Friday, September 8, 2017

கற்க கசடற விற்க அதற்குத் தக -பாரதி தம்பி

மருத்துவக் கனவு நொறுங்கியதால் தற்கொலை செய்துகொண்ட
அனிதாவின் மரணம் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இன்றைய தமிழக கல்விச் சூழல் பற்றிய
உண்மையான, முழுமையான புரிதல் எல்லோருக்கும்
கண்டிப்பாக அவசியமாகிறது.


அது குறித்தான களநிலவரத்தைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல் ஊடகவியலாளர் பாரதி தம்பி எழுதிய  "கற்க கசடற விற்க அதற்குத் தக" (விகடன் வெளியீடு).

இன்றைய கல்விச் சூழல் குறித்து முழுமையாக எழுதப்பட்ட ஆகச்சிறந்த நூல்
இது எனத் தயங்காமல் கை காட்டமுடியும்.

ஏழ்மையைப் போராடி  வெல்ல கல்வி போன்றதொரு கூர்மையான ஆயுதம் வேறில்லை என உறுதியாக நம்பும் எனக்கு இந்த நூலை உயர்த்திப் பிடிப்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.

அரசு, தனியார், பொதுமக்கள், ஆசிரியர்கள்  எனும்
பாகுபாடு இன்றி   சமரசம் எதுவும் செய்து கொள்ளாமல்
பொறுப்புணர்ச்சியுடன் பாரதி இதை எழுதியிருக்கிறார்

ஆங்கிலத்தில் 360 கோணம் எனச் சொல்லப்படும் முழுமையான
பார்வையில்  இன்றைய கல்விச் சூழல் பற்றி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்திருக்கிறார். அபாரம்.  

நலிவடைந்து வரும் அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை, 
இது குறித்து மத்திய,மாநில அரசுகளின் தொடர்ந்த கள்ள மெளனம். தமிழக மாணவர்களின் பின்புலம், ஆசிரியர்களின் மனநிலை, இன்றைய பாடத்திட்டம், தாய்மொழி வழிக்கல்வி, தனியார் மயம், அரசுத் துறையின் மெத்தனப்போக்கு ,அரசுப் பள்ளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் என எல்லா விசயங்களையும் குறுக்கு வெட்டாக அதே நேரத்தில் சுவாரசியமாக விசயத்தை எடுத்து வைக்கிறார்.

தமிழில் தகுந்த தரவுகளைச் சேகரித்து, களப்பணி செய்து ஆங்கிலத்தில் எழுதுவது போல் ஈடுபாட்டுடன் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் இந்த நூலை வாசித்துவிட்டு பேசலாம்.

மத்திய, மாநில ஏன் உலக அளவில் கல்வி குறித்தான பல
புள்ளிவிவரங்கள், தரவுகளை முன்னிறுத்தி கட்டுரைகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். எடுத்துக்காட்டாக,  சென்னை போன்ற மாநகரங்களின் இதயப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருவதற்கும் அதன் பின்புலத்திலான தனியார் ரியல் எஸ்டேட் எனும் வியாபாரத்தை உடைத்திருக்கிறார்.

அதே சமயத்தில், மூலைக்கு மூலை தனியார் பள்ளிகள்  என கல்வி
வியாபராமான இன்றைய சூழலில் அரசுப் பொதுப்பள்ளிகள் மட்டுமே நம் கல்வி உரிமையின் அடையாளங்களாக நிற்கின்றன எனச் சொல்லும் ஆசிரியர் மிளிரும் அரசுப் பள்ளிகள் சிலவற்றையும்
அடையாளம் காட்டியிருக்கிறார்.

நமது இன்றைய உடனடித் தேவை-  கல்விக் கொள்கை, பாடத்திட்டம், தேர்வுமுறை, நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்த ஒரு திறந்த உரையாடல் என்பதை  பட்டவர்தனமாகச் சொல்லும் நூல்.
அதை நாம் செய்வோமா ? என்பதே நமக்கு முன்னால் உள்ள கேள்வி.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து தமிழ்ச்சமூகத்தின் அடுத்தத்
தலைமுறை குறித்து கொஞ்சமெனும் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய நூல்.

நூல்-கற்க கசடற விற்க அதற்குத் தக
ஆசிரியர்- பாரதி தம்பி
வெளியீடு- விகடன்
வாங்க- http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%21
விலை- 145
பக்கங்கள்-248

7 comments:

  1. வாசித்திருக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  2. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது,
    எல்லா வயதினரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்,

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். வருகைக்கு நன்றி நண்பரே!!

      Delete
  3. வணக்கம். நான் பாரதி தம்பி. தங்கள் வாழ்த்துக்கும், நூல் அறிமுகத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  4. தேவையான நேரத்தில் தேவையான
    புத்தகம் .

    ReplyDelete