Saturday, December 1, 2018

நவம்பர் - தேசிய நாவல் எழுதும் மாதம் (NaNoWriMo)

எழுதுவது என்றில்லாமல் பொதுவாக கலை தொடர்பான விசயங்களுக்கு
படைப்பூக்கம் அவசியம். அதுவும் புனைவு எழுதுபவர்களுக்கு அது கூடுதலாக தேவைப்படுவதாகவே நினைக்கிறேன். அந்தப் படைப்பூக்கத்துக்கான தூண்டுகோல் எது ?

பெரும்பாலும் இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. அவை அவர்களின் வாழ்வோடு
ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையவை. அவர்கள் வாழ்வில் தன்னைப் பாதித்த, தான் கடந்து வந்த வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களை, தனது உணர்ச்சிப் போராட்டத்தை அல்லது தான் சந்தித்தவர்களின் மறக்கமுடியாத அனுபவங்களை எழுத்தில் நாடகமாக நடத்திக் காட்டுவார்கள்.

அப்படி ஒரு கதையை எழுதுவது என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம். சிலருக்கு அது ஒரு பயணம் போல. சிலருக்கு அது ஒரு  குறுக்கெழுத்து விளையாட்டு போல. சிலருக்கு எழுத்து இருட்டில் மெழுகுவர்த்தி போல.
சமயங்களில் எழுத்து சிலருக்கு மனக்காயங்களுக்கு மருந்தாகவும், துயரத்துக்கு வடிகாலாகவும் அமைவது உண்டு. அந்த வகையில் நேற்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.

தற்போது கலிபோர்னியா மாநிலத்தில் பற்றி எரிந்துகொண்டிருக்கும்
காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான காட்டுத்தீ. அந்த நெருப்புக்குத் தான் குடிருந்த வீட்டையும் மொத்த கம்யுனிட்டியையும்
இழந்த எழுத்தாளர் மாட் ஃபோர்ப்ஸ். தனது அனுபவத்தை நாவலாக
எழுதத் தொடங்கியிருக்கிறாராம். வாழ்க்கையின் துன்பத்துக்கு  மிகச்சிறந்த பதில் அதன் அழிவுகளில் இருந்து மீண்டுவருவதே. அவர் அந்தத்  துன்பங்களில் இருந்து மீள்வது என்பது தனக்கு எழுதுவது என்கிறார்.

அந்தவகையில் கடந்த ஆண்டு ஃபிளாரிடா மாநிலத்தை உலுக்கிய இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட எனது அனுபவத்தை ஒரு புனைவாக எழுதிமுடித்திருக்கிறேன். உலகமெங்கிலும் நவம்பரை தேசிய நாவல் எழுதும் மாதமாகக் கொண்டாடுகிறார்கள் (NaNoWriMo). அந்த (30-Nov) நவம்பரில் இதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

No comments:

Post a Comment