Friday, February 1, 2019

ஊச்சு (The Fear) -அரவிந்த் சச்சிதானந்தம்

தமிழ் உரைநடையில் எழுத்தாளர் சுஜாதாவுக்கு என்றும் ஒரு முக்கிய இடமிருக்கிறது. ஆங்கில வெகுஜன எழுத்தை ஒட்டி தனக்கென ஒரு புதிய பாணியைக் கைகொண்டு  நாற்பதாண்டுகளுக்கு மேலாக தமிழில்
கதை,கட்டுரை,நாடகங்கள்,புதினங்கள் என வணிக எழுத்தில் கோலோச்சியவர்.

எளிய நடையில் சுருக்கமாக திரைக்கதை பாணியில் செல்லும் அவருடைய எழுத்து வசீகரமானது. நீதித்துறை, காவல், மருத்துவம், அறிவியல் என அந்தந்தத்துறை சார்ந்த சொல்லாடல்களை  தன் படைப்புகளின் வழியாக வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகம் செய்தவர்.  ஒரு கட்டத்தில்
எழுத்தில் சிறிதேனும் சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுவது தவிர்க்கஇயலாது எனும் நிலையை ஏற்படுத்திய ஆளுமை அவர்.

சமகால இளைஞர்களைக் கவரும் விதத்தில் இளமை துள்ளலோடு அமைந்த
சுஜாதாவின் நடையை ஒட்டி தமிழில் தொடர்ந்து கவனிக்கத்தகுந்த வகையில் எழுதிவருபவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் அரவிந்த் சச்சிதானந்தம். 2014ம் ஆண்டிற்கான உயிர்மையின் சுஜாதா விருது, 2017ம் ஆண்டில் அசோகமித்திரன் (பாரட்டுதலுக்குரிய சிறுகதை) விருது பெற்றவர்.

கடந்தவாரம் அவருடைய ஊச்சு எனும் குறும்புதினத்தை
(குறுநாவலை) வாசித்தேன். "ஊச்சு (The Fear)" எனும் தலைப்போடும் மர்மக்கதை எனும் மிரட்டலோடும் அமெசான் கிண்டிலில் கிடைக்கும் இந்த நூலை சில மணிநேரங்களில் விறுவிறுப்போடு வாசித்துவிட முடிகிறது.

ஆவணப் படம் எடுக்க மேல்பாறைக்கு பயணமாகும் நான்கு நண்பர்கள் நடுக்காட்டில் மர்மமாக மறைகிறார்கள்.
மாயமான அவர்களை மீட்டு அந்த மர்மத்தை விலக்க சென்னையில் இருந்து  அர்ஜூன் எனும் காவல்துறை அதிகாரி புறப்பட்டு வருகிறார். அவர் எப்படி சிக்கலான அந்தப் புதிரின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதே கதைகதையின் வித்தியாசமான தலைப்பான ஊச்சு மனிதனின் ஆழ்மனத்துக்குள் புதைந்துகிடக்கும் பய உணர்வைச் சொல்கிறது. 

மக்களின் மூடநம்பிக்கைகள் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரவர்கத்தின் அத்துமீறல்கள், அமானுஸ்யம் என மர்மக் கதைகளுக்கு உரிய எல்லா அம்சங்களையும் சரியான விகிதத்தில் கலந்து குழப்பமின்றி சரசரவென கதை நகர்கிறது. இப்படி கதை விறுவிறுப்பாக நகரவேண்டும் எனும் உந்துதலில் கதையின் மையக்கரு எனும் motive குறித்தான விவரங்களை இன்னமும் விரிவாக விலாவரியாக ஆசிரியருக்கு எழுத இயலாத சூழல் அமைந்ததாக நினைக்கிறேன்.

மற்றபடி சுஜாதாவின் நறுக் வசனங்களையும், பல பகடியான சொல்லாட்சிகளும் கதை முழுவதும் விரவிக் கிடக்கின்றன. கதையில் தமிழ் பேசமட்டும் தெரிந்த ஒரு வடநாட்டு காவல்அதிகாரி பேசுவதுபோல ஒர் இடம் 'தமிழ்நாட்டு கவர்மெண்ட் ஆபிசரெல்லாம் தமிழ்ல கையெழுத்து போடனும்னு சொல்றீங்க. ஆனா, உங்க பசங்க எல்லாம் படிச்சிட்டு வெளிநாட்டுக் காரனுக்கு வேலைபாக்குறான். இந்தியாவில, கவர்மெண்ட் வேலையில முக்கால்வாசி பேரு எங்கள மாதிரி வெளியூர்காரங்கதான் தெரியுமில்ல...' எனும் சுஜாதா டச் பல இடங்களில்  தெறிக்கிறது. அதுபோல 
போகிற போக்கில் 'இப்ப உங்க குரூப் எக்ஸாம் கூட வெளி ஸ்டேட் பசங்க எழுதலாம்னு சொல்லியாச்சி '  என உள்ளூர் அரசியலையும் சேர்த்து சொல்லிச் செல்வதை ரசிக்கமட்டுமே முடிகிறது. ஆனால், உண்மை சுடுகிறது. இதுவே எழுத்தின் வெற்றியும் கூட.


கூடவே வழக்கமான ஒரு துப்பறியும் கதையை முன்னும் பின்னுமாக  விறுவிறுப்போடு திரைக்கதைபோல சாமர்த்தியமாக நகர்த்தும் லாவகம் அரவிந்துக்கு அழகாக வந்திருக்கிறது. கதையில் எந்தவொரு எழுத்தும் தேவையில்லை எனச் சொல்லும் சுஜாதாவின் சொற்சிக்கனத்தை இம்மிபிசகாமல் பின்பற்றியிருக்கிறார். சுஜாதாவை வாசித்தவர்கள், மர்மக்கதை விரும்பிகள் ஊச்சு வை விரும்புவார்கள்.

இணையத்தில்-

https://www.amazon.in/%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-Oochchu-Tamil-Aravindh-Sachidanandam-ebook/dp/B07L7CLWJ3/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1549083521&sr=1-1&keywords=%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81

No comments:

Post a Comment