Sunday, May 3, 2020

கலாதீபம் லொட்ஜ் -வாசு முருகவேல்

ஈழவிடுதலைப் போர் ? - சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டங்களில் நடந்த அந்த ஆயுதப்போரில் பல இலட்சம் பேர் மாண்டார்கள். அதன் காரணமாக பல தமிழர்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா போன்ற இடங்களுக்கு புலம் பெயர்ந்தார்கள்.  இப்படித்தான் உலகம் அந்த வரலாற்றை இரு வரிகளில் சுருக்கமாக பதிவுசெய்துவிட்டு நகர்ந்து செல்லும்.

ஆனால், அதற்கு பின்னால் இருக்கும்  அவலங்களை, இரத்தமும் சதையுமாக வாழ்ந்த, வாழும் மனிதர்களை அவர்களுடைய உணர்வுகளை இலக்கியப்படைப்புகள் தான் சுமந்து நிற்க்கப் போகின்றன. அந்தப் படைப்புகள் மட்டுமே காலம் கடந்து மனிதர்களின் வலிகளைச் சுமந்து நிற்க்கும் கடைசி ஆவணமாக இருக்கப்போகின்றன.

அந்த வகையில் போரில் மடிந்த ,  வலியோடு புலம் பெயர்ந்த பல இலட்சம் மனிதர்களின் வாழ்வை ஈழ எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில்
தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார்கள். அந்தப் படைப்புகளைத் தொடர்ச்சியாக வாசித்துவரும் நான் சமீபத்தில்  வாசு முருகவேல்
எழுதிய "கலாதீபம் லொட்ஜ்" வாசித்தேன். வாசு முருகவேல் ஈழத்தின்
யாழ்ப்பாணத்தின் நயினா தீவில் பிறந்து தற்போது தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்.

கலாதீபம் லொட்ஜ் - தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்து வேலைக்காக இடம்பெயர்ந்து சென்று கொழும்பு-வில் உதிரியாக வாழும் தமிழர்களின் வாழ்வை ஒரு காலகட்டத்தில் நிறுத்திப் பார்க்கும் ஒரு படைப்பு.

ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பின்புலத்தோடு பிழைப்புக்காக கொழும்பு வந்திருந்தாலும் தமிழர்கள் எனும் ஒற்றைப்
புள்ளியில் இணையும் அவர்களின் வாழ்வை
நாவலில் அழகாக பதிவுசெய்திருக்கிறார் வாசு.  கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் லொட்ஜ் என்பதே கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒருவித குறியீடு என்பது புரிய வரும்.

நாவல் பல்வேறு உதிரி மனிதர்களின் வாழ்வைப் பதிவுசெய்வதாக இருந்தாலும் சந்திரன் எனும் சிறுவனின் கதை முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது. அல்லது எனது வாசிப்பனுவபத்தில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. புலம் பெயர் நோக்கில் சொந்த மண்ணை விட்டுப் பிரிந்து கொழும்புவுக்கு தற்காலிகமாக அப்பா, அக்காவுடன் கலாதீபம் லாட்ஜ்க்கு வந்துசேரும் சந்திரனின் பார்வையில் விரியும் கதை வாசிப்பவர்களின் மனத்தைத் தொடும் வகையில் இருக்கிறது. அது எழுத்தாளரின் சொந்த அனுபவமாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக, சொந்த மண்னை விட்டுப் பிரியும் வாதையை சந்திரனின் அப்பா விசாகர் எனும் பெரியவரின் யதார்த்த பார்வையில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. இதுவரை நான் வாசித்த ஈழப் படைப்புகளில் அந்த வலி நுணுக்கமாக இதில் எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். அதுபோல, படைப்பில் அங்கங்கே தென்படும் மெல்லிய நகைச்சுவையோடு ஈழ-தமிழ் மக்களின் வாழ்வியல் எதார்த்தங்களும் இயல்பாக பதிவாகியிருக்கிறது.

"ஓரிடத்தில் பிரச்சனை வந்தால் நாம் போக வேண்டிய இடத்துக்கான சமிக்ஞை அது. அதன் தேவைக்கு நகர்வது என்பதுதான் இயல்பான வாழ்வு. தைரியம் மட்டுமே கடைசிவரைச் சுமக்க வேண்டியது. கவலைகள் சுமக்க வேண்டியவை அல்ல" எனும் வரிகள் கொழும்பன்ரியின் வாயிலாக சொல்லும் இடத்தில் படைப்பு அதன் உச்சத்தை அடைவதாக நினைக்கிறேன்.

இந்தப் படைப்பின் ஊடாக வரும் ஞானப்பழம்,  ஏ.ஆர் ரகுமானின் இந்தியன் எனும் திரைப்படச் சொல்லாடல்களின் வழியாக இதன் காலகட்டத்தை (90-களின் பிற்பகுதி) நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதுபோல, படைப்பில் வரும் ஈழத் தமிழ் சொற்களையும், வட்டார வழக்குகளையும் தனியே குறிப்பிட்டு விளக்கியிருப்பது சிறப்பு. அது வாசிப்பவர்களுக்கு உதவிகரமானது.  அதுபோல, கதையோட்டத்தில் வரும் சில முக்கிய இடங்கள், அமைப்புகளின் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தால் கூகுளில் தேட உதவியாக இருந்திருக்கும்.


பொதுவாக நான் படைப்பை வாசித்தபின்பே முன்னுரையை வாசிக்கும் பழக்கம் உடையவன் அந்த வகையில் "என் ஒரு சொல்லுக்கும் அச்சம் கிடையாது" என்ற வாசுவின் முன்னுரையை வாசித்தபோது  தமிழ்
எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தை நிலைநிறுத்திக் கொள்வார் எனும் நம்பிக்கையைத் தருகிறார்.

நூலின் பின்னட்டையில் எழுத்தாளர் அகரமுதல்வன் குறிப்பிட்டிருப்பது போல  ஈழஇலக்கியத்தில் புதிய வருகையாகத் தன்னை இந்த நாவலின் மூலம்  வாசு நிலை நிறுத்தியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.

ஈழப்படைப்புகளை விரும்பி வாசிப்பவர்கள்
தவறவிடக்கூடாத ஒரு படைப்பு கலாதீபம் லொட்ஜ்.


நூல்: கலாதீபம் லொட்ஜ் (2019)
ஆசிரியர்: வாசு முருகவேல்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ₹180
ISBN: 9788184939477

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

No comments:

Post a Comment