Wednesday, February 4, 2015

குமரப்பா அல்லது இந்திரா நூயி

உங்களின் முதல் நூலக அனுபவம் அல்லது விஜயம் இன்னும் ஞாபகம் இருக்கிறதா ?

அந்த அனுபவம் சிறுவயதில் நடந்திருந்து, அது இன்னமும் நினைவில் நின்றால் நீங்கள் அதிஷ்டசாலிதான்.

சொல்லப்போனால் கல்லூரி செல்லும்  வரை எனக்கு பரவலான புத்தக பரிட்சயம் இல்லை என்பதே உண்மை.

எவ்வளவுதான் நான் யோசித்தாலும்,  எனது முதல் நூலக அனுபவம்
பூண்டி புஷ்பம் கல்லூரியில் தான்.  மலைக்கவைக்கக்கூடிய ஆயிரக்கணங்கான புத்தகங்கள்.  கல்கி முதல் ஸிட்னி ஷெல்டன் வரை அறிமுகமும் அங்குதான்.

அந்த நூலகம் என்னைப்போல எத்தனையோ பேருக்கு ஒரு
போதிமரம். எத்தனையோ புத்தக பறவைகளின் வேடந்தாங்கல் எனவும் சொல்லலாம்.

சிறுவயதில் மிஞ்சி போனால் சிறுவர் மலர், தினமணிக் கதிர். பிறகு பதின்மவயதில் குமுதம், மாலைமதி, கல்கண்டு, ஜுவி, பாக்யா போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகளைத் தாண்டி பெரியதாய் எதுவும் அறிமுகமில்லை.

ஆனால், ஆரம்பகாலத்‌தில்  கவிதைகளும் சிறுகதைகளும் குறுநாவல்களும்
அறிமுகம்  செய்தவை அவை. வைரமுத்து, சுஜாதா, லேனா தமிழ்வாணன் போன்ற  ஆளுமைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதும் இவற்றின் மூலமே.

அதை தாண்டி இலக்கிய செறிவான நூல்களுக்கோ அல்லது
சுய ஊக்குவிப்பு புத்தகங்களுக்கோ வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.

சுயபுராணத்தை விடுங்க,  சொல்லவந்த விசயத்துக்கு வருவோம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக இந்த நிலை இல்லை என்றே சொல்லலாம்.

சிறகுகள் அறக்கட்டளை மூலமாக இந்த பள்ளிக்கு நூலக விரிவாக்கம் செய்து தந்துள்ளோம். ஒரு புத்தக அலமாரியும்,  புத்தகங்களும் இதில் அடங்கும்.

இவை கடந்த வாரம் பள்ளியில் நடந்த குடியரசுதின விழாவில் பள்ளி தலைமையாசிரியரிடம் அவை வழங்கப்பட்டன.

சுமார் எண்ணூறு பேர் பயிலும்  இந்த இருபாலர் பள்ளி  திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நல்ல தேர்ச்சி விகிதம், மாவட்ட அளவில் கவிதைப் போட்டியில் முதலிடம் என கலக்குகிறார்கள். அரசுப் பள்ளியாயினும் மிகவும் நம்பிக்கை அளிக்கக்கூடிய பள்ளி. இதற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதுபோல இருந்தது இந்த நூலக விருவாக்கம்.

பள்ளி தலைமையாசிரியர் உட்பட இங்கு பணிபுரியும்
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கிராமப்புரத்தில் செயல்படும் இந்த மாதிரியான பள்ளிகளுக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறோம்?

சிறகுகள் சார்பில் என்னைத்தவிர அனைத்து உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, மனிதவள நிர்வாக அலுவலராக பணிபுரியும் திரு கேசவன் சென்னையில் இருந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கிடையே உரையாற்றினார்.

கண்ணாடி வைத்த புத்தக அலமாரி தேவைபட்டதால் ஆர்டர் கொடுத்து கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  மற்றபடி பெரிய சிரமமில்லை. எல்லாம் நினைத்ததுபடி நன்றாக நடந்து முடிந்தது.

இந்த முயற்சியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர் தா.ரெ. தமிழ்மணி அவர்கள். அதே பள்ளியில் தமிழாசிரியரியராக பணிபுரியும் இவர் என்னுடைய பள்ளி தோழர்,கவிஞர்  மற்றும் நல்ல நண்பர்.  நமது உதவி சரியான இடத்தை சென்று சேர்கிறது என்ற  உறுதியை வழங்கியவர். அவருக்கு முதல் நன்றி!

எனது கவிதை நூலான "என் ஜன்னல் வழிப் பார்வை" யினை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் விற்பனை செய்த தொகையில் இருந்து இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி!, எனது கவிதைத் தொகுதியில் ஐம்பது பிரதிகளை வாங்கி தன் நண்பர்களுக்கு பரிசளித்த சிங்கப்பூரில் வசிக்கும் எனது முன்னாள் மேலாளர் (Manager), நண்பருமான திரு. சண்முகத்திற்க்கும் நன்றிகள் பல!

உங்களுடைய சிறு உதவி , எங்கேயோ யாருடைய வாழ்க்கையேனும் கண்டிப்பாக மாற்ற உதவக்கூடும் என உறுதியாக நம்புகிறேன்.

நல்ல நூல்கள் ..
வாழ்க்கைச் சாலையின்
கைகாட்டி மரங்கள்

அவை காட்டும் வழி 
என்றும் நல்வழியே!!

நன்கொடை வழங்கிய புத்தகங்களில் அப்துல்கலாமின் 'அக்னிச்சிறகு'களும் ஒன்று. யாருக்கு தெரியும் ?  இராமேஸ்வரத்தில் இருந்து அப்துல்கலாம் போல,
குளிக்கரையில் இருந்து குமரப்பாவோ அல்லது  இந்திரா நூயிவோ வர மாட்டார்கள் என்று.

No comments:

Post a Comment