Sunday, July 13, 2014

கவிஞர் வைரமுத்து - ஒரு சந்திப்பு

இன்று July-13, கவிஞர்  வைரமுத்துவின் 60வது பிறந்த நாள். அவரை பற்றி என்னுடய சில அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன்.

கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்பு திரைப் பாடல் வரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில், என்னை கவர்ந்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார். பள்ளி பாடங்களை தவிர்த்து அறிமுகமான முதல் தமிழ் கவிஞரும் அவரே.

தமிழ் பாடல்களை சித்தெறும்பு கடித்துக் கொண்டிருந்த நாட்களில் இவர் பாடல்கள் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. இளையராஜா, வைரமுத்து  மோதல் என்பது இந்த உலகறிந்தது. அந்த காலகட்டத்தில் வைரமுத்து- ஏ.ர் ரகுமான் கூட்டணி வெற்‌றி பெற பிரார்தித்த நாட்களும் உண்டு.

தமிழ் நாளேடுகளை தாண்டி வானொலியில் அவருடைய குரலையும் தமிழையும் கேட்டு ரசித்தேன். அவை பெரும்பாலும் திரை சார்ந்ததாகவே இருந்தது.

கல்லூரி நாட்களில் அவருடைய கவிதைகளை அங்கென்றும் இங்கென்றுமாய் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது  மலேசிய சந்திப்பு.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வேலை செய்யும்போது வைரமுத்துவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்து ரசித்தேன்.  மேலும் அன்று அவரின் ஆட்டோகிராப் பெறும் பேறு பெற்றேன். அந்த நிகழ்வே  கவிஞரின் கவிதைகளை மேலும் உள்ளார்ந்து படிக்கத் தூண்டியது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல,   அது ஓர் உணர்வு என்பது தெளிந்தது. இப்போது கூட கவிஞரின் மூன்று  பக்கத்துக்கு மிகமான சில கவிதைகளை என்னால் மனப்பாடமாக சொல்லக் கூடும். (கவனிக்க: திரை பாடல்கள் அல்ல)

அவரின் எல்லா வகை படைப்புகளுடன் பயணித்ததில்,  திரைப்பட பாடல்களை தாண்டியது  அவரது ஆளுமை என்பது என் எண்ணம்.  என்னை பாதித்த தமிழின்  சொந்தகாரர் அவர்.  அவரின் பாதிப்பு இல்லாத இளம் கவிஞர்கள் இல்லை எனவே சொல்ல தோன்றுகிறது.

அவரை பற்றிய எளிய ரசிகன்  என்னுடய கவிதை சில துளிகள்,
"என் ஜன்னல் வழிப் பார்வையில்"  கவிதைத் தொகுதியில் இருந்து

**************
"வடுகப்பட்டி தந்த வைரமே,
பொன்மாலைப் பொழுதில்,
ஒரு விடியலைத் தந்தவனே!

முண்டாசு, முரட்டு மீசை: பாரதி,
வெள்ளை ஜிப்பா, கருப்பு மீசை: வைரமுத்து,
தமிழனின் கடைசி அடையாளமாக
உன் மீசை!
...

அழகியலையும் அறிவியலையும்
புதுக் கவிதையில் கோத்து
மணம் வீசச் செய்தீர்!
....
தமிழ்ச் சாகரத்தின்
கலங்கரை விளக்கமே!
...

அரை நூற்றாண்டு கடந்தபின்பும்
தமிழ்ச் சமுதாயத்தில்
முதல் இளைஞனாக நீ,
தமிழின்
கடைசி நம்பிக்கையாகவும் நீயே!
"

என் ஜன்னல் வழிப் பார்வையில்:

Facebook fan page:www.facebook.com/ejvpbook

இந்தியாவில் நூல்களை வாங்க:
600024.com/store/en-jannal-vaz…-munner-pathippagam
USAவில் நூல்களை வாங்க (PayPal):

No comments:

Post a Comment