Sunday, April 10, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-2

திருப்பூர் பற்றிய என்னுடைய முந்தியப் பதிவு  பகுதி-1 ல் பார்க்கவும்.

கடந்த பதிவில் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எப்படி குடிசைத் தொழிலாக மக்களுடன் வலுவாகப் பின்னிப் பிணைந்திருப்பதைப் பற்றி பார்த்தோம்.

அன்று மதியமே அங்கு இயங்கும் ஓரு தொழிற்சாலைக்குச் செல்லும் ஓரு வாய்ப்பு எற்பட்டது. அந்தத் தொழிற்சாலை எனது உறவினர் வேலை செய்யும் இடம்.

அவர் அங்கே முக்கியமானதொரு பதவியில் இருப்பதால் அவர்கள் தொழிற்ச்சாலையை முழுமையாகப் பார்வையிட எந்தக் கட்டுபாடுமின்றி தாராளமாக அனுமதித்தனர். அது ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் வேலை செய்யும் இடம்.  அது புதிதாக தொடங்கப்பட்டிருந்ததால் எல்லா வசதிகளுடனும் நவீன கட்டமைப்புடன் இருந்தது.

அங்கே ஆண்கள், பெண்கள் டீசெர்ட்டுகளைத் தாண்டி சிறுவ,சிறுமியர்களின் ஆயத்த ஆடைகள் அதிகம் தயாராகின்றன. அவை நூலில் தொடங்கி, உடையாக கடைசியில் பெட்டிகளில் பேக் செய்யப்படுவது வரை நேரில் பார்த்தேன்.







அங்கே எனது அனுபவங்கள்

(*) உலகம் முழுவதும் மக்களால் விரும்பி அணியப்படும் பல பிராண்டுகள் இங்கே திருப்பூரில் நம் தொழிலாளர்களின் கைகளால் தயாராகின்றன

(*) இந்த தொழிற்சாலைகள் பெரும் முதலீடு கொண்டவை. அவை உலகத் தரமான பல இயந்திரங்களையும் உள் கட்டமைப்பையும் கொண்டுள்ளன

(*) ஆண்களை போல பெண்களும் அதே எண்ணிக்கையில் ஏன் கூடுதலாகக் கூட எல்லா தொழிற்சாலைகளிலும் பணி செய்கின்றனர்

(*) தமிழ்நாட்டு இளைஞர்கள் அளவுக்கு வடநாட்டு ஆண்களையும் பணிச்சூழலில் பார்க்க முடிந்தது. அதுபோல மணமான வடநாட்டு பெண்களும் தங்கள் கணவர்களுடன் வேலை செய்கிறார்கள்.

குறிப்பு- இது போல குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் வடஇந்தியக் குடும்பங்களின் நிலை பற்றிய விரிவான விவாதங்கள் இன்றையச் தமிழ் சூழலில் தேவை என்பதை இங்கே அடிக்கோடிட விரும்புகிறேன்.

(*) 45-60 நிமிடங்கள் மதிய இடைவேளையாக அவர்களுக்கு தரப்படுகிறது. அந்த நேரத்தில் பலர் உணவுக்குப் பின் அங்கேயே படுத்துக் குட்டித் தூக்கம் போடுவதைப் பார்க்க முடிந்தது.

(*) அங்கே பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இரவு பகலாக (24 X 7) இயக்கப்படுகின்றன.அதற்கு தொழிலாளர்கள் சுழற்சி முறையில் வேலைக்கு வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களின் நலம், மனித உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் போன்றவை அரசாலும் தொழில் நிறுவனங்களாலும் பேணப்படுவதாகவே நம்புகிறேன்.

(*)  கவனித்த இன்னோரு விஷயம், குவாலிட்டி இன்ஸ்பெக்‌ஷன் (Quality Inspection). தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்ய ஓரு தனி பிரிவு  இயங்குகின்றது.

அவர்களின் வேலை உற்பத்தியான டீசெர்டுகளின் தரத்தை உறுதி செய்வது. கண்ணுக்கு புலப்படாத நுண்ணிய அழுக்கை கூட அவர்கள் சுத்தம் செய்தே அனுப்புகின்றனர். தரம் குறைவான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பபடும் அபாயம் இருப்பதால் இந்த முன்னேர்ப்பாடு

(*)  ஆர்கானிக் உணவு என்ற விஷயத்தைப் போல ஆர்கானிக் ஆடை இப்போழுது வளர்ந்த நாடுகளில் விரும்பப்படும் ஓன்று.

(*) ஆச்சர்யமூட்டும் இன்னோரு விஷயம் -  இத்தனை நவீன ஆடைகள் திருப்பூரில் தயாரானாலும், திருப்பூரில் ஆண்கள் விரும்பி அணியும் ஆடை சட்டை என்பதை மறுக்க இயலாது. அதைப் பற்றி உள்ளூர் வாசிகளிடம் கேட்ட போது அதில் உண்மையிருப்பதை ஓத்துக் கொண்டார்.

நாம் சாதாரணமாக கடையில் பெருத்த எதிபார்பின்றி வாங்கி அணியும் டீசெர்டுகளுக்கு பின் இத்தனை பேரின் உழைப்பும் நேரமும் செலவிடப்படுவதைக் காணும்போது பிரமிப்பாகவும் மலைப்பாகவும் இருந்தது.

உலகமயமான இந்தச் சூழலில் இதுபோன்ற நமது தொழிற்சாலைகளுக்கும் அதன் தொழிலாளர்களும் உலக அரங்கில் கம்யூனிச சீனர்களுடன் தொழில் முறையில் போட்டியிடுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

2 comments:

  1. தங்களால் நானும் திருப்பூரைக் கண்டேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete