Saturday, March 25, 2023

ஜெஸிகா கிங் - குறித்து (6) - அமெரிக்கச் சித்திரம் அழகாக வந்திருக்கிறது

ஜெஸி (எ) ஜெஸிகா கிங் குறித்து முகநூல் நண்பர் சரவணன் மாணிக்க வாசகம் அவர்களின் பதிவு..

ஆசிரியர் குறிப்பு:
திருவாரூரைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் ஃபிளாரிடா மாகாணத்தில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.

தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தும் இவர் கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். என் ஜன்னல் வழிப்பார்வையில், பங்களா கொட்டா,வனநாயகன்-மலேசிய நாட்கள், Social media குறித்த இருநூல்கள் முதலியன ஏற்கனவே வெளிவந்த இவரது நூல்கள். இது சமீபத்தில் வெளிவந்த இவரது நாவல்.
பெயர் சொல்லாத கதைசொல்லி, காதலித்தவளை மணக்காமல், தாயார் ஏற்பாடு செய்த பெண்ணை மணந்து, பின் அவளையும் பிரிந்து, பத்து வயதுப் பெண் குழந்தையோடு, பிளோரிடாவின் Posh குடியிருப்பில் வசிக்கையில், பக்கத்தில் வசிக்கும் ஜெஸி என்ற அமெரிக்கப் பெண்ணுடன் காதல் அரும்புகிறது. அது மலர்வதற்குள் ஜெஸி காணாமல் போகிறாள். அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதே கதை.


ஒரு புனைவில் பறவைகள் இவ்வளவு தூரம் இடம்பெறுவதைத் தமிழில் முதன்முறையாக நான் வாசிக்கிறேன். நாவலின் முக்கிய கதாபாத்திரம் ஒன்று, மற்றும் அவளது மாமா இருவரும், Ornithophile ஆக இருப்பதால் பறவைகள் கணிசமான பங்கை இந்த நாவலில் எடுத்துக் கொள்கின்றன. அட்டையில் இருக்கும் நீலநாரை, ஜெஸிக்கான உருவகம் மட்டுமல்ல, கதையின் இறுதியில் முக்கியமானதொரு வேலையைச் செய்யப் போகிறது.
அடுத்ததாக, அமானுஷ்யம் (Paranormal). அமானுஷ்யம் நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. பிரியாவின் மூலமாகச் சொல்லப்படும் விஷயங்கள், தெருவில் நாய்களின் சத்தம், பத்துமடங்கு பெரிய நீலப்பறவை என்று அமானுஷ்யம் கதையில் முக்கிய பங்காற்றுகிறது. அதுபோலவே, Black magic. நம்மை விட அமெரிக்கர்கள் இப்போது அதை அதிகம் நம்புகிறார்கள்.
அமெரிக்க வாழ்க்கை என்பது மட்டுமல்லாது அமெரிக்க மனோபாவம் என்பதையும் பாஸ்கர் இதில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக ஜெஸியுடனான ஓரிரவுக்குப் பிறகு அமெரிக்க மனநிலை அமைதியாக எதிர்கொள்வதையும், இந்திய மனநிலை குற்ற உணர்வுடன் கண்களைச் சந்திக்கத் தவிர்ப்பதையும் சொல்லலாம். அந்த ஒரு இடம் மட்டுமல்ல, அங்கேயே பல காலங்கள் இருந்தவர் என்பதால் அதைத் தெளிவாக நாவலில் கொண்டுவர முடிந்திருக்கிறது.
முதல் ஐந்து அத்தியாயங்கள் ஒரு திரில்லர் நாவலின் தொடக்கத்துடன் வந்திருக்கிறது. இடையில் காதல்கதையாக மாறலாமா என்று யோசிக்கிறது. Romantic thriller என்பது வேறு Format. Clare Mackintoshவின் பெரும்பாலான நாவல்கள் இந்த ரகம். இரண்டு Timelineகளில் கதை நகர்கிற பொழுது, ஒரு அத்தியாயம் Past romanceக்கும் , அடுத்தது Present தேடல் வேட்டைக்கும் வைத்திருந்தால் நாவலின் வேகம் அதிகரித்திருக்கும். குடியிருப்பாளர்கள் பிரச்சனைகள், கூட்டங்கள், கூப்பர் எல்லாமே என் கருத்தின்படி Extra luggage.
ஆரூர் பாஸ்கர் அவருக்குத் தெரியாத விஷயங்களில் புகுவதில்லை. அதுவே அவருடைய பலமும் கூட. இந்த நாவலின் கதைக்களமும் அவர் பலவருடங்களாக வசிக்கும் .ஃபிளாரிடா. அமெரிக்காவில் நடப்பதால் மட்டுமல்ல, மேற்சொன்ன பல விஷயங்களாலும் இது வித்தியாசமான நாவல். போதை மருந்து, Gun culture, சிறுவர்கள் வயதுக்கு மீறிநடப்பது, கட்டற்ற சுதந்திரம் என்று அமெரிக்கச் சித்திரம் இந்த நாவலில் அழகாக வந்திருக்கிறது. அதற்காகவே ஆரூர் பாஸ்கரைப் பாராட்ட வேண்டும்.
பிரதிக்கு :
Zero degree publication 98400 65000
முதல் பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ 330.

