Friday, February 28, 2020

வனநாயகன் குறித்து-14 (ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி)

வனநாயகன் நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்கள் தொடர்கின்றன..

"வனநாயகன் (மலேசிய நாட்கள்)"  குறித்து  ஃபிளாரிடா வாசகர் மருத்துவர் உதயகுமார் அவர்கள் முகநூலில்  எழுதியது.  நன்றி  உதயகுமார் !!

**************************
ஆரூர் பாஸ்கரின் “வனநாயகன்-மலேசிய நாட்கள்“ வாசித்து முடித்துவிட்டேன். ஓர் அருமையான நாவலை வாசித்து முடித்த திருப்தி இன்னமும் என் மனதில் வழிந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைவுகளோடு எனது வாசக அனுபவத்தைப் பகிர்கிறேன்.

மழையில் நனைந்த சாலை சற்று நேரத்தில் காய்ந்து மிகப் பிரகாசமாகத் துடைத்து எடுத்தது போல மாறிவிடும். அதுபோல, திரைக்கதை போல நகரும் ஆரூர் பாஸ்கரின் நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் புத்தம் புது காட்சிகளோடு மிக அழகாக நம் கண்முன்னால் விரிகிறது. 

எடுத்த உடனேயே இது ஒரு கம்பியூட்டர் யுகக் கதை, நிச்சயம் ஓயிட் காலர் கிரைம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பிறகு ஐடி-யும் வங்கிகளும் வருவதால் இது வர்த்தகக் கதையோ இல்லை இது காதல் கதையாககூட இருக்குமோ என்றெல்லாம் கூட மூளை ஆரம்பத்தில் விவாதிக்கிறது. பிறகு கதையோட்டம் நமக்குப் பிடிபடுகிறது. இப்படியெல்லாம் கூட நடக்குமா? இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் ? அதுவும் தன் சுய நலத்திற்காக ? என்பதை அறியும் போது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அதுதான் உண்மை. இப்போதைய நிலைமை. கதையினூடே மலேசியாவில் கை நிறையச் சம்பாதிக்கும் தமிழ் நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எப்படிப் போய்க் கொண்டிருந்தது என்பதையும் ஆசிரியர் அழகாகச் சொல்லிவிடுகிறார். அதுபோல இந்திய வம்சாவளியில் பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே மலேசியா வந்துவிட்ட சீக்கியர்களின் சந்ததியரான டிரைவர் சிங் மறக்கமுடியாத மனிதராக இருக்கிறார்.

வனநாயகனில் நாயகனாக சுதா மட்டும் வரவில்லை நடு நடுவே (எழுத்தாளர்) சுஜாதாவும் வருகிறார். நம் மூளையைத் திறந்து கதையை உள்ளே போடுவதிலும் சுஜாதா மாதிரிதான் ஆரூர் பாஸ்கர் வல்லவராக இருக்கிறார். அதோடு அந்தக்

காலத்திலேயே மலேசியா போன தமிழர்கள் பலர் இன்னமும் பழமை மாறாமல் திண்ணையில் அமர்ந்து பெரிய பைண்டிங் செய்த அக்கவுண்ட் புத்தகங்களைச் சிறு மேஜைகளின்மேல் வைத்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்கிறார்கள், லாபத்தைப் பற்றி கவலைப் படாமல் மலிவான விலையில் சுவையான நல்ல இட்லி சாம்பார் விற்கிறார்கள் என்பது போன்ற பல சுவையான விவரங்களை நான் அறிந்துகொண்டேன்.

அதுபோல, நல்ல கதை வாசித்த அனுபவத்தோடு மலேசியாவில் பார்க்கவேண்டிய இடங்களை ஆர அமர சுற்றிப்பார்த்த அனுபவமும் நாவலை வாசித்த போது கிடைத்தது. மலேசியா போக எண்ணுபவர்கள், அங்கு என்ன என்ன பார்க்கவேண்டும் என அறிய விரும்புபவர்கள் இந்த நாவலை ஒரு வழிகாட்டியாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக வனநாயகனாக சித்தரிக்கப்படும் ஒராங்குட்டான் குரங்கின் பிறப்பிடமும் அதன் வாழ்விடங்களும் தற்போது எப்படியெல்லாம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு புரியுமாறு கதையோடு பிணைந்து வழங்கியதும் சிறப்பு.
கதையில் மலேசியத் தமிழ்ப்பெணணாக அறிமுகமாகும் பத்மா வாசிப்பவர்களின் மனதைவிட்டு இறங்க மறுக்கிறாள். அதற்கு அவளுடைய குடும்பச் சூழல் மட்டுமல்ல, அவள் சுதாவிடம் காட்டும் அன்பும் அக்கறையும் நம்மை அவளுக்காக யாரிடமும் வாதாடச் சொல்கிறது. நாவலின் முடிவு மிகவும் திருப்திகரமாக இருந்தது.

மிக அருமையான கதையமைப்பு, நெஞ்சைத்தொடும் பாத்திரங்கள் என வனநாயகனில் ஆரூர் பாஸ்கர் வாசகர்களுக்கு ஓர் அறுஞ்சுவை விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தின் சுவை என்றும் நாவிலும் மனதிலும் தொக்கி நிற்கும் திருப்தியோடு நாவலை வாசித்து முடித்துவிட்டு கீழே வைத்தேன். வாழ்த்துகள் !

அன்புடன்,
உதயகுமார்


புத்தகத்தை இணையத்தில் (கிழக்கு பதிப்பகம்) வாங்க:

அமெசான் கிண்டில் வடிவில் வாங்க:

4 comments: