Tuesday, November 22, 2016

சினிமா டைரி-1

எனது தமிழாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள்
எழுதிய "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்" நூல் வாசிப்பின் அனுபவங்களை எளிமையாக  அனைவருக்கும் புரியும்படி
பகிரவிரும்பினேன்.

அதை திரைப்படங்களை வழியாகச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

**
நாயகனாக ஜெயம் ரவி , எதிர்மறையான வேடத்தில்
அரவிந்த்சாமி நடித்து சமீபத்தில் வெற்றிப் பெற்ற
அதிரடித் திரைப்படம் "தனி ஒருவன்". ஒரு மாறுதலுக்காக நாம் இப்படி யோசிக்கலாம். இதே படத்தை இயக்குநர் ஷங்கர் ஹாலிவூட் நடிகை ஏஞ்சலீனா ஜூலீயை நாயகியாக வைத்து
ஒரு படம் எடுத்தால் ? ;) "தனி ஒருவள்" எனத் தலைப்பிடலாமா? கூடாது, அப்படி செய்தால் அது தப்பான தலைப்பாகவே இருக்கும். ஒருவன், ஒருத்தி என்பன நல்ல தமிழ்ச் சொற்கள். ஆனால், "ஒருவன் " என்பதுபோல் "ஒருவள் " என்பதும் "ஒருத்தி " என்பதுபோல் " ஒருத்தன்" என்பதும் பிழை.   அதே சமயத்தில் ஒருவனோ, ஒருத்தியோ -இருவரையும் "ஒருவர் " எனச்  சொல்லலாம் தவறில்லை.


** அஜித் நடித்த வெற்றிப் படம் " உன்னை கொடு என்னை தருவேன்" இதை சரியாக எழுதினால் "உன்னைக் கொடு என்னைத் தருவேன் " . திரையில் "க்","த்" விடுத்து எழுதியிருப்பார்கள். இப்படி திரையுலகில் படத் தலைப்பிற்கு தேவையின்றி ஒற்று சேர்ப்பதும் நீக்குவதும் வாடிக்கை. அதற்கு அவர்கள் சொல்லும் இலக்கணமல்லாத காரணங்களுக்கு நாம் போக வேண்டாம். இங்கே இரண்டாம் வேற்றுமை உருபு "ஐ" வருவதால் ('உன்னை', 'என்னை') வலி மிகும் என்பது செய்தி.

**

"நாயகன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் சிரித்தால் தீபாவளி" பாடல் நம் நெஞ்சில் என்றும் நீங்காத பாடல். அந்தப் பாடலில் எந்த குறையுமில்லை. :) அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள் சொல்லும் இந்த நேரத்தில்
தீபாவளி பற்றிய ஒரு நல்ல தகவல். சமீப காலங்களில் ஊடகங்களில் தீபாவளி, தீபத்திருநாள், தீபஒளித்திருநாள் என பல சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதிலிருக்கும் நுட்பத்தை பார்ப்போம். தீபாவளி=தீபம் + ஆவளி ( தீபங்களின் வரிசை )
தீபத்திருநாள் = தீபங்களின் திருநாள்
தீபஒளித்திருநாள் = தீபங்கள் ஒளிரும் திருநாள்
ஒளிர்ந்தால் தானே தீபம் ? அதனால் "தீபஒளித்திருநாள்" என்பதில் ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்பதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள்.


மேலும் தொடர்வேன்.

No comments:

Post a Comment