Tuesday, March 21, 2023

மனிதத்தின் மகத்தான உச்சங்கள்

ஒரு விழா மலருக்காக மறைந்த பாடகி வாணி ஜெயராம், ஆரூர் தாஸ் போன்றவர்களின் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த போது தோன்றியது;

ஒருவர் பத்தாயிரம் பாடல்களை 19 மொழிகளில் பாடுவது,  1000 படங்களுக்கு மேலாக தமிழில் ஒருவர் வசனம் எழுதுவது என்பதெல்லாம் இனி வரும்  தலைமுறையால் முறியடிக்க முடியாத சாதனைகளாக இருக்கும். இவையெல்லாம் மனிதத்தின் மகத்தான உச்சங்கள்.





இத்தகைய சாதனைகளைச் செய்து முடிக்க அவர்களுக்கு உடலும் ஒத்துழைத்தது என்பது ஒரு நல்ல விசயம்.

1994-இல் ஏ.ஆர்.ரகுமான்

ஒரு பாட்டோ அல்லது இசைத்துணுக்கோ நேரடியாக எப்படி உருவாகிறது என்பதை என்னைப் போல நீங்களும் அறிய ஆர்வம் கொண்டவர் என்றால் இணைப்பில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் காணொளியைத் தவறாமல் பாருங்கள்.

அது ஏ.ஆர்.ரகுமான் சன் டிவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரத்தியோகமாக ஒரு இசைத்துணுக்கை இசைக்கும் நிகழ்ச்சி. அது நிகழ்ந்தது 1993  அல்லது 94 ஆக இருக்கும் என நினைக்கிறேன். இலங்கை வானொலி புகழ் பி.எச். அப்துல் ஹமீதின் ஒருங்கிணைப்பில் அந்த நிகழ்ச்சி மிக அருமையாக வந்திருந்தது. 

நிகழ்வில் கல்யாண வீடுகளில் அனைவரும் எளிதாக கடந்து போகும் நாதஸ்வர இசை ரகுமானின் கைவண்ணத்தில் ரசிக்கும்படியான டிஜிட்டல் வடிவம் பெறுவதைப் பாருங்கள். பதின்ம வயதில் தொலைத்தொடர்புகள் அதிகம் இல்லாத அந்த நாடகளில் சன் டிவியில் ஒளிபரப்பானபோது வீட்டில் கறுப்பு வெள்ளையில் பார்த்து வியந்திருக்கிறேன்.

அப்படியே அந்த நிகழ்ச்சியின் இறுதியில்  ஏ.ஆர்.ரகுமான் குறித்து பாடகர் எஸ்பிபியும், கவிஞர் வைரமுத்துவும் பகிரும் கருத்துகளையும் பார்க்கத் தவறவிடாதீர்கள்.. குறிப்பாக, மறைந்த எஸ்.பி.பியின் குரலில் எத்தனை ஆத்மார்த்தம். எஸ்.பி.பி…நீர் மனிதன் ! 



ஓ.. அந்த நிகழ்ச்சின் இறுதியில் அப்துல் ஹமீதின் மடியில் ஓடி வந்து அமரும் அந்தச் சிறுவன் யார் எனத் தெரிகிறதா ? அவர்தான் ஏ்ஆர். ரகுமானின் அக்கா மகன். ஜி. வி. பிரகாஷ். ‘வெயில்’படத்தில் இசையமைப்பாளரானவர். காலம்தான் எவ்வளவு வேகமாக ஒடிவிடுகிறது...

youtube.com

Sunday, March 19, 2023

வனநாயகன் குறித்து-27 (நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா ?)

ஆரூர் பாஸ்கர் அவர்களின்  *வனநாயகன்- மலேசியநாட்கள்*  நாவலை சமீபத்தில் தான் படித்தேன். அதனைப் பற்றிய எனது எண்ணவோட்டத்தைப் பகிர்கின்றேன். 

இருபத்தெட்டு வயதேயான கல்யாணம் ஆகாத பிழைப்புக்காக காவேரிக்கரையிலிருந்து மலேசியா வந்து தலைநகர் கோலாலம்பூரில் வேலைபார்க்கும்  சுதா எனும் சுதாங்கனே கதாநாயகன்...
..
விறுவிறுப்பாக நேர்த்தியான கதைச் சொல்லலில் நகரும் இந்தக் கதையில் சுதாவின் மலேசிய வாழ்வில் சந்திக்கும் மூன்று இளம் பெண்களில் யாரை மணக்கிறான்? என்பனவற்றிற்கு விடையாக நாவலின் இறுதி அத்தியாயம் இருக்கிறது. மலேசிய நகரத்தை...சுதாவின் அலுவலகத்தை....சுற்றுலாத்தளத்தை... ஆசிரியர் அணு அணுவாக விவரிக்கும் பாங்கு நாம் மலேசியாவை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி வாசிப்பனுபவத்திற்கு சுவைக்கூட்டுகிறது. 


'உர்ராங்ஊத்தான்' எனும் நமது மூதாதையரான குரங்கு பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கை உடைந்த நிலையிலும் சாரா போலீஸ் ஆபீசரிடம், என்னோட குறிக்கோள் சிம்பிள் அங்கிள். மார்டின் லூதர் கிங் சொன்னதுதான். *ஓடமுடியலையா? நட. நடக்கவும் முடியலையா? தவழு. இப்படி ஏதோ ஒருவகையில் நாம முன்னேறிக்கொண்டிருக்கனும்னு* சொல்லும்போது சோர்வடையும் மானுடசமூகத்திற்கு நாவலின் மூலம் ஆசிரியர் சொல்ல முயலும் செய்தி புலனாகிறது.

மொத்தத்தில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எளிதாக சம்பாதித்து விடுவதில்லை. பல இடைஞ்சல்களை சந்தித்தே தம் காலத்தை கடத்துகின்றனர் என்பதை சுவராஸ்யமாக ஆசிரியர் ஆரூர்பாஸ்கர் தன் *வனநாயகன் மலேசியநாட்கள்* எனும் விறுவிறுப்பான நாவல் மூலம் காட்சிப்படுத்துகிறார்!  ஆசிரியருக்கு இதயம்நிறை நன்றிகளும், வாழ்த்துகளும்💐💐💐💐💐🙏

நீங்களும் மலேசியாவிற்குச் செல்லவேண்டுமா? ஆரூர்பாஸ்கர் அவர்களின் வனநாயகனை வாங்கிப் படித்துப்பாருங்களேன். 

*நாவல்*      -வனநாயகன்.       மலேசியநாட்கள்
*ஆசிரியர்* -   ஆரூர்பாஸ்கர் 
*பதிப்பகம்*  - கிழக்குப்பதிப்பகம். 
*விலை*   -ரூ. 275.

புத்தகத்தை வாங்க

https://dialforbooks.in/product/9788184936773_/

Friday, March 10, 2023

மனம் கவர்ந்த படங்கள்

எத்தனையோ படம் எடுத்தாலும் ஏனோ ஒன்றிரண்டு மட்டும் மனதில் தங்கி விடுகின்றன.