Monday, September 30, 2019

மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் (10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -7)

மதிய நிகழ்வில் மலேசிய முனைவர் சபாபதி அவர்களுடைய
மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான ஆய்வரங்கில் கலந்து கொண்டேன்.

அவருடைய ஆய்வின் தலைப்பு - "மலேசியத் தமிழர்களின் நாட்டுப்புறப் பாடல்கள்" - Dr. V. Sabapathy

நோக்கம்-    மலேசிய நாட்டுப்புறப் பாடல்களின் தோற்றம் அதன் பின்னணி ஊடாக மலேசிய மண்ணின் மணம், மக்கள் வாழ்வியலைப் பேசுவது.

நமது சமூகத்தில் பிறப்பில் இருந்து இறப்பு வரை  பாடல்களுக்கு குறிப்பிடத்தகுந்த இடம் இருந்திருக்கிறது.  குறிப்பாக  பாட்டாளிகள் எனும்
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களோடு இவைப் பின்னிப் பிணைந்தவை. அந்த வகையில் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்து  மலேசியக் காடுகளுக்கு கூலிகளாகச் சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க நேர்ந்தபோது தோன்றியப் பாடல்கள் மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

முனைவர் சபாபதி அந்தப் பாடல்களை ஆய்வு நோக்கில் பல கூறுகளில்  மிகச் சிறப்பாக அணுகினார். குறிப்பாக மலேசிய நாட்டுப்புற இலக்கியத்தை ஆய்வு நோக்கில் அணுகி பதிவு செய்ததில் விரிவுரையாளரும் முனைவருமான இரா.தண்டாயுதம் அவர்களுக்கு முக்கிய இடம் இருப்பதைப் பதிவு செய்தார். மலேசிய நாட்டுப்பாடல்களின் தந்தை என்று அழைக்கப்படும் இரா.தண்டாயுதம்  தமிழகத்தில் இருந்து சென்றவர். அவர்  மலேசியப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த காலகட்டத்தில் இடைவிடாது கள ஆய்வுகள் செய்து, தொகுத்து நாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்திருக்கிறார். அவர் 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவருடைய "மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள்" எனும் தொகுப்பு நூல் இந்தத் துறையில் ஓர் ஆவணம் எனக் குறிப்பிட்ட  நண்பர் சபாபதி தான் அவருடைய மாணவர்  என்பதிலும் பெருமிதம் கொண்டார்.

அதுபோல பல நாட்டுப் பாடல்களையும் அவை உருவான சூழல்களையும் விளக்கினார்.
மலேசியச் சூழலில் தனித்துவமாக உருவான இந்தப் பாடல்கள் அந்த எளிய மக்களின் அன்றைய பண்பாட்டு நிலைகள், பழக்கவழக்கங்கள்,
நம்பிக்கைகள், வாழ்வியல் தத்துவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறன.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமான இந்தப் பாடல்கள் மலேசிய மண்ணில் வறுமையின் பிடியில் சிக்கி இரவும் பகலும் அல்லலுற்ற அப்பாவி மக்களின் வாழ்வியலில் எழுந்தவை. அவை மலேசியத் தொழிலாளர்களின்
அல்லல்களைத் துயரங்களை அடுத்துவரும் தலைமுறைக்குச் சொல்லும் சோக சாட்சியங்களாக எழுந்து
நிற்கின்றன என்பதே உண்மை.

எனக்கு

நாட்டுப் பாடல்கள் எனும் வாய்மொழி இலக்கியம் மேல் என்றும் ஆர்வம் உண்டு.  அதுமட்டுமல்லாமல் மலேசியாவில் வாழ்ந்தவன் என்ற முறையில் மலேசிய தமிழர்கள் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் குறித்தும் நிறைய தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறேன். அந்தவகையில் இந்த நிகழ்வு நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்தது.

மாநாட்டில் அறிமுகமான மலேசிய நண்பர் சபாபதி அவர்களைத்  தனியாக சந்தித்து உரையாடும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. தமிழக இலக்கியச் சூழல்,
மலேசியத் தமிழர்கள் குறித்த பல விசயங்களைப் பேசினோம். என்னுடைய வனநாயகன் நாவலைப் பெற்றுக்கொண்டவர் கிடைத்த மிகக்  குறுகிய இடைவெளியில் வாசிக்கத் தொடங்கி பாராட்டினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த அன்பும், நன்றியும்.



No comments:

Post a Comment