Wednesday, January 1, 2020

தமிழ்த்திரையுலகில் இரட்டையர்கள்


தமிழ்த்திரையுலகில்  இரட்டையர்களுக்கு என்று ஓர் இடம் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. முன்பு  இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மனோஜ் கியான் எனும்  அந்த வரிசையில் இன்று சபேஷ் - முரளி... அதுபோல பாரம்பரிய சங்கீதத்தில் சூலமங்கலம் சகோதரிகள்,  பாம்பே  சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி. நாட்டுப்புறப் பாடலில் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி- அனிதா, செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி இணை என அங்கேயும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அந்தவகையில் திரைப்படத்
தொகுப்பாளர்களாக பி. லெனின்-வி. டி. விஜயன் நினைவுக்கு வருகிறார்கள்.



அதாவது ஒத்தத் துறையில் இணைந்து செயல்படுபவர்களைப் நாம் பேசுகிறோம். வைரமுத்து-ஏ.ஆர் ரகுமான் போன்ற வெற்றிக் கூட்டணிகள் என்பது வேறு.ஆனால், எழுத்தில்  இரட்டையர்கள் என்றால் நமக்குச் சட்டென நினைவுக்கு வருபவரகள் சுபா மட்டுமே. நண்பர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் என இருவரும் தங்கள் பெயரின் முதல் எழுத்தை எடுத்து சுபா எனும் புனைப் பெயரில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவருகிறார்கள்.  மற்றபடி தமிழ் எழுத்துத்துறையில் இரட்டையர்களைச் சிரமப்பட்டுத்தான் தேட வேண்டியிருக்கிறது

எழுத்து என்பது தனிமையோடு தொடர்புடையதாலோ என்னவோ அது பெரும்பாலும் தனி ஆவர்த்தனமாகவே இருந்திருக்கிறது.   ஆனால்,  ஆங்கிலத்தில் John Lennon & Paul McCartney போல பல இரட்டை பாடல் ஆசிரியர்கள் duo songwriters உலகப்புகழ் பெற்றிருக்கிறார்கள். 

அதுபோல நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் அமெரிக்க ஆசிரியர்களான கேத்லீன் ஓ’நீல் கியர் அவருடைய கணவருடன் இணைந்து முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அதுபோல மார்சியா முல்லர் மற்றும் பில் ப்ரோன்சினி (Marcia Muller and Bill Pronzini) எழுத்துலகில் உலகப்புகழ் பெற்ற இணை.

இங்கே அமெரிக்காவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றவர்களுடன் இணைந்து எழுதுவதும்  பரவலாக நடக்கும் விசயமே. அதாவது எழுதுவது என்பது ஒரு தனிமையான முயற்சியாக இருந்தாலும் ஒத்தக் கருத்துள்ள இரண்டு ஆளுமைகள் இணையும்போது ஆச்சரியமான கதைகள் சுவாரஸ்யமான நடையில் உருவாக வாய்ப்புள்ளன. அந்த வகையில் பிரபல அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் பேட்டர்சன் மற்றவர்களுடன் இணைந்து பல படைப்புகளை எழுதித் தள்ளியிருக்கிறார். அவர்   அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் இணைந்து சமீபத்தில் எழுதிய ”அதிபரைக் காணவில்லை” (The President is Missing by Bill Clinton and James Patterson ) வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.  சிறார் புத்தகங்களையும் எழுதியிருக்கும் ஜேம்ஸ் பேட்டர்சன் ஃபிளாரிடாவில் வசிக்கிறார். எனக்கு உள்ளூர்காரரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களைச் சந்திக்கும் நிகழ்வுக்கு மகளுடன் போய் அவருக்குச் சின்ன ஹலோ சொல்லிவிட்டு வந்தோம். 

என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் விரும்பும் ஒரு நல்ல படைப்பைத் தர ஒத்த நடையுள்ள இருவர் இணை ஆசிரியர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருவேறுபட்டத் தளங்களில் இயங்குபவர்களாகக் கூட இருக்கலாம். இப்படி, மேற்குலகில் பிரபலமான எழுத்தாளர்கள் கூட்டுசேர்ந்து புனைவு எழுதுவதை நாம் விட்டு விடுவோம். தமிழில் ஓரளவு பெயர் தெரிந்த எழுத்தாளர்கள் இணைந்து புனைவு ஏன் , நான்கு வரியில் ஒரு கட்டுரையைக் கூட எழுதமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒற்றுமை.

நான் இதையெல்லாம் எழுதக் காரணம் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அவர் தனது நண்பர் ராமசேஷன் எனும் கணினிப் பொறியாளருடன்  இணைந்து  ”நல்ல தமிழில் எழுதுவது எப்படி?” எனும் புத்தகத்தைக் கொண்டுவருகிறேன் என எழுதியிருந்தார். இலக்கணத்துக்கும் சாருவுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்பவர்களுக்கும் அவர் தனது தளத்திலேயே பதில் சொல்லியிருக்கிறார். வாசியுங்கள்.

இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் வளரும் எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் இணையாசிரியராக சேர்ந்து எழுத முன்வந்திருப்பது நல்லதொடக்கம். ஓரளவு புத்தகத்தையும் இணையாசிரியரையும்  சேர்ந்து பிரபலப்படுத்தும். இருவரும் வெற்றி பெற வாழ்த்துகள்!



2 comments:

  1. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    ReplyDelete