Monday, March 25, 2019

சிகாகோவில் முப்பெரும் விழா

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த ஆண்டு ஜூலை 3,4,5,6 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. (உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, பேரவையின் 32ஆவது தமிழ் விழா , சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா).

மாநாட்டின் விழாமலருக்கு உங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.  ஆர்வமுள்ள நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். விவரங்கள் இணைப்பில்.


Sunday, March 24, 2019

டிரங்க் பொட்டி - எழுத்தாளர் பால கணேஷ்

காலம் அதிவேக ரயிலாக முடிவிலியை நோக்கி  விரையும்
இன்றைய அவசர உலகில் எதையும் நிறுத்தி நிதானமாக யோசிப்பதற்கு
கூட அவகாசமில்லை. இந்தச் சூழலில் கடந்த கால மனிதர்களைப்
பெருமையோடு நினைத்துப் பார்ப்பதும் அவர்கள்  வாழ்வை ரசனையோடு கொண்டாடுவதையும் நேரவிரயம் என்றே பலர் நினைப்பார்கள்.. ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளி முகநூல் நண்பர் பால கணேஷ் நாமெல்லாம் ஆச்சர்யப்படும் வகையில் டிரங்க் பொட்டி எனும் புதையலை திறந்து நம் கண் முன் வைத்திருக்கிறார்.

கணேசுக்கு தனது தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் ரகசியமாக பாதுகாத்த டிரங்க் பெட்டியைத் திறந்து பார்க்கும்  வாய்ப்பு  கிடை த்திருக்கிறது. அதில் அவர் தாத்தா அள்ள அள்ள குறையாமல் சுரக்கும் அமுதசுரபி போல பல அற்புத விசயங்களை சேகரித்து வைத்து இருந்ததைப் பார்த்து கணேஷ் கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த ஆச்சர்யத்தை டிரங்க் பெட்டி புத்தகம் வழியாக நமக்கும் கடத்தியிருக்கிறார்.

கணேஷ் கண்டெடுத்த ஆச்சர்யம் விலை உயர்ந்த நகையோ, செல்வமோ
அல்ல. மாறாக விலை மதிக்கமுடியாத பழைய புத்தகங்கள், அன்றைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள், திருமண அழைப்பிதழ்கள்,
பாத்திரங்கள், மரப்பாச்சி பொம்மைகள், பேனா, பழைய முகத்தல் அளவை சாமான்கள், விளம்பர நோட்டீசுகள் என எல்லாம் அந்தகால சாமான்கள். இந்தப் புத்தகம் அவற்றைப் பட்டியல் மட்டும் போடும் ஒரு சிறு குறிப்பாக இல்லாமல் அவற்றைப் படத்தோடு அதன் பின்புலத்தைக் கதையாக சுவாரசியமாக வாசிக்கும்படி சிறு புத்தகமாக வந்திருக்கிறது. தமிழில் இது நல்ல முயற்சி. அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அன்றைய மக்கள் மதிப்பீடுகள், வாழ்க்கை முறை,
அன்று தமிழ் பொதுவெளியில் எழுதப்பட்டவிதம் என புத்தகத்தைப் பல நம்மால் கோணங்களில் அணுகமுடிகிறது. எடுத்துக்காட்டாக இதில் குறிப்பிடப்பட்டுள்ள 1864இல் மசூலிப்பட்டினத்தைச் சுனாமி  தாக்கிய சம்பவம் இன்று இணையத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல அரிய தகவல்கள் புத்தகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

உண்மையில் நாம்  இப்படித்தான் அன்றைய வெகுஜன மக்களின் வரலாற்றைக் கட்டியமைக்க வேண்டியிருக்கிறது. மேற்கு நாடுகளில் family bible எனும் பெயரில் குடும்ப வரலாறு எழுதும் வழக்கமிருக்கிறது. அதாவது ஒரு குடும்பத்தினர் வழிவழியாக தங்கள் குடும்பத்தின் வரலாற்றை எழுதி ஆவணப்படுத்தி அடுத்தத் தலைமுறைக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்கிறார்கள். இப்படிச் செய்வதால் ஒரு குடும்பத்தின் மரபு,  பழக்க வழக்கங்கள்,வட்டார மொழி,  உணவு, உடை, முக்கிய நிகழ்வுகள், அன்றைய வாழ்க்கைமுறை போன்ற பல அரியதகவல்கள்  நூற்றாண்டுகள் கடந்து அடுத்தத் தலைமுறைக்குச் சென்றுசேர வாய்ப்பிருக்கிறது.

பால கணேஷின் டிரங்க் பொட்டி புத்தகம் ஒருவிதத்தில் குடும்ப பைபிள் என்று கூட சொல்லலாம். கூட்டுக் குடும்பங்கள் ஓழிந்து நகரமாயான இன்றையச் சூழலில் அடுத்த தலைமுறைக்கு நமது மரபின் தொடர்ச்சியைச் சொல்ல   அனைவரும் நமது வீட்டின் டிரங்க்பெட்டிகளைத் தேடி திறந்து காட்டவேண்டிய தருணம் இது.

வாழ்த்துகள் பாலகணேஷ் !!, முடிந்தால் அழகான வண்ணப்படங்களோடு அனைவருக்கும் பயன்படும் வகையில் டிரங்க் பெட்டியை இணையத்தில் வெளியிடமுடிந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்

நூல் : டிரங்க் பொட்டி
ஆசிரியர் : பாலகணேஷ்
பதிப்பகம்: தங்கத் தாமரை பதிப்பகம்
விலை: ரூ. 80










Wednesday, March 20, 2019

அன்றைய தமிழக அரசியல்

இருவரும் நேர் எதிர் துருவங்களில் இருந்து எதிர்வினையாற்றினாலும் அன்றைய தமிழக அரசியலில் பண்பாடு இருந்தது என்பதை மறைந்த பத்திரிகையாளர் வலம்புரிஜான் தனது வணக்கம் தொடரில் குறிப்பிட்டு சொல்கிறார்.

இனி வருவது  அவருடைய வரிகள்.

.... எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் தொலைக் காட்டப்பட்டபோதெல்லாம் கலைஞர் வாய்விட்டு அழுதிருக்கிறார். இதை அவரே ஒருமுறை என்னிடம் சொன்னார். நானும் மற்றவர்கள் வழியாக இதனை அறிந்தேன்.

2000 ஆண்டுகளுக்கு முந்திய பண்பாட்டைப் பற்றியே தமிழர்கள் பேசிவருகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன் போகவேண்டும். அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்த வந்த பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அண்ணாமலையைப் பார்த்து "என்ன டாக்டர், இந்த உயிரைக் காப்பத்த முடிலியேண்ணே.. நீங்க என்ன டாக்டருண்ணே.. "என்று கேட்டார்.

ராஜாஜியின் வாழ்க்கை முடிந்து போனபோது சுடுகாட்டில் அவரது சடலத்தைச் சந்தனக் கட்டைகள் மறைத்து நின்றன. யாருக்காகவோ ராஜாஜியின் மகன் நரசிம்மன் காத்து நிற்கிறார் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால், சக்கரவண்டியில் வந்தப் பெரியாரைப் பார்த்த பிறகுதான் எல்லோருக்கும் கண்கள் விரிந்தன.

ராஜாஜியின் சடலத்திற்கு அருகில் அமர்ந்து பெரியார் ஒரு குழந்தையைப் போல கேவிக்கேவி அழுதார்....


Sunday, March 17, 2019

கதைச்சொல்லி

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் தேடிப்பிடித்து  தமிழ் சிறுவர் கதைப்புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறேன். பெரும்பாலனவை
குழந்தைகள் விரும்பும் வகையில் விலங்குகளைக் கொண்டு சொல்லப்படும் நீதிக்கதைகள், குறும்பான நகைச்சுவை கதைகள்.  தெனாலிராமன், புராண, காப்பியக் கதைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மிடம் ஆங்கிலத்தில் இருப்பது போல வெரைட்டி இல்லை எனும் குறை கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாக  இன்று அறிவியல் புனைகதைகளுக்கான தேவை இருக்கிறது.

சொல்வளம் அதிகமில்லாத அமெரிக்க பிள்ளைகளுக்கு  தமிழ்புத்தகங்கள் வாங்குவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. முதன்மையாக கதை நீண்ட வாக்கியங்களில் இல்லாமல் மிகவும் சுருக்கமாக எளிமையான மொழி நடையில் இருக்கவேண்டும். அடுத்தது சொற்களின் பயன்பாடு - பிள்ளைகளுக்கு பரிட்சியமில்லாத அந்நியச் சொற்களை
அறிமுகப்படுத்துவதிலும் சிரமிருக்கிறது. அப்படியே புதிய சொற்களை அறிமுகம் செய்வதாக இருந்தால் அதற்கு துணை செய்வதுபோல ஒவியங்கள் அமைந்திருந்தால் வாசிப்பு எளிமையாகும். உதாரணமாக பாம்பு புற்றில் இருந்து தலை தூக்கியது என கதையில் எழுதினால்,  கூடவே கண்டிப்பாக மண் புற்றின் படத்தைப்  போட்டுவிடுங்கள். புற்றுக்கு நாங்கள் விளக்கம் சொல்ல கூகுளைத் தேடவேண்டியிருக்காது.  அதுபோல அந்தக் கதை ஒரு நீதிக்கதையாக இருந்தாலும் குழந்தைகளின் உளவியலை அறிந்து அவர்களை ஏதோ ஒருவிதத்தில் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இருப்பதும் நல்லது.  பல தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்களையும்
பார்க்கமுடிந்தது. அதுபோல சில புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டும் அடுத்தடுத்தாக சேர்ந்தும் கூட வந்திருப்பதைப் பார்த்தேன்.

இன்னொரு முக்கியமான அம்சம் அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியம்
கவனத்தைக் கவரும் வகையிலும் அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் ஓவியங்களும் கற்பனையைத் தூண்டும் வகையிலும் இருக்கவேண்டும்.
ஓவியத்தோடு கதையை வாசிக்கும் பிள்ளைகளுக்கு அவை  மன எழுச்சியை தரவேண்டும்.

இனி இந்தப் புத்தகங்களை வார இறுதியில் தமிழ்வகுப்புகளில் வாசிக்கத் தொடங்க வேண்டும். வழக்கம்போல் ஆசிரியர் கதைகளை வாசித்து காட்டுவதை விடுத்து பிள்ளைகள் தன்னிச்சையாக கதையை வாசிக்கவும், அதை மற்றவர்களிடம் பகிரும் பழக்கத்தையும் ஊக்குவிக்கவும் ஒரு யோசனை செய்திருக்கிறேன்.

அதன்படி இனி வரும் நாட்களில்  ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளில் ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். அப்படித் தேர்வு
செய்யப்பட்டவரே அடுத்த வாரத்தின்  "கதைச்சொல்லி". அவரிடம் மேற்ச்சொன்ன ஓர் எளிய தமிழ் சிறுவர் சிறுகதைப் புத்தகத்தைக் கொடுத்துவிடலாம்.   அவர் அந்தக் கதையை வீட்டில் வாசித்து முறையாக பயிற்சி எடுத்துக்கொண்டு வரும் வாரத்தில் மற்ற பிள்ளைகளுடன் பகிரட்டும்.

இப்படிச் செய்வதால் பிள்ளைகளுக்கு தமிழில் சொந்தமாக வாசிக்கும்
பழக்கம் மேம்படுவதுடன் மற்றவர்களுக்கு ஏற்ற இறக்கத்தோடு படித்துக் காட்டுவதால் குழுவுடன் புரிந்துணர்வு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக
மற்றவர்களுடைய கைத்தட்டல்களும், பாராட்டுகளும் அவர்களை உற்சாகப்படுத்தி தமிழ் ஆர்வத்தை அதிகப்படுத்தும் என்றே நினைக்கிறேன்.
முயற்சி செய்து பார்ப்போம்.


Friday, March 15, 2019

வனநாயகன் குறித்து-10

"வனநாயகன்(மலேசிய நாட்கள்)" குறித்து  வாசகர்  சிங்கப்பூரில் இருந்து
ஹரி  குட்ரீட்ஸ் (good reads) தளத்தில் பகிர்ந்த குறுந்தகவல். 

இதுபோல வனநாயகன் குறித்து எழுதப்படும் பல குறிப்புகள் பொதுவாக தமிழ் வாசகர்கள் மெளனமானவர்கள் என்பதைப் பொய்யாக்குகிறது.
நன்றி ஹரி  !!

/////

ரெண்டு விஷயங்கள் இந்த புதினத்தைப் படிக்க தூண்டியது 

1. It company 2. வெளிநாட்டில் வாழும் இந்தியன். 

எனது ஆரம்பகல Singapore அனுபவத்தை மற்றும் kl/genting வருடி சென்றது.

ஒரு நல்ல திர்ல்லராகத்  தொடங்கி சற்று சதாரணமாக முடிந்தது.


/////

புத்தகத்தை இணையத்தில் கிழக்கு பதிப்பகத்தில் வாங்க:

Wednesday, March 13, 2019

எத்தனை சுஜாதாக்கள் ?

பிப்ரவரி-27,2019 எழுத்தாளர் சுஜாதா நினைவு நாளன்று முகநூலில் பகிர்ந்தது.

இன்று தமிழில் கவிதை, சிறுகதை, புனைவு எழுதுபவர்களை ஒப்பிடுகையில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் குறித்து எழுதுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நாம்  தமிழில் விஞ்ஞானம் என்றால் எழுத்தாளர் சுஜாதாவோடு நின்றுவிடுகிறோம். 


ஆனால், தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்றோடு  சுஜாதாமறைந்து முழுதாக 11 ஆண்டுகளாகின்றன. இந்தப் பதினோரு ஆண்டுகளில் காலியான சுஜாதாவின் இடத்தை யாரும் முழுமையாக நிரப்பியதாக தெரியவில்லை. சொல்லப்போனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் நமக்கு பல சுஜாதாக்கள் தேவைப்படுகிறார்கள்.

அந்தவகையில் சுஜாதா கையெடுத்த பணியை இன்று இடையறாது செய்து கொண்டிருப்பவர்களில் ஒருவரைச் சுட்டிக் காட்ட  வேண்டுமானால் கனடா நண்பர் ரவி நடராஜன் அவர்களைத் துணிந்து கைகாட்டலாம்.

தமிழில் தொழில்நுட்பம் ,விஞ்ஞானக் கட்டுரைகள் என இடைவிடாமல் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன்,  சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர், தொழில்முறையில் கணினி மென்பொருள் துறையில் பல்லாண்டுகளாக பணிபுரிகிறார். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து 
கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 

தற்போது இந்தத் தகவல்கள் மேலும் பரந்த வாசகர் வட்டத்தைச்  சென்றடைய வேண்டும் (தமிழ் தெரிந்த, ஆனால் படிக்க முடியாதவர்கள்)  எனும் சீரிய  எண்ணத்துடன்,  
புதிய முயற்சியாக சமீபத்தில் "தமிழ் நுட்பம்" எனும் யூடியூப் சேனல் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ரவி சார்!!.


செயற்கை நுண்ணறிவு தொடர்பாக அனைவருக்கும் எளிதில் புரியும் வரையில் அவர்  கடந்த 10 வாரங்களாக வழங்கிய காணொளிகளை நண்பர்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் தெரிந்தவர்களுக்கும் இதைப் பகிரலாம்.

ரவி நடராஜன் அவர்களின் யூடியூப் சேனல் முகவரி:  https://www.youtube.com/channel/UC-2y8NFP6EdW9etOI6lmOlQ

அவருடைய முகநூல்: https://www.facebook.com/ravi.natarajan.50

Monday, March 11, 2019

தமிழ் எழுத்துலகும் குழுக்களும்

பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்,  முற்போக்கு இலக்கிய இயக்கம், திராவிட எழுத்தாளர் குழுமம் என்றெல்லாம் பிரிந்து இங்கே தனித்தனிக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் குழுக்களுக்கென சிற்றிதழ்கள், தனித் தனியான முறைமைகள்,
வாசகர் வட்டங்கள் உண்டு. அவர்கள் தங்களுக்குள்
அடிக்கடி உரசிக் கொளவார்கள், வேண்டியவர்களை உயர்த்திப்பிடிப்பார்கள்,
சிலரைக் கைதூக்கி விடுவார்கள், தங்களுக்குள் விருது கொடுத்துக் கொள்வார்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன.

ஆனால்,  மேலே சொன்ன எந்தப்பிரிவிலும் சாராத படைப்பாளர் கூட்டம் ஒன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இணையம் பெருத்து சமூகவளைதளங்களின் கைஓங்கியிருக்கும் இந்த நாட்களில் அவர்களின்
எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன்.
அரசியல் பின்புலம் எதுவுமின்றி  தங்கள் அனுபவத்தோடு தமிழையும், படைப்பாற்றலையும் மட்டும் நம்பி அவர்கள்  வாசகர்களை நேரடியாக
சந்திக்கிறார்கள். "நான் இலக்கியவாதிகளுக்காக எழுதவில்லை , வாசகர்களுக்காக எழுதுகிறேன்" எனும் கோசத்துடன் களமிரங்கி இருக்கும் இவர்களில் பலருடைய எழுத்து கவனிக்கத்தக்கது.

இதில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் படைப்புகளைத் தாங்களே பதிப்பித்து அச்சில் கொண்டுவருகிறார்கள். சிலர் நேரடியாக அமெசானின் கிண்டில் போன்ற மின்னணு ஊடகங்களை நாடுகிறார்கள். படைப்புகளை வெளியிட்ட கையோடு அதற்கான மார்கெட்டிங் வேலையையும் கையில் எடுத்துக்கொள்ளும் இவர்கள் சமூக ஊடகங்களில் தொய்வின்றி தீவிரமாக
செயல்படுகிறார்கள்.

இன்டிபெண்டன்ட் ஆத்தர்ஸ் (Independent Authors ) என ஆங்கிலத்தில் சொல்வதுபோல எந்தக் குழுவையும் சாராமல் சுயாதீனமாக செயல்படும்
இவர்களுடைய எண்ணிக்கை  அதிகரித்து வருவதை ஆரோக்கியமானதாக நினைக்கிறேன். இவர்கள் இலக்கிய வட்டங்களின்
மைய அரசியலில் இருந்து சற்று விலகி இருந்தாலும் இவர்களுடைய படைப்புகளை நாம் புறந்தள்ளவேண்டியதில்லை.  மாறாக
இவர்களுடைய எண்ணிக்கை வரும்நாட்களில் இன்னமும் கணிசமாக உயர்ந்து தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுப்பார்கள் என நம்புகிறேன்.

Thursday, March 7, 2019

அந்த ஆறு நாட்கள் - டர்பனில் இருந்து

தென்ஆப்பிரிக்காவிலிருந்து  இன்று ஒரு வாசகர்  கடிதம் வந்திருக்கிறது. ஆமாம், டர்பனில் இருந்து.  படைப்புகளைக் கிண்டிலில் வெளியிடுவதால் உலகம் முழுவதுமுள்ள வாசகர்களை எளிதாக தொட்டு விட முடிகிறது.
"அந்த ஆறு நாட்கள்" -க்கு வந்த முதல் வாசகர் கடிதத்தை நண்பர்களுடன் பகிர்வது மகிழ்ச்சி. நன்றி பிரபு.

****************
அன்புள்ள ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வணக்கம். 
அந்த ஆறு நாட்கள் – கிண்டிலில் வாசித்து முடித்தப் பின் தங்களுக்கு எழுதுவது. நாவல் எனக்கு பெரிதும் பிடித்திருக்கிறது. மீண்டும் ஒரு
சிறப்பான, சுவராசியமான படைப்புக்கு எனது வாழ்த்துகள்  மற்றும் பாராட்டுக்கள்.

பேராபத்துக்கான பெரும்  அழிவைத் தரக்கூடிய ஹரிக்கேன் இர்மாவிடம்

இருந்து தொடங்கும் இந்த நாவலில் குடும்பத் தலைவனான பரணியின்
மனஓட்டத்தை, அமெரிக்கச் சூழலில்  மிக நேர்த்தியாக நல்ல மொழியில்
வாசகனுக்கு கடத்தியிருக்கிறீர்கள். 

சவால்களே ஒரு நல்ல தலைவனை மக்களுக்கு அடையாளம் காட்டும்

என்பது போல பேராபத்து நெருங்கிவரும்  நெருக்கடியான சமயத்தில்
பரணியின் குடும்பம் அவனை நெருக்கமான  குடும்பத்தலைவனாக
உணர்வது அருமை.  அதுபோல இந்த வாசிப்பின் வழியாக ஒரு குடும்பத் தலைவனாக  நானே என்னை கண்ணாடியில் சில நொடிகளேனும்
உற்றுப் பார்க்கவைத்த படைப்பு இது.

இதுவரை தமிழ் நாவல்கள் பேசாத பல நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கும் வகையிலும் உங்கள் நாவல்  முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துகள் !



டர்பனில் இருந்து

பிரபு

****************

அமேசான் இணையதளத்தில்.

USA நண்பர்களுக்கு கிண்டில் முகவரி-
https://www.amazon.com/dp/B07NBDM78S/ref=sr_1_2?ie=UTF8...

இந்திய முகவரி -
https://www.amazon.in/dp/B07NBDM78S/ref=sr_1_1?ie=UTF8...







Friday, March 1, 2019

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் ?

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு மனிதன் என்றெல்லாம் பொதுவாக சொன்னாலும் நமது சமூகம் நகைச்சுவை விசயத்தில் கொஞ்சம் பலவீனமானது என்றே நினைக்கிறேன். அதுவும் குறிப்பாக சென்னை போன்ற அழுத்தமிகுந்த, பரபரப்பான பெருநகரங்களில் நகைச்சுவை என்பது காற்றில் கூட இல்லை என்பதைக்  கவனித்திருக்கிறேன்.

மற்ற இடங்களில் எப்படியோ நகரங்களின் கடைகள், ரயில் நிலையங்கள் போன்ற முன் பின் அறிமுகமில்லாதவர்களைச் சந்திக்கும் பொது இடங்களில் சிரிப்பு என்பதை மருந்துக்குக் கூட பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் இறுக்கமான முகங்களே. சமயங்களில் நகைச்சுவை உணர்வற்ற இருண்டகாலத்தில் வாழ்கிறோமோ என்றுகூட நினைப்பதுண்டு.

அப்படியே அரிதாக யாரேனும் தப்பித்தவறி நகைச்சுவையாக பேசினாலும் அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்களே இங்கு அதிகம்.
இங்கே நகைச்சுவை எனச் சொல்வது வடிவேலு போல ஏற்ற இறக்கத்துடன் பேசி சிரிக்க வைக்கும் முயற்சியை அல்ல. மாறாக இயல்பான உரைநடையில் வாய்ப்பும் சூழலும் கிடைத்தால் மெல்லிய பகடியோடு பேசுவது தவறில்லை. உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை அப்படி வேறு யாரேனும் பேசினால், பதிலுக்கு சிரிக்காவிட்டாலும் கண்டிப்பாக முறைக்காதீர்கள். சரி நாம் என்ன செய்யலாம் எனக் கேட்பது காதில் விழுகிறது. :)

அடுத்த முறை பேருந்தில் "2 ரூபாய் சில்லறை இல்ல , 5 ரூபாய இருக்கு சார்" எனும் நடத்துனரிடம் சிரித்தபடி "அது எனக்கு பிரச்சனை இல்லை, குடுத்தா நான் வாங்கிக்க ரெடி" எனச் சொல்லி சூழலைக் கலகலப்பூட்ட முயற்சி செய்யலாம்.

இல்லை ஒரு நகைக்கடைக்கு போனால்,  "மேடம் நீங்க எத்தனை சவரன்ல நெக்லஸ் பாக்குறீங்க எனும் விற்பனைப் பிரதிநிதியிடம், 10 பவுன்ல பாக்க ஆசைதான், ஆனால் இப்ப 3 பவுன்லேயே காட்டுங்க பார்ப்போம்" என சிரித்தபடி சொல்லிப் பாருங்கள். அவரும் பதிலுக்கு சிரித்தபடி உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் உங்களுக்கு நகைகளை எடுத்துக்காட்ட வாய்ப்புள்ளது.


இப்படி பொது இடங்களில் நகைச்சுவையாக பேசுபவர்களைப் பற்றிய நமது மதிப்பீடுகளும் வேறாக இருப்பது துரதிஷ்டமே.