Friday, October 20, 2017

Love, Loss and What We Ate - நடிகை பத்மா லட்சுமி

பெரிய பின்புலம் எதுவும் இல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் 
தங்களின் சொந்தத் திறமையால் நிறம், இனம்,மதம் போன்ற தடைக்கற்களை உடைத்து விருட்சமாக உயர்ந்து நிற்பது பெரும் சவாலான விசயம். அதைக் தினம் தினம் கண்கூடாக பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.

அந்த வகையில், சென்னையில் ஒரு மத்தியதர வர்கத்தில் பிறந்து,
தந்தையைப் பிரிந்தச் சிறுமியாகத் தன் தாயோடு அமெரிக்காவில் குடியேறி வெற்றிபெற்ற "டாப் செஃப்" புகழ் பத்மா லட்சுமியின் வாழ்க்கை முக்கியத்துவம் பெறுகிறது.

பத்மா- முழுப்பெயர் "பத்மா பார்வதி லட்சுமி வைத்தியநாதன்" சுருக்கமாக "பத்மா லட்சுமி" (பிறப்பு-1970)  .  இவர் எழுத்தாளர், நடிகை, மாடல், டிவி தொகுப்பாளர், தயாரிப்பாளர்,தொழிலதிபர் என பலதளங்களில் இயங்குபவர்.

சமீபத்தில் நான் அவருடைய சுயசரிதையான "Love, Loss and What We Ate "ஐ வாசித்தேன் (ஓலி வடிவில்).

எழுத்தாளர் சல்மான் ருஸ்டியுனான காதலில் இருந்து நமக்குக் கதை சொல்லத் தொடங்கும் பத்மா 2016 ஆண்டு வரையான தனது வாழ்க்கையை  " Love, Loss and What We Ate  " எனும் மூன்று அம்சங்களில் சுவையுடன் பகிர்ந்திருக்கிறார்.

முதலில் சல்மானிலிருந்து தொடங்கினாலும், தனது சிறுவயது இந்திய பால்ய நினைவுகள், பள்ளி, கல்லூரி வாழ்க்கை,மாடலிங், சமையல்,  திருமணம், விவகாரத்து என  முன்னும் பின்னுமாகத்  தனது நினைவுகளை நகர்த்தி நாம் ரசிக்கும்படி பகிர்ந்திருக்கிறார்.

தான் ஒரு பிரபலம் எனும்  மனத்தடையின்றித் தனது காதல், திருமணம், விவாகரத்து என்பதைக் கடந்து தனது
அந்தரங்கங்களையும் வெளிப்படையாக சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

மாடலிங் துறையில் நுழைந்த புதிதில் தனக்கு "கோட்" (Coat) என்பதற்கும் "ஐக்கெட்" (Jacket)  என்பதற்குமான வித்தியாசம் கூட தெரிந்திருக்கவில்லை  என்பதைப் பட்டவர்தமாக போட்டு
உடைத்திருப்பார்.

அதுபோல வாழ்வின் உச்சங்களை எட்டும்போதெல்லாம் தனது மத்தியதரவர்கச் சிரமங்களை நினைத்துப் பார்த்தேன் என்கிறார்.

தன்னை வெளிப்படையாக  ABCD (American-Born Confused Desi)  என அறிவித்துக் கொண்டாலும்,  இந்திய, அமெரிக்க வாழ்வியல் நம்பிக்கைகளுக்கு இடையேயான தனது நிலைபாட்டை பத்மா குழப்பமின்றித் தெளிவாக எடுத்துவைக்கிறார். அதே சமயத்தில் தனது குழந்தைக்கு மலையாள முறைப்படி  'அன்னபிரசன்னம்' எனும்  சோறு ஊட்டும் நிகழ்வுக்கு முன்பாக மாமிச சூப் தந்த நிகழ்வைக் குற்ற உணர்வோடு ஒப்புக்கொள்கிறார்.

அப்படியே போகிற போக்கில் மாடலிங்,   அதில் இருக்கும் நுண்அரசியல்,  பிரபலமாக இருப்பதன் சிரமங்கள்,  தனது ஐரோப்பியப் பயணஅனுபவங்கள்,  உலகசமையல் என பல விசயங்களைத் தொடுகிறார்.

நாய், பூனை போன்ற சில மிருகங்கள் பிரசவத்திற்குபின் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும் எனக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், பிரசவித்த பெண்கள்  Placenta எனும்  தங்களது நஞ்சுக்கொடியை உண்பதை
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

ஆமாம்,  மேற்கு உலகில், குழந்தைபிறந்த பின் தாய்மார்கள் ( உடல்நலம் பேண ) தங்களது நஞ்சுக்கொடி எனும் Placentaவை உண்ணும் விநோத வழக்கம் இருக்கிறதாம்.  அதை பத்மாவும் முயன்று பார்த்திருக்கிறார்.  சிறுவயதில் சைவ பின்புலத்தில் பிறந்து வளர்ந்த பத்மா இதைச் செய்திருப்பதை நாம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.

அதுபோல அவருடைய  வலதுகை தழும்பு தன் வாழ்க்கையில்
ஏற்படுத்தித் தந்த திருப்பம், தனது தாயின் கணவர்கள், தனக்கு வந்த
நிர்வாண புகைப்பட வாய்ப்பு எனப் பல ஆச்சர்யங்களைச் சொல்கிறார்.

ஆண் பெண் உறவு, கடவுள் நம்பிக்கை, கல்வி என பலதளங்களில் புலம்பெயர்ந்தவர்களின் மனச்சிக்கல்களை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

பத்மா சென்னையில் பிறந்து உலகபிரபலமானவர் என்ற மேலோட்டமான அறிமுகத்தோடு கேட்கத் தொடங்கிய எனக்கு இறுதியில் அவரைப் பற்றி வேறுவிதமான பிம்பம் கிடைத்தது எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்..

இந்தச் சுயசரிதையை அவருடைய பார்வையில்,அவருடைய சொந்தக் குரலில் ஒரு நெடுங்கதைப் போலக் கேட்க சுவாரசியமாக இருக்கிறது. குறிப்பாக  அவருடைய இளவயது சென்னை அனுபவங்களை சிலாகித்து உணர்வுபூர்வமாக மனநெகிழ்ச்சியோடு பகிர்ந்ததையும் ரசித்தேன்.

ஒரு நெருங்கிய நண்பியிடம் கதைகேட்கும் மனநிலையை
தரும் அதே நேரத்தில் விசயத்தைப் போரடிக்காமல் நகர்த்தும் உத்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார்.  வாய்ப்பிருந்தால்
இந்தப் புத்தகத்தை வாசியுங்கள் அல்லது கேளுங்கள்.

நூல் - "Love, Loss and What We Ate"
ISBN-13: 978-0062202611
ஆசிரியர்-  பத்மா லட்சுமி
இணையதளம் - https://www.amazon.com/Love-Loss-What-We-Ate/dp/0062202618
விலை - $ 9.50 (Paper back)


படங்கள் இணையம்  நன்றி -
http://wmeimgspeakers.com/speaker/padma-lakshmi
https://en.wikipedia.org/wiki/Padma_Lakshmi

1 comment:

  1. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே

    ReplyDelete