Sunday, February 23, 2020

உலக கவனம் பெற்ற ஓராங் ஊத்தான் புகைப்படம்

ஓராங் ஊத்தான்/ஒராங்குட்டான் (Orangutan)  குரங்கு ஒருவனுக்கு கைகொடுப்பதுபோல் உள்ள இந்தப் புகைப்படம் உலக கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்  "போர்னியோ" தீவு பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் நடுவில் இருக்கும் "போர்னியோ" ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவு.  எனது 'வனநாயகன் -மலேசிய
நாட்கள்' வாசித்தவர்களுக்கு உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோ பற்றி தெரிந்திருக்கும்.

மிகப் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட இந்தத்தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் இருக்கிறது.  மேற்சொன்ன மூன்று நாடுகளும் போட்டிபோட்டு இந்தத் தீவின் இயற்கை வளத்தைப் பல்லாண்டுகளாக சீரழித்துவருகின்றன. அதனால் அந்த தீவில் உள்ள அரிய வகை மரங்கள், செடிகொடிகள், விலங்குகள், பறவைகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, போர்னியாவின் தனிச்சிறப்பான  ஒராங்குட்டான் குரங்குகள். அவை அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வனநாயன் நாவலின் அட்டைப்பட நாயகனும்  ஒரு ஒராங்குட்டான் குரங்கே.

மனிதர்களுக்கு அடுத்து அறிவு கொண்ட இனமாக கருதப்படும் இந்த ஓரங்குட்டான் இனக் குரங்குகள் விவசாயத்திற்கு இடையூறு செய்வதாக,  மாமிசத்திற்காக, அதனுடைய அழகான கறுப்பு குட்டிகளுக்காக, விபச்சாரத்திற்காக எனப் பல்வேறு காரணங்களுக்காக அங்கிருக்கும் மனிதர்களால் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்படுகின்றன. இப்படி மனித மிருகங்களால் வேட்டையாடப்படுவதால் தனது வாழ்விடங்கள் சூரையாடப்படுவதால் கடந்த மூன்று தலைமுறைகளுக்குள் மட்டும் இந்தக் குரங்குகளின் எண்ணிக்கை 80% க்கும் அதிகமாக குறைந்திருக்கிறது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஓரங்குட்டான் குரங்கு ஒன்று சமீபத்தில் காட்டில் வந்து சேற்றில் சிக்கிய மனிதன் ஒருவனுக்குக் கை கொடுத்து உதவுவது போலோரு புகைப்படம் வெளியாகி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்தமாத தொடக்கத்தில், ஏதோ காரணங்களுக்காக காட்டுக்குள் வந்த ஒரு நபர் அங்கிருந்த சேற்றில் வசமாக சிக்கிக்கொண்டாராம்.  அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவருடைய நிலையைப் பார்த்த  ஒரு ஓரங்குட்டான் எங்கிருந்தோ ஓடி வந்து தனது கைகளை நீட்டி அவர் கரைக்கு வர உதவியிருக்கிறது.

இப்படிச் சேற்றில் சிக்கிய  மனிதன் அருவாள் போலோரு ஆயுதத்தைக் கையில் வைத்து  இருந்தாலும் அந்த மனிதனுக்கு ஒரு ஆபத்து எனும் போது ஓடிப் போய் உதவிக்கரம் நீட்டிய அந்தக் குரங்கின் செயலை பலர் இணையத்தில் வியந்து பாராட்டுகிறார்கள். சிலர்  'இது கண்களில் கண்ணீரை வரவைக்கும் காட்சி'.  'மனிதன் மறந்த கருணையை இன்னமும்  குரங்குகள் நினைவில் வைத்திருக்கின்றன'. 'விலங்குகள் மனிதர்களைப் போலவும் மனிதர்கள்  குரங்குகள் போலவும் நடந்து கொள்கிறோம்' என்றெல்லாம் சிலாகிக்கிறார்கள். நல்லவேளை, இதெல்லாம் அந்தக் குரங்கிற்கு எதுவும் புரியப் போவதுமில்லை. புரிந்தாலும் அது நம்மைப்போல  அதைத் தலையில் ஏற்றிக்கொள்ளப் போவதுமில்லை.

இதுபோன்ற விலங்குகள் நம்மிடம் யாசித்து கேட்பதெல்லாம் குறைந்த பட்சம் எங்களையும் இந்த பூமியில் வாழவிடுங்களேன் என்பதுதான். இந்த நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையையே அடக்கி தெருவில்  பிச்சை எடுக்க வைத்து பிழைக்கும் மனிதனுக்கு இந்தக் குரங்குகளின் குரல் கேட்கவா போகிறது ?


2 comments: