம் தந்த வெற்றியின் தாக்கமோ என்னவோ இதிலும் வயதான தம்பதிகளின் காதல், சோகப்பாடல் என பயங்கர இழுவை. துரதிஷ்டவசமாக படத்தில் ஒரு பாடல் கூட கவனிக்கும்படியாக அமையவில்லை.  ரஜினியின் முன்னாள் காதலி என வரும் நடிகை யாரெனத் தெரியவில்லை. மைதா மாவு போல வரும் அவரையெல்லாம் ஆட, பாட வைத்து  இயக்குநர் ஒருவழியாக  படத்தின் முதல்பாதியை முடித்திருந்தார்.

இரண்டாம் பாதியில் படம் சூடுபிடிக்கிறது. அதிலிருந்து இருந்தே
படம் பார்க்கவந்திருக்கலாம் எனத் தோன்றும் அளவுக்கு முதல்பாதி படு செயற்கை. இரண்டாம் பாதியில் கூர்மையான வசனங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பாக படம் நகர்கிறது.

நாம் இப்போது தானே படம் தொடங்கியிருக்கிறது என நிதானிப்பதற்குள்
டக்கென கிளைமாக்சோடு படம் முடிந்துவிடுகிறது. நல்ல கதைக்கரு. இயக்குநர் அவசரப்படாமல் மெனக்கெட்டிருந்தால் மிகச் சிறப்பாக செய்திருக்கலாம் எனத் தோன்றியது.

அதுபோல படத்தில் எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றும் தலைவன் எனும் வேடத்தைச் சிறப்பாக செய்யும் ரஜினி நிஜ வாழ்வில் அதைக் கொஞ்சமேனும் கடைபிடித்தால் பாராட்டலாம்.

மற்றபடி 1987ல் வந்த கமலின் நாயகன் படத்தை  30 வருடங்கள் கழித்து ரஜினிக்காக மாற்றி எடுப்பதில் இயக்குநர் தோல்வி அடைந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

Wednesday, August 22, 2018

விமானத்தில் பொழுதுபோக்கு

விமானப் பயணங்களில் பயணியர்களை மகிழ்விக்கும் வகையில்
அளிக்கப்படும் பொழுதுபோக்கு  (Inflight Entertainment)  சமீப காலங்களில் வெகுவாக முன்னேறி இருக்கிறது.

ஆமாம். 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்தபடியே  வீட்டில்
இருக்கும் மனைவி, பிள்ளைகளுடன் ஜாலியாக பேஸ் டைம் செய்யமுடிகிறது. அதுவும் இலவசமாக என்றால் நம்பமுடிகிறதா ?   அதுபோல, இந்த இலவச WiFi வசதி (குறிப்பிட்ட நேரத்திற்கு) இருப்பதால் விமானத்தில்  இருந்தபடியே அலுவலக வேலைகளைக் கூட  முடித்துவிட முடிகிறது.

அதுபோல பெரும்பாலான சர்வதேச விமானங்களில் பயணிகள் படம் பார்க்க வசதியாக முன் இருக்கையில் தொடுதிரை பொருத்திவிட்டார்கள். அதனால், இனி  சின்ன செங்கல் போன்ற ரிமோட் கண்ரோலோடு அல்லாட வேண்டியதில்லை. கூடவே  ஹாலிவூட் திரைப்படங்களோடு  பல புதிய பிராந்தியப் படங்களும் கொட்டிக்கிடக்கின்றன. சிறுவர்களுக்கென பிரத்தியோகமான படங்கள், டிவி சீரியல்கள், கேம்ஸ்களும் வரிசை கட்டி நிற்கின்றன.  அதுபோல வயதானவர்களையும் இசைப் பிரியர்களையும் திருப்தி செய்ய  லைவ் டிவியோடு பாரம்பரிய மற்றும்  சமகால டிஜிட்டல்  இசையும் வழிந்தோடுகிறது.

இப்படியெல்லாம் செய்து விமானப் பயணங்களில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் சொற்பமானவர்களையும் தடுமாறச் செய்து
அந்தப் பக்கம் இழுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.

#விமானப்பயணம்



Monday, August 13, 2018

சென்னையில் ஜிபிஎஸ்

சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்து நெரிசலில் கார், பைக் ஓட்டுவது என்பது ஒரு தனிக் கலை. சிறுநகரங்களில் வண்டிகளை ஓட்டிப் பழகியவர்கள் ஆரம்பத்தில் கண்டிப்பாக திணறிதான் போவார்கள்.

குறுகிய சாலைகளில் வகை தொகையின்றி விரையும் வாகனங்கள் ,
கொளுத்தும் வெயிலில் சிக்னல்கள் என நெரிசலான போக்குவரத்தில் ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

அதனால் முன்பெல்லாம் சென்னையை நன்றாக தெரிந்தவர்கள் தான்
டாக்சி, ஆட்டோ டிரைவர்களாக இருந்தார்கள். ஆனால்,  இப்போது
சென்னையில் ஜிபிஎஸின் கை ஓங்கியிருக்கிறது. பலர்
ஜிபிஎஸ் கையில் இருக்கும் தைரியத்தில் நகரில் பலர் டாக்ஸி டிரைவர்களாகி விட்டார்கள். குறிப்பாக ஓலா டிரைவர்கள். ஓலா வண்டி ஓட்ட  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து புதிதாக வேலைக்கு வந்திருக்கும் டிரைவர்கள் ஜிபிஎஸ்ஐ மட்டுமே நம்பியே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.

இவர்களில் பலருக்கு சென்னையின் முக்கிய இடங்கள், பிரபலங்களின் வீடுகள் ஏன் கிழக்கு மேற்கு கூட சரியாக தெரிவதில்லை. ஜிபிஎஸ் இருக்கும் அலட்சியத்தால் புதிதாக வந்திருக்கும் நகரை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை போல. அதனால் லோக்கல் நாலேஜ் எனும் உள்ளூர் ஞானம் அறவே இல்லாமல் திணறுகிறார்கள்.

இந்தியாவின் முகவரிகள் இன்னமும் முற்றிலும் துல்லியமாக ஜியோ கோட் (Geocoding) செய்யப்படவில்லை. (ஜியோ கோடிங் என்பது நம்முடைய இருப்பிட முகவரியை கணினி புரிந்துகொள்ளும் வகையில் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளாக (latitude and longitude)  மாற்றுவது). அதனால் இப்போது ஒரு முகவரியை மிகச்சரியாக ஜிபிஎஸ்-ல் கண்டுபிடிப்பது என்பது லாட்டரி அடிப்பது போல் குருட்டு அதிஷ்டம் தான். நம்மூர் முற்றிலுமாக டிஜிட்டாலாகும் போது (It is a transition period) இந்தக் குழப்பங்கள் களையப்படும். அதுவரை நாம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

லேண்ட் மார்க் போன்ற அடையாளங்களை வைத்து போகவேண்டிய இடங்களைக்  கண்டுபிடித்து பழக்கப்பட்ட நம்மில் பலருக்கு இதெல்லாம் புது அனுபவம்.  கூடவே பழைய எண், புதிய எண் குழப்பங்கள் வேறு.  என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு வருடமும்  சென்னை வரும்போது திருவல்லிக்கேணி காசிவிநாயகா மெஸ்-க்கு போய் சாப்பிட்டுவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.  ஆனால்,  என்னை யாராவது தெருவில்  நிறுத்தி  'காசிவிநாயகா மெஸ் அட்ரசைச் சொல்லு' என சட்டையைப் பிடித்தால் திருதிருவென முழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். சொல்லுங்கள் !? :)

#கஸ்டமர்_கஷ்டங்கள்

Thursday, August 9, 2018

கம்யூனிசம்- ஒரு பார்வை

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்.  ஆனால், கம்யூனிசம் இல்லை
என ஒருமுறை ஆனந்தவிகடனில் மதன் எழுதியதை வாசித்ததாக நினைவு.

அதிலிருந்து கம்யூனிசம் (பொதுவுடைமை) தொடர்பான ஒரு விரிவான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால், நூறு பக்கங்களில் மேலெலுந்தவாரியாக கம்யூனிசம் குறித்து பேசும் சிறிய புத்தகம்
தான் கிடைத்தது.

இது ஐரோப்பாவில் முதலில்  கம்யூனிசம் எனும் சிந்தனை எப்படி  உருவாகி ஒரு தத்துவமாக நிலைபெற்றது. அது பின் அந்தத் தத்துவம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறி இரஸ்யாவில் அரசமைத்தது. பின் அங்கிருந்து எப்படி மற்ற நாடுகளுக்கு பரவியது போன்ற வரலாற்று விசயங்களைப் பேசுகிறது. புத்தகத்தில் இருந்து .....

நாம் கூட்டாக  வீழ்வதில்லை  (we don't collectively  fail) அல்லது ஒன்றுபட்டால்
உண்டுவாழ்வு எனும் அரிஸ்டாட்டிலின் தத்துவத்தில் தொடங்கிய அந்த
விதை ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில்
வளர்த்தெடுக்கப்படுகிறது. 

பின்  முதலாளி- பாட்டாளிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி முதலாளிவத்தை ஓழிக்க  காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சால் (Friedrich Engels) ஆகியோரால் மார்க்சியம் முன்மொழியப்படுகிறது. 

அதன்பின் 1917ல்  மக்கள் புரட்சி மூழம் ரஸ்யாவின் ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியினை ஓழித்த லெனின் தலைமையில் உலகின் முதல் கம்யூனிஸ்ட் நாடாக ஒன்றிணைக்கப்பட்ட சோவியத் ஒன்றியம் ( USSR ) உருவாகிறது.

பொதுவுடமை (Communism) சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
போல இந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் சமூகவுடைமை (Socialism) ஏற்றுக்கொள்ளப்படுகிறது

இரஸ்யாவில் பொதுவுடமை தத்துவம் அரசமைக்கும் போது பல சீர்த்திருத்தங்கள் முன்மொழியப்படுகின்றன. மார்க்சியத்தில் இருந்து தழுவி லெனின் நிலைநிறுத்திய கொள்கைகள் பின் நாளில் "லெனினிசம்" (Marxism–Leninism) என்று பிரபலமாகிறது

கம்யூனிசம் எனும் கொள்கை நிலைப்பாடு நிர்வாகம், பெருளாதாரம் போன்றவற்றிற்காக பல மாறுதல்களைப் பெறுகிறது. அந்த மாறுதல்களுடன் இரஸ்யாவில் தொடங்கி  சிறிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், சீனா, கியூபா, வட கொரியா என பல நாடுகளுக்கு காட்டுத்தீயாகப் பரவுகிறது.

இப்படி பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அரசமைத்த கம்யூனிச அரசாங்கங்கள் செய்த பல குழறுபடிகளால் மக்கள் செல்வாக்கை இழந்து பலமிழந்துக் கொண்டிருந்தச் சமயத்தில் 1989ன் இறுதியில் கிழக்கு ஜெர்மனியையும் (கம்யூனிஸ்ட்), மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் மக்களால் தகர்த்தெரியப்படுகிறது.

அந்தச் சுவரின் வீழ்ச்சிக்குப் பின் படிபடியாக அதிகாரமிழந்து  1991ல் சோவியத் யூனியன் ("USSR")  சிதறுண்டது நாம் அனைவரும் அறிந்த வரலாறு.

உலக அரசாங்கங்கள்-கம்யூனிசம் சூ வெண்டர் ஹூக் (Sue Vander Hook)
Title-Communism (Exploring World Governments)-Sue Vander Hook
  • ISBN-13: 978-1617147890
  • Publisher: Essential Library (January 1, 2011)

Thursday, August 2, 2018

மை இயர் ஆஃப் மீட்ஸ் (My Year of Meats) - ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki)

 உலகம் முழுவதும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழில்களில் பரவலாக நடக்கும் முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்கள் பொதுவாக வெளிப்படையாக பேசப்படுவதில்லை. அது
குறித்து எழுதப்பட்ட புனைவுகளும் குறைவு என்றே நினைக்கிறேன்.

அந்த விதத்தில் நான் சமீபத்தில் படித்த புத்தகம் "மை இயர் ஆஃப் மீட்ஸ்"
(My Year of Meats) "மாமிசத்துடன் எனது ஒரு வருட வாழ்க்கை". எழுதியவர் ரூத் ஓஸ்ஸ்கி (Ruth Ozeki). முதல் பதிப்பு 1998.  இரண்டு ஜப்பானிய  பெண்களின் பார்வையில் சொல்லப்படுவதாக எழுதப்பட்ட கதை. ஒருவர் ஜப்பானில்
வாழும்  இளம்  பெண். அவர் குழந்தையின்மையால் கணவனால் கொடுமைப்படுத்தபட்டு அலைகழிக்கப்படுகிறார். இன்னொருவர்
ஜப்பானிய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த  அமெரிக்க இளம்பெண். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தனது வேலையில் பல
பிரச்சனைகளையும் சவால்களையும்  எதிர்கொள்கிறார்.
ஒருவருட காலகட்டத்தில் நடக்கும் இந்தக் கதையின் இறுதியில் இரு பெண்களும் ஒரு புள்ளியில் சந்திப்பதாக கதை முடிகிறது.

கதையில் மனைவியை வெறும்  பிள்ளை பெறும் எந்திரமாக நினைக்கும் படித்த கணவன். அது நடக்காது எனத் தெரிந்தவுடன் அவன் செய்யும் பாலியல் வன்முறைகள் போன்ற விசயங்கள் நேர்த்தியாக வந்திருக்கிறது.  அதுபோல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரின் வழியாக அமெரிக்காவின் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மாமிசம் போன்ற தொழிலில் நடக்கும்
பல முறைகேடான சர்ச்சைக்குரிய விசயங்களை அழுத்தமாகவே பேசியிருக்கிறார்.

Diethylstilbestrol (DES)  எனும் செயற்கை எஸ்ட்ரோஜன் கலப்பால் இயற்கையான
மனித ஹார்மோன்கள் கெடுவது. அதன் தொடர்ச்சியாக சிறுபிள்ளைகள் பூப்படைவது போன்றவற்றைத் தொட்டிருக்கிறார்.

எழுதியது பெண் எழுத்தாளர் என்பதால் இரண்டு பெண்களின் மனஓட்டத்தையும் அழகாக படம்பிடித்திருப்பதாக நினைக்கிறேன்.
வாசிக்கையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றினாலும் வாசிக்கலாம். மோசமில்லை. இல்லை என்னைப்போல ஆடியோவாகவும் கேட்கலாம்.

எழுத்தாளர் ரூத் ஓஸ்ஸ்கி சமூகம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், உலகளாவிய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கருப்பொருள்களை
மையப்படுத்தி எழுதிவருபவர். எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிடும்
போது நாவல் பேசும் விசயங்கள் பழசாக தெரிந்தாலும் இன்றும்
நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை என்றே நினைக்கிறேன்.

#மை_இயர்_ஆஃப்மீட்ஸ்

Saturday, July 21, 2018

தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம் - மலையாளம்

நான் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதில்லை. அதற்குத்
தமிழில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நான் படம் பார்ப்பதும்  மிக மிகக் குறைவு. இந்தமுறை விமானப் பயணத்தில் இரண்டு படங்களைப் பார்த்தேன். அவை இரண்டுமே மலையாளப் படங்கள்.

முதல்படம்  "தொண்டிமுத்துலம் டிரிக்ஷாக்ஷியம்",
(Thondimuthalum Driksakshiyum) இரண்டாவது   "வர்ணத்திள் ஆஷ்ன்கா" (Varnyathil Aashanka). மூழுநீள நகைச்சுவை திரைப்படம். அதைப் பார்க்கலாம்.  மற்றபடி படத்தில் சிறப்பாக ஒன்றுமில்லை.

ஆனால் "தொண்டிமுத்துல டிரிக்ஷாக்ஷியம்" (தமிழில்- "திருட்டுப்பொருளும் சாட்சியும்") படத்தைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல நினைத்தேன். பிறகு இணையத்தில் அந்தப்படத்தைப் பற்றி துழாவியபோதும் அது பல விருதுகளைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. ஆச்சர்யப்படவில்லை.

கதை இதுதான்.  புதிதாக காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி பஸ்சில் பயணிக்கிறது.  பஸ்சில் எதிர்பாராதவிதமாக அந்த இளம்பெண்ணின்  தங்கச்சங்கிலி  திருடுபோகிறது. அவள் கத்தி கூப்பாடு போடுகிறாள்.  உடனே திருடனை மடக்கிப் பிடித்த பயணிகள்  பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு விடுகிறார்கள்.  இப்படி சங்கிலியைப் பறிகொடுத்த ஜோடி போலீஸ் உதவியுடன் அதை  மீட்டார்களா ? என்பதே படத்தின் கதை.

இந்த மிக எளிய கதையை எந்தவித சினிமாத்தனங்களும் இல்லாமல்
மலையாளப் படங்களுக்கே உரிய மிக இயல்பான திரைக்கதையில்
அருமையாக சொல்லியிருக்கிறார்கள். நடிகர்களின் தேர்வும் அற்புதமாக வந்திருக்கிறது. கூடவே கேரளாவின் செழிப்பையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் சூரஜ் வெஞ்சஞ்சமுடு
மற்றும்  ஃபஹத் பாசிலுக்கும் (இயக்குநர் பாசிலின் மகன்) மிகச்சிறப்பான
எதிர்காலம் இருப்பதாக கணிக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

#தொண்டிமுத்துலம்_டிரிக்ஷாக்ஷியம்

Sunday, July 15, 2018

SSS - கோவையில் ஓர் அதிசயம்

இந்த முறை கோயம்புத்தூரில் இருக்கும் "சாந்தி சமூக சேவைகள்" (SSS) எனும் அறக்கட்டளை பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிங்காநல்லூரில் அவர்கள் இயங்கும் இடம் நான் தங்கியிருந்த உறவினர் வீட்டில் இருந்து நடக்கும் தூரம் தான். ஒரு நாள் மாலை அவருடன் போயிருந்தேன்.

மிகப்பெரிய வளாகம். அங்கேயே  மருத்துவமனை, 24 மணி நேர மருந்துக்கடை (வெளி விலையை விட 20%  குறைவாக)அதனுடன் குருதி வங்கி, மருத்துவ லேப்கள், கண் சிகிச்சை மையம் போன்ற பல மருத்துவ வசதிகள் ஒரே இடத்தில்  இருக்கின்றன. அத்தனையும் அனைவருக்கும்  லாப நோக்கின்றி மிக்குறைந்த விலையில் கிடைக்கிறது. அங்கே முழு உடல் பரிசோதனையை
1500 ரூபாய்க்கு முடித்துவிடலாம் என உறவினர் சொன்னதாக நினைவு.

அங்கேயே மருத்துவ சேவையோடு உணவு விடுதி (கேண்டீன்) வசதியும் இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 9;30 வரை இயங்கும் அந்தக் கேண்டினில் உணவு தரமானதாக, சகாயமான விலையில் கிடைக்கிறது. ஒருவருக்கான முழுச் சாப்பாடு 25 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதே உணவு வெளியே  120 ரூபாய்க்கு குறைவில்லாமல் இருக்கும்.

அதனால் எப்போழுதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இப்படி தினமும்   பல ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறினாலும்
கேண்டினின் பராமரிப்பு அபாரம். மற்ற வணிக நிறுவனங்களை விட
மிக சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள். சர்வதேச தரம்
என தயங்காமல் சொல்லலாம்.

அதுமட்டுமல்லாமல் வளாகத்துக்குள் பெட்ரோல் பங்குடன், பிள்ளைகள் விளையாட காற்றோட்டமான ஒரு  பூங்காவையும் அமைத்திருக்கிறார்கள்.

கோவை போன்ற பெருநகரத்தில் அதுவும் ஒரு முக்கிய இடத்தில் இதுபோலோரு சேவை அனைவருக்கும் கிடைப்பது அதிசயம் மிக அபூர்வம்.

உண்மையில்  இதெல்லாம் அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை ஒரு அறக்கட்டளை முன்மாதிரியாக  இங்கே செய்து காட்டிக் கொண்டிருக்கிறது.

கோயில்களிலேயே கொள்ளை அடிக்கும் இந்தக் காலத்தில்  "மனிதகுலத்திற்கான சேவை கடவுளுக்கு சேவை " என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்த SSS அமைப்பின் நிறுவனருக்கு எனது  வாழ்த்துகளும் மனப்பூர்வமான நன்றிகளும்.

அடுத்த முறை கோவை போகும் போது வாய்ப்பிருந்தால் ஒருமுறை போய் வாருங்கள். தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

அவர்களுடைய இணையமுகவரி -  http://www.shanthisocialservices.org/
படங்கள்- நன்றி இணையம்.

Sunday, July 8, 2018

தமிழ் - நமது அதிகாரம், நமது உரிமை, நமது பெருமை

நண்பர்களுக்கு,

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை-யின் (பெட்னா, Federation of Tamil Sangams of North America) 31வது தமிழ் விழா டெக்சாஸ் மாநிலத்தின் ப்ரிஸ்க்கோ நகரில் ‘மரபு, மகளிர், மழலை’  (ஜூன்-29, 30, ஜூலை 1) எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக
நடைபெற்றது.

தமிழ் விழா மலரில்  "தமிழ் - நமது அதிகாரம், உரிமை, பெருமை" எனும் தலைப்பில் வெளியான எனது 
கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்.  நன்றி!!

-ஆரூர் பாஸ்கர்.
ஜூலை, 8 , 2018

1.

2.
3.

5.

Tuesday, July 3, 2018

தமிழ்நாடு - ஒன்னுக்கும் உதவாத ஊரா ?

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு ...

****
கிடைத்த 20 நாள் விடுமுறையில் தமிழ்நாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக பயணித்துவிட்டு ஃபிளாரிடா திரும்பியிருக்கிறேன்.

குடும்பத்தோடு இரயில், கார், பஸ் என முற்றிலுமாக  தரைவழி பயணம்.
முக்கியமாக  ஊர் சுற்றிப்பார்ப்பது அப்படியே வழியில் முடிந்தால்
உறவினர்களையும்,  நண்பர்களையும் சந்திப்பது முக்கிய நோக்கமாக இருந்தது.

பயணம் மொத்தமாக  எட்டு நாள்கள். சராசரியாக ஒவ்வொரு ஊரிலும்  ஒர் இரவு தங்கியிருக்கிறோம்.

முதலில் சென்னையிலிருந்து கிளம்பி தென்கோடியான கன்னியாக்குமரியைத் தொட்டு அங்கிருந்து நாகர்கோயில், திருநெல்வேலி, தென்காசி வழியாக உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூரைச் சுற்றிவிட்டு  பிறகு கடைசியாக சொந்த ஊரான திருவாரூர் போய் சேர்ந்தோம்.

தனிப்பட்ட முறையில் இந்தப் பயணம் தமிழ்நாட்டின் மாறுபட்ட நில அமைப்புகளையும் மனிதர்களையும், சூழலையும் ஒரு பருந்து பார்வையில் அறிந்துகொள்ள எனக்கு நல்லதொரு இருந்தது.

நாங்கள் போயிருந்தது ஜூன் மாதத்தின் தொடக்கம் என்பதால் தென் மேற்கு பருவமழை தொடங்கியிருந்த அருமையான நேரம். நாஞ்சில் நாடு -

எப்போதும் பொழியத் தயாராக மழை நீரைச் சுமந்தபடித்  திரிந்து கொண்டிருக்கும் மேகங்களுடன் ரம்யமாக இருந்தது.   குற்றாலம் -
மனதைக் குளிர வைக்கும் தென்றல் காற்றுடன் சாரல் மழை பொழிந்து
திகைப்பூட்டியது.                              கொங்கு நாடு - குளிர்ச்சியான மலைகள்,  தென்னந்தோப்புகள் என இயற்கை எழில் கொஞ்சியதால்  தமிழகத்தை ஒரு செழிப்பான மாநிலமாக உணர்ந்தேன்.

அந்த வகையில்  இது  முன்பு எப்போதும் இல்லாத இல்லாத ஒரு மாறுபட்ட பயணமாக இருந்தது. தமிழ்நாட்டின் எனது  சமீபத்திய பயணங்களில்  இதை முக்கியமாக நினைக்கிறேன். உண்மையில் "என்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?" எனும் திரைப்பாடலை ஆழமாக மனப்பூர்வமாக உணர்ந்தத் தருணங்கள் அவை.
நான் ஒரு செழுமையான தேசத்தின் பிரதிநிதி என்றும் பெருமை கொண்ட நாட்கள் அவை.

அதே சமயத்தில் காவிரி பாயும் டெல்டா பகுதி பாலைவனமாக வறண்டு கிடைக்கிறது. அதைப் பற்றியும் தமிழகத்தில் இன்றையக் கல்வி  வேலைவாய்ப்பு போன்ற மற்ற சில விசயங்களையும் நாம் தனியாகப் பேசவேண்டியிருக்கிறது.

கடைசியாக ஒரு விசயம், 'சுத்த வேஸ்ட்,  ஒன்னுக்கும் உதவாத ஊரு ' என்றெல்லாம் தமிழ்நாட்டைச் சபிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறையேனும் மாநிலத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு பேசுட்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.

#தமிழ்நாடு2018

Friday, June 15, 2018

தேசத்துரோகி - எழுத்தாளர் ஷோபா சக்தி

எழுத்தாளர் ஷோபா சக்தியின் தேசத்துரோகி  சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.

தொகுப்பில் மொத்தமாக 14 சிறுகதைகள். அகதிகளாக வெளிநாடுகளுக்கு குறிப்பாக பிரான்சின் பாரிசுக்கு புலம் பெயரும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை இந்தச்  சிறுகதைகளின் வழியாகப் பதிவு செய்திருக்கிறார்.
இதில் பிச்சைக்காரர்கள், விசா ஏஜண்டுகள், ஹோட்டல் அடுப்படியில் பாத்திரம் சுத்தம் செய்பவர்கள்,குடிகாரர்கள் என ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு விதமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

தொகுப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சமும் இதுவாகதான் இருக்கிறது. அதாவது தமிழ் எழுத்துலகில் இதுவரை  பதிவுசெய்யப்படாத கதைக்களம், கதைமாந்தர்களைத் தேர்வுசெய்தது. கதைமொழி ஈழத்தின் பேச்சுவழக்கு என நினைக்கிறேன். ஆனால்,  எழுத்துநடையில் தொடர்ந்தார்போல ஒரு மெல்லிய பகடி நடை இருப்பதாலோ என்னவோ ஒரிருக் கதைகளைத் தவிர வேறு எதுவும் என் மனதில் நிற்கவில்லை.

சமீபத்தில் அவருடைய பாக்ஸ் கதைப்புத்தகத்தை வாசித்து வியந்த எனக்கு இந்தத் தொகுப்பு ஏமாற்றமே.  என்னைப் பொறுத்தவரை
சிறப்பாக அமைந்தக் கதைகள் தேவதை சொன்ன கதை, பகுத்தறிவு பெற்ற நாள்.





Monday, June 11, 2018

முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு - அகரமுதல்வன்

டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின் "முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு"  வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன்.

தொகுப்பில் மொத்தமாக பத்து சிறுகதைகள்.  இலங்கை போருக்குப்
பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு முழுவதுமாக
ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடும் ரகமில்லை. நின்று நிதானித்து
வாசிக்க வேண்டியது.

ஈழப் போர் கதைகளின் மைய நாதம்.  ஒரு தலைமுறை தாண்டி
நடந்த போர் . அதைஒட்டி ஒவ்வோரு கதையும் மனிதத்தை, மனித வாழ்வின் இருப்பை, அரசியலை வேவ்வேறு அம்சங்களில் பேசும் கனமானதொரு படைப்பு. தொகுப்பு அகத்தையும் புறத்தையும் சேர்ந்து பேசினாலும், அகம் நெகிழச்செய்கிறது.

ஒவ்வொரு கதையிலும் போரின் கொடுமையை, வலியை ஆர்ப்பாட்டமில்லாமல்  எழுத்தின் வழியே வாசகனுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார்.

"...
நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்தாபாவின் சிறிய கண்கள் மூடித்திறக்கின்றன. நினைவுக்கு துன்பம்பற்றிய கவலையில்லை. அது இறந்தக்காலங்களையும் , நிகழ்காலங்களையும் கண்ணீரால் தொடர்புபடுத்துகிறது. ... (பக்கம்-65)"

எனும் வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் பல உணர்வலைகள் மேலெலும்பி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.  வாசிப்பு
தேர்ந்த கவிஞனுடன் கதைசொல்லியும் ஒரே ஒத்திசைவில் கைகோத்து எழுதிய உணர்வைத் தருகிறது.

"திருவாளர் ஞானசம்பந்தன்" கதையில் ஒரு மறக்கமுடியாத ஒரு உரையாடல்

'ஜீவிதா, நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?

இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்'

என்பதில் இருக்கும் உண்மைச் சுடத்தான் செய்கிறது.

அதுபோல போர்வலியை,வாதையை,காதலை என சகலமானதையும் கவித்துவமாக சொல்லவேண்டும் எனும் உணர்வு எதுவுமின்றி  ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

"...
நிலத்தின் வெளி முழுவதும் மின்மினிப்பூச்சுகளாய் குண்டுகள்
வெளிச்சத்தோடு பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து
விழுந்தபடியிருந்தன. துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே. ( பக்-57)
...
"
எனும் வரிகள் வழியாக யுத்தத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அமுதைப் பொழியும் நிலவே என இரவை  காதலியுடன் சேர்ந்திருக்க வேண்டிய இளைஞன் போர்முனையில் அவளைப் பிரிந்து துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே என்பது சங்ககாலத்தை நினைவுப் படுத்துகிறது.

"...
எனது கையினைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள் விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன.

நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. நிலமதி-பக்கம்-57"
"

இதையெல்லாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்வுகளா? என மலைக்க வைக்கிறார்.

தொகுப்பில் அனுபவங்கள் எழுதப்படுவதால் அதில்  வழமையான
சுவாரசியங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை என
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். அதுபோல பல சொற்கள்
தமிழாக இருந்தாலும்  ஈழத்து வழக்குச் சொற்களை புரிந்து கொள்வதில்
தமிழ்நாட்டு வாசகர்களுக்கு சிரமங்கள் இருப்பதால்,  அதற்கு  இணையான சொற்களை அந்தந்தப் பக்கங்களில் அல்லது பின்னுரையில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்து நண்பர்களின் உதவியால் நான் அறிந்துகொண்ட சில ஈழத்துச் சொற்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சப்பாத்துக்கால்களால் அடித்தான்  - சூ (கால் பாதணி) அணிந்த கால்களால் அடித்தான்.

துவக்கு என்பது துப்பாக்கி

சன்னங்கள் எனில் ஷெல், துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள்

பெடியன் எனில்  ஆண் பிள்ளைப்பசங்க.

குசினி எனில்  சமையலறை (கிச்சன்)

அதுமட்டுமில்லாமல் அகரமுதல்வனின் எழுத்து  மேலோட்டமாக இல்லாமல்
வாசிக்கையில் வாசகனின் கவனத்தை முழுமையாகக் கோரும் எழுத்து.
எனக்கு ஈழத்து எழுத்தின் முதல் பரிச்சயம் என்பதால் கூட அப்படித் தோன்றி இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.

முதல் பதிப்பு என்பதாலோ என்னவோ எனக்குப்  பல எழுத்துப்பிழைகள் கண்களில் பட்டன. அட்டையில்  "முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு" எனச் சரியாக இருக்கும் ஒற்று நூலின் உள்ளே ஓவ்வோரு பக்கத்திலும் விடுபட்டு போனதே ஒரு பதமாக இருக்கும்.


தலைப்பு: முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு
நூலாசிரியர்: அகரமுதல்வன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 100
பக்கங்கள்:111
ISBN:978-93-8430-210-8

Saturday, June 2, 2018

BOX: கதைப் புத்தகம் (நாவல்) - ஷோபாசக்தி

சமீபத்தில் தமிழில் வாசித்த மிகச் சிறந்த புத்தகம் ஷோபாசக்தியின் BOX: கதைப் புத்தகம் (நாவல்).

எழுத்தாளர்  கதை சொல்லலின் அத்தனை சாத்தியங்களையும் முயன்று பார்த்தது போலொரு அபூர்வ படைப்பு. இதுவே ஷோபாசக்தியின் ஆகச்சிறந்த படைப்பாக இருக்கமுடியும்.

குறுக்கும் நெடுக்குமாக செல்லும் புதிய கதைசொல்லும் யுக்தியில் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை,  சித்திரத்தை வாசகர்களின் முன்வைக்கிறார் ஷோபா.
அதிலிருந்து மீண்டுவரவே எனக்கு சிலநாட்கள் பிடிக்கும் என நினைக்கிறேன்.

புத்தகம்  கிண்டிலில் கிடைத்ததால் வார இறுதியில் எந்தவொரு எதிர்பார்ப்புகளும், முன் முடிவுகளும் இல்லாமல் ஈழம் குறித்தானது என்ற புரிதலுடன் மட்டும் நுழைந்து வாசித்து முடித்தேன். கண்டிப்பாக ஏமாறவில்லை. வாய்ப்பிருப்பவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.

கதையைப் பற்றியும் அதுபேசும் ஈழஅரசியல் பற்றியெல்லாம் நான் இங்கே
பகிர,விவாதிக்கப்போவது இல்லை. அதுவே அந்தப் படைப்பாளனுக்கு செய்யும் மிகபெரிய மரியாதையாக இருக்கும்.

கடந்த ஒரு மாதமாக பல ஈழ எழுத்துகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் சரளமான நடையோடு, எளிய மொழியில்
அனைவரும் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், நாம் மறந்துபோன கைவிட்ட பல தமிழ் வார்த்தைகளை மீள்அறிமுகம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

நான் வாசிக்கையில் குறிப்பெடுத்த தமிழ் வார்த்தைகள் உங்களுக்காக.
( சான்று-சென்னைப் பழ்கலைக்கழக தமிழ்ப்பேரகராதி)

சன்னதம்-கடுங்கோபம்.
வலைஞன்-;மீன்பிடிப்போன் (Fisherman)
முள்ளி- முள்ளுள்ள செடி
வளவு- வீட்டுப்புறம்
பம்பல்- பைம்பல்-களிப்பு, பொலிவு
சப்பளித்தல்-தட்டையாக்குதல்
அரை- இடை
மரை வற்றல் - ஒருவகை மானினத்தின் காய்ந்த இறைச்சி
அமசடக்கம் - அமைதி
சீவியம்-  சீவிதம்,உயிர்வாழ்க்கை
சமர்-போர்
கிடுகு-ஓலைக்கீற்று
குரக்கன்-கேழ்வரகு
கிடாரம்-கொப்பரைவிசேடம் (boiler)
வாவி-நீர்நிலை

Don't judge a book by its cover என ஆங்கிலத்தில் சொல்வது போல புத்தகத்தின் அட்டைப்படத்தை மட்டும் வைத்து எந்த முடிவும் செய்யாமல் கண்டிப்பாக வாசியுங்கள்.

Friday, June 1, 2018

போர்னியோ தீவின் குரங்குகள்

படத்தில் நீங்கள் பார்க்கும் தீவு போர்னியோ (Borneo).  இந்தத் தீவின்
வளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை விளக்கும் ஒரு ஒப்பீட்டுப் படத்தை மலேசிய நண்பர் ஒருவர் அனுப்பி இருந்தார். போர்னியோ பற்றிய தெரியாதவர்களுக்காக..

போர்னியோ-  வஞ்சனையில்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் தீவு.
முழுமையும் பசுமையான மழைக்காடுகள். மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்தத் தீவை இந்தோனேசியா, மலேசியா, புரூணை போன்ற மூன்று நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. இது  உலகின் மூன்றாவது பெரிய தீவும் கூட (முதல், இரண்டாம் இடத்தில் முறையே கிரீன்லாந்து, புதிய கினியாவும் இருக்கின்றன)

போர்னியோவின் சிறப்பம்சம் அங்கிருக்கும் பழமையான மழைக்காடுகளில் வாழும் "ஓராங் ஊத்தான்" எனும் மனிதக் குரங்குகள். ஆங்கிலத்தில் "ஒராங்குட்டான்" (orangutan) . செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்தக் குரங்குகள் மிகவும் சுறுசுறுப்பானவை. பழங்கள், மரப்பட்டை, இலைகள் இதன் உணவு.

துரதிஷ்டவசமாக மற்ற கிழக்காசிய நாடுகளைப் போலவே மலேசியாவும், இந்தோனேசியாவும் போட்டி போட்டு பல்லாண்டுகளாக இத்தீவின்  இயற்கை வளங்
களைச் சூரையாடி வருகின்றன. அதனால்,  தங்கள் வாழ்வாதரத்தை இழந்த பல லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள் செத்து மடிந்துகொண்டிருக்கின்றன.


எனது வனநாயகன் நாவல் பேசும் அரசியலும்  அதுதான்.   புத்தகத்தின்  அட்டைப்படத்தில்  இருப்பதுகூட இந்த "ஒராங்குட்டான்" குரங்கு தான்.
தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டு, வேட்டையாடப்படும் இந்தக் குரங்குகள் படும்பாட்டை கதையோட்டத்தோடு சொல்லி இருப்பேன். சர்வதேச அளவில் அழிந்து வரும் அரியவகை விலங்காக இவை அறிவிக்கப்பட்டிருந்தாலும் மனித அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன. அதன் உச்சமாக இந்தக் குரங்குகள் இந்தோனேசியா போன்ற நாடுகளில் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறன போன்ற அதிர்ச்சிகர தகவல்களும் அதில் உண்டு.

***
"வனநாயகன்-மலேசிய நாட்கள்"  வாங்க

வனநாயகன்  இப்போது கூகுள் புக்ஸிலும் கிடைக்கிறது
https://books.google.com/books?id=QqfVCwAAQBAJ&printsec=frontcover&dq=%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjOr_emlbLbAhXP21MKHV9WCLUQ6AEIKTAA

Thursday, May 24, 2018

கொடிவழி

மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது.

அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை
எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும்
வகையில் விட்டுச் செல்கிறார்கள்.

இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள்,
அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

நம்மில் பலருக்கு நாம் ஏன் வரலாற்றை  அறிந்துகொள்ள வேண்டும் எனும் கேள்வி எழுவது  இயல்பான ஒன்றுதான். ஆனால்,  உண்மையில் வரலாறு சமூக, அரசியல் மாற்றத்தைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமூகம் எங்கிருந்து வந்தது என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகிறது.

இப்படிச் சேகரிக்கப்படும் முன்னோர்களின் பழைய புகைப்படங்கள், அவர்கள் குறித்த செய்தித்தாள் கத்தரிப்புகள், அவர்களின் கடிதத் தொடர்புகள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், பயன்படுத்தியப் பொருட்கள்  போன்றவைகூட தலைமுறைகளை இணைக்கும் பாலங்களாகவும்  அவர்களுடைய நினைவுகளைக் கிளரிவிடும் தூண்டியாகவும் இருக்கின்றன.

இதுகூட ஒருவகையில் டைரி எழுவதுவது போலதான். குடும்ப டைரி.
ஆனால், உண்மையில் அந்தத் தகவல்கள் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு பொக்கிசமாக இருக்கும்.

இப்படிச் சமூகத்தால் சிறிது சிறிதாக எழுதி கட்டமைக்கப்படும் எழுத்து ஒருநாள் ஒன்றுசேர்ந்து பேரிலக்கியமாக எழுந்து நிற்கும். முதல், இரண்டாம் உலகப் போரின் போது எளிய மனிதர்களின் கடிதப் போக்குவரத்து, டைரிக்குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆவணங்களாக இன்று  மேற்குலகில் எழுந்து நிற்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜி படைகளுக்கு அஞ்சி வீட்டில்
மறைந்து வாழ்ந்து இறந்த ஆன் பிராங்க் எனும் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. அந்தத் தொகுப்பு உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  வாய்ப்புள்ளவர்கள் நெதர்லாந்தில் இருக்கும் அவருடைய வீட்டைச் சென்று பார்க்கலாம்
இல்லை அந்தத் தொகுப்பையாவது முடிந்தால் வாசித்துப் பார்க்கலாம்.
மனித உணர்வுகளின் ஆழம் புரியும்.

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள்
எங்கே போகவேண்டும் என்பதற்கு வரம்புகளே இல்லை " என்கிறார்
அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் பால்ட்வின் .

நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு மூன்று தலைமுறை தாத்தா, பாட்டி பெயர்களைச் சொல்லமுடிந்தால் பெரியவிசயம்.  அதையும்  மூதாதையர்களின் பெயர்களை அடுத்தத் தலைமுறைக்கு வைக்கும் வழக்கம் நம்மில் இருந்ததால்தான் சொல்லமுடிகிறது. மற்றபடி நமக்கு எதையும் ஆவணப்படுத்துவதில், பாதுகாப்பதில் எல்லாம் பெரிய ஆர்வமோ ஈடுபாடோ சுத்தமாக கிடையாது. நம் முன்னோர்களுக்குத் தரப்பட்ட கல்வி,
அன்றையச்  சூழல் கூட ஒருவிதத்தில் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இப்படி நமது வம்சாவளியைப் பற்றி பதிவு செய்வதை ஆங்கிலத்தில் ‘Geneological Tree’  என்றும்  தமிழில் "கொடிவழி" என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர் அருணகிரி "கொடிவழி" என்றோரு புத்தகமே எழுதியிருக்கிறார். கிடைதால் வாசித்துப் பாருங்கள்.

இந்தக் குடும்ப வரலாறு, கொடிவழி, வேர்களைத் தேடுவதெல்லாம் எல்லாம் ஒருபுறம். நமக்கு பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களையும், வீடுகளையும் ஏன் வரலாற்றுச் சின்னங்களையும் கூட  எந்தவோரு குற்றவுணர்வும் இல்லாமல் இடிக்கவும் சிதைக்கவும் செய்யும் மனநிலைதான் இருக்கிறது. தமிழகம் முழுக்க பயணிக்கும் போதெல்லாம் இதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இருப்பதுபோலத் தெரியவில்லை

தனிநபர் என்றில்லாமல் அரசாங்கமே இதுகுறித்து  எந்தவொரு பிரக்ஞையும் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம்.  நம்முடைய அரசு  ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய கோயில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் பராமரிக்கும் விதத்தைப் பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிக்கத் தோன்றுகிறது.

ஆனால், மேற்கு நாடுகளில் நிலை வேறாக இருக்கிறது. அங்கே எந்தவொரு சிறு பொருளையும் அதனை ஒரு வரலாற்றுச் சான்றாக மதித்துப் பாதுகாக்கும் மனப்பக்குவம்  மக்களுக்கே இருக்கின்றது. ஆனால், நமக்கோ அவை பற்றிய வருத்தமோ, கவலையோ ஏன் சிந்தனையோ துளிகூட இல்லை என்பது தான் உண்மை.

#மரபு_குடும்பவரலாறு