Sunday, March 4, 2018

மிதவை - நாஞ்சில் நாடன்

வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களிலும், நாடுகளிலும் வாழும்
எழுத்தாளர்கள் தங்களை எளிதாக பொருத்திப்பார்க்கக் கூடிய ஒருவர் நாஞ்சில் நாடன். 2010ல் சாகித்ய அகாதமி விருது வழங்கி
பெருமைபடுத்தப்பட்ட நல்ல படைப்பாளி. அவருடைய நான்காவது
புதினமான "மிதவை"யை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்புகிடைத்தது.

****
அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில்
வேலை கிடைக்காமல் பம்பாய் சென்று பிழைக்கும் தமிழக கிராமப்புற  பட்டதாரி இளைஞனின் நெடுங்கதை மிதவை.

வேலை எனும் பெருங்கனவோடு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு
இடம்பெயரும் இளைஞர்களுக்கே உரித்தான பயத்தையும், கனவுகளையும்
கச்சிதமாக பதிவுசெய்வதில் தொடங்கி அவனுடைய எல்லா திண்டாட்டங்களையும் வாசகனுக்கு நுட்பமாக  கடத்தியிருக்கிறார். கதை கிராமம், சென்னை, பம்பாய் என பயணித்தாலும். நாம் இதுவரை கேள்விப்பட்டிராத திரைப்படங்களில், ஊடகங்களில் பதிவு செய்யப்படாத
நகரங்களின் இருளடைந்த இடங்களையும் அங்கு வாழும் மனிதர்களின் வாழ்வையும் பாசாங்கின்றி பதிவு செய்திருக்கிறார்.

அதுபோல கிராமத்திற்கும், நகரத்திற்குமாக முன்பிருந்த  சாதிய பேதங்கள், அரசியல், சாமானியன் எதிர்கொள்ளும் அலுவலக அரசியல், அந்த காலத்து நெருக்கடியான பம்பாய் என எதையும் ஒளிவு மறைவின்றி எழுத்தில் நம் கண்முன் கொண்டுவருகிறார்.  எ-டு. பம்பாய் போன்ற
பெருநகரத்தில் ஒருவன் அன்றாடம் மலம் கழிப்பதற்கு இருந்த சிரமங்களை
பட்டவர்த்தமாக பதிவுசெய்திருக்கிறார்.  இதெல்லாம் நான் தமிழில் இதுவரை வாசித்திராதவை.

உயிரோட்டமான பல மனிதர்களின் நடமாட்டத்தோடு கதை முழுக்க
நாஞ்சில் நாடனின் எதார்த்த எழுத்து  தெளிந்த நீரோடை போல சீராக ஒடிக்கொண்டே இருக்கிறது.  நாஞ்சில் நாடனின் வழக்கமான பகடி கொஞ்சம் குறைவோ என எண்ணத் தூண்டும்படியாக இருந்தது. ஆனால், தொய்வில்லாமல் வாசிப்பவர்களுக்கு அலுப்புட்டாத நடை, எழுத்தில் உள்ள நேர்மை இந்தப் படைப்பை இத்தனை ஆண்டுகளுக்கு  (முதல் பதிப்பு-1986)
பின்பும் நம்மை ரசித்து வாசிக்கும்படி செய்கிறது.

நற்றிணை பதிப்பகத்தின் மகத்தான நாவல் வரிசையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள்.

மிதவை (புதினம்) - நாஞ்சில் நாடன்
நற்றிணை பதிப்பகம், 2014
விலை ரூ-120, 144 பக்கங்கள்
ISBN 978-81-923668-7-6

1 comment:

  1. நன்றி நண்பரே
    அவசியம் வாங்கிப் படிப்பேன்

    ReplyDelete