Wednesday, January 29, 2020

ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் Duel

ஸ்டீவன் ஸ்பில்பெர்க் உலகம் முழுதும் அறியப்பட்ட ஹாலிவுட் இயக்குநர். ஜூராசிக் பார்க், ஜாஸ் (Jaws) , ஈ.டி. (E.T.), மைனாரிட்டி ரிப்போர்ட், ஏ.ஐ. (A.I.) என பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியர்.  புகழ்பெற்ற இயக்குநர் என்பதைத் தாண்டி அவர் ஒரு வெற்றி பெற்ற தயாரிப்பாளரும் கூட. இரண்டு முறை  ஆஸ்கார் விருது பெற்ற அவருடைய முதல்படமான Duel (1971) -ஐ சமீபத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ('Duel' - தமிழில் 'ஒண்டிக்கு ஒண்டி' என நேரடியாக மொழிபெயர்க்கலாம்)

படம் அதிரடி திரில்லராக இருந்தாலும். படம் பார்த்த எனக்கு ஒரு வித அதிர்ச்சி.  காரணம், ஒத்த செருப்பு போலொரு படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கியதைப் போல உணர்ந்தேன். அதாவது, ஸ்பில்பெர்கின் பல பிரமாண்ட படங்களின் வழியாக அவர் குறித்து  என் மனதில்  வேறொரு சித்திரம் இருந்தது.

Duel படத்தின் கதை இதுதான். ஒரு நெடுஞ்சாலையில் நாயகன், தன் காரை ஓட்டிக்கொண்டு செல்கிறான். அவனுக்கு முன்பாக ஒரு டிரக், அவனுக்கு வழி விடாமல் சாலையை மறித்துக்கொண்டு செல்கிறது. காரில் இருக்கும் நாயகன், அடிக்கடி 'ஹாரன்' அடித்துப் பார்க்கிறான். பயனில்லை. தொடர்ந்து நந்தி போல சாலையை மறைத்து போகும் டிரக்கோ அவனுக்கு  வழி கொடுப்பதாக தெரிய இல்லை.

இப்படிப் பிடிவாதமாக வழியை அடைத்தபடி செல்லும் டிரக் மேல் எரிச்சடைந்த நாயகன் ஒருகட்டத்தில் சாமர்த்தியமாக சந்தில் புகுந்து டிரக்கைச் சட்டென முந்தி சென்று விடுகிறான். வந்தது வினை. டிரக்கில் இருக்கும் அந்த முகமறியா மனிதன் நாயகனுக்கு எதிராக, எமனாக திரும்பி விடுகிறான்.

அங்கிருந்து இடைவேளையின்றி காரில் இருக்கும் நாயகனும், முகமறியா டிரக் டிரைவரும் நெடுஞ்சாலையில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டும் மூர்க்கமாக தாக்கிக் கொண்டும் படம் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது.  இறுதியில் யார் யாரை வென்றார்கள் ? எப்படி? என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் (யூ.டியூயில் கிடைக்கிறது).

இங்கே குறிப்பிட்டு சொல்லவேண்டியது திரைக்கதை பற்றி. அதாவது,
எந்தவொரு கிளைக் கதைகளும் இல்லாமல் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி ஒரு நாயகனை மட்டும் வைத்து திரைக்கதை அமைத்து ஸ்பில்பெர்க் வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் முதல்படம். வெளியில் இருந்து பார்த்தால், படம் இரண்டு வாகனங்களுக்கு இடையேயான போட்டி என்பது போல தோன்றினாலும் அது மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் நடக்கும் போராட்டம் என்பதை நம்மால் பட உணர்ந்துகொள்ள முடியும். காலத்தை வென்று நிற்கும் படம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.



No comments:

Post a Comment