Wednesday, April 12, 2017

ரஜினி, மலேசியப் பிரதமர் - சில ஸ்கோர்கள்

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மலேசிய பிரதமர் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று சந்தித்தார்"  எனும் தலைப்புச் செய்தியை  சமீபத்தில் நீங்கள் மேலோட்டமாக எங்கேனும்  வாசித்திருக்கலாம்.  இல்லை  "சென்னையில் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட மலேசிய பிரதமர் செல்லும் பாதைகள் முழுதும் அவரின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன" எனும் செய்தி கண்ணில்பட்டிருக்கலாம்.

ரஜினியின் சந்திப்பு குறித்து கொஞ்சம் விசாரித்தால் , கபாலி படபிடிப்பிற்கு மலேசிய அரசு தந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தேன்.  இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு
என ரஜினி  சொல்லியிருப்பார்.

ஆனால்,  ஒரு நாட்டின் பிரதமர் நடிகரை அவருடைய வீட்டில் போய் சந்திப்பது என்பதை ஒரு சாதாரண நிகழ்வாக  நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  இந்தச் சந்திப்பின் மூலம் ரஜினிக்கு என்ன லாபம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், மலேசியப் பிரதமர் ரஜினியின் சந்திப்பால் சொந்த நாட்டில் சில ஸ்கோர்களைப் பெற்றிருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.

கடந்த ஆண்டு வெளியான "கபாலி "திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் மலேசிய 
தேசிய மொழியான பாஹாசா மலேசியாவிலும் வெளியானது உங்களுக்கு
நினைவிருக்கலாம்.  இப்போது ரஜினி மலேசியர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார். அதனால்  இந்தச் சந்திப்பு மலேசிய ஊடகங்களில் கண்டிப்பாக
முக்கியத்துவம் பெற்றிருக்கும். முக்கியமாக அவருடைய அரசின் மேல் அதிருப்தியில் இருக்கும் மலேசியத் தமிழர்களிடமும் அரசு பற்றிய ஒரு நல்லெண்த்தை ஏற்படுத்தியிருக்கும். 

அதுமட்டுமல்லாமல், இந்த சந்தர்பத்தில் மலேசியர்களுக்கான இந்திய விசா கட்டணம் 145 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள விவகாரமும்  அப்படியே அமுங்கிப்போகவும் வாய்ப்புள்ளது.  கூடவே, மலேசிய இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையிலான 'புளூபிரிண்ட்'  ஒன்றை தொடங்கப்போவதாக அவர் சென்னையிலிருந்து அறிவித்ததில் கூட அரசியல் இருக்கலாம். பார்க்கலாம்.

அதுபோல தமிழகத் திரைத்துறைக்கும் மலேசியாவுக்குமான தொடர்புகள் மிகநீண்டது. அது சம்பந்தமான சில விசயங்களை எனது வனநாயன் நாவலில் லேசாகத் தொட்டிருப்பேன். அதைப் பற்றி இன்னோரு சந்தர்பத்தில் எழுதுகிறேனே.

3 comments: