Friday, October 6, 2017

மா(ற்)றுவார்களா?

தமிழ்நாட்டில் இருந்து வந்த இரண்டாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை வைத்து
இங்கே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன்.

பாடத்திட்டம் பற்றி பெரிதாக குறை எதுவும் இல்லை. பாடல்கள், கதைகள், ஏன் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார்கள்.  ஆனால், கண்களை உறுத்தும் ஒரு
விசயம் புத்தகத்தில் அவர்கள் பயன்படுத்தியிருக்கும் சில படங்கள். அவை
நம் சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக படுகிறது.

அந்தப்  புத்தகத்தின் முதல்பாடத்தையே எடுத்துக் கொள்வோமே.
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" எனும் பாடலுக்கு கீழே ஒரு பசுவையும் கன்றையும் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பசுவும் கன்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டு பசு இனம் அல்ல. அது திமில் இல்லாமல் வெளிநாட்டு வகையாரா போலிருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் டெக்சாஸ் வகை பசுபோல பக்கவாட்டில் பெரிய கொம்புகளுடன் இருக்கிறது.

அதுபோல "மீனவர் மீன் பிடிக்கிறார்" எனச் சொல்லிவிட்டு ஒரு தாய்லாந்து
இல்லை சீன மீனவர் தலையில் தொப்பியுடன் இருக்கும் படத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படி நமது சூழலுக்கு முற்றிலும் பொருந்தாத பலவிசயங்கள் புத்தகத்தில் இருக்கின்றன. ஒரிடத்தில் யானை எனச் சொல்லி ஆப்பிரிக்க யானை. குரங்கு எனச் சொல்லி பனிக்குரங்கைப் போட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் சின்னவிசயம் என என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை.

அதுபோல "குழந்தை சிரிக்கிறது" எனச் சொல்லி ஒரு சைனீஸ் குழந்தையின் படத்தை போடுவதை விட ஒரு அசட்டுத்தனம் இருக்க முடியுமா என்ன ?
சரி, அவை  பாடத்திட்டங்களுக்கு படம் தேர்வு செய்த ஒரு கோமாளி இணையத்தில் திருடிய படங்கள் என்றால் இதையெல்லாம் மேற்பார்வை செய்பவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?.

பிள்ளைகள் நேரடியாக அன்றாட வாழ்வில் நேரடியாக பார்க்கக்கூடிய,உணரக்கூடிய விசயங்களை கல்வியாளர்கள் பாடத்திட்டங்களின் வழியாக சரியாக கொண்டுசேர்க்கவேண்டாமா ? ஒரு படம் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் எனச் சொல்வார்களே. ஆரம்பக் கல்வி வாயிலாக குழந்தைகளுக்கு  நுட்பமான ஒரு விசயத்தை சொல்கிறோம் எனும் பிரக்ஞைகூட அவர்களுக்கு இல்லையா.
இல்லை, "நாய்" எனச் சொல்லி பிள்ளைகளுக்கு லேப்ரடார் (labrador) வகை நாய்களை வளர்க்கச் சொல்லி மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறார்களா ? புரியவில்லை.

இதற்கு வேறு சாயங்கள் பூசாமல் நேரடியாகவே கேட்கிறேன். லண்டனில்
படிக்கும் ஒரு குழந்தையின் பாடத்தில் "காய்" எனச் சொல்லி முருங்கைக் காயின் படத்தை போடுவார்களா ? இல்லை "விளையாட்டு" எனச்
சொல்லி கபடி ஆடும் படத்தைதான் போடுவார்களா என்ன ?  சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா ?

*************
இது புதிய தலைமுறை கல்வி இதழில், "மா(ற்)றுவார்களா?" எனும் தலைப்பில் வெளியான கட்டுரை.

#அலட்சியம்

1 comment:

  1. உண்மை
    அருமையான கருத்துக்கள் நண்பரே

    ReplyDelete