Monday, May 29, 2017

திருவாரூரில் தேர்

"ஆரூர் பாஸ்கர்" எனும் பெயரின் முன்னால் இருக்கும் "ஆரூர்" பற்றி விசாரிக்கும் பெரும்பாலனவர்கள் "ஆருர்" என்பதை அடூர் தவறுதலாக  புரிந்துக்கொண்டு, கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள். 

" நானு பச்சைத்தமிழனாக்கும், அது என்றெ ஊர் பேர்" எனப் பெருமையாகச் சொன்னால், " ஓ ! அப்படி ஒரு ஊரைக் கேள்விப்பட்டதில்லையே ? " என்பார்கள். பின் தஞ்சாவூர் பக்கத்திலிருக்கும் திருவாரூர் என்றால் புரிந்துக் கொள்வார்கள்.   

உண்மையில் "திருவாரூர்" என்பது திரு+ஆரூர் என்பதாகும். தேவாரப் பாடல்களில் கூட "ஆரூர்" என்றே பாடியிருக்கிறார்கள்.  
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்த ஊர் என  திருவாரூர்
பல வரலாற்றுப் பெருமைகள் கொண்டது. நான் இன்று 
சொல்லவந்தது திருவாரூரின் வரலாறு பற்றியல்ல வேறோரு விசயம்.

இன்றும் கூட சமூக ஒற்றுமையை அழுத்திச் சொல்வதென்றால்  "ஊர் கூடி தேர் இழுக்கவேணும்" என்பார்கள்.  நிஜத்தில் இன்று 
(29-மே-2017) திருவாரூரில் மக்கள்  ஒன்றாகக் கூடி தேர் இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மதுரைக்கு மல்லி என்பதுபோல திருவாரூர் என்றால் தேர்.  அது
வெறும் தேர் இல்லை. ஆழித் தேர் என்பார்கள். "ஆழி" என்றால் கடல். கடல்போல் தேரா ? என்றால் ஆமாம்.

''அவன் மலை போல் பீடு நடை நடந்தான்'' எனும் பழம் பாடல் போல், இந்தத் தேரைப் பார்த்தால் ''நகரும் குன்றுகள்'' எனக் கண்டிப்பாக சொல்லத் தோன்றும் அளவுக்கு மிகப்பெரிய தேர். 

சுமார் 100 அடி உயரம், ஏறக்குறைய 300 டன் எடை அதன் ராட்ச சக்கரங்களை கட்டுப்படுத்த ஹைட்ராலிக் பிரேக்குகள்,
கண்ணைப் பறிக்கும் அலங்காரம் என மிக கம்பீரமாக இருக்கும்.

சென்னை மாநகரின் மையத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டம்
திருவாரூரின் தேர் வடிவத்தில் அமைந்தது என்பதே அதன் சிறப்பைச் சொல்லும்.

திருவாரூரில் பெரியக்கோயில் என்றால் தியாகராஜர் கோயில்.
கோயிலைச் சுற்றி இருக்கும் நான்கு வீதிகளில் அசைந்து வரும் 
தேரின் அழகைக்காண ஆயிரங்கண்கள் இருந்தாலும் போதாது. அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும்.

தேர் இழுக்கும் போது பக்தர்கள் எழுப்பும் "ஆரூரா, தியாகராஜா!! "எனும் சரணகோசங்கள் விண்ணைப் பிளக்கும் கூடவே அதிர்வேட்டுகள் வேறு.


திருவாரூர் தேர் என்றும் எங்களின் பெருமை சார்ந்த ஒரு விசயம்.
அங்கே தேரோட்டம் என்றுமே மதம் கடந்த ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது.

எனது "பங்களா கொட்டா" புதினத்தில் (நாவல்) கூட திருவாரூர் 
மற்றும் தேரோட்டம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்திருக்கிறேன். வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.

5 comments:

  1. கூடுதலா படங்களை இணைச்சிருக்கலாமே சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அன்பரே.

      Delete
  2. ஆரூர் போற்றுதலுக்கு உரிய ஊர்

    ReplyDelete
    Replies
    1. பல விடயங்கள். மனுநீதிச் சோழன், மும்மூர்த்திகள் பிறந்த ஊர் என பல சொல்லாம்.

      வருகைக்கு நன்றி அன்பரே.

      Delete
  3. திருவாரூர் தேர் என்று சொல்லும்போதே சொல்பவரின் விரியும் கண்ணழகு,மனதில் பொங்கும் அன்பு,பக்தி, சொல்லில் அடக்க முடியாத அழகு ஆகியவற்றை நான் இளம் பிராயத்தில் கண்டிருக்கிறேன். அது முதல் அந்தக் கடலைக்காண ஆசைக்கொண்டேன்.இன்றும் அதைக்காணவில்லை.

    ReplyDelete