Tuesday, October 8, 2019

காந்தி குறித்த முதல் ஆவணப்படம்

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் - காந்தி குறித்து முதன் முதலில் ஓர் ஆவணப்படம் (டாக்குமெண்டரி) வெளியான ஆண்டு 1940. அதைத் தயாரித்து வெளியிட்டவர் ஒரு தமிழர். அவர் "உலகம் சுற்றும் தமிழன்" என அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார்.  ஏ.கே. செட்டியார் என்ற பெயரில் அறியப்பட்ட அவர் 1930களிலேயே ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுமையும் சுற்றி திரிந்து தமிழில்  பல பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் குறித்த ஒரு புத்தகத்தை வாசித்துக்
கொண்டிருக்கிறேன்.

அவருக்கு காந்தி மேல் இருந்த அன்பாலும், பக்தியாலும்  காந்தி குறித்த
ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனும் யோசனை வந்திருக்கிறது. ஆனால்,  அந்த யோசனைக்கு அப்போது இந்தியாவில்   அவர் நினைத்தது போல பெரிய ஆதரவு எதுவும் கிடைத்துவிடவில்லை. ஏன் சென்னையில் இருந்த பட தயாரிப்பு நிறுவனங்களே அவருக்கு உதவிசெய்ய முன்வரவில்லை. இது வெளிநாட்டில் படித்த  ஒரு இளைஞனின் கனவு என அவருடைய யோசனையைப் புறந்தள்ளின. அதுமட்டுமல்லாமல்  அது உலக அரங்கில் ஆங்கிலேயர்களின் கை ஓய்கி இருந்த சமயம். காந்தியைப் பற்றிய படம் என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாகக் கருதப்பட்டது. ஆனால் காந்தி மேல் இருந்த அபரிதமான அன்பால் அந்த முழு நீளப்படத்தைத் தானே தனியாக பொருட்செலவு செய்து தயாரிப்பது என  உறுதியானதொரு முடிவை செட்டியார் எடுத்தார். ஏற்கனவே புகைப்படக்கலையில்  ஆர்வம் கொண்டிருந்த அவர் காந்திக்கு நெருக்கமான பல  நண்பர்களை, கட்சிக்காரர்களை ஆர்வமுடன் சந்தித்தார். பிறகு காந்தி குறித்த பழைய செய்திக் குறிப்புகளையும், படத்தொகுப்புகளையும் தேடி கல்கத்தா, பம்பாய், புனே என ஊர் ஊராக பல ஸ்டியோக்களை ஏறி இறங்கத் தொடங்கினார்.

அதுபோல காந்தி குறித்த வெளிநாட்டுப் படக்காட்சிகளைத் தேடி தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் எனப் பல நாடுகளைச் சுற்றி திரிந்து சேகரித்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் காந்தி குறித்து சுமார் 200 புத்தகங்களை வாசித்து பல அரிய தகவல்களையும் திரட்டியிருக்கிறார்.

1937இல் தொடங்கிய இந்தவேலை சுமார் 3 ஆண்டுகள்  கழித்து நிறைவடைந்திருக்கிறது. மொத்தமாக சுமார் 50,000 அடி நீளமுள்ள 
ஓளிபடங்களில் இருந்து 12,000 அடி நீளமுள்ள அந்த ஆவணப்படத்தைத் தயாரித்தார். மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கிடையிலும் அந்தப்  படத்திற்க்கு  அவர் பலரைத் தேடிப்பிடித்து பின்னணி இசை, பாடல்கள், விளக்க உரை
எல்லாம் சேர்த்திருக்கிறார்.

படத்திற்காக நான்கு கண்டங்களில் சுமார் 1 இலட்சம் மைல் பயணம் செய்திருக்கிறார். உலகம் முழுமையிலும் 30 ஆண்டுகளாக நூற்றுக்கும் அதிகமான கேமாரக்களில் எடுக்கப்பட்டிருந்த காந்தி குறித்த படங்களைச் சேகரித்திருக்கிறார்.  அந்தப் படமே ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை அவரது வாழ்வியல் சம்பவங்கள் மூழமாக சித்திரிக்கும்  ஒரு முழு நீளமுள்ள முதல் சரித்திரத் திரைப்படம் எனும் பெயர் பெற்றது.

இந்தியாவில் திரைப்படத்துறையே முழுமையாக வளர்ச்சி அடைந்திராத,
தகவல் தொடர்புகள் பெரிதும் வளராத அந்த நாட்களில் ஒரு தனிமனிதராக இத்தனையும் ஏ.கே செட்டியார் செய்து முடித்திருக்கிறார் என்பதை அறியும் போது இன்று நமக்கு பெரிய மலைப்பாக இருக்கிறது.

இப்படிப் பல சிரமங்களுக்கிடையே அந்த ஆவணப்படம்
தயாரிக்கப்பட்டதோ நெருக்கடியான யுத்த காலம் . காங்கிரஸ் ஆங்கிலேயர்களை எதிர்த்து யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் யுத்த எதிர்ப்பில் வேறு இருந்தார்கள். அதனால் அந்த சமயத்தில் ஆங்கிலேயர்கள் காந்தி குறித்த இந்தப்படம் வெளியாகுவதை விரும்பவில்லை.  அப்போதைய அரசு அந்தப்படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்ப பரிந்துரைத்தது.

ஆனால், ஆங்கிலேயர்களின் விருப்பத்துக்கு மாறாக அப்போது தணிக்கைக் குழுவில் இருந்தவர்கள் படத்தில் எந்ததொரு வெட்டும் இல்லாமல்
வெளியிட அனுமதித்தனர். அதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் அனுமதித்த இரண்டு உறுப்பினர்களையும் பதவியில் இருந்து தூக்கியடித்தனர். அப்படிப் பதவி இழந்த இரண்டு உறுப்பினர்கள் பிரபல மருத்துவர் ஏ. கிருஷ்ணா ராவ் மற்றோருவர் இந்து பத்திரிக்கை ஆசிரியர் கஸ்தூரி சினிவாசன்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அந்தப் படத்தில்  காந்தி நேரடியாக தோன்றி பேசுவதுபோல ஒரு காட்சிகூட இல்லை. பலர் பார்த்து பாராட்டிய அந்தப் படத்தை காந்தி கடைசி வரை பார்க்கவேயில்லை.  தயாரிப்பு வேலைகள் முடிந்த பின் அதை வெளியிட முதலில் அரங்க உரிமையாளர்கள் முன்வர வில்லை என பல சுவையான  நிகழ்வுகள் நடந்தேரி இருக்கின்றன.

மகாத்மா குறித்து எடுக்கப்பட்ட அந்த ஆவணப்பபடம் இன்று இந்திய அரசின் உடமையாக இருக்கிறது.

No comments:

Post a Comment