Showing posts with label #sujatha. Show all posts
Showing posts with label #sujatha. Show all posts

Sunday, January 17, 2016

கற்றதும் பெற்றதும் - சுஜாதா

சந்தேகத்துக்கிடமின்றி சுஜாதா எனக்கு பள்ளி நாட்களில் இருந்து ஆதர்சன நாயகன்.

மாலைமதி, குமுதம் போன்ற வெகுஜன ஊடகத்தில் 'யார் இவர்?' வித்தியாசமாய் இருக்கிறதே என திரும்பிப் பார்க்கச் செய்தவர். சமீபத்தில் அவருடைய 'கற்றதும் பெற்றதும்' வாசித்தேன்.

ஆனந்த விகடனில் அவர் தொடராக எழுதியதை தொகுத்து வெளியிட்டுள்ளனர். நான் பெரிய ஆ.வி. பிரியனாக இல்லாததால் அனைத்தும் புதிதாகவே இருந்தன. இப்பவும் ஆனந்த விகடன் "ஆ.வி." தானா இல்ல "AV" ஆயிட்டா?  தமிழ்நாட்டில் இருந்து யாராவது சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகளை நிறைய ஜானர்களில் எழுதியிருக்கிறார். அறிவியல், சிறுகதை, நாட்டு நடப்பு, அனுபவங்கள், கவிதை இப்படி பல.

சுஜாதாவின் கவிதை ஆர்வம் எனக்குத் தெரியாத ஓன்று. இந்த புத்தகத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல கவிதைகள்  ரசிக்கும் படி இருந்தன.  பல கட்டுரைகளில் புதிய கவிஞர்களையும், கவிதைகளையும் ஆதர்சனமாக கொண்டாடியிருக்கிறார். அவர் இருக்கும் போதே என் பங்குங்கு கொஞ்சம் கவிதைகளை எழுதி அவருக்கு அனுப்பிப் பயமுறுத்தி இருக்கலாமோ ? நல்லவேலை அவர் பிழைத்தார் !  :) அப்போதே வைரமுத்துவின் மகன் கபிலனின் கவிதை ஓன்றை விமர்சித்து அறிவுரைத் தந்துள்ளார் என்பது சிறப்பு.

அப்புறம் நான் படித்து வியந்த  இன்னோரு  விஷயம் அவரின் நகைச்சுவை உணர்வு. குறிப்பாக அவருடைய டகோடா ரக விமானங்களைச் செலுத்திய அனுபவங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. இவரைப் போல நகைச்சுவை என்ற நல்ல உணர்வு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்து வைத்தவர்தான்.

அதே சமயத்தில்,  தமிழ் வாசகர்களுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் குறைவு என சில இடங்களில் பதிந்துள்ளார். உண்மை. நாம கொஞ்சம் சீரியஸ் டைப் தான். விளையாட்டுன்னு நினைச்சு சொல்றத சிலர் சீரியசா எடுத்துகிட்டு அருவாளோட வந்து நிப்பாங்க.

மற்றபடி பெரிதான புகார்கள் எதுவும் இல்லை, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானதால் சில அறிவியல் விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. இது புத்தகத்தின் குறையே தவிர அவருடையதல்ல. 


இந்தப் புத்தகத்தைத் தாண்டி சுஜாதா பற்றி என் மனதைக் கவர்ந்த சில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சுஜாதா  தன்னுடைய வயதான காலத்திலும் மிக இளமையாக சிந்தித்திருக்கிறார், எழுதியிருக்கிறார். நாற்பது வருடங்கள் ஓருவரால் தமிழில் இளமைக் குறையாமல் எழுத முடிந்தது ஆச்சர்யம்தான். கவிஞர் வாலியை இங்கே கண்டிப்பாக நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அது போல தன்னுடைய விசுவல் எழுத்து அல்லது காட்சிப்படுத்தும் தன்மையை ஆங்கிலத்தில் இருந்து கற்று, தமிழில் (1960-70s) முயன்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து.  உங்களுக்கு இதில் மறுப்பு இருந்தால் சொல்லுங்க.

ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய short & sweet என்பதை கட்சிதமாக மிகவும் அழகாக, சமயங்களில் கவித்துவமாகவும் பயன்படுத்தக்கூடியவர். 

நான் சமிபத்தில் படித்த அவருடைய ஓரு நாவலில் இருந்து. கதாநாயகனை அறிமுகம் செய்ய பக்கம் பக்கமாக வருணனை இல்லை. சுருக்கமாக நான்கு, ஐந்து வரிகள் தான். அதில் ஓரு வரி  **கழுத்தில் கேமரா மாலை **. மற்றோரு இடத்தில் ** ரயில் 'ழே' என்று கூவிவிட்டு சென்றது...**. இப்படிப் பல.

தமிழைத் தாண்டி பல ஆங்கில நாவல்களையும், சிறுகதைகளையும் படித்து அதன் நுணுக்கங்களைத் தன் எழுத்தில் முயன்றிருக்கிறார்.  குறிப்பாக சுஜாதா பல சந்தர்பங்களில் தனக்கும் சிறுகதைகளுக்கும் உள்ள நெருக்கத்தை ஊடகங்களில் பதிவுசெய்ததைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன்.  அவருடைய 'சிறு சிறுகதைகள்' புத்தகத்தை பற்றிய எனது விமர்சனம் இங்கே. சிறு சிறுகதைகள்

சுஜாதா பெரிதும் சிலாகிக்கப்படுவது அவரின் அறிவியல் எழுத்துக்காக. மேல் மட்டமான ஆங்கில அறிவியல் புத்தகங்களைத் தாண்டி விரிவான மற்றும் அடர்த்தியான பல புத்தங்களைப் படித்திருக்கிறார். அதே நேரத்தில், எழுதும் போது அனைவருக்கும் புரியும்படி எளிமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இதற்கு அவருடைய பொறியியல் பின்புலம் இதற்கு மிக உதவியாக இருந்திருக்கிறது. இது அவருடைய மற்ற எந்த சமகால எழுத்தாளர்களுக்கு இல்லாத ஓரு தனிச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் சுஜாதா விட்டுச்சென்ற இடம் இன்றுவரை நிரப்படாமல் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. பார்ப்போம்.

அதுபோல சமீபத்தில் 'ஆழ்வார்கள் ஓரு எளிய அறிமுகம்' எனும் புத்தகத்தை வாசித்த போது அவருடைய சங்க இலக்கிய நாட்டம் புரிந்தது. சங்க இலக்கியத்தில் பசலை நோய், ஆண்டாள் கண்ணனிடம் உருகினாள் எனப் படித்தவர்தான், தன் நாவலில் வசந்த் சைட் அடித்தான் என மார்டனாக எழுதினார்.


எந்தவோரு விஷயத்தையும் ஓரு நடுத்தர குடும்பத்தின் கண்ணோட்டத்தில் அல்லது மன ஓட்டத்தில் பார்த்து எழுதியிருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் எல்லா வகையான வாசகர்களையும் கவருமா?. அப்படிக் கேட்பதே தேவையில்லாதது. ஏனேன்றால், இப்போதுக்கூட புத்தக்க்கண்காட்சிகளில் சுஜாதாதான் பெஸ்ட் செல்லராம். ஜெயகாந்தன் எளிய மனிதர்களின் ஆதர்சன எழுத்தாளன் என்றால் சுஜாதா வேறு ரகம். அவ்வளவே.

சுஜாதாவைப் வாசிப்பது ஓரு சுகானுபவம்.  என்னைப் பொருத்தவரை அவர் 'ஆல் டைம் பெஸ்ட் எண்டர்டெயினர்'. வாய்ப்பிருந்தால் இந்த புத்தகத்தை வாசியுங்கள்.


நுால்: கற்றதும் பெற்றதும்
ஆசிரியர்  சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள் : 296

பதிப்பகம்

Sunday, November 8, 2015

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ?

நா-நோ-ரை-மோ - அப்படினா என்ன ? மேலே படிங்க..

நமது அன்றாட வாழ்வில் எவ்வளவோ நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் சாதாரணமாக கடந்து போகிறோம்.

ஆனால்  எதேனும் ஓரு கருத்தோ அல்லது நிகழ்வோ மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு.  நாம மனசு குறு குறுன்னு இருக்குதுன்னு சொல்லுவோமில்லயா அதுமாதிரி. ஆங்கிலத்தில் urgeன்னு சொல்வது போன்ற  அந்த உள்ளவெறியானது (?) குறு நாவலாகவோ அல்லது நாவலாகவோ கூட வெளிவரும்.

அப்படி நாவல் எழுத நினைப்பவர்களை உற்சாகபடுத்தவும், ஊக்குவிக்கவும்
ஓவ்வோரு நவம்பர் மாதமும் தேசிய நாவல் எழுதும் மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலத்தில் National Novel Writing Month. சுருக்கமாக NaNoWriMo -"நா-நோ-ரை-மோ" என்கிறார்கள் ( இப்ப புரிஞ்சுதா? ).  அதே பெயரில் உள்ள nanowrimo.org எனும் தளம்  வழியாக இது சாத்தியமாகிறது. இதன் முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதுதான்.

இதில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் கடினமில்லை.
  • இதற்கேன உள்ள பிரத்தியோக தளத்தில் (http://nanowrimo.org/) பதிவு செய்தபின்,  உங்கள் நாவலை எழுதத் தொடங்குங்கள்.

  • பின்பு அன்றைய நாளில் எழுதிய விவரங்களை அவர்களின் வலை தளத்தில் பதிவு செய்து விடுங்கள். 

  • இப்படி மாத இறுதிக்குள் நீங்கள் 50,000 வார்த்தைகளாவது எழுதியிருக்க வேண்டும். இந்த படைப்புகளில் இருந்து பரிசுக்குரிய நாவலைத் தேர்ந்தேடுக்கிறார்கள்.

பின் குறிப்பு:

இந்த தளம் நீங்கள் எழுதும் நாவலின் தரத்தை விட நீளத்தில் கவனம் செலுத்துகிறது. முன்பே சொன்னது போல முக்கிய நோக்கம்  எப்படியாவது மக்களை எழுதவைப்பதாக இருக்கிறது.

அவர்களின்  கணக்குப்படி  ஆசிரியர் எழுதி முடித்தபின் பின்பு விருப்பப்படி நாவலை திருத்தி தரத்தை உயர்த்தலாம் என்கிறார்கள்.  ஏறத்தால இது ஓரு Draft காப்பி எழுதுறது போல.

இது ஓரு சமூக ஊடகம் என்பதால் கலந்து கொள்ளும் அனைவரும் தங்கள் சமீபத்திய நிலையை அல்லது Statusஐ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மத்தவங்க எழுதுறத பாத்து நீங்களும் ஆர்வமாக போட்டி போட்டு எழுதுவீங்க தானே ?

அப்புறம், இன்று நேற்றல்ல கடந்த பதினாறு ஆண்டுகளாக  நாவல் எழுதும் மாதம் நடைபெற்று வருகிறது.   2010ல் நடந்த நிகழ்வு மூலம் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை மட்டும் 200,000 பேர், மொத்தம் எழுதிய சொற்கள்   பில்லியன் 2.8. அடேயப்பா..

தமிழ் நாவல்களும் இதில் சாத்தியமான்னு தெரியல. ஆனால், சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சுஜாதா குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த சமயத்தில் இது மாதிரி ஓரு நாவல் மற்றும் சிறுகதை எழுதும் போட்டி நடத்தியது நினைவுக்கு வருகிறது.

பொறுப்பு துறப்பு:

கசலீனா... அப்படின்னு சமீபத்தில் வந்த ரஜினிபட துள்ளல் பாட்டு மாதிரி,  'நா-நோ-ரை-மோ ' ன்னா ஏதோ புதுப்பட பாடல்ன்னு நீங்க நினைச்சிருந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லங்க..

Saturday, October 31, 2015

நியூ ஆர்லியன்ஸ் - பயண அனுபவங்கள்-1

       கடந்த வாரம் அலுவலக சம்பந்தமாக லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரத்திற்க்கு சென்று திரும்பினேன். லூசியானா கவர்னர் பாபி ஜிண்டால்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.  இவர்தான் அமெரிக்காவின் முதல் இந்திய அமெரிக்க கவர்னர் என்பது  கூடுதல் தகவல்.


என் பயணத்தை பற்றி விரிவாக எழுதும் முன்பாக.  உங்களில் எத்தனைப் பேருக்கு 'கத்ரீனா சூறாவளி' பற்றி தெரிந்திருக்கும் என்றுத் தெரியவில்லை.

கத்ரீனா  கடந்த 2005ம் ஆண்டு  நியூ ஆர்லியன்ஸை நகரைத் தாக்கிய மிகப் பெரிய சூறாவளி.  இதுவே அமெரிக்காவைத்தாக்கிய மிகப் பெரிய  மற்றும் மூன்றாவது வலுவான புயல்.

அப்போது நகரில் புகுந்த நீரலைகள் உயர் 20 அடி (ஆறு மீட்டர்) இருந்ததாம். இதில்  உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 பேர்.  இந்த பேரழிவு  அமெரிக்க மக்களின் அரசியல், பொருளாதாரம்,  நகர்ப்புற திட்டமிடல்  மற்றும் இன்ன பிற விஷயங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தின் மேலிருந்து- வரிசையாய் தீப்பெட்டி போன்ற வீடுகள், நகரும் எறும்பு போன்ற கார்கள். இரவில் நட்சத்திரங்களை வாரி இறைத்தது போன்ற நகரம் என ரசிக்கும்படியே இருந்தது. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சில விஷயங்களில் இதுவும் ஓன்று. இதைப்பற்றிக் கூட யாரேனும் ஓரு கட்டுரை எழுதலாம்.

அப்புறம் அமெரிக்க விமானங்களின் உள்நாட்டு சேவையில் உணவு வழங்குவதை நிறுத்தி வருடங்கள் பலவாயிற்று.  சிற்றுண்டி என்ற  பெயரில் கோக் மற்றும் சிறிய வேர்கடலை பாக்கேட் போன்ற எதாவது ஓன்றை தருவார்கள். இந்த முறை அலர்ஜி என காரணம் சொல்லி அதையும் நிறுத்திவிட்டார்கள். அலர்ஜி பயணிகளுக்கா அல்லது அவர்களுக்கா என நான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  இந்தியாவில் இன்னமும் விமானத்தில் பொங்கல் வடை தருகிறார்களா? தெரியவில்லை. அப்படியேனில் நீங்கள் கொடுத்துவைத்தவர் தான். :)

விமானத்தில் கவனித்த இன்னோரு விஷயம் விமானப்பணிப் பெண்கள். வழக்கம் போலவே அழகாக இருந்தனர், முக்கியம் அதுவல்ல. அழகாய் லிப்ஸ்டிக் உதடு விரிய சிரிப்பது, ஹைஹீல்ஸில் கேட்வாக் நடப்பதைத்தாண்டி அவர்கள் துரிதமாகவும்,லாவகமாகவும் உணவு
வழங்குவது அழகாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

வழக்கம் போலவே விமானத்தில் பெரும்பான்மையானவர்கள் புத்தகங்களில் தங்கள் முகம் புதைத்துக் கொண்டிருந்தனர்  என்று எழுதினால் அது சம்பர்தாயமாகவே இருக்கும்.  ஏனேனில் புத்தகம் படிப்பவர்கள் எல்லோரும் குறைந்தது ஐம்பது வயதிற்கு மேலுல்லவர்கள். மீதமுள்ளவர்கள் தங்கள் தொலைபேசிக்கு கண்களையோ இல்லை காதுகளையோ
கொடுத்திருந்தனர்.  இருபது வருடங்களுக்கு பின் புத்தகம் அச்சடிப்பது பற்றி கவலைப்படத் தேவையிருக்காது போல.

இந்தக் கட்டுரையில் எங்கேனும் நீங்கள் தேடிப்பார்த்து அதில் கொஞ்சம் சுஜாதாவின் சாயல் இருந்தால் அதற்கு காரணம் நான் விமானத்தில் படித்த 'கற்றதும் பெற்றதும்' தான். இதற்கும் மேலே எழுதியதற்கும் தொடர்புபடுத்தி என் வயதை நீங்கள் தவறாக கணித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. புத்தக உபயம் 'தமிழ்'-நன்றி.

பயணங்கள் முடிவதில்லை...