Wednesday, December 5, 2018

தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்

இதுவரை வாசித்ததில் ஆகச்சிறந்த பயணக்கட்டுரைத் தொகுதி எழுத்தாளர்
எஸ்.ரா. வின் `தேசாந்திரி `  எனச் சொல்வதில் எனக்குப் பெரிய தயக்கம் எதுவுமில்லை. அமெரிக்காவின் புலிட்சர் பரிசைத் தமிழுக்குத் தருவதாக இருந்தால் சமகாலத்தில் தந்து பெருமை படுத்தப்படவேண்டியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று கூடச் சொல்லலாம்.

தேசாந்திரி -அவர்  வாரந்தோறும் ஆனந்த விகடனில் எழுதியத் தொடர்
பயணக்கட்டுரைகளின் தொகுப்பு.  வடக்கே காசி முதல் தெற்கே குற்றாலம் என தேசம் முழுமையும் திரிந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளின் சிறப்பம்சமே அதன் வடிவம் என்றுகூட சொல்லத் தோன்றுகிறது. வழமையான பயணக்கட்டுரைகளின்  எல்லா
வடிவங்களையும் கட்டுடைத்து ஒரு புதியபாணியில் வாசகர்களின்
மனதோடு பேசி இருக்கிறார். இந்தக் கட்டுரைகள் இலக்கியத் தரத்தோடு இருப்பதும் சிறப்பே.

சோழர்களின் கலை உச்சமாகக் கருதப்படும் கங்கைகொண்ட சோழபுரம்,
தஞ்சை சரபோஜியின் சரஸ்வதி மகால், நல்லதங்கங்காள் தன் பிள்ளைகளோடு கிணற்றில் விழுந்து மாண்டதாக நம்பப்படும் அர்ச்சுனாபுரம்  என நீளும் அவருடைய இந்தப் பயணம் மிக நீண்டது.
அந்தப் பயணத்தில் வாசகனோடு ஆத்மார்த்தமான நெருங்கிய உரையாடல் செய்தபடி அவனுடைய கரம் பிடித்து அழைத்துச் செல்லும் எழுத்து
நேர்மையானது.

வெவ்வேறு தளத்தில் இயங்கும் இந்தக் கட்டுரைகள் தண்ணீரை ஒரே மடக்கில் முழுவதுமாக குடிப்பது போல்  ஒரே மூச்சில் தொடர்ந்தார்போல் வாசிக்கக் கூடியது அல்ல. மாறாக அலாதியான வாசிப்பனுபவத்தைப் பெற தினம் ஒரு கட்டுரை என வாசித்தாலும் குற்றமில்லை எனச்
சொல்லும்படியான ஆழமான எழுத்து. கட்டுரைக்குப் பொருத்தமாக கவிதைகளும், ஒவியங்களும் துருத்திக்கொண்டில்லாமல் இயல்பாக சேர்த்திருப்பது கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணமானத்தைத் தந்திருக்கிறது.

தொகுப்பில் குறைகள் எனக் குறிப்பிட்டுச் சொல்ல பெரிதாக இல்லை. மாறாக இந்த எழுத்தோவியத்துக்கு அட்டைப் படமாக புத்தரின் புகைப்படம் ஏனோ பொருத்தமில்லாமல் தோன்றுகிறது. அதுவே வேறு ஓவிமாகவோ இல்லை புத்தரின் ஒவியமாக கூட இருந்திருந்தால் அது புத்தகத்தை இன்னொரு படி உயர்த்திப் பிடித்திருக்கும்.

எஸ்.ரா. இந்தப் பயணத்தின் ஊடாக இன்று  நமது பாரம்பரியமான கலைகளும், பண்பாடும் மரபும் மக்களால் பின்தொடரப்படாமல் கைவிடப்பட்டு உதாசினப்படுத்தப்படுவதை ஆதங்கத்தோடு கவலை தேய்த குரலோடு பதிவுசெய்திருக்கிறார். அது ஒரு தமிழ் எழுத்தாளனின் குரல் என்பதைத் தாண்டி அது காலத்தின் குரலாகவே பதிவுசெய்யப் பட்டிருப்பதாக நினைக்கிறேன். தமிழின் முக்கியமான இந்தச் சமகால நூலை அனைவரும் வாசிக்கவேண்டும்.

குறிப்பு- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை வாழ்த்துவோம்.

1 comment: