Monday, March 2, 2015

நடிகை சுகன்யாவின் மொய் விருந்து


நீங்கள் தற்போது தமிழ்நாட்டில் இருந்தால் கடந்த இரண்டு மாதஙகளில் கண்டிப்பாக ஒரு கல்யாண வீட்டயோ  ரீசப்சனையோ  எட்டி பார்த்திருப்பீர்கள்.  தை மற்றும் மாசி மாதங்‌கள் தமிழ்நாட்டின் அதிமுக்கிய கல்யாண மாதங்கள்.

சென்னை இன்ஜினியரிங் கல்லூரிகளில் கூட இடம் கிடைத்துவிடும், ஆனால் இந்த சீஸனில் நல்ல கல்யாண சத்‌திரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

மாசி மாதம் பற்றி ஒரு கொசுறு செய்தி:  மாசி மாததிற்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்ல முகூர்த்தம் இருக்கிறது போல. "மாசி மாசம்"  எனும் வரிகள் இடம் பெறும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை. உதாரணத்துக்கு "மாசி மாசம் ஆளான பொண்ணு" ,  “மாசி மாசம் தான் கெட்டி மேள தாளம்  தான்"  போன்ற  ரஜினியின் வெற்றி பாடல்களைச் சொல்லலாம்.

கல்யாண வீடுகளில் விருந்து எவ்வளவு முக்கியமோ அதுபோலவே மொய் எழுதுவதும்தான்.    இப்பொழுதெல்லாம் நகர்புறங்களில் பரிசுப் பொருள்களை அன்பளிப்பாக தருவதுதான் பேஷனாக உள்ளது.  ஆனாலும், சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் மொய் எழுதும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

சின்ன கவுண்டர் படத்தில் பணத்துக்கு நெருக்கடி ஏற்படுகையில் சுகன்யா ஊர் ஜனங்களை அழைத்து மொய் விருந்து வைப்பார்.  அவர்கள் சாப்பிட்டு இலைக்கு அடியில் பணத்தை வைத்து செல்ல, விஜயகாந்த் மட்டும் தாலியை வைத்து தனது காதலை சொலலுவதை  ரசிக பெருமக்களாகிய  நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்பொழுதெல்லாம் கிராமங்களில் கல்யாண வீடுகளில் ஓவ்வொருவர் தரும் அன்பளிப்பையும், மொய் பணத்தையும் மைக் போட்டு அறிவிப்பார்கள்.
அங்கே அது அவர்களுக்கு  ஒரு கொளரவப் பிரச்சனைக்கூட.  வயலில் அறுவடை முடிந்த காலத்தில் கல்யாணம் வைப்பதுக்கூட ஒருவகையில் மொய் பணத்‌தை வசூல் பண்ணத்தான்.

நம்மிடம் மொய் பணம் வைப்பதிலும் ஒரு கணக்கு இருக்கிறது.  11, 21, 51, 101, 501 எனக் கொடுப்பதைத்தான் சொல்கிறேன். இந்த ஐதீகத்திற்கான காரணம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன். இப்போ இருக்கிற விலைவாசியில்  பத்து ரூபாய்க்கு பணம் போடுற கவர் வேணா கிடைக்கும்னு நினைக்கிறேன். :)

ஆனால், நான் சொல்லவந்தது சீனாவின் ஐதீகம் பற்றி. அங்கே புது வருடம் போன்ற நல்ல நாட்களில் பெரியவர்கள் இளையவர்களை ஆசிர்வதித்து பரிசாக சிறுதொகை தருவது வழக்கமாம். அந்த தொகையை ஒரு சிகப்பு நிற உறையில் இட்டு தருகிறார்கள். சிகப்பு நிறம் வளமையை தருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இப்ப புரிஞ்சுதா ? சீனா கொடி ஏன் சிகப்பா இருக்குன்னு :)

முக்கியமாக ,அப்படி பரிசாக தரப்படும் பணத்தில் எண் (4)  நான்கு கண்டிப்பாக இருக்க கூடாதாம். அதனால் 40,400,404 போன்ற தொகைகள் கொடுக்கப்படுவதில்லை. நான்கு என்ற எண்ணே அங்கே அமங்கலமாக கருதப்படுகிறது. நான்கு என்பது சீன மொழியில் 'மரணத்'தை ஒத்த ஓலி கொண்டதாம்.

சீனாவில் புத்தாண்டு அன்று செய்யக் கூடாதவை என்று பல உண்டு. முடிவெட்டக்கூடாது, விவாதம் கூடாது, கடன் வாங்கக் கூடாது என நீளும் 'கூடாது' பட்டியலில் துடைப்பமும் பயன்படுத்தவும் கூடாதம்.
துடைப்பம் கொண்டு வீட்டைக் கூட்டிப் பெருக்கும்போது, குப்பையுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் அடித்து செல்லப்படலாம் என நம்புகிறார்கள்.

மூடநம்பிக்கைகளில் நம்மை விட சீனர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை போல இருக்கிறது.

2 comments:

  1. முடிவெட்டக்கூடாது, விவாதம் கூடாது, கடன் வாங்கக் கூடாது என நீளும் 'கூடாது' பட்டியலில் துடைப்பமும் பயன்படுத்தவும் கூடாதம்.
    துடைப்பம் கொண்டு வீட்டைக் கூட்டிப் பெருக்கும்போது, குப்பையுடன் சேர்ந்து அதிர்ஷ்டமும் அடித்து செல்லப்படலாம் என நம்புகிறார்கள்// இப்பழக்கம் இலங்கையிலும் உண்டு.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் இலங்கை பழக்கத்தை பகிர்ந்ததற்கும் நன்றிகள். மேற்கத்திய கலாச்சார தாக்கத்தால் சில வருடங்களில் இது போன்ற நீண்டகால நம்பிக்கைகள் நகைப்புக்குள்ளாகும்.

    ReplyDelete