Thursday, February 19, 2015

கவிஞர் பழநிபாரதியின் கையெழுத்து

கவிஞர் பழநிபாரதி அறிமுகம் தேவையில்லாத  உலக தமிழர்கள்
அனைவரும் அறிந்த  திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர்.

ஆயிரம் திரை பாடல்களைத் தாண்டி கடந்த இருபது வருடங்களாக
தரமான தன் படைப்புகளால் நம் இதயங்களில் குடி கொண்டவர்.
பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

இவரின் " காற்றின் கையெழுத்து "  கட்டுரைத்தொகுப்பை
முழுமையாக இன்றுதான் வாசித்து முடித்தேன்.

இந்த புத்தகம் குங்குமம் இதழில் அவர் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 52 கட்டுரைகளுடன் விகடன் பிரசுரத்‌தால் வெளிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தைப் பற்றி எழுதும் முன் எனக்கும் நூலாசிராயருக்குமான பரிட்சத்தை சொல்லி விடுவது நல்லது.

பழநிபாரதின்  அறிமுகம் நான் ரசித்த பல  திரைப்பாடல்களின் பாடலசிரியராக மட்டுமே. மற்றபடி இவருடைய பல கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருந்தாலும், நான் வாசிக்கும் அவரின் முதல் நூல் இதுவே.

ஆனால், முதல் அறிமுகத்திலேயே என்னிடத்தில் ஒரு நல்ல எழுத்தாளாராக
தாக்கத்தை ஏற்படுத்‌திவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

கொஞ்சம் நேரம் கிடைத்தபோது, இவரைப் பற்றி கூகிலில் தோண்டினேன்.
பல அருமையான தகவல்கள் வந்து கொட்டின.

சந்தேகமின்றி, திரையுலகில் நீண்ட தமிழ் பாரம்பரியமுள்ள வெகு சிலரில் இவரும் ஒருவர். அவர் உணர்ச்சி பொங்க கவிதைகளை வாசிக்கும் அழகைக் கண்டு 'ஐ' என்று வியந்தேன். :)

இப்போ புத்தகத்தை பற்றி பார்ப்போம்.

தனது கட்டுரைகளில் உலகமயமாக்கல், மேற்கத்திய கலாச்சார தாக்கம்,
நடுத்தர வர்க்க நிலைமை , இயற்கை வளக் கொள்ளை என இன்றைய பல பற்றி எரியும் நிகழ்வுகளை கையில் எடுத்திருக்கிறார்.

நாம் சமூக அவலங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் அல்லது
ஒதுங்கி செல்கிறோம். ஆனால் பாரதியின் பெயர் கொண்ட கவிஞர் நெஞ்சம்
பொறுக்காமல் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கி எழுகிறார்.

இவர் எழுத்தின் வீச்சு அபாரம். சமூக அவலங்களை சாடும்போது தயங்காமல் தேவையான  தரவுகளையும் கூடவே தருகிறார்.

உதாரணமாக " இன்றைய தமிழரின் தாய் மொழி ஆங்கிலமா  ? " எனும் கட்டுரையில் திருமதி மிஷல் ஒபாமாவை மேற்கோள் காட்டுகின்றார்.
அதே சமயத்தில் மலையாள மொழி எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளையையும் மேற்கோள் காட்டுகின்றார்.

அதுபோல, கட்டுரைகளுடன் அருமையான கவிதைகளையும் இணைத்துள்ளது அழகு. அந்த கவிதைகளும் கட்டுரையைத் தாண்டி துருத்திக் கொண்டிருக்காமல் உயிரோட்டமாய் இருக்கிறது.

தமிழ்ச் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட
அனைவரின் மனநிலையையும் சரியாய் இந்த நூல் பிரதிபலிக்கிறது.

நமது சிறு வயதில் பார்த்துப்  பழகிய பக்கத்‌து வீட்டு அல்லது
எதிர் வீட்டு அண்ணன் தோழமையோடு சொல்வது போல இருக்கிறது.
இந்த அந்நியமற்றத்தன்மையே இந்த நூலின் முக்கியமான பலமாக கருதுகிறேன்.

புத்தகத்தை படித்து முடித்தபின் பழனி பாரதியை நம்மில் ஒருவராக,
தோழராக ஏற்றுக்கொள்ள எந்தவித தயக்கமும் இருக்கப்போவதில்லை.

இதில் குறை என்று தனியாக ஏதும் சொல்லத் தோன்றவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் வாங்கி படித்து பாருங்களேன், கண்டிப்பாக ஏமாற மாட்டீர்கள்!.

2 comments:

  1. நூலினை படிக்கத்தூண்டும் விமர்சனம்.விரைவில் வாங்கிவிடுகின்றேன்.

    ReplyDelete
  2. தனிமரம், வருகைக்கு நன்றி. நல்லது, வாசியூங்கள்.
    சமூக அக்கறையுடன், பொறுப்புணர்ச்சியுடன் எழுதுபவர்கள்
    தற்போது மிகக் குறைவே..

    ReplyDelete