Wednesday, April 5, 2017

டெல்லியில் போராடும் விவசாயிகள் கோமாளிகளா?

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடடிருக்கும் தமிழக
விவசாயிகள் சிலர் கையில் மண்டைஒடு ஏந்தியபடி நிற்பது
போன்றதோரு படத்தை சிலர் முகநூலில் பகிர்ந்திருந்தனர்.

கூடவே அந்த விவசாயிகள்  கோமாளி கூத்தடிப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர். விவசாயிகளின் உணர்வுப்பூர்மான
போராட்டத்தை இப்படிக் கொச்சைபடுத்துபவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

இந்தத் தருணத்தில் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் எங்கள் வீட்டில் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

விவசாயத்திலும் சீசன் சமயங்கள் உண்டு அப்பொழுதெல்லாம்
வயலில் நிறைய ஆட்கள்  வேலை செய்வார்கள். அதற்கென
பற்றாக்குறையால் ஒரு அவசரத்துக்கு பக்கத்து வீடுகளில் கடப்பாறை, மண்வெட்டி போன்ற சாமான்களை இரவல் வாங்கும் பழக்கம் எங்களிடம் இருந்தது.

ஒருநாள் அப்படி இரவல் வாங்கிவர வீட்டில் வேலைபார்த்த ஒர் ஆளை அனுப்பினோம். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும்  நினைவில் இருக்கிறது.

"என்னங்க பொல்லாத சீசன்,  நம்ம வீட்டு வேலைக்கு நம்மகிட்ட சாமான் இல்லாம,  அடுத்தவீட்டுல போய் கையெந்துறது நல்லவா இருக்கு சொல்லுங்க ?.  அவங்க வீட்டுலயும் ஆளு தேளு வேலைபாக்காதா என்ன ? நாம கேட்டு, அவங்க இல்லனு சொன்னா என்ன பண்றது? நாம சுயம்பு மாதிரி தனிச்சு நிக்கனுங்க"

எனச் சொல்லி, "நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க, நா இரவல் கேக்க யார் வீட்டுக்கும் போக மாட்டங்க" என அழுத்தம் திருத்தமாக
சொல்லிவிட்டார்.

எங்களுக்கு பொட்டில் அறைந்தது போலிருந்தது.    அடுத்த நாளே நாங்கள் தேவையான உபரி சாமான்களை வாங்கிவைத்தோம் என்பது வேறு விசயம்.

அந்த அளவுக்கு நம்மூர் விவசாயிகள் தன்மானம் மிக்கவர்கள். எளிதாக சொல்வதென்றால் மானம், ரோசமுக்கவர்கள். யார் தயவும் இல்லாமல் விண்ணையும் மண்ணையும் மட்டும் நம்பும்
அசாத்திய தைரியசாலிகள். எதற்கும் துணிந்தவர்கள்.

ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.  கடைசியில் அவர்கள் நொந்துபோய் வீதிக்கு போராட இறங்கியதும் துரதிஷ்டம்.

அவர்களை மண்டை ஓடு ஏந்த வைத்த அரசுதான் கோமாளி அரசாக
இருக்கமுடியும்.  அதுபோல அவர்களை  தலைநகர வீதிகளில் பரதேசியாக அலையவிட்ட நாம்தான் வெட்கப்படவேண்டியவர்களே தவிர அவர்கள் இல்லை.

2 comments:

  1. THE BJP GOVT IS NEGLECTING TAMILNADU AND ITS CAUSES BECAUSE THEY THINK THEY WILL NOT COME TO POWER IN TAMILNADU WITH THE TWO DRAVIDIAN PARTIES HOLDING FORT. THEY ARE CONCENTRATING ON KARNATAKA WHERE ELECTIONS ARE DUE IN FEB 2018 AND THEY GOT EVERY CHANCE OF BJP ELECTING THERE THAT IS WHY THEYARE NOT HONOURING THE COMMITTMENT MADE IN THE SUPREMECOURT ABOUT CAUVERY WATER MANAGEMENT BOARD. THIS IS ATROCIOUS AND IS A CHALLANGE TO OUR FEDERALISM. ALL POLITICIANS IN TN SHOULD GO TO DELHI AND SUPPORT
    OUR FARMERS THERE

    ReplyDelete
    Replies
    1. Seems to be politics every where. At the end of the day, our farmers are on the road for months and suffering. :(

      Delete