Tuesday, October 8, 2019

ஐரோப்பாவில் இருக்கும் தங்கத்தால் ஆன தமிழ் ஓலைகள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு-8)


ஜெர்மனியைச் சேர்ந்த நண்பரும் முனைவருமான சு.சுபாஷிணி தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் அன்று "ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகள்" எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக்கட்டுரையை  வழங்கினார்.


இங்கே சுபாஷிணி பற்றி ஒரு சிறிய அறிமுகம்.  மலேசியாவில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வசிக்கும் சுபாஷிணி தொழில் முறையில் ஒரு கணிப்பொறியாளர். ஆனால், தமிழ் தொன்மை மீதுள்ள தீராத ஆர்வத்தால்  தமிழ் மரபு அறக்கட்டளை எனும்  அமைப்பை நிறுவி அதன் வழியாக பண்டைய தமிழ்மரபு சார் விடயங்களை (எ.கா. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள்..) மின்னாக்கம் செய்து பலருக்கும் உதவும் வகையில் பொதுவில் வைக்கிறார். (http://thfcms.tamilheritage.org/palmleaves/) இதை  உலகம் முழுவதிலும் உள்ள பல தன்னார்வ தொண்டர்களின் உதவியோடு,
களப்பணி செய்து செயல்படுத்தும் அவருடைய முயற்சி  வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய ஒன்று.

நிகழ்வில் சுபா ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்படும் பல அரிய தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றிய தனது தேடல் குறித்து பேசினார் (நிகழ்வில் இருந்து சில படங்கள் இங்கே).

ஆய்வின் நோக்கம்

தமிழர் தம் தொன்மையை அறியவும், தமிழக வரலாற்றினை அறிந்து கொள்ளவும், தமிழ் மக்களின் சமூக நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளவும் தமிழ் நிலப்பரப்பில் தொடர்ச்சியாக நிகழ்ந்த இலக்கிய, சமய சிந்தனைகளை அறியவும் ஆதாரமாக அமைபவைகளில் ஓலைச்சுவடிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஐரோப்பிய ஆவணப் பாதுகாப்பகங்களில் இருக்கும் தமிழ் ஓலைச்சுவடிகள் முழுமையாக
ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

****
தற்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகம், பாரீஸ் நகரிலுள்ள பிரான்சு தேசிய நூலகம், கோப்பன்ஹாகனிலுள்ள அரச நூலகம் போன்ற ஆவணக்காப்பங்களில் பாதுகாக்கப்படும் இந்த ஆவணங்கள்
ஐரோப்பியர்கள் தமிழகம் வந்தபோது இருந்த சமூகசூழல் குறித்துப் பேசுகிறன.
மேலும் தங்கம், வெள்ளி, பனை,
காகிதங்களால் ஆன இந்த ஆவணங்களில் தமிழ் எழுத்து வடிவில் மட்டுமன்றி  சில ஐரோப்பியர்கள் தங்கள் கைப்பட உருவாக்கிய  ஓவியங்களுடன்  இருப்பது சிறப்பு என்றும் குறிப்பிட்டார்.

அதுபோல அவர்களால் (ஐரோப்பியர்களால்) 17 நூற்றாண்டு வாக்கில் பல தமிழ் இலக்கிய நூல்கள் ஐரோப்பிய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்ட அவர் திருக்குறள்
லத்தின்,ஜெர்மன், டோய்ச், ஆங்கிலம்,  சுவீடிஷ், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக நிலப்பரப்பில் ஐரோப்பியர்களின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அதனால், அவர்களுடைய தமிழக வருகை நம்மில் ஏற்படுத்திய சமூக,சமய, வாழ்வியல் சார்ந்த மாற்றங்கள் ஆய்வு நோக்கில் உற்றுநோக்கப்பட வேண்டும் எனும் கருத்தை இறுதியாக வலியுறுத்தினார்.

தமிழ் மரபு அறக்கட்டளையில் இணையதள முகவரி - http://www.tamilheritage.org/

No comments:

Post a Comment