Tuesday, February 12, 2019

பத்து திருக்குறள்கள்

தமிழ்வகுப்பில் பிள்ளைகளுக்கு வழக்கமான பாடத்தோடு திருக்குறளைப் பயிற்றுவிக்கலாம் என முகநூலில் கடந்த ஆண்டு சில நண்பர்கள் ஆலோசனை சொல்லியிருந்தார்கள்.  அதன்படி நாங்களும் சோதனை முயற்சியாக இந்த ஆண்டு பாடத்தோடு பத்து திருக்குறளைக் கற்றுத்தருவது என முடிவு செய்தோம்.

பத்து திருக்குறள் என இலக்கு நிர்ணயித்து விட்டேன தவிர உண்மையில்
உள்ளுக்குள் யோசனையாகத்தான் இருந்தது. கடந்த ஆண்டு தமிழ் அடிப்படையைக் கற்றவர்கள் அதற்குள் திருக்குறளைப் படிக்க தயாராகியிருப்பாரகளா எனும் சந்தேகம் இருந்தது உண்மைதான். ஆனால், எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக பிள்ளைகள் திருக்குறளில் காட்டும் அசுரவேகம் என்னை ஆச்சர்யப்படவைக்கிறது.

பத்துவயதுக்குட்பட்ட இந்த அமெரிக்கப்பிள்ளைகளுக்கு முதலில்
ஒரெழுத்து, ஈரெழுத்து... பிறகு எளிய வாக்கியங்களை முடித்துவிட்டு திருக்குறளையும் அதன் ஆங்கில விளக்கத்தையும் தொடங்கினோம். அடுத்தடுத்து வந்த வகுப்புகளில் அவர்கள் திருக்குறளில் காட்டும் ஆர்வத்தில்
நான் திக்குமுக்காடி போயிருக்கிறேன். ஆண்டிற்கு பத்து எனும் இலக்கை மாதத்திற்கு பத்து என வைத்தாலும் கூட அசராமல் படிப்பார்கள் போல.  அந்த அளவுக்கு இரண்டாயிரம் ஆண்டு தமிழை அவர்கள் எளிதில் கிரகித்துக்கொண்டு அதை மனப்பாடமாகவும் திருத்தமாகவும் ஒப்பிப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

பெற்றோர்கள் தமிழர்களாக இருந்தாலும் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த இந்தப் பிள்ளைகளின் புழங்குமொழி ஆங்கிலம். இவர்களுக்கு வெளியே தமிழ் பேச வாய்ப்புகள் மிக மிகக்குறைவு. ஆனாலும் திருக்குறளையும்
அதன் பொருளையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருகிறார்கள்.

திருக்குறள் ஒருவிதத்தில் அவர்களின் உள்ளே புதைந்துகிடைக்கும் தமிழை  வெளிக்கொணர உதவுவதாக நினைக்கிறேன்.  குறளை மனப்பாடம் செய்து  ஒப்பிப்பது இயந்திரத்தனமானது எனும் ஒரு சிலரின் வாதங்களைத் தாண்டி அதன் பொருளையும் அவர்கள் கற்று தெரிந்துகொள்வது சிறப்பே. எந்தவிதமான அறவழி கோட்பாடுகளையோ சிந்தனைகளையோ பள்ளிகளில் முறையாக பயிற்றுவிக்காத மேற்குநாடுகளில் வாழும் இந்தச் சிறார்களுக்கு திருக்குறள் உண்மையில் ஒரு வரமே.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்”
என்பது போன்ற குறள்கள் ஊட்டும் தன்னம்பிக்கையை வேறு எந்த
இலக்கியம் இவர்களுக்கு தந்துவிடமுடியும் சொல்லுங்கள். உண்மையில் எந்தவிதமான குறுகிய எண்ணங்களுக்கும் இடம் தராமல், எவ்வகைச் சார்பும் இன்றி உயர்ந்த நோக்கில் வாழ்வியலைப் பேசும் புரட்சி நூல்
திருக்குறள். மாணவர்களுக்கு இந்த வயதில் மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

தாய் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து பல்லாயிரம் மைல்கள் கடல்கடந்து வாழ்ந்தாலும் புதிய தலைமுறையினரின் சிந்தனையில் ஐயன் வள்ளுவனின் ஈராயிரம் ஆண்டு ஞானத்தைக் கொண்டு சேர்க்கும் சிறு கருவியாக  இருப்பதில் கர்வப்படுகிறேன்.

திருக்குறள் யோசனையைச் சொன்ன அன்பர்களுக்கு நன்றி !

நன்றி- படங்கள் இணையம்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் பாஸ்கர். நமது குரு மரபில் மனனம்,பொருள் தெளிதல்,
    சிந்தித்தல். ஆதலால் முதலில் மனனம் தவறில்லை.

    ReplyDelete
    Replies
    1. மனனம்,பொருள் தெளிதல்,சிந்தித்தல் என படிப்படியாக தெளிந்த அறிவைப் பெறும் வழிமுறைகளைச் சொன்ன உங்களுக்கு நன்றி !

      Delete