Monday, January 12, 2015

மெல்லத் தமிழினிச் சாகும் ?

'மெல்லத் தமிழினிச் சாகும்' என்பது பாரதியார் கூற்றாக பல பேரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுஅந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கவிதை வரி இதோ.

புத்தம் புதிய கலைகள் பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் -

இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

இந்தக் கவிதையைப் படித்த பிறகு உங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல வருவது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த உலகமயமாக்கப்பட்ட நூற்றாண்டில் ஆங்கிலம் தவிர
மொழிகளின் மற்ற இடம் தான என்ன? உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. அந்த வழியில் தமிழ் அழியக்கூடிய நிலையில் இருக்கிறதா? இந்த கட்டுரையில் சற்று விரிவாகப் பார்ப்போம்.


ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே சமயத்தில் அழிவதற்கான முகாந்திரங்களை எண்ணிப் பார்க்கையில்,சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது.

பொருளாதார தாரளமயமாக்களில் உலகெங்கும் ஒரே மாதிரியான உணவு வகைகள்,உடை மற்றும் நாகரீகம் என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் வசதியான சூழ்நிலை. இத்தாலியில் ஆய்வு செய்யப்பட்டு, சீனாவில் தயாரிக்கப்படும் பீசா, கும்பகோணத்திலும் நியூயார்க்கிலும் அப்படியே உண்ணப்பட்டால் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.

அது போல உலகமக்கள் படிக்கும் புத்தகங்கள், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களும் ஒரு சில குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட மொழிகளில் இருப்பதும் நிறுவனங்களுக்கு இலகுவாக இருக்கும்.

இதையும் தாண்டி ஆங்கில மொழி ஊடுருவலும் ஆதிக்கம், வட்டாரப் பேச்சு வழக்குகள் மற்றும் இளையத்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவையும் தமிழுக்கான எதிரிகள்.

இதுவரை தாய்மொழி அல்லது தமிழ்வழிக் கல்வி என்ற கோஷம் அற்றுபோய் தமிழ் மொழியும் படியுங்கள் என்ற கோஷம் வலுத்துள்ளது. சில வருடங்கள் வரை உயர்க் கல்வியில் மட்டும் ஆங்கில வழி என்ற நிலை மாறி, இன்று பாலர் பள்ளியிலே ஆங்கில வழி தொடங்கி விட்டது. பட்டி தொட்டி முதல் பெரும் நகரங்கள் வரை இதே நிலை என்பது இன்றைய நிதர்சனம்.

இரண்டாம் மொழியாக கூட தமிழை படிக்காமல், மேட்டுக்குடிமக்கள் என சொல்லக்கூடிய ஒரு பகுதியினர் தமிழை விட்டொழித்து மாமங்கம் பல ஆயிற்று. மத்திய தர வர்க்கம் எனும் பெரும்பான்மை சமூகமும் இந்த தளத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பது ஒரு பேரிடியாகும்.

தமிழ் ஒரு " செம்மொழி " என தமிழின் பெருமைகளைப் பற்றிப் பேசினால் நம் காதுகளுக்கு இனிமையாகத் தானிருக்கிறது. அதே சமூகத்தில் தான் பேருந்துகளில் எழுதியிருக்கும் ஊர் பெயரைக் கூடப் படிக்கத் தெரியாது என மிகப் பெருமையாகக் கூறிக் கொள்பவர்களும் வாழ்கின்றனர்.

தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் பெருமைகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலும் எந்த சமூகமும் தன் தாய் மொழியினை உயர்த்‌திப் பிடிக்கவேண்டியது அதன் கடமை.

இந்த நூற்றாண்டில் அதை தீவிர படுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். முன்னைய தலைமுறையினருக்கு இல்லாத தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரபிரசாதமே.

இத்தகைய சூழலில், வெளி நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் செய்யக் கூடியது என்ன.
  • முடிந்தவரை வீட்டில் நமது குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவோம்
  • சக தமிழர்களிடம் தமிழிலேயே உரையாடுவோம்
  • தமிழில் நம் பிள்ளைகளுக்கு பெயரிடுவோம்
  • தமிழில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலந்து பேசுவதை முடிந்தவரை தவிர்க்க பழகுங்கள்.
  • நல்ல தமிழ் புத்தகங்களை வாசிக்கவும், பரிசளிக்கவும் பழகலாம்
  • அடுத்த தலைமுறை நல்ல தமிழிலில் பேசுவதையும், எழுதுவதையும் உறுதி செய்வோம்.
  • தமிழர் பண்பாடு மற்றும் வாழ்வியிலை போற்றிக் கொண்டாடுவோம்
தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனையை தமிழர்களாகிய நாம் நெஞ்சில் நிறுத்துவோம்.

மேலும், நம் தாய்மொழியை அடுத்த தலைமுறைக்கு சரியாக கொண்டுசெல்வது நமது தலையாய கடமை என்பதை உணர்வோம்.

தென் புளோரிடாதமிழ் சங்கத்தால் வெளிவரும்  தமிழோசை இதழுக்கு, "மெல்லத் தமிழினிச் சாகும் ? "  எனும் தலைப்பில்  அனுப்பிய கட்டுரை இது. உங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்.

நன்றி,
ஆரூர் பாஸ்கர்.

4 comments:

  1. மிக்க சிறப்புத்தான். தமிழை தொலைத்த இடத்தில்தான் தேடவேண்டும்.திருமணம் தமிழில், தமிழரால் நடத்தப்படவேண்டும்.கோயிலில் தமிழ் பூசை மட்டுமே செய்யப்படவேண்டும். தேவையானவர் கேட்கும் மொழியிலும் செய்யலாம்.இந்த உணர்வினை பாமர மக்கள் கேட்கமாட்டார்கள். படித்த மேதாவிகள் கேட்டால் பின் பாமரரும் கேட்பர். உங்களால் முடியுமா?

    ReplyDelete
  2. இறைகற்பனைஇலான், உஙகள் கருத்துக்கு மிக்க நன்றி. தமிழை இந்தி எனும் அலையைத் தாண்டி ஆங்கிலம் எனும் சுனாமீ விழுங்க எத்தனிப்பதை வெளிக் கொண்டு வருவதே என் நோக்கம்.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. செல்வா, உஙகள் வருகைக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி!!

      Delete