Monday, September 18, 2017

தமிழ்ப்பள்ளி - மைல்கல்

அமெரிக்கவாழ் பிள்ளைகளுக்கான வார இறுதி தமிழ்வகுப்பு எனும் 
பயணத்தில் நாங்கள்  ஒரு முக்கிய  மைல்கல்லைத் தொட்டிருக்கிறோம் என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று  6-7 பிள்ளைகளுக்கு
வீட்டில்  1 மணி நேரம் என முடிவு செய்து கடந்த 4 மாதங்களுக்கு முன் அகரத்திலிருந்து தொடங்கினோம். பின் மெய் எழுத்துகள் அதைத் தொடர்ந்து உயிர்மெய் எழுத்துகள் என முழுவதையும் அறிமுகம் செய்துவிட்டோம்.

அறிமுகம் என்பதைத் தாண்டி அவர்களால்  இனி எழுத்துகளை அடையாளம் கண்டு, வாசிக்க இயலும். சொன்னால் புரிந்துக் கொண்டு எழுதிக் காட்ட முடியும்.  கொஞ்சம் முயற்சி செய்து அவர்களால்  சிறிய வார்த்தைகளை வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் இயலும்.

இதையே ஒரு வெற்றியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை. 
இது அவர்களுடைய நீண்ட தமிழ்ப் பயணத்தின் ஒரு தொடக்கம் என்பதை நான் நன்றாக அறிவேன்.  உண்மையில் Light At the end of the tunnel என ஆங்கிலத்தில் சொல்வதைப்  போலோரு உணர்வு. 
ஆரம்பத்தில் வாரத்துக்கு வெறும் ஒரு மணிநேரத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா ? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது கண்டிப்பாக நம்பிக்கை வந்திருக்கிறது. உள்பெட்டியிலும், இமெயிலிலும் தொடர்பு கொண்டு
உற்சாகமளித்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

என்னிடம் வரும்  பெற்றோர்களிடம் நான்  தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விசயம் பொறுமை.  இதுவரை தமிழே பேசாத ஒரிரு பிள்ளைகளை வீட்டில்  உடைந்த தமிழ் பேசத்தொடங்கியிருப்பதே நல்ல தொடக்கமாக பார்கிறேன். மொழியைப் பொறுத்தவரை அடிப்படை மிக முக்கியம். அதை சரியாக வென்றேடுத்தால் நாம்  இலக்கை எட்டிவிடலாம். 

இலக்கை எட்ட பல பாதகமான விசயங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.   எங்களிடம் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிப்பவர்கள்.  அவர்களின் அன்றாட தமிழின் பயன்பாடு என்பது மிகக் குறைவு. ஒரு பையனின் வீட்டில் பெற்றோர்களே தமிழில் பேசுவதில்லை.  ஒருவனுடைய பெற்றோர்களுக்கு தமிழ் பேசத் தெரிகிறது. ஆனால், எழுதுவதில் சிரமம் இருக்கிறது. கேட்டால் மூன்றாவது மொழியாகதான்  எங்களுக்கு தமிழ் இருந்தது என்கிறார்கள்

'எம்பொண்ணு எப்படி பண்றா? இல்லை எப்படி படிக்கிறான் ? எனக் கேட்கும் பெற்றோர்களுக்கு நான் சொல்லும் இன்னோரு விசயம்
பயிற்சி.  முதலில் அவர்களிடம் தமிழில்  பேசுங்கள்.  ஆரம்பத்தில் 
ஆங்கிலத்தில் பதில் சொன்னாலும்,  அதைத் தொடர்ந்து செய்யுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே?. அதுபோல ஆங்கில வார்த்தைகளை சொல்லி அதற்கு ஈடான தமிழ் வார்த்தையைக் கேளுங்கள். விளையாட்டு போக்காக தமிழ் கண்டிப்பாக போய் சேரும்.

இரண்டெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து என தொடர்ச்சியாக
வாசிக்க, எழுத பயிற்சி கொடுத்துகொண்டிருக்கிறேன்.  பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்க திட்டமிட்டிருக்கிறேன். 

இந்த பிள்ளைகள் தயக்கமின்றி தமிழில்  உரையாட எந்தவிதமான பயிற்சி சரியானதாக இருக்கும் ?  நண்பர்கள் பரிந்துரைகளை எதிர்பார்கிறேன். நன்றி!!

3 comments:

  1. போற்றுதலுக்க உரிய முயற்சி ஐயா
    தொடருங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துகளுக்கு மிக நன்றி !!

    ReplyDelete
  3. If you are not using CTA (California Tamil Academy) curriculum, Please start using it. Their curriculum is very good for kids born in USA. Please let me know if you need any help in contacting them.

    ReplyDelete