Monday, March 13, 2017

வனநாயகன் குறித்து (4) ஆல்பி அவர்கள்

"அத சொன்ன வாய்க்கு முதல்ல சக்கரை போடனும் " என்றோரு பதம்
ஊர் பக்கம் சொல்வார்கள்.  அதாவது ஒரு விசயம்  ஒருவர் சொன்னதுபோல் நடந்துவிட்டால் சொன்னவரை பாராட்டும் விதத்தில் அப்படிச் சொல்வார்கள்.

வனநாயகன் புதினத்தின் (நாவல்) உயரத்தை முதலில் சரியாக கணித்தவர் என்ற முறையில்   நான் முதலில் சர்க்கரை போட நினைப்பது எனது நீயூயார்க் நண்பரும் பதிவருமான ஆல்பி (நியூயார்க் பரதேசி) அவர்களுக்கு தான்.  வனநாயகனை முன்வைத்து அவர் எழுதிய வலைப்பதிவு  இங்கே.

http://paradesiatnewyork.blogspot.com/2017/03/blog-post_9.html

நாவலுக்கு பல பாராட்டுகள் வரும் இந்தத் தருணத்தில் அவரைப் பற்றி -

ஆல்பி பதிவுலகத்தின் மூலம்  எனக்கு அறிமுகமானவர்.   நியூயார்க்கில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மனிதவளத்துறையின் உயர்பதவியில் இருக்கிறார்.   இலக்கியத்தில் நல்ல பரிச்சம் உள்ளவர்.  சிறப்பான பயணக்கட்டுரைகள் எழுதக்கூடிவர். இளையராஜாவின் தீராத ரசிகர். மேடை பேச்சாளர் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.  முக்கியமாக  தொடர்ந்து வாசிப்பவர்.  ஒரு முறை பேச்சினூடே தனது லைப்ரரி கலெக்சனுக்கு வீட்டில் இடமில்லாமல் தனது நூற்றுக்கணக்கான தமிழ் புத்தகங்களை உள்ளூர் தமிழ்சங்கத்துக்கு நன்கொடையாக தந்ததை நினைவு கூர்ந்தார். அந்த அளவுக்கு வாசிப்பில்  ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்.

அவர்தான் எனது எழுத்துகளை விடாமல்  வாசித்து தொடர்ந்து உற்சாகப்படுத்தி வனநாயனின் எல்லா கட்டங்களிலும் உறுதுணையாக இருந்தவர்.  தமிழில் இதுவரை எழுதப்படாத கதைக்களன்.  முற்றிலும் மாறுபட்ட கதைக்கரு. மனிதர்களுடன் நெருக்கமாக பேசும் பாணி. பலவிதங்களில் வித்தியாசம் எனச் சொல்லி என்னை இயக்கியவர்.

" மலேசியாவுக்கு ஒருநாளைக்கு எத்தன ஆயிரம் பேர் போறான் ? எத்தன பேர் அனுபவத்தை எழுதுறான் ? எத்தன பேருக்கு அந்த நாட்டை பத்தி சரியா தெரியும். உங்களுக்கு நல்லா எழுத வருது.  கண்டிப்பாக எழுதுங்க". என தோள் கொடுத்தவர்.

எழுதவேண்டும் எனும் ஆர்வம் ஒருபுறம்   இருந்தாலும் அவர்
வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் எனும் எண்ணம் எனக்கு ஒரு கூடுதல் வேகம் வந்தது.  அந்த வேகமே இரவுபகலாக மலேசியா தொடர்பான பல புத்தகங்களைத் தேடி தேடி வெறித்தனமாக படித்து எழுத வைத்தது.

அவர் ஒரு விசயத்தில் மட்டும்  உறுதியாக இருந்தார். அவர்  நல்ல எழுத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு பிரபல பதிப்பகம் கண்டிப்பாக அவசியம் என திடமாக நம்பினார்.   அந்தவிதத்தில் என்னை கிழக்கு பதிப்பகத்தை அணுகச் சொல்லி வழிகாட்டியவரும் அவரே.

வனநாயகன் தொடர்பாக கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றிசொல்லும் அதேவேளையில் இன்று ஆல்பியையும் இன்னும் ஓரிரு நண்பர்களையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அவருக்கு நன்றி சொல்லும் அதேவேளையில் இதுபோன்ற நட்புகள் கடல்கடந்த தேசத்தில் கிடைப்பது அரிது என்பதையும் தெரிந்திருக்கிறேன். நன்றி ஆல்பி சார் !!

Tuesday, March 7, 2017

எழுத்தாளர் சுஜாதாவும் திராவிடமும்

நமது அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் திறந்துவிடதான் மறுக்கிறார்களே தவிர, சங்ககால தமிழ் வார்த்தைகளை அல்ல எனச் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் நிறைய தமிழ்ச் சொற்கள் நிரம்பிக்கிடக்கின்றன எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் சுஜாதா  திராவிட மொழிகளில் தமிழின் தாக்கம் குறித்து "கற்றதும் பெற்றதும்" தொடரில் பதிவு செய்தது உங்களுக்காக.

//
தமிழின் பல சங்க கால வார்த்தைகள், மற்ற திராவிட மொழிகளில் அன்றாட வார்த்தைகளாக உள்ளன
என்பதை அம்மொழிகளின் திரைப்படங்களைப் பார்க்க நேரும்போதெல்லாம் யோசிப்பேன்.

"இல்லு" என்ற சொல் நம் இல்லத்திலிருந்து அனுப்பியது. அதே போல இன்றைய தெலுங்கில் "நச்சி" என்ற வார்த்தை, "விரும்புதல்" என்ற பொருளில் பயன்படுகிறது.  "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கம்பராமயணப் பாடலில் உள்ள நச்சுதல் அது.

"மனை" நம்மிடம் அழைப்பிதழ்களில் மட்டுமே மிஞ்சியுள்ளது. அதைக் கன்னடத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டைக் கட்டிக்கொண்டோம். அகமும் புறமும் மலையாளத்தில் இன்று அன்றாட வார்த்தைகளாகி, நம் உள்ளேயிருந்து வெளியே போய்விட்டன.
//

அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்மொழி  தமிழ்
என்பது ஆய்வு செய்து உறுதிப்படுத்தப்பட்டது தானே.

Friday, March 3, 2017

வனநாயகன் குறித்து-3 (இவன் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது)

"வனநாயகன்: மலேசிய நாட்கள்"  நாவல் குறித்து நண்பரும்  எழுத்தாளருமான என்.சொக்கன் தனது முகநூலில் பகிர்ந்தது.


******************************************************************************
ஆரூர் பாஸ்கரின் சமீபத்திய நாவலான ‘வனநாயகன்: மலேசிய நாட்கள்” படித்தேன்.
அடிப்படையில் இது ஒரு த்ரில்லர்தான். மென்பொருள்துறைப் பின்னணி என்பதால், கொஞ்சம் கணினி/இணையப் பாதுகாப்புபற்றிய விஷயங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்.

மற்றபடி, ‘யார் இதைச் செய்தார்கள்?’ என்கிற துரத்துதல்தான்.
ஆனால், மற்ற த்ரில்லர்களிலிருந்து இதனைப் பிரித்துக்காட்டுபவை இரு விஷயங்கள்:

முதலாவதாக, நாவலுக்குள் ஒரு சுற்றுலாக் கையேடுபோல மலேசியாவின் பல்வேறு முக்கியமான பகுதிகளைச் சரித்திரத்துடன் அறிமுகப்படுத்துகிறார், அது துருத்திக்கொண்டு நிற்காமல் கதையோடு கலந்து அமைகிறது. நாயகன் மர்மத்தைத் துப்புத்துலக்குவதற்காக மலேசியாவைச் சுற்றிவந்துவிடுகிறான், நாவலின் சூசகமான தலைப்பைப் பார்த்தால் வருங்காலத்தில் இவன் இன்னும் பல நாடுகளைச் சுற்றுவான்போல் தெரிகிறது!

இரண்டாவதாக, என்னதான் த்ரில்லர் என்றாலும், நல்லவன், கெட்டவன் கோட்டைக் கொஞ்சம் மசங்கலாகவே அமைத்திருக்கிறார். பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவையும் உள்ளன, கெட்டவையும் உள்ளன, அவ்விதத்தில் எனக்கு இது கொஞ்சம் நெருக்கமாகத் தோன்றியது.

*********************************************************************************

Wednesday, March 1, 2017

அமெரிக்கர்களுக்கு இன்னோரு புதிய தலைவலி

மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் ( ஐடி அல்லாத) ஒயிட்காலர் வேலை செய்பவர்களுக்கு  "ரோபாடிக்ஸ்"  ரூபத்தில் புதிதாக இன்னோரு தலைவலி வந்து சேர்ந்திருக்கிறது.  காரணம் ? எல்லாம் பணம் படுத்தும்பாடு தான்.

நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பயன்பாட்டில் இருப்பதுமெயின்பிரேம் கனிணி.  அதில்தான்   லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கின்றன. பல ஆயிரம் பேர்  பயன்படுத்திகிறார்கள்.    ஆனால், முப்பது வருடம்  அரத பழசுனாது. அதன்  நிரல்களை (program) மேம்படுத்தி புதுப்பிப்பதென்றால் ஐபிஎம் நிறுவனத்துக்கு பல மில்லியன் டாலர்கள் தெண்டம்  அழவேண்டும்.   பெரும் செலவு செய்து புதுப்பிப்பதற்கு பதிலாகதான் "ரோபாடிக்ஸ்" எனும்  புதிய தொழில்  நுட்பத்தை அதனுடன்  ஒத்திசைவாக  பயன்படுத்த இருக்கிறார்கள்.

இந்த ரோபாடிக்ஸ் புரோகிராம்கள் இப்போழுது நாள் முழுவதும் மனிதர்கள் மெயின் பிரேம் கம்யூட்டர்களை வைத்து செய்து கொண்டிருக்கும் வேலையை ஒரு சில நிமிடங்களில்  அசால்டாக செய்து முடித்துவிடும்.  அதனால் கணிசமானவர்கள் இன்னும்  ஒரிரு வருடங்களில் வேலையை இழக்கப்போவது உறுதி.

இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் நன்கு படித்த வோயிட் காலர் வேலைபார்ப்பவர்கள் தான். இருந்தாலும் வேறு வழியில்லை.  ஐடி துறையில் அடிக்கும் இந்த புதிய அலை குப்பை கூளங்களுக்கும், புத்தகத்துக்கும் வித்தியாசமா பார்க்கப்போகிறது ?

இங்கே இருக்கும் அமெரிக்க நண்பர்கள் பலரிடமும் பேசினேன். எல்லோரும் பொதுவாக சொல்லும் ஒரு விசயம். பெருநிறுவனங்கள் தங்கள் செலவினத்தை குறைத்து வருமானத்தைப் பெருக்க
ஏதோ ஒரு  விதத்தில் புதிய தொழில்நுட்பத்தைத் தேடி தேடி பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன.

இனி வரும் நாட்களில்  மனிதர்களின் இடத்தை கம்யூட்டர்கள் முழுமையாக  நிரப்பிவிடுமா ? எனும் விவாதத்துக்குள் நாம்
இப்போதைக்குப் போகத் தேவையில்லை. ஆனால், இயந்திரங்களால் செய்ய முடியாத வேலை என்று ஒன்று  இருந்தால்  அதைத் தேடிக் கொள்வது உசிதம்.