Sunday, April 24, 2016

திரும்பிப் பார் -திருப்பூர்-3

திருப்பூர் பற்றிய என்னுடைய முந்தியப் பதிவுகளை பகுதி-1 , பகுதி-2 ல் பார்க்க.

திருப்பூரில் காலை,மதியம் என தொடர்ந்து தொழிற்சாலைகளை சுற்றிப் பார்த்தாலும் நாங்கள் சோர்ந்துபோய் விடவில்லை.

எனக்கு அன்று இரவில்தான் ரயிலில் டிக்கெட் எடுத்திருந்ததால் மாலையில் வெளியில் போக முடிவுசெய்தோம். பார்க்க பல இடங்களை பற்றி பேசி கடைசியில் திருப்பூரில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதாக முடிவுசெய்தோம்.

'கரும்பு தின்ன கூலியா கேட்போம் ?,' தயக்கமின்றி ஓத்துக் கொண்டேன். சென்னையில் மட்டும் வருடத்துக்கோரு முறை புத்தகக் கண்காட்சி எனும் நிலை மாறிவிட்டது.  இப்போழுது வருடம் முழுவதும் தமிழ்நாட்டிலுள்ள எல்லா இரண்டாம், மூன்றாம் தரவரிசையிலுள்ள நகரங்களில் புத்தகக் கண்காட்சி என்பது வரவேற்கத்தக்கது. கீழே கண்காட்சியில் நானும் எனது உறவினர் (மச்சினர்) திரு. ஆறுமுகம் அவர்களும்.

அந்த வரிசையில் திருப்பூர் புத்தகக் கண்காட்சி சிறப்பாக ஏற்பாடாகியிருந்தது.  எல்லா பெரிய பதிப்பாளர்களையும் அங்கே பார்க்க முடிந்தது. எல்லா புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி அறிவித்திருந்தார்கள். அது வேலைநாளாக இருந்தாலும் கண்காட்சியில் நல்ல கூட்டமாக இருந்தது. நான் சென்ற அன்று சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

கண்காட்சியில் நிறைய குடும்பப் பெண்கள் தங்களுடைய பள்ளியில் படிக்கும் மகன், மகளுடன் வந்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. அப்புறம் நான் வெகுநாட்களாகத் தேடிக் கொண்டிருந்த இந்த புத்தகத்தை நியூ செஞ்சுரி புக்ஸில் கண்டுபிடித்து வாங்கினேன். 



தமிழர் நாட்டுப் பாடல்கள் என்ற தலைப்பில் வானமாமலை தொகுத்த இந்த நூலை, சுஜாதா தனது கரையெல்லாம் செண்பகப்பூ நாவலில் மேற்கோள் காட்டியிருப்பார். 

நான் வாங்கிய இன்னோரு புத்தகம் பாரதி தம்பி எழுதிய கற்க கசடற விற்க அதற்குத் தக. வெளியீடு விகடன்.  பின்பு ஓரு சந்தர்பத்தில் இரண்டையும் படித்து எழுதுகிறேன்.

கண்காட்சியில் வழக்கம் போல ஜோசியம், பக்தி, தன்னம்பிக்கை, சமையல் புத்தகங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. இந்த லிஸ்டில் இயற்கை உணவு,நவதானியங்கள், இயற்கை விவசாயம் போன்றவை தற்பொழுது சேர்ந்துள்ளன. இவற்றை ஆனந்த விகடன் போன்ற வெகுஜன ஊடகங்கள் தங்களின் பதிப்பகங்களின் மூழம் நன்றாக அறுவடை செய்கின்றன.

நானும் எனது அம்மாவிற்கு  இயற்கை உணவு சம்பந்தமாக இரு புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.  அதுபோல சிறுவர்களுக்கான ஓளி,ஓலி தட்டுகள், புத்தகங்களை அதிகம் பார்க்க முடிந்தது.

புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்த போது நாங்கள் எதிர் பார்காத ஓன்று நடந்தது. அது கவிஞர் மகுடேஸ்வரனின் சந்திப்பு. படம் கீழே.


அவருடைய 'அந்தக் காலம் நன்றாக இருந்தது! ' கவிதையை சிலாகித்து பேசினேன். பரஸ்பர நலவிசாரிப்புக்கு பின் பேச்சு அமேரிக்காவில் வாழும் தமிழர்களைப் பற்றி திரும்பியது. தன் கவிதைகளுக்கு அமேரிக்க தமிழர்களிடையே முகநூல் வழி நல்ல வரவேற்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். பின்பு சற்று நேரத்துக்கெல்லாம் ஏதோ அவசர வேலை என தன் நண்பருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

திருப்பூர் புத்தக்க் கண்காட்சிக்குச் சென்றதும் அங்கு மண்ணின் மைந்தர் கவிஞர் மகுடேஸ்வரனைச் சந்தித்த்தும் மனதுக்கு நல்ல நினைவாயிருந்தது.

இதுவரை எழுதிய திருப்பூர் பயண அனுபவங்கள் இத்துடன் நிறைவடைந்தது.
தொடர்ந்து வாசித்து உற்சாகபடுத்திய நண்பர்களுக்கு நன்றி !!

2 comments: