Tuesday, May 19, 2020

இர்மா- அந்த ஆறு நாட்கள் (அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின்...)

"இர்மா- (அந்த ஆறு நாட்கள்)நாவல் குறித்து வரும் வாசகர் கடிதங்களும் வாசக அனுபவங்களும் தொடர்கின்றன.
சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் நண்பர் சீனிவாஸ் பாலகிருஷ்ணன் இர்மா குறித்து முகநூலில்  எழுதியது. நன்றி   சீனிவாஸ் !!

************
...இர்மாவின் பொழுது ப்ளோரிடா மாகாண சுற்றுப்பயணத்தில் இருந்த என்னாலேயே இது குறித்து மிகப்பெரிய கதைகளை எழுத முடியும் என்றால் அங்கேயே பலவருடங்களாக வசித்துவரும் ஆரூர் பாஸ்கரைப் பற்றிக் கேட்கவா வேண்டும். மேலும் அங்கு வாழ்ந்துவரும் அத்தனை மக்களையும் இர்மா கரையைக் கடக்கும் முன்னரே மனதளவில் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆரூர் பாஸ்கர் குறிப்பிடும் இந்தத் தகவலின் மூலம் இர்மாவின் வலுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதைக் கூறுவதன் காரணம் –சூறாவளி என்பது அந்த நிலத்தில் அவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதைப் போல. பழகிய ஒன்றைக் கண்டு யாரேனும் மிரள்வார்களா? ஒருவேளை பழகிய ஒன்று முன்னெப்போதையும் விட வெறிபிடித்துப் பேய்வேகத்தில் வந்தால்?
இந்த நாவலை அவர் மிகச் சிறப்பாக எழுதுவதற்கான மற்றுமொரு காரணம் அவர் சார்ந்த பணிச்சூழல். ஒட்டுமொத்த ப்ளோரிடா மாகாணத்தின் மின்பகிர்மான நிறுவனத்தில் பணிபுரியும் அவர், தன் நாவலின் ஒரு பகுதியாக மனிதனின் மிக அத்தியாவசியத் தேவையான மின்கட்டுமானம் – இது போன்ற இடர் காலங்களில் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது என்பதையும் சேர்த்தே குறிப்பிடுகிறார்.

அந்த ஆறா நாட்கள் என்று குறிப்பிடுவது, தன் வாழ்வில் மிக நேரடியாக நுழைந்து மனதளவில் மிகவும் நிலைகுலையச் செய்த இர்மா என்ற பெரும் சூறாவளியையும் அதனை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்ற நம்பிக்கைக் கதையையும்தான்.
தமிழ் எழுத்தாளர் எழுதிய அமெரிக்கக் கதை என்றளவிலும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் இந்த வகைமையில் நான் வாசிக்கும் இரண்டாவது நாவல் இது. அ.மி எழுதிய ஒற்றன் வாசித்திருக்கிறேன் அதில் தன்னை ஒரு பயணியாகப் பொறுத்தியிருப்பார் அ.மி. இதில் ஆரூர் பாஸ்கர் தன்னை ஒரு பேரழிவின் நேரடி சாட்சியாகப் பொருத்தி இருக்கிறார்.
பரணி என்கிற மைய கதாபாத்திரம் தன் மனைவியிடம் ஹரிகேன் இர்மா குறித்து பேசுவதைப் போல் ஒரு பகுதி வரும் “பொண்ணுங்க பேர் வச்சா ஹரிகேன் இன்னும் பயங்கரமா நாசம் செய்யுமாம்”. மனிதர்களிடம் சிக்கிக்கொண்ட இந்த ஹரிகேனை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 

நாவலின் ஊடாக அமெரிக்க வாழ்க்கையும் பதிவு செய்துகொண்டே வருகிறார் ஆரூர் பாஸ்கர். அவற்றை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசி இருக்கலாமோ என்று தோன்றினாலும், ஒருவேளை நான் அமெரிக்கா வராமல் இருந்திருந்தால் அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
நாவலின் இடையே அவர் சந்தித்த மற்றுமொரு ஹரிஹேன் பற்றிக் குறிப்பிடும் இடம் அட்டகாசமாக அமைந்துள்ளது. நாவலின் பெருங்குறை முன்பாதி என்றால் பெரும்பலம் பின்பாதி. நாவலைக் கட்டமைக்கும் ஆரம்ப இடங்களில் சொதப்பிவிட்டாற்போல் தோன்றுகிறது. அதற்குக் காரணம் வாக்கியக் கட்டமைப்பு. அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்திலும் சூறாவளி குறித்த முன்குறிப்புகளை சேர்த்தது நல்ல யுக்தி. மேலும் எத்தியோப்பிய உணவகம் ஒன்றில் அவர் சந்திக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர் உடனான உரையாடலும், அந்த மனிதர் கூறும் கறுப்பர்கள் கதையும் அமெரிக்க வரலாற்றின் துன்பப் பக்கங்களை நினைவு கூற்பவை.
எழுத்து பிரச்சுரத்தின் புத்தக வடிவமைப்பு அட்டகாசமாக இருக்கிறது. லைட் வெயிட். கையில் காற்றைச் சுமப்பதைப் போல் இருக்கிறது. பாண்ட் சைஸ் சிறியதாக இருப்பது ஒரு குறை என்றாலும் அதுவும் வாசிக்க வாசிக்கப் பழகிவிட்டது.
அந்த ஆறா நாட்கள் – அமெரிக்கா எனும் பெருந்தேசத்தின் வேறொரு பக்கத்தினை நம்மோடு உரையாடுகிறது. நம்முடைய மொழியில்.



புத்தகத்தை இணையத்தில் (எழுத்து பிரசுரம்) வாங்க:

https://zerodegreepublishing.com/product-category/authors/aroor-bhaskar/

No comments:

Post a Comment