Tuesday, December 27, 2016

எம்.ஜி.ஆர் - ஜெ-2

கடந்த பதிவில் தலைவரின் இறுதிஊர்வலம் தொடர்பான எனது எண்ணங்களைப் பகிர்ந்துக் கொண்டேன். அந்தப் பதிவு இங்கே.


புரட்சித் தலைவரின் இறுதிஊர்வலம்  நடந்தது 1987, இப்போது 2016. ஏறக்குறைய 30 வருட இடைவெளி. 33 வருடங்களை ஒரு தலைமுறைக்கான இடைவெளி என்பதை நீங்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இந்த 30 வருடங்களில் எவ்வளோவோ விசயங்கள் மாறிவிட்டன. அரசியல்,பொருளாதார, தனிமனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் சற்று மாறி இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அப்போழுதெல்லாம்  சத்துணவு,சீருடை,காலணி போன்ற அரசின் இலவசங்கள்  கொஞ்சம் இருந்தன.  ஆனால், ஒட்டுச் சாவடிக்கு வர எவரும் காசு வாங்கவில்லை. அன்று  மூன்றுவேளை அரிசி சாப்பாடு  என்பது என்பது பலருக்கு சாத்தியமில்லைதான். ஆனால் மக்கள் இன்றைவிட ஆரோக்கியமாக இருந்தார்கள்.

அன்று  சமூகத்தில் மனிதமாண்பு  இருந்தது.  உறவுகள் கொண்டாடப்பட்டன. உங்களுக்கு வெளியே ஒரு பிரச்சனை என்றால் தைரியமாக ஏன் என்று தட்டி கேட்டு உதவிட ஆட்கள் ஒடிவந்தார்கள்.   கொஞ்சம் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் இன்று அடுத்த அப்பார்மெண்டில்  ஒரு மரணம் சம்பவித்தால் கூட என்ன ஏதென்று பார்க்காத மனிதநேய சமூகத்தில் தான் வாழ்கிறோம்.  பெத்த தாய் இறந்தால் கூட வாய்விட்டு அழாத நாகரீக சமூகத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த  மாறிவிட்டச்சமூகச் சூழலிலும் மறைந்த முதல்வருக்கு இறுதி மரியாதை செய்ய கட்சிவேறுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடியது.   அதற்குக் காரணம் அவர் மேல் தமிழக மக்களுக்கு இருந்த மாறாத அன்பு என்பேன். அவரின் மறைவை தங்களின் குடும்பத்தின் இழப்பாக நினைத்தார்கள்.  இனிவரும் எந்தத் தலைவருக்கும் மக்களோடு இதுபோன்றதோரு பிணைப்பை ஏற்படுத்த இயலாது என்பது உண்மை.

அன்று இதுபோன்ற இறுதிஊர்வல நிகழ்வுகளை நியூஸ் ரீலில்தான்
பார்க்கமுடிந்தது, ஆனால், இன்று  மறைந்த முதல்வரின் இறுதி ஊர்வலத்தையொட்டிய நிகழ்வுகளை நிறைய சேனல்கள் இணையத்தில் நேரடி ஒளிபரபரப்பு செய்தார்கள்.

அதுவும் இலவசமாக விளம்பர இடைவெளியின்றி ஒளிபரப்பு
செய்து புண்ணியம் தேடிக்கொண்டார்கள். அவர்கள் வாழ்க எனச் சொல்லும் அதே நேரத்தில், மனதில் தோன்றிய ஒரு விசயத்தைச் சொல்லிவிடுகிறேன். அது அந்த நேரடி நிகழ்வின் வர்ணனையாளர்களைப் பற்றியது.

ஒரு மாநில முதல்வரின் இறுதி ஊர்வலத்தை கோடிக்கணக்கான தமிழர்களுக்கு நேரடியாக வழங்குகிறோம் என்ற உணர்வு அந்த
வர்ணனையாளர்கள் பலருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பறவைகள் பலவிதம் என்பது போல் ஒவ்வோரு சேனலும் ஒருவிதமான இம்சை. 

ஒருவர் கன்னிப்பொங்கலன்று குதிரை வண்டி ரேக்ளா ரேசுக்கு வர்ணனை தரும் தொனியில் தமிங்கிலத்தில் படபடத்துக் கொண்டிருந்தார். அது பொறுமையாக, துக்கத்திலிருப்பவர்களின் இறுக்கமான மனநிலையை புரிந்து தன்மையாக, தெளிவாகப் பேசவேண்டிய நேரமாயிற்றே. ஏன் அந்த அவசரமோ ?.

ஒருவர் தொலைபேசியில் அனுதாபச் செய்தி வாங்குகிறேன் பேர்வழி என 75-80 வயது பிரபலங்களை  கூட மொட்டையாக பெயர்சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார். ' சொல்லுங்க வெண்ணிற ஆடை நிர்மலா ' எனத் தொடங்கியவர், கடைசியில் பட்டென 'நன்றி வெண்ணிற ஆடை நிர்மலா' என முடித்தார். சரி 'திருமதி' எனும் அடைமொழி வேண்டாம், பேச்சில் தன்மை வேண்டாமா ? உங்களுக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி பேசும் பிரபலங்களை துளிகூட மரியாதை தொனி இல்லாமல் பேசும் நாகரீகம் எங்கிருந்து வந்தது?

எம்ஜிஆரின் இறுதி யாத்திரை தொலைக்காட்சி வர்ணனையில் வலம்புரி ஜானின் முத்தாய்ப்பாக "பூமியை வெட்டி தங்கத்தை எடுப்பார்கள். ஐயோ இங்கே பூமியை வெட்டி தங்கத்தைப் புதைக்கிறார்களே". என்றார்.  அவருடை சொற்களுடன் தொனியும் சேர்ந்து கண்டவர் கண்களைக் குளமாக்கியது.  முப்பது வருடங்களுக்குபின்பும் கூட இந்த நிகழ்வை நண்பர் இணையத்தில் சிலாகிக்கிறார் என்றால் அதன் தாக்கத்தை நாம் உணரலாம்.


இந்தி ஒழிப்பு போராட்டாத்தில் தமிழுக்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் மிச்சங்கள்  இன்னமும்  திராவிடக் கழகங்களில் இருக்கிறது தானே?.

இன்னோரு விசயம், அவர்களின் வர்ணணை பெரும்பாலும் பேச்சுத்தமிழாகவே இருந்தது. அதிலும் வார்த்தை தடுமாற்றங்கள், அனுபவமின்மையால் பேச்சுனுடே நிறைய இடைவெளி. நடுவில் ' ஹம்' எனும் சத்தம் வேறு. என்ன திட்டமிடலோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதுபோல, பெரும்பாலானவர்கள் சரியான தமிழ் வார்த்தை தெரியாமல் தடுமாறி ஆங்கிலத்துக்குத் தாவினர். ஜெவை புகழ்கிறேன் பேர்வழி எனத் தொடங்கிய ஒருவர் 'தலைமைத்துவ பண்புகள்' எனும் தமிழ் வார்த்தை கிடைக்காமல் சில நொடிகள்
தடுமாறி் கடைசியில் 'லீடர்சிப் குவாலிட்டிஸ்' என பல்டி அடித்தார். இதுபோல பல தருணங்கள்.

இந்த வர்ணனையாளர்களை எவ்வாறு தேர்வுசெய்கிறார்கள் எனப் புரியவில்லை. தெளிவான உச்சரிப்புடன் பேசும் ரவி பெர்ணாட், வீர பாண்டியன் போன்றவர்கள் இப்போது களத்தில் இருக்கிறார்களா ?

திராவிட அரசியல் தெரிந்து, இறந்தவரைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலுடன் காத்தாரமான ஒரு வர்ணனையை யாரும் தந்தது போலத் தெரியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன் பார்த்த எம்ஜிஆரின் இறுதிஊர்வல நினைவுகளை சுமந்து கொண்டு சொல்கிறேன். கடந்த வாரம் இவர்கள் தந்தது வெற்றுக் கூச்சலைத் தாண்டி வேறில்லை. பின்ணணியில் அந்த மெலிதான சோக இசை மட்டும் இல்லையெல்லால் இவர்கள் பாடு வெகுத் திண்டாடமாயிக்கும் .

கடைசியாக ஒரு விசயம், தமிழ்நாட்டைத் தாண்டி உலகத் தமிழர்கள் அனைவரும் பார்த்த ஒரு முக்கிய நிகழ்வில் நல்லத் தமிழில் நிகழ்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து காட்சி ஊடகங்கள் தவறிவிட்டன என்பது எனது கருத்து.

இறுதியாக,  அவரை இழந்து தவிக்கும் கோடான கோடி நல்ல உள்ளங்களுக்கு எனது ஆறுதல்கள். மறைந்த முதல்வரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

எம்.ஜி.ஆர் - ஜெ எனும் இந்த சிறிய கட்டுரைத்தொகுப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன். உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment