Wednesday, February 26, 2020

தமிழ்ச்சரம் - ஓர் எதிர்நீச்சல்

பல ஆண்டுகளாக தமிழில் ஒரு வலைத்திரட்டி  இருந்தது. பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தத் தளம்  செயல்பட்டுக் கொண்டிருந்தவரையில் பெரிய பிரச்சனைகள் இல்லை , அனைவரும் தமிழ் வலைத்தளங்களை வாசிப்பதற்கு என இணையத்தில் ஓர் இடம் இருந்தது. அது கடந்த சில மாதங்களுக்கு முன் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்ட பின், வலைத்தள எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே இருந்த ஒரு நல்ல தொடர்பு அறுபட்டு விட்டது என்று கூட சொல்லாம். அதனால், பல வலைத்தளங்களின் வருகைகள் (ஹிட்ஸ்) வெகுவாகக் குறைந்தன. உற்சாகம் இழந்த சிலர் வலைதளங்களில் இருந்து வெளியேறியதும் கூட  நடந்தது.

அந்த நிலையில் தான் நியூயார்க் நண்பர் ஆல்பி முதன் முதலாக என்னைத் தொடர்புகொண்டு தமிழில் நல்ல வலைத்திரட்டிக்கான தேவையை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார் (நன்றி நண்பரே). பிறகு தமிழ்நாடு, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் என்னிடம் இதுபற்றி பேசினார்கள். அதன் தொடர்ச்சியாகவே, தமிழில் வலைத்திரட்டி ஒன்றை நிறுவும் பணியைக் கையில் எடுத்தேன். இணையதளம் என்றதும் அது ஏதோ காமா சோமா என்றில்லாமல் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் சிறந்ததாக வரவேண்டும் எனத் திட்டமிட்டு ஒத்த அலைவரிசை உள்ள நண்பர்களைத் தேடிப்பிடித்தேன். அப்படிக் கிடைத்தவர்தான் ராஜா.

கடந்த 6 மாதங்களாக நடந்து முடிந்த இந்த வேலையில் பல சவால்கள்.  ஆமாம்,  ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்குஅனுபவங்கள்.  பணத்தை விடுங்கள்.அது பெரிய பிரச்சனை இல்லை. எத்தனை இடர்பாடுகள். வேலைசெய்த ஆட்கள் !? மனிதர்கள் எத்தனை விதமாக இருக்கிறார்கள் ?.  நியூஜெர்சியில் இருந்து தளவடிவமைப்புச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தவர் அலுவலக நெருக்கடி காரணமாக திடீரென பாதியில் விலகிவிட்டார். பிறகு, வேறு ஆட்களைத் தேட வேண்டியதாகி விட்டது.  சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரையில் இருந்து  வெப்-டிசைனர் என நண்பரால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நபர் 12  இமெயில்களில் முன்னும் பின்னுமாக கருத்துப்பரிமாற்றம் செய்து கொண்டார். இறுதியாக, தமிழ் ஃபான்ட் எழுதி பழக்கமில்லை எனச் சொன்ன அந்த  நபர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போன் செய்தாலும் எடுப்பதில்லை. அத்தோடு தொடர்பு நின்று விட்டது.

ஒன்று மட்டும் உறுதி.  நம்மூர் ஆட்களில் பலருக்கு இதுபோல முடியாது ஒத்துவராது, ஆர்வமில்லை ( How to say No) போன்ற விசயங்களைச் சொல்ல கற்றுத்தர வேண்டும் போலிருக்கிறது. பிறகு, ஒருவழியாக அந்த வேலையைக் கல்கத்தாவில் இருந்து தொடர்புகொண்ட ஒரு பெங்காலி பெண்னை வைத்து செய்து முடித்தோம்.

நான் தொழில் நுட்பத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். எத்தனையோ கோடி மதிப்புமுள்ள பணிகளை ஆட்களை வைத்து கச்சிதமாக செய்து முடித்திருக்கிறேன். ஆனால், ஒரே வித்தியாசம்
சொல்லி வைத்தாற் போல அவை எல்லாம்  அலுவலகத்திற்காக செய்த புராஜெக்ட்கள்.  அனைவரும் முழுநேர பணியாளர்கள்.

சொந்த வேலை, பகுதிநேர ஊதியம் என்று வரும்போது !? அட, இப்படியும் மனிதர்களா என ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்கள். நல்லவேளையாக எனது இந்தப் பயணத்தில் நண்பர் ராஜா (நீச்சல்காரன்)  கடைசிவரைத் துணையிருந்தார். தளத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அவர்தான் பார்த்துக்கொண்டார். இணையதள பயன்பாடுகளில் நல்ல அனுபவம் உள்ளவர். தமிழில் வாணி எனும் பிழைதிருத்தியைக் கூட சொந்தமாக எழுதியிருக்கிறார்.  (அதற்காக, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய "கணிமை விருது" பெற்றவர்). 

இதோ, பல சவால்களைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு கடந்த வாரம் அறிமுகமான தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com)  நல்ல வரவேற்ப்பைப் பெற்றிருக்கிறது. மகிழ்ச்சி.
இதுவரைத் தளத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி. அமெரிக்காவில் இருந்து அர்ஜூன் தொழில்நுட்ப உதவி செய்தார். சென்னை நண்பர் அரவிந்த் விளம்பர பேனர் வடிவமைப்பில் உதவினார். அதுபோல, தொடக்கத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தருவது, டெஸ்டிங் எனும் சோதனை ஒட்டத்தில் பங்கெடுப்பது என உலகின் பல மூலைகளில் இருந்து ஆர்வத்தோடு பங்கெடுத்த
நெருங்கிய நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து அன்பர்கள் 'திண்டுக்கல்'- தனபாலன், சரவணன் போன்றவர்களுக்கு நன்றி !

கட்டணமில்லாத சேவையாக அறிமுகமாகி இருக்கும் இந்தத் தளம் உலகத்தமிழர்களின் தரமான பதிவுகள், பின்னூட்டங்கள், மறுமொழிகள், ஆழமான விவாதங்கள் வழியாக  தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக பரிமாறும் கருத்துமேடையாக இருக்கும், இருக்கவேண்டும் என மனப்பூர்வமாக நம்புகிறேன்.

                                                   ****************

No comments:

Post a Comment