Saturday, September 11, 2021

மர அலமாரிக்குள் ஒரு மணலுள்ள ஆறு...

உள்பெட்டிக்கு வந்த ஒருவர்,  "என்ன நண்பரே முன்ன மாதிரி கவிதையெல்லாம் பகிர்வதில்லையே ? What is the matter ? " என்றார்.

மேட்டர் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. மொழியின் ஆகச்சிறந்த வடிவம் கவிதை என்பதில் என்றும்  எந்த மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. அதற்காக கவிதை நேரம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கி வாசிக்கும் பழக்கமும் இல்லை.

ஆனால், திட்டமிடுதல் எதுவுமின்றி தோன்றும் போது கண்ணில் படும் கவிதைகளை எடுத்து வாசிப்பேன். அதை எழுதியது தபூ சங்கர், மனுஷ் ... என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வாசிக்கும் கவிதைகளில் ஏதோ ஒரு வரியோ சொல்லோ தெறிப்பாக வந்து நிற்கும் போது புத்தகத்தை மூடிவைத்து விடுவேன்.

பிரமிப்பு தரும் அந்தச் சொல்லோ, வரியோதான் அன்றைய நாள் முழுவதும் மனதுக்குள் பறவை போல தாழபறந்து  சுழன்று கொண்டேயிருக்கும்.

அப்படிச் சமீபத்தில் வாசித்து லயித்த கல்யாண்ஜி-யின் கவிதை ஒன்று மணல் உள்ள ஆறு தொகுப்பில் இருந்து  (சந்தியா பதிப்பகம்)

ஆச்சி இறந்து

அநேக காலம் ஆயிற்று.

அவளுடைய மரஅலமாரியில்

வேறெதையோ தேடுகையில் கிடைத்தது

ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்

அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்.

எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்

தவறி விழுந்தததோ,

எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக

ஒட்டிய மணல் சோப்பில்.

தெரியாமல் போயிற்று

இத்தனை காலமும்

ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது

மர அலமாரிக்குள் ஒரு

மணலுள்ள ஆறு என்று..




No comments:

Post a Comment