Tuesday, October 10, 2017

சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-2

' இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஸ்மோக்கி மலை' என்றவுடனே கண்டிப்பாக டிரக்கிங் செய்வோம்  (மலை ஏறவேண்டும் )  என உடன்வந்திருந்த ஐந்து நண்பர்களையும் விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போயிருந்தேன்.

மலையெல்லாம்  நம்மால ஏற முடியாது எனத் தயங்கியவர்களை,
 'வருசத்துல 365 நாள்ல, ஒரு நாளையாவது இயற்கையோட செலவு பண்ணுங்களேப்பா ' என்றெல்லாம் அறிவுரை செய்ய வேண்டியிருந்தது.  கூடவே, 'பாதி வழியில் முடியலனா ஒன்னும் பிரச்சனையில்லை. அப்படியே திரும்பிடலாம் ' என நம்பிக்கை தந்ததால் ஒத்துக்கொண்டார்கள்.

மலையில் இயற்கையாக வழிந்தோடிக்கொண்டிருக்கும் ஒர் அருவியை டிரக்கிங் செய்து பார்த்துவிட்டுத் திரும்புவது எங்கள் நோக்கமாக இருந்தது. நாங்கள் தேர்ந்தேடுத்திருந்த மலை தரைமட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரம். போகவர மொத்தமாக  6 மைல்கள். இப்படி அந்த  மலையைப் பற்றி தேவையான அளவு தகவல்களைத் திரட்டியிருந்ததால் நான் மனதளவில் தயாராகவே இருந்தேன். ஆனாலும், சமமான பகுதியில் நடப்பதைவிட மலைப்பகுதியில் நடப்பது சற்று கடினம் என்ற உண்மை எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.

ஒருவழியாக ஆளுக்கொரு  பிரட் சன்விட்ச், தண்ணீர் ,  எனர்ஜி டிரிங்க் பாட்டில்கள் சகிதமாக முதுகில் ஆளுக்கொரு பையுடன் களம் காணகிளம்பிவிட்டோம்.

போகும் வழியெங்கும் கரடுமுரடான ஒத்தையடிப் பாதை, இரண்டு பக்கமும் அடர்ந்தக் காட்டில் நெடிந்து வளர்ந்த காட்டு மரங்கள் என ஆரம்பத்தில் உற்சாகமாகதான் போய்கொண்டிருந்தது.

ஆனால், ஒரு மைல் முழுதாகக் கடக்கும் முன்னரே 'வேல் வேல்' என உற்சாகமாகக் கிளம்பியவர்கள் கொஞ்சம் சுணங்கினார்கள்.
காரணம்.  நாங்கள் கிளம்பிய நேரம் நல்ல மதியம், சூரியன்
வேறு மரங்களின் வழி ஊடுருவி எங்களை இம்சித்துக்
கொண்டிருந்தான். கூடவே ஏற்ற இறக்கங்களுடனான பாதை. சிலருக்கு உயரத்தால் காதுகள்வேறு அடைத்தது போலிருந்தது. 

ஆக்ஸிஜன் குறைந்ததால் (?!) லேசாக மூச்சிரைப்பு வேறு. தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்த செல்போன்களும்  தன் பங்குக்கு ஊமையாகியிருந்தன. இப்படித் தயங்கி நின்ற எங்களை ஒர் அமெரிக்க குடும்பம் வேகமாகக் கடந்து சென்றது. அதில் ஒர் இளம்பெண் பனிச்சறுக்குச் செல்லும் ஆயத்தத்துடன் இரண்டு குச்சிகளை வைத்திருந்தாள். நான் உடனே அவர்களைக் கைகாட்டி  ' அவங்க போறாங்க, ஒய்
நாட் வீ,  லெட்ஸ் பாலோ தேம் ...  ' என்றெல்லாம் உற்சாகப் படுத்தவேண்டியிருந்தது. கூடவே, மலை ஏறும்போது நாம் கவனிக்க வேண்டிய இன்னோரு நுட்பத்தையும் மக்களுக்குச்  சொன்னேன்.

அதாவது,  கற்களின் மேல் நடந்து செல்லும்போது கால்களை அகலமாக எட்டி   வைத்து அந்த இடத்தை வேகமாகக் கடக்க முயற்சி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் "குறைந்த விலை- நிறைந்த தரம்" எனும் திநகர் கடைகளின் விளம்பரம் போல," குறைந்த அடிகள்- அதிக தூரம்".  அதுபோல, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம் என்பதையும் சொன்னேன்.

அப்படியே பாதி தூரம் நடந்துவந்தவர்கள் இனி திரும்பி கீழேபோக வேண்டாம் என முடிவெடுத்து முன்னே
நடக்கத்தொடங்கினார்கள். ஏற முடியவில்லை எனில் பாதியில் திரும்பிவிடலாம் என அதுவரை மனத்துக்குள் நினைத்திருந்த நான் கூட வேறுவழியில்லாமல் அவர்களைத் தொடர வேண்டியதாயிற்று.

போகும் வழியில் ஒரிரு சிற்றோடைகளைக் கடந்து சென்றோம்.
ஆனால்,  வழியில் ஸ்மோக்கி மலையின் தனிச்சிறப்பான  "கிரிஸ்லீ கரடி"யை எதிர்பார்த்திருந்த நாங்கள் அங்கே ஒடிய ஒரு பாம்பை அலட்சியத்தோடுதான் கடந்துபோனோம்.

நடக்கையில் எதிரே வந்துகொண்டிருந்த ஒரிருவரிடம் மேலே அருவி இருப்பதை உறுதிபடுத்திக்கொண்டோம். மலையில் தவறான வழியில் நடப்பதைப்போலொரு முட்டாள்தனம் இருக்கமுடியுமா என்ன ?

பேச்சுவாக்கில் தமிழகக் காட்டுக்குள்  30 வருடங்கள் ராஜாங்கம் நடத்திய வீரப்பன் பற்றிய பேச்சு வந்தது. காட்டில்  எங்கேயோ ஒரு குருவி கத்துவதை வைத்து காட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கணித்துவிடும் அவனது அசாதரண திறமை. இரவு பகலெனப் பாராமல் போலீசுக்குப் பயந்து சரியாகத் தூங்க முடியாமல் ஜாகையை மாற்றிக்கொண்டு திரிந்தது. அவனது அரசியல் தொடர்புகள்,சந்தன மரம், யானை தந்தங்கள் எனப் பேசியபடியே வெகுதூரம் வந்துவிட்டதை  அங்கு அடித்த குளிர்காற்று காட்டிக்கொடுத்தது.

ஆமாம், அருவியை நெருங்க நெருங்கக் காற்றில்
சில்லெனும்  குளிர்ச்சியை உணர்ந்தோம், கூடவே தண்ணீர்
' ஹோ'வென விழும் சப்தம் எங்கள் களைப்பைப் போக்கியிருந்தது.

ஒருவழியாக அடர்த்தியான பசும் மரங்களுக்கு இடையே பெரும் பாறையிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த கிரோட்டோ அருவியை ( Grotto Falls) தரிசித்தோம்.  குதுக்காலத்தோடு வழிந்தோடிக் கொண்டிருந்த நீரை முகத்தில் அடித்துக் கொண்டோம். சில்லென்றிருந்தது. அதை
எதிர்பார்த்திருந்ததுபோல
அப்போது லேசாக மழை தூரத் தொடங்கியது.   'வாழ்க்கையில ஒருநாள் மழையில நனைஞ்சு பாக்கலாம்பா  ' எனும் குரல் கேட்டது.  வேறு வழி ?   அதன் குளுமையையும் சில நிமிடங்கள் சேர்த்து அனுபவித்தோம்.

மழை விட்டபின் அருவியோடு போட்டிபோட்டு நிழற்படங்களை எடுத்துபின் சான்விட்சைக் கலோரியாக மாற்றிவிட்டு இறங்கத் தொடங்கினோம்.

நினைத்தது போல மலைஏறும்போது இருந்த சிரமம் இறங்கும் போது
கண்டிப்பாக  இல்லை. ஆனால், அதிகக் கவனம் தேவைப்பட்டது. ஒற்றையடிப் பாதையிலிருந்த சறுக்கங்கள் ஆளை முன்னால் தள்ளும் வல்லமைக் கொண்டது. அங்குக் கிடைக்கும் மரக்கு
ச்சிகளை  ஊனுகுச்சியாகப் பயன்படுத்துவது உத்தமம்.

மலையிலிருந்து கீழே இறங்கியபோது மணிபார்த்தேன். சரியாக நான்கு மணிநேரமாகியிருந்தது.


உடல் உழைப்பைக் கோரும்
ஒரு சவாலை முறியடித்திருந்தோம்.  வரும் நாட்களில் நாங்களும் டிரக்கிங் செய்திருக்கிறோம். அதுவும் கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 4000 அடி, 6 மைல்கள் என எங்களால்
பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.

கீழே காரில் ஏறும் சமயத்தில், ' நமக்கு இன்னைக்கு ராத்திரி கைகால் வலி பின்னிடும். யாரும் ஒய்ஃப் கிட்ட சண்டை போட்டுறாதீங்கப்பா.   அவங்க தயவு நமக்கு வர்ர இரண்டு நாளைக்குத் தேவ.. ' என ஒரு குரல் கேட்டது.

அந்த அறிவார்த்தமான குரலுக்குச் சொந்தக்காரன் கண்டிப்பாக நானில்லை. ;)


சில படங்கள் இணையம். நன்றி - SmokyMountains.com

1 comment